
நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
December 29, 2010
ஒத்திகை

December 27, 2010
தேவதைகள்

அத்தை பையன், அவன் மனைவி, குழந்தை என்று வீட்டில் ஜேஜே ..
நான் கஷ்டப் பட்டு எழுதி .. (படிக்கிறவர்களும் கஷ்டப்பட்டு ) அச்சில் வந்த கதைக்கு புத்தகம் தபாலில் வரும். இவன் அலட்டிக் கொள்ளாமல் வாசகர் கடிதம், ஆசிரியருக்குக் கேள்வி எழுதி வாரா வாரம் காம்ப்ளிமென்டரி காப்பி வாங்கி விடுவான்.
'கதைக்கு வரைந்த ஓவியம் சூப்பர் '
'எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மேட்டர் கிடைச்சிதோ '
கேள்வியில் 'நீங்க ரசிச்ச புத்தகம்.. ' 'உங்க மனசு கஷ்டப்பட்டது எப்போது' ரகத்தில்.
சொல்லி வைத்த மாதிரி பத்து விமர்சனம், பத்து கேள்விகளை மாற்றி மாற்றி கார்டில் எழுதி வந்த பிரதியை ஜம்பமாய் காட்டிக் கொண்டு போகும் போது திரும்பி வந்த கதையை நான் மறைக்க படாத பாடு படுவேன்.
இதையெல்லாம் பேசி சிரித்தோம். அதே தெருவில் குடியிருந்த ஒரு அழகான பெண்ணும் அவள் தம்பி பற்றியும் பேச்சு திசை மாறியது.
'அவளை கவர் பண்ண அவன் தம்பிக்கு பேட்டிங் சான்ஸ் கொடுப்போம். அவுட் ஆனாக் கூட இல்லைன்னு சொல்லிருவேன். எதிர் வீட்டு கண்ணாடியை அவன் உடைச்சப்ப நாங்க காசு கொடுத்து மாத்தினோம். ரன் எடுக்க நடந்து போவான் .. எதுவுமே சொல்ல மாட்டோம்..'
'அவ வீட்டுக்கு பிரசாதம் கொடுக்க போனேன்.. கொஞ்சம் பந்தாவா இருக்கட்டும் .. வேட்டி கட்டிக்கிட்டு போனா அவ கூலா யாரோ மாமா வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு போயிட்டா' - இது என் பங்கிற்கு நான் சொன்னது.
சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதி விட்டார். எழுதாத நிறைய கதைகள் இன்னமும் இருக்கு.
கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் ஜாலி.. கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம் என்று
சித்திரை வீதிகளில் தடம் பதித்த சம்பவங்களில் ஒரு மீள் பயணம் செய்யும் போது இந்த நாளின் அழுத்தம் எல்லாம் மறந்து என்னமாய் ஒரு உல்லாசம்.
December 20, 2010
உரிய நேரம் - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

எதற்கும் உரிய நேரம் வர வேண்டும் என்பார்கள். கவிதைத் தொகுப்பிற்கும் அதே விதி நேர்ந்திருக்கிறது.
'சௌரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான் ' என்று திரு. வ. நாராயண நம்பி , தமிழ் துறை , பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி எழுதியது போல அவரின் கவிதைகள் பல எளிமையாய் இருந்தாலும் முன்னுரையில் படைப்பாளியே 'சில இடங்களில் நான் அதை மீறியிருக்கிறேன் ' என்று சுட்டி இருக்கிறார் .
தீபம், கணையாழி , அமுதசுரபி , யுகமாயினி , திண்ணை. காம் , ராகம், அரும்பு , இன்று , கவிதை உறவு , நற்றிணை , வெளிச்சம், மும்பை தூரிகை - பிரசுரம்
கண்ட பெருமைக்கு உரியவர்.
86 கவிதைகள் அடங்கிய 'உரிய நேரம் ' தொகுப்பில் இருந்து..
தாய்மை என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை இதோ..
கொட்டும் மழையில்
கோழியின் வயிறே கூரையாக
சிறகுகள் சுவர்களாக
நனையாத அந்த அந்தச் சிறு இடத்தில்
தெரிந்தன ஐந்தாறு ஜோடி
சிறிய ஈர்க்குச்சி கால்கள்!
(தீபம்)
ஆளில்லாக் கிரகம் ஒன்றைக்
கொக்கி போட்டு
நிலாவில் தொங்க விட்டு
நாம் ஊஞ்சல் ஆடிப் பார்த்தால் என்ன? என்று "என்னவள்" கவிதையை முடிக்கும்போது அவர் கவிதை விண்ணை முட்டுகிறது.
தீயே கேள் கவிதையில் சொல்கிறார்.
'ஏழை, குழந்தைகள் வயிற்றில்
பசியாகும்போது
சாந்தம் கொள்.
நியாய வான்கள்
நெஞ்சில் நிலை கொள்' எனும்போது 'ஆம்' என்றே தலை அசைக்கத் தோன்றுகிறது.
'ஒரே நேரத்தில்
தன் ஆயிரமாயிரம் கரங்களால்
தாவரக் குழந்தைகளுக்கு
அமுதூட்டுகிறாள்
மேகத்தாய்' என்று மழை குறித்த அவர் பார்வை வித்தியாசமாய் பதிவாகிறது.
அழகியல் அவர் பார்வையில் 'ஓரவஞ்சனை'யாய்..
"கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல்
அழகான விரல்கள்"
பின் செல்லும் மனம் எனும் தலைப்பில் என்ன அழகாய் பாசத்தைப் படம் பிடித்திருக்கிறார்..
"இருபது வயதில் ஒரு நாள்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
என் அடர்ந்த தலைமுடியை
அருகில் இருந்த என் அப்பா
கோதிப் பார்த்தபோது
புரியாத ஒன்று
இப்போது புரிகிறது..'
இவர் கவிதைகள் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறது. சிலாகித்திருக்கிறது. கோபித்திருக்கிறது. வர்ணித்து இருக்கிறது. ஒரு பார்வையாளனாய் படம் பிடித்திருக்கிறது.
கவிதை அனுபவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்களில் சிலரே வடிவ நேர்த்தியில் சிறந்திருக்கிறார்கள்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் நம் அனுபவத்தையும் பிரதிபலிப்பதால் ரசனை எனும் நேர்கோட்டில் அவரைச் சந்தித்து விடுகிறோம்.
வெளியீடு. சித்திரா நிலையம், 7/40 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை-600 016
December 16, 2010
தோழிக்கு
மன விகாரங்களைந்து உயர் நிலையடைய
மதி விதி யாவும் தன்வசமாக
தினமொரு கணமும் தூய நற்பொழுதாய்
திருவருள் குருவருள் இணைந்து பெறவே
மீனென கண்கள் சுழன்று வலை வீச
மீளா என் மனம் நன்னிலை அடைய
தானென வந்து தரணியில் இன்று
துணையாய் நின்ற தூய நற்கொடியே.
பாசம் என்பதன் பருப்பொருள் வடிவம்
பார்க்கும் பார்வையில் அன்பே சிந்தும்
வீசும் கதிர்களில் பெருந் தீயாகும்
விந்தையில் மனமே ஞான மயமாகும்
கூசும் உணர்வுகள் விலகிப் போகும்
கூவிடும் அழைப்பில் பரிவு புரியும்
பேசும் என் உணர்வுகள் இரு கவிதையானால்
பேசா உணர்வுகள் ஒரு கோடி தானே .
இக்கவிதைகள் என்னை முதன் முதலில் நேசித்த என் சிநேகிதிக்கு - இராமகிருஷ்ண , சாரதா, விவேகானந்தரை எனக்கு அறிமுகம் செய்து மடத்தின் வெளியீடுகளை வாசிக்கக் கொடுத்து , தியானம் பற்றிய தெளிவை சொன்ன - பேரன்பிற்கு எழுதியவை.
வருடங்கள் பல ஒடி விட்டன. அவர் இப்போது எங்கேயோ..
ஆனால் அப்போது எழுதிய கவிதை இன்னமும் மனசுக்குள்..
வாழ்க்கை நடுவே அவ்வப்போது யாரேனும் வெளிச்சம் காட்டிப் போகிறார்கள்.
இனிய நட்பு கிடைத்து விட்டால்.. எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் தானே.
December 08, 2010
ஜ்வல்யா

ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால் என் மீது பட்டது. துணி மாற்றிய போது. என் அருகில் இருந்த அத்தனை பேரும் வாங்கிக் கொஞ்சி விட்டார்கள். என்னைத் தவிர.
எனக்கொன்றும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளக் கூடாதென்றில்லை.
முதலில் ஏதோ ஒரு வித தயக்கம். பிறகு நானே விரும்பிய போது அது என் பக்கம் திரும்பவே மறுத்தது.
'வாடா செல்லம்.'
அடுத்த நபரிடம் போனது. பூக்குவியல். அவர் கைகளில். என்ன ஒரு பிரகாசம் அவர் முகத்தில்.
"என்ன பேர் "
"ஜ்வல்யா"
"அழகான பேர் "
ஜ்வல்யா. நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்று புறப்பட்டபோது .. புது நபர்கள் வந்தபோது.. அதுவரை பயணித்தவர்கள் இறங்கிப் போனபோது.. ஜ்வல்யாவை விட்டுப் பிரிகிற .. சேர்கிற நபர்களின் உணர்வுகள் அப்பட்டமாய் தெரிந்தது.
"ஏதாச்சும் சாப்பிடறியா "
அவர்தான் கேட்டார். அவரிடமும் ஜ்வல்யா கொஞ்ச நேரம் இருந்தாள்.
"வேணாம் .. "
"நீ வச்சுக்கிறியா.. ஜ்வல்யாவை"
அவரையே பார்த்தேன். கண்ணில் ஜலம் தளும்பி நின்றது.
"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. " என்றார் கிசுகிசுப்பாய்.
சட்டென்று ஜ்வல்யாவை கை நீட்டி வாங்கிக் கொண்டார் . என் மடியில் விட்டார்.
முழுமை பெறாத என் இடது கையும் சற்றே துவண்ட என் வலது கையும் அந்த நிமிடம் முழுமையாய் ஜ்வல்யாவை ஸ்பர்சித்து..
என்ன அழகான சிரிப்புடன் கால்களை உதைத்துக் கொண்டு.. பாதுகாப்பாய் அவர் பிடித்துக் கொள்ள..
என் மடி நனைந்து போனது அப்போது..
December 06, 2010
ஒரு வார்த்தை
தாண்டி இருக்கும்
உலகம் பற்றி
சின்ன வயதில்
கதைகளும் பிரமிப்பும்..
ஊர் விட்டு ஊர் வந்து
வேலை பார்க்கும் போது
மறந்து போகின்றன
சாகசங்கள்..
வார இறுதி நாட்களில்
கிடைத்த இருக்கையில்
பயணமும்
அல்லது தொங்கிக் கொண்டோ..
கதவைத் தட்டி
(அம்மாதான் வந்து கதவைத்
திறக்கணும்.. கடவுளே )
'சாப்டியா '
இந்த ஒரு வார்த்தைக்குத்தான்
நானூறு மைல் பயணம்.. !