May 17, 2021

ராசா

 

ராசா

மஹேஸ்வரியை அழைத்துக்கொண்டு . ராணி எங்கள் வீட்டில் நுழைந்தபோது புவன் அழுது கொண்டிருந்தான். புவன் என் மகன். இரண்டு வயது. ராணி எங்கள் வீட்டில் வேலை செய்கிறாள். புவனைப் பார்த்துக் கொள்ள தக்க நபர் வேண்டியிருக்கிறது. இருவருமே வேலைக்குப் போகிறோம். மாமியார் காது மந்தம். நீட்டினால் மடக்க முடியாத கால்வலி.

"இவளையா" என்றேன் சந்தேகமாய். தன்னுடைய பத்து வயசுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தாள். மாதம் முந்நூறு சம்பளமும், ஒரு வேளைச் சாப்பாடும் என்று பேச்சு.

"எட்டு வூட்டுக்கு வேலை செய்யும் ... மகேசு. புள்ளை அழுவுது பாரு. போய்த் தூக்கு"

ராணிக்கு முந்நூறு ரூபாய் தேவை. என்னை மறு பரிசீலனை செய்ய விடாமல் மஹேஸ்வரியை வேலைக்கு அமர்த்த முனைவது புரிந்தது.

மஹேசு, சற்றே கிரீச்சிட்ட குரலில் பெயர்ச்சுருக்கம். மஹேசு ஓடி வரவில்லை. சற்றே மந்த நடை. புவனைத் தொட்டுத் தூக்கியதில் கனம் தாங்காமல் தடுமாறி நின்றாள். 

"ராணி... வேற ஆளு பார்க்கலாமே 

"இல்லம்மா, ஐநூறு. அறநூறு கேட்கறாங்க. இவ நல்லாப்
பார்த்துக்குவா. இதுக்கு முன்னால ஒரு அய்யரு வூட்டுலயே வச்சிருந்தாங்க. ஆறுமாசம். அவருக்கு வேற ஊருக்கு மாத்தலாகிப் போனதால வூட்டுல சும்மா இருந்திச்சு. எல்லா வேலையும் பழகிருச்சு. கடைக்குப் போயி ஜாமான் வாங்கியாரும் ரேசனுக்குப் போவும்".

"அதெல்லாம் வேணாம். எங்க மாமியாரால முடியல. வேளா
வேளைக்கு புவனுக்கு ஊட்டி விடனும் பால் தரணும். தூங்க வச்சு பத்திரமா பார்த்துக்கணும்".

எனக்குள் இன்னமும் நெருடல்.

 "இத்தனூண்டு பெண்ணா."

 "பார்க்கத்தான் அப்படி இருக்கா. பத்து வயசாச்சு. நீங்க பாருங்களேன்."

எனக்கும் வேறு வழி தோன்றவில்லை. நிறைய லீவு போட்டாகிவிட்டது. ஒரு நிஜ பிரசவம். இரண்டு 'பொய்' அபார்ஷன். ஆபிஸ் நோட்டீஸ் வந்துவிட்டது. யூனியனில் பேசி வைத்திருக்கிறது. வேலைக்குப் போயே தீரவேண்டும்.
வேலையை விட முடியாது.

" என்னவோ ராணி. நீ சொல்றியேன்னு வச்சுக்கறேன். போன வாரம்.. மாமியார் தூங்கிட்டாங்க. இவன் நகர்ந்து போய் பிளாஸ்க்கை உருட்டி ஒடச்சு வென்னீர் பட்டு புண்ணாயிருச்சு" என்றேன்.

"கவலைய வுடுங்கம்மா. மகேசு பார்த்துக்கும்."

புவன் தனக்கு அறிமுகமான புதுமுகத்தின் விரல்களைப் பற்றி சப்ப முயன்று கொண்டிருந்தான். 

"புவன், ச்சீ.... நக்காதே. மஹேசு, கைய நல்லாக் கழுவிக்க புரியுதா"

சோப் எடுத்துக் கொடுத்தேன். துடைத்துக் கொள்ள டவல். நீட்னஸ் பற்றி லெக்சர்: காலை எட்டரைக்கு வந்து விடு. "இன்ன நேரம், இன்னது தா" பட்டியல். "பத்திரம், பத்திரம், பத்திரம்" கவலை திணித்த எச்சரிக்கை மந்திரங்கள்.

மகேசு எல்லாவற்றுக்கும் தலையாட்டியது.

ஒன்று, அதற்குக் கட்டளைகள் புரிந்திருக்க வேண்டும். அல்லது எதற்குமே தலையாட்டல். அம்மாவின் மிரட்டல் பின்னணியில் வேலைக்குச் சேர்ந்திருக்க வேண்டும்.

எப்படியோ தற்காலிகமாய் எனக்குள் நிம்மதி. இந்த மாசம் "லாஸ் ஆஃப் பே" இல்லை. நர்மதா, மந்தாகினியைப் பார்க்கலாம். டேலி ஆகாத லெட்ஜர்கள், அன்னபூர்ணா டிபன், ஆபீஸ் விட்டதும் பர்மா பஜார் சேலைகள். மூன்று வருடங்களுக்கு முந்திய பழைய வாழ்க்கை. 

மாமியாருக்கும் என்னைப் போலவே சந்தேகம். "இவ்ளோ சின்னப் பெண்ணா".

"வேற வழியில்லம்மா, யாரும் வேலைக்கு வர மாட்டேங்கறா. வந்தாலும் நம்பிக்கையா வச்சுக்க முடியலே. போன தடவை வந்தவ நூறு ரூபா நோட்டை எடுத்துண்டு போயிடலையா, வீடு பூராத் தேடினோமே"

"ஆனாலும் சின்னதா இருக்கே"

"நீங்களும் கொஞ்சம் பார்த்துக்கோங்கோ. அதட்டி வேலை வாங்குங்கோ, மத்தியானம் நீங்க தூங்கும்போது ரூமுக்கு போய் புவனை வச்சுக்கச் சொல்லுங்கோ. ஹால்ல நீங்க சத்தம் இல்லாம படுத்துக்கலாம்".

மாமியாரிடம் வேறு பேச்சு இல்லை. ஒரு விதத்தில் மகேசு அவருடைய கவலையைக் குறைக்கிறாள். "யாரோ" பார்த்துக் கொள்கிறாள் என்ற நிம்மதியில், சற்றே தைரியமாய் கண்
அசரலாம்.

"நீ எது செஞ்சாலும் சரி" என்றார் என் கணவர்.

 "அப்படி இல்லே. ஒங்க ஒபினியனும் சொல்லலாமே"

"வீட்டு அஃபேர்ஸ்ல நீதான் அதாரிட்டி ஓக்கே"

மகேசின் தினங்கள் ஆரம்பித்தன.

முதல் பத்து நாட்களில் பெரிதாய்க் கலவரப்பட எதுவும் நிகழவில்லை. சில்லறைத் தவறுகள் அவை எவருக்கும் சகஜம்.

ஒரு நாள் நான் வீடு திரும்பியபோது புவனின் உடம்பு சுட்டது.

"மகேசு, புவனுக்கு ஜீரமா" "

"தெரியலீங்க. தம்பிக்கு காலைலேர்ந்து ஜீடா இருக்கு" 

"பெரியம்மாக்கிட்டே சொல்லலியா"

"சொன்னேன்"

சொல்லவில்லை என்றார் மாமியார். டாக்டரிடம் ஓடினேன். மருந்து, மாத்திரைகள்.

"உடம்பு சுட்டா பெரியம்மாகிட்டே சொல்லு" என்றேன். வேறு என்ன செய்ய.

மகேசு மறுநாள் வந்தபோது கூடவே இன்னொரு நபரும். நாலு வயசுத் தம்பி.

"இது யாரு"

"ஏந்தம்பி"

"அவனை ஏன் கூட்டிகிட்டு வந்தே"

"அம்மாதான் கூட்டிகிட்டு போகச் சொன்னாங்க"

புவனின் பொம்மையை மகேசின் தம்பி பிடுங்க முற்பட்டு என் எரிச்சலைக் கிளப்பினான்.

"டேய் பொம்மையை வை"

ஊஹீம்.. என் அதட்டல் பலனில்லை.

"மகேசு, சொன்னாக் கேட்க மாட்டானா, உன் தம்பி"

"அவனுக்குக் காது கேட்காதுங்க"

என்ன... ஒரு வினாடி எனக்கு வாயடைத்துப் போனது. 

''ஆமாங்க. பொறக்கறப்பவே அப்படித்தான்"

நங்கென்று விழுந்த சாப்பாட்டுத் தட்டு, கண கணவென சப்தித்து தரையில் செட்டில் ஆனது. எங்களுக்கு மட்டும் அதிர்வுகள். விழிகளில் படபடப்பின்றி சாதாரணமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த மகேசு தம்பி.

"நெஜம்மாவே சுத்தமாக் கேட்காதா"

"ஆமா"

புது பிளாப்பி போல, எந்தப் பதிவுகளும் அற்ற மூளைப் பிரதேசம். வார்த்தைகளின் ஜாலங்கள் எட்டாத தூரத்தில் மகேசின் தம்பி.

"பேரென்ன"

"ஆங்.."

"போச்சு. உனக்கும் காது கேட்காதா'

"ஏந்தம்பி பேரா,ராசா"

ராசா.

புவன் தன் சாம்ராஜ்யத்தில் இன்னொரு நபரின் ஊடுருவலைச் சகிக்காமல் கத்த ஆரம்பித்தான்.

"மகேசு, அம்மாகிட்டே சொல்லு, நான் சொன்னதா, இனிமேல ராசாவை இங்கே கூட்டிகிட்டு வரக்கூடாது. புரியுதா"

"சரிங்கம்மா"

மாமியாரிடமும் சொன்னேன். நான் ஆபீஸ் போன பிறகு ராணி வருவாள். பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்து உலர்த்தி விட்டுப் போவாள். ஞாயிறுகளில் மட்டுமே சந்திப்பு, பிற
விடுமுறை தினங்களிலும்.

"சொல்றேன்" ' "

"கண்டிச்சு சொல்லுங்க. அப்புறம் புவனைக் கவனிக்காம, தம்பி கூட விளையாடிக்கிட்டு இருப்பா"

மாமியார் தலையாட்டினார்

மறுநாளும் ராசா வந்தான்.

"என்னடி, உங்கம்மா கிட்டே சொல்லலியா"

"பெரியம்மா" என்றாள் மகேசு.

"அவங்களை ஏன் கூப்பிடறே"

மாமியார் வந்தார்.

"குடிசையைப் பிரிச்சு வேலை பார்க்கிறாங்களாம். ரெண்டு நாள் இருக்கட்டும்மா, அப்புறம் அழைச்சுகிட்டு போயிடறேன்னா"

'கண்டிச்சு சொன்னீங்களா"

"சொன்னேன். இப்படி பதில் சொன்னா, நான் என்ன பண்றது"

ப்ச். எத்தனை தளைகள், சுதந்திரமாய் எதுவும் சொல்ல, செய்ய முடியாத நிர்ப்பந்தங்கள்.

"ரெண்டு நாள்ல கட்டாயம் அழைச்சுகிட்டு போயிரணும்" என்றேன் மகேசிடம்.

தலையாட்டினாள்.

''நான் சொன்னேன்னு ஒங்கம்மாகிட்டே சொல்லு"

ஏழாவது நாளாய் ராசா வந்தான்.

என் எரிச்சல் அதன் எல்லையைக் கடந்தது. நேற்று ராசா உபயோகப்படுத்திய டாய்லட் கழுவப்படாமல் இருந்தது. புவனுக்குக் கொடுத்த பிஸ்கட்டை ராசா கடித்தானாம். அதை விட மோசம், மாலையில் புவனும் ராசாவும் ஒரே படுக்கையில் கட்டிக் கொண்டு தூக்கம்.

இவரிடம்தான் எரிந்து விழுந்தேன்.

'அவ சொன்னாக் கேட்க மாட்டேங்கிறா, நீங்க போயி ஒரு சத்தம் போட்டுட்டு வாங்க "

'அவ வீடு எங்கே இருக்கு" என்றார் அலுப்புடன் 

"ரெயில்வே லைன் பக்கம்னு சொன்ன ஞாபகம்".

போய் விட்டு வந்தார். நாளை முதல் ராசா வரமாட்டானாம்.

நன்றாக மிரட்டச் சொல்லியிருந்தேன். இல்லாவிட்டால் மகேசை வேலையை விட்டு நிறுத்த உத்தேசம்.

மறுநாள் ராசா வரவில்லை. புவன் ஒரு நபர் குறைந்தது புரியாமல் தன் போக்கில் மழலை பேசி, விளையாடிக்
கொண்டிருந்தான்.

மூன்றாவது நாள் மகேசு வேலைக்கு வரவில்லை. ஆபீஸ் கிளம்புகிற அவசரம்.

"இவளைக் காணோமே"

"நீ போ, லேட்டா வராளோ, என்னவோ"

"இவனைப் பார்த்துக்கணுமே"

"நான் பார்த்துக்கறேன்" என்றார் மாமியார். அரை மனதாய்க் கிளம்பிப் போனேன். மாலையில் திரும்பிய
போதும் மகேசு வந்திருக்க வில்லை. நனைத்து வைத்த துணிகளின் வீச்சம் ஹாலில் பரவிக் கொண்டிருந்தது. கழுவப்படாத பாத்திரங்கள், தலைவலி
பிளந்தது.

"ராணியும் வேலைக்கு வரலே" "

"ச்சே, இவளை நம்பினா இப்படித்தான்"

"இப்ப என்ன செய்யறது நாளைக்கும் வருவாளோ. மாட்டாளோ"

எதிர்வீட்டுக்கும் இவள்தான் வேலை செய்கிறாள். ஏதேனும் தகவல் தெரிந்திருக்குமா.

போனேன்.

"தெரியலியே. அவ எங்கே ஒழுங்கா வரா, ஒரு நாள் வந்தா ஒரு நாள் வர மாட்டா, இந்த மாசத்தோட நிறுத்திடலாம்னு இருக்கேன்"

கணவர் வந்ததும் சொன்னேன்.

"உனக்கு இதுவே பிழைப்பாய் போச்சு, ஆன்னா, ஊன்னா குடிசைப் பக்கம் விரட்டு"

'"நாளைக்கு வருவாளான்னு தெரியணும்'

"நீயும் வா. ரெண்டு பேருமாப் போகலாம். அங்கே போய் ராணி எங்கேன்னா, என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க."

"புவனைப் பார்த்துக்க வேணாமா, வேலை வேற குவிஞ்சு கிடக்கு "

எதுக்கு அலட்டறே, பத்தே நிமிஷம், ஸ்கூட்டர்ல போகப் போறோம்".

மாமியாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

ஏதேதோ சந்துகள், மூக்கைப் பிடித்துக் கொண்டு பயணம். ரெயில்வே கேட் மூடியிருந்தது. என்ன ரயிலோ.

"எந்த வீடு"

'இந்தக் குடிசைதான்"

சட்டென்று சூழலில் ஒரு அழுத்தம் புரிய மனசுக்குள் படபடப்பு.

'"ராணி"

"ஏ ராணி. இங்கிட்டு வா, யாரோ உன்னியப் பார்க்க வந்திருக்காங்க"

தலைவிரி கோலமாய் ராணி, முகம் வீங்கி, கலங்கிய கண்கள்.

"என்ன ராணி"

"யம்மா, எம்புள்ளை போயிருச்சும்மா, ராசாவாட்டம் இருந்தானே, அநியாயமாப்பூட்டானே"

தொண்டை உலர்ந்து போனது.

"எ... எப்படி என்ன ஆச்சு"

காது கேட்காத அந்த பிஞ்சு ஜீவன் தன் போக்கில் ரயில்வே லைனில் நின்று விளையாடிக் கொண்டிருந்ததாம். எவரும் கவனிக்கவில்லை. வேறு பக்கம் திரும்பி இருந்ததால் வண்டி வந்ததும் புரியவில்லை. நிறத்து முடியாத வேகம். சக்கரங்களுக்கு ரத்தப்பசி. தூக்கி விசிறிய ... வேண்டாம். மேலும் சொல்லாதே...என்று மனசு கெஞ்சியது.

"அநியாயமாப் பூட்டாம்மா, இப்படி பறி கொடுத்தேனே... ராசாவாட்டம் புள்ளைய"

என் கணவர் என் கையைப் பற்றி அழுத்தினார்.

"போயிட்டு வரேன்" என்று சொல்லக்கூடாது.

கால்கள் நடுங்கப் பின் வாங்கி இயந்திரமாய் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டேன். ஸ்கூட்டர் கிளம்பியது.

 பிளீஸ்... அவன் செத்துப் போனதற்கு நான் காரணமில்லை என்று யாராவது சொல்லுங்களேன்.

May 16, 2021

காதல் வரம் 6

 

#காதல்_வரம் - 6

ரிஷபன்

நந்தா நடந்துதான் திரும்பினாள். மோகனுக்கு மனசாகவில்லை. 'நானே கொண்டு போய் விடுகிறேன்' என்று எவ்வளவோ கெஞ்சினான்.

"இல்லே... எனக்கு நடக்கணும் போல இருக்கு... நடந்தே போறேன்..."

"பிளீஸ்... நந்தா...'

"பிளீஸ்... மோகன்...”

திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு போனான். எப்படித்தான் நடந்தாளோ... மனசு திடீரென வெறுமையாகி ஹாவென்றிருந்தது. 

ஹாஸ்டல் வாசலில் வாட்ச்மேன் சிரித்தது பதியவில்லை. உள்ளே நடந்து அறைக்குள் நுழையும் வரை படபடப்பு இருந்தது. கட்டிலில் சாய்ந்தபோது நிதானம் வந்தது.

"இப்ப அவசரமில்லே... நந்தா... என் மனசைச் சொல்லிட்டேன். உன் பதில் எதுவானாலும் யோசிச்சு சொல்லு... யெஸ் ஆர் நோ... உன்னை நான் நேசிக்கிறது மாறாது."

இவள் பதில் சொல்லத் தயங்கியதில் மோகன் சொன்னான்.

எப்படி ஒத்து வரும்... என்னவென்று சொல்ல. அன்றிரவு சரியான தூக்கமில்லை.

மறுநாள் தற்செயலாகத்தான் அதைக் கேட்க நேரிட்டது. இவள் அறையில் இல்லை என்ற நினைப்பிலோ... என்னவோ... ரஞ்சனி உரக்கவே பேசினாள்.

"எப்படி சொல்றே... நந்தாவுக்கு நிச்சயம் செலக்ட் ஆயிரும்னு..." என்றாள் புவனி.

அவள் அறை எதிர் வரிசையில்தான் இருந்தது. ஆனால் பெரும்பாலும் நந்தாவின் அறையில்தான் மூவரும் கூடுவார்கள். அரட்டையும் இங்கேதான். தூங்குகிற..சாப்பிடுகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் நந்தாவின் அறைதான் அவர்களின் புகலிடம்.

"உனக்கே புரியும்..." என்றாள் வித்தியாசமான குரலில். "வேணா பாரேன்... ரிஸல்ட் வரும்போது...

"என்ன சொல்றே நீ... நந்தாவுக்கு தகுதி
இல்லையா"

"தகுதி இல்லேன்னு யார் சொன்னாங்க..."

"பின்னே...”

'அடிஷனலா ஒரு பிளஸ் பாயிண்ட்டும். இருக்கே. எந்தக் கேள்வியும் இல்லாம போஸ்ட் கிடைச்சுரும். எனக்கு அந்த மாதிரி எந்த காரண்டியும் இல்லையே..."

புவனியிடமிருந்து பேச்சில்லை.

"குறையா சொல்லலே. என்னோட பொஸிஷனைச் சொன்னேன்" என்றாள் ரஞ்சனி.

"நீ பேசற விதம் பிடிக்கலே... ரஞ்சனி...”

"நிஜம் எப்பவுமே உறுத்தும்... எனக்கும் அவ மேல விரோதம் இல்லே. மனசுல பட்டதைத்தான் சொன்னேன்"

புவனி மேலே எதுவும் பேசவில்லை. வினாடியும் நந்தா உள்ளே வரலாம் எந்த என்ற நினைப்போ. அல்லது இதை மேற்கொண்டு பேசப் பிடிக்க வில்லையோ.

நந்தா பின்வாங்கி திரும்பி நடந்தாள். கால் வலித்தது. வேகமாக நடந்து வராண்டாவைக் கடந்து பூச்செடிகளின் அருகில் வந்தாள்.

மனதில் எதுவுமில்லை. இனம் புரியாத கனம் மட்டும். எத்தனை நிமிடங்கள் ஆனதோ புவனி அவள் தோளைத் தொட்டதும் உணர்வு வந்தது.

"என்னடி இங்கேயே நின்னுட்டே..."

"பூ அழகா இருக்கு..."

"தினம் பார்க்கிறதுதானே..."

"எப்ப பார்த்தாலும் புதுசா இருக்கு..."

"ம்... விடிஞ்சுது போ... உன்னை ஆளைக் காணோம்னு பதறிட்டு வரேன்... நீ சாவகாசமா பூ பார்த்துகிட்டு இருக்கே. வா. போகலாம்."

எதுவும் பேச வேண்டாம். அவர்கள் பேச்சைக் கேட்டதாகக் கூட காட்டிக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்தாள்.

"நேத்து எப்படி பொழுது போச்சு..."

"ப்ச்... ரூம்லயே இருந்தேன்..." மோகன் நினைவு மேலெழும்ப கொஞ்சம் தடுமாறினாள்.

"இந்த வாரம் போகணுமா... மெட்ராசுக்கு."

"ம்... ரிஸர்வ் பண்ணியாச்சு..."

"உங்க ரெண்டு பேருக்குமே கிடைக்கணும். ஆல் த பெஸ்ட்..."

இருவரும் நந்தாவின் அறைக்குள் நுழைந்தனர். ரஞ்சனி வேறு உடை மாற்றிக் கொண்டு நின்றாள்.

 "உனக்காகத்தான் காத்திருக்கோம்... இன்னைக்கு ஐயப்பன் கோவில் போகலாம்னு சொன்னியே..."

“சீக்கிரம் டிரஸ் சேஞ்ஜ் பண்ணிக்க..."

 முகம் கழுவி ஜில்லிப்பில், உணர்வின் அழுத்தம் குறைய மனசு லேசாகி... வெளியில் வந்தாள்.

"இதுவே நல்லாத்தான் இருக்கு... போகலாமா...”

கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு வைத்து திரும்பினாள்.

அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தனர்.

 "நேத்து ஏதாவது படிச்சியா..." என்றாள் ரஞ்சனி.

"ம்... அரை குறையா..."

"என்ன கேட்பாங்கன்னே புரியலே..."

"ஏதாவது ஆபீஸ் சம்பந்தமா இருக்கும்னு முன்னால அட்டெண்ட் பண்ணவங்க சொல்றாங்க.."

"டென்ஷனா இருக்கு... வீட்டுல கேட்டாங்க... ஆங்... சொல்ல மறந்துட்டேனே... உன்னைப் பத்தியும் விசாரிச்சாங்க. உனக்கும் இண்டர்வியூக்கு வந்திருக்கான்னு..."

நந்தா தன்னிச்சையாக நடந்தாள். புவனி பேச வில்லை. அஷோக் நினைவோ என்னவோ. ஏன், புவனி மோகனைப் பற்றி தன்னிடம் எதுவும் பேசவில்லை. மோகன்தான் சொன்னானே. அவளிடம் நந்தாவைப் பற்றி கேட்டதாக.. ஒருவேளை... அவளுக்கும் வேறு அபிப்பிராயமோ... நந்தாவைத் தேர்வு செய்வது சரியான முடிவில்லை... என்று வாதாடியிருப்பாளோ... நல்ல சிநேகிதி என்பது வேறு... நல்ல அண்ணி என்பது வேறு... என்ற தீர்மானமோ...

"வேற வரன் பார்க்கலாமே... மோகன்."

"ஏன்... அப்படிச் சொல்றே..."

“இல்லே... போயும் போயும் இவதானா கிடைச்சா. உன்னோட படிப்புக்கும், பதவிக்கும் வேற நல்ல வரன் கிடைக்குமே. மணவறையில் இவ சாஞ்சு சாஞ்சு நடந்தா நல்லாவா இருக்கும்?”

"அப்படியா சொல்றே...”

"நல்லா யோசிச்சு முடிவுக்கு வா... இப்ப அவசரப் பட்டு... அப்புறம் வருத்தப்படற மாதிரி ஆயிடப் போவுது..."

மனசுக்குள் கற்பனையாய் உரையாடல்கள் ஓடின. புவனி இப்படித்தான் பேசியிருக்க வேண்டும். பேசுவாள். என்ன பழகினால் என்ன... இப்போது ரஞ்சனிக்கு உள்ளூரத் தோன்றவில்லையா.. தன் ஊனம் தான் செலக்சனுக்கு பெரிய குவாலிஃபிகேஷன் என்று. தப்பில்லை. அவள் அப்படி நினைத்ததில். போட்டி, செலக்சன் என்று வரும் போது மனசு இப்படித்தான் ஆற்றாமைப்படும். தனக்குக் கிடைக்கிற வாய்ப்பு பறி போகிறதே என்று தோன்றும். அதுவும் எல்லா விதத்திலும் சமமான சிநேகிதிகளுக்கிடையே நிர்ணயிக்கிற விஷயம் பிறப்பில் குறை என்பது யாரால் சகிக்க முடியும்.

"எங்கேடி... வேகமாய் போறே... கோவில் இந்தப் பக்கம் இருக்கு..." என்று புவனி தடுத்து நிறுத்தினாள்.

ஐயப்பன் கோவில் இதர கோவில் அமைப்புகளில் இருந்து வித்தியாசப்பட்டு மலையாள வாசனை அடித்தது. அழகான தீபங்கள்... சட்டென்று மனசு ஒன்றிட நந்தா கண்மூடிப் பிரார்த்தித்தாள்.

'ரஞ்சனிக்கு நிச்சயம் கிடைக்கணும்...'

என்னவோ திடீரென மனதில் அமைதி வந்தது. மனப்பூர்வமாய் வேண்டியதில் பதற்றம் போனது. காரணமின்றி ரஞ்சனியைப் பார்த்துச் சிரித்தாள்.
வலம் வந்த பின் மூலையாய் ஒரு இடம் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.

'அஷோக் என்ன சொன்னார். மதியம் பேசிக்கிட்டு இருந்த போலிருக்கே..."

"ஸ்பெஷலா ஒண்ணும் இல்லே."

"கொடுத்து வச்சவ... நேர்ல பார்க்க முடியாட்டியும் வாய்ஸ் கேட்டுரலாம்..."

"இவளும்தான் கொடுத்து வச்சவ..." என்றாள் புவனி நந்தாவைத் தொட்டு.

"என்ன சொல்றே..." என்றாள் ரஞ்சனி புரியாமல். நந்தாவும் விழித்தாள். ஒருவேளை... மோகன் வந்து விட்டுப் போனது தெரிந்து விட்டதா...

"சரியான அழுத்தம்டி... நீ" என்றாள் புவனி.

புரிந்து விட்டது . மோகன் சொல்லியிருக்க வேண்டும்.

 "ஸண்டே ரூம்லயே அடைஞ்சிருந்தியா... என்னைப் பார்த்துச் சொல்லு..."

"போடி..."

"ஏய் எனக்கும் புரியறாப்ல பேசுங்க..."

"உன் பதில் என்னன்னு என்னைப் போட்டு அரிக்கறான். இந்த ஸண்டே வரட்டுமான்னு கேட்கச் சொன்னான்."

"யாருடி அது..."

"மோகன்... என்னோட பெரியப்பா பையன்..."

"அவனுக்கு நந்தா வேணுமாம்" என்றாள் புவனி.

ரஞ்சனிக்கு வாயடைத்துப் போனது. பேசாமல் சிநேகிதியைப் பார்த்தாள், கையைப் பற்றி இழுத்துக் குலுக்கினாள்.

"நெஜம்மாவே சந்தோஷமா இருக்குடி.. ஐயாம் வெரி வெரி ஹேப்பி.."

புவனி நந்தாவின் முகம் பற்றித் திருப்பினாள்.

"சொல்லுடி... உன் பதில் என்ன... என்னை ஏமாத்த முடியாது. மோகன் வேணா யோசிச்சு சொல்லுன்னு போயிருவான். என்கிட்டே அது நடக்காது... அவனைப் பிடிக்குதா சொல்லேன்...”

நந்தா இறுக உதடுகளை அழுத்திக் கொண்டிருந்தாள்.

"போன வாரம் பஸ்ல... இவ புராணம்தான்... என்னமா உருகறான்... யூ டோண்ட் பிலீவ்... என்ன சொன்னான் தெரியுமா... நீ ஒரு முழுமையான பெண்ணாம்.... அவன் அப்படித்தான் உணர்றானாம்... லவ்வுல உளர்றியான்னு கூடக் கேட்டுட்டேன். இல்லவே இல்லைன்னு அடிச்சு பேசறான்."

"இவ கூடப் பேசிப் பழக்கமே இல்லையே..." என்றாள் ரஞ்சனி

‘அதுதான் எனக்கும் ஆச்சர்யம்... ஆனா அவன் என்ன சொல்றான் தெரியும்... பேசினாத்தானா, பழகினாத்தானா.. ஐ நோ ஷீ ஈஸ் மை கேர்ள்.. என்னால அப்படித்தான் நினைக்க முடியுதுங்கிறான். நான் நெஜம்மா  சொல்லிட்டேன்... இது மட்டும் சக்ஸஸ் ஆனா,    மோகன் நீதான் லக்கிஃபெல்லோ.  நந்தா உனக்குக் கிடைக்கணும்னு வேண்டிக்கன்னேன்...”


புவனி அப்படியா சொன்னாள்! மனசு அளவில் எல்லோருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறோம். ஏதோ சில நேரங்கள்... சில உணர்ச்சிகள்... எதையோ யோசிக்காமல் பேசினாலும் அடிப்படையில் பிறர் நலம் விரும்பி.

மோகன் இந்த அளவு என்னை நேசிக்கிறானா. முழுமையான பெண்ணாகவா பார்க்கிறான். அதனால் தான் என்னை இயல்பாகப் பார்த்தானா. பரிதாபம் பார்வையில் தடவாமல்.

"என்னடி யோசிக்கறே... சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்காத மாதிரி..."

"இவதான் இனிமே சாமி... பாவம் மோகன்... இவ இஷ்டத்துக்கு ஆடணும்..."

சிநேகிதிகளின் கேலி சந்தோஷமாக இருந்தது. தலை குனிந்து சிரித்தாள்.

"என்ன சொல்றது..."

"இந்த வாரம் நான் மெட்ராஸ் போகணுமே. ஸண்டே இருக்க மாட்டேனே. நாளைக்கு அவர் வருவாரா..." என்றாள் நந்தா மெல்ல.

“போச்சுரா. அர்ஜெண்ட் காதலா...”

மீண்டும் அங்கொரு சிரிப்பொலி எழுந்தது.

-முற்றும்

30 வருடங்களுக்குப் பின் உங்களோடு சேர்ந்து நானும் வாசிக்கிறேன்.

வாழ்த்திய/வாழ்த்தும் அனைவருக்கும் அன்பு நன்றி.

காதல் வரம் 5

 

#காதல்_வரம் - 5

ரிஷபன்

இந்த ஞாயிறு மீண்டும் ஹாஸ்டல் வாசம். புவனி. ரஞ்சனி இரண்டு பேருமே ஊருக்குப் போய் விட்டனர். நந்தா புதன், வியாழன் இரண்டு நாட்கள் லீவில் ஊருக்குப் போயிருந்தாள். மதுரையில் பெரியப்பா பெண்ணுக்குக் கல்யாணம். மறுபடி பயணம் செய்ய மனசில்லை.

அடுத்த வாரம் மெட்ராஸ் போக வேண்டியிருந்தது. எக்சிகியூடிவ் பதவிக்கான தேர்வில் ரஞ்சனி, நந்தா இருவருமே வெற்றி பெற்றிருந்தனர். நேர்முகத் தேர்வு சென்னையில்.' என்ன கேட்பார்களோ... பெரும்பாலும் பார்க்கிற வேலை... படிப்பில் சில கேள்விகள்... இப்படித்தான் இருக்கும். இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம்.

கையில் பிடித்திருந்த புத்தகத்தில் மனசு பதிய மறுத்தது. பிளாஸ்க்கில் காபி தீர்ந்து போயிருந்தது. எழுந்து போக சோம்பலாகவும் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.

எழுந்தாள். இன்று அறை வாசம்தானே என்று நைட்டிதான் உடை. தலைமுடிக்கு ரப்பர் வளையம். எதிர்க் கண்ணாடியில் முகம் பார்த்து வெளியில் வந்தாள்.

ஹாஸ்டல் பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தது. இருந்த ஓரிரு நபர்களும் அறைக்குள் முடங்கி யிருந்தனர்.

ஹாஸ்டல் வாசலுக்கான வராண்டாவில் இடது புறம் திரும்பித்தான் சமையலறைக்குப் போக வேண்டும். திரும்பியபோது மிக மெலிதாக ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தாள்.

இன்று வேறு கலரில் அதே மாதிரி சாயம் போன ஜீன்ஸ். தொள... தொள ஷர்ட். நந்தாவைப் பார்த்து சிரித்தானா... இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாதபடி கண்ணாடிக்குள் விழிகள்.

"புவனி இல்லையே..."

எதிரில் நின்று சிரித்தான்.

"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்..."

"என்னையா..."

"ம்..."

சட்டென்று என்ன சொல்வதென்று புரியவில்லை. தன்னிடம் அவனுக்கென்ன பேச்சு. திடீரென அணிந்திருந்த உடை உறுத்தியது. எத்தனை கசங்கல். அழுக்காய் இருக்குமோ.

"அப்படி உட்காரலாமா? இல்லை... வெளியில் போகலாமா..."

"எதுக்கு?”

"உங்ககிட்டே பேசணும்..."

என் பர்மிஷன் தேவையில்லையா... என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன். சொன்ன உடன் கிளம்பிவிடுவாள் என்றா.

அவள் முகம் சிணுங்கியதை உணர்ந்திருக்க வேண்டும். நேராகப் பார்த்தான்.

"உங்ககிட்டே பேசணும்... நீங்க தப்பா எடுத்துக்கிற டைப் இல்லைன்னு என் நம்பிக்கை. அதே போல என்னையும் நீங்க ஜென்டில்மேன்னு நினைச்சா என் கூட வாங்க..."

யோசித்து விட்டுச் சொன்னாள்.

"டிரஸ் சேஞ்ஜ் பண்ணிக்கிட்டு வரேன்."

அவன் முகம் மலர்ந்து விட்டது. விசிட்டர்களுக்கான சோபாவில் அமர்ந்தான். நந்தா திரும்பி தன்அறையை நோக்கி நடந்தாள். தன் நடையை அவன் கவனிக்கக் கூடும் என்ற உணர்வெழத் திரும்பிப் பார்த்தாள். இல்லை. இயல்பாக எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த படத்தை ரசித்தான் போலும். பார்வை மேல் நோக்கியிருந்தது.

அவளுக்குப் பிடித்த மஜந்தா கலர் புடைவையை தேடி எடுத்தாள். பத்து நிமிடங்களுக்குப் பின் அவன் எதிரில் வந்து நின்றபோது மோகன் கண்களில் ரசனை மின்னியது.

வாட்ச்மேன் மோகனைப் பார்த்துச் சிரித்தான்.

இதற்கு முன் வந்ததில் பழகியிருக்க வேண்டும். வார்டன் கண்களில் பட்டானா தெரியவில்லை. பார்த்திருந்தாலும் என்று நிச்சயம்

சமாளித்திருப்பான்.

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான்.

"பின்னால உட்காரதுல ஆட்சேபணை இல்லையே..."

இன்று இந்த அனுபவத்திற்காக மனசு ஏதோ காத்திருந்தது போல உணர்ந்தாள். ஏனோ மறுப்பு சொல்லத் தோன்றவில்லை. சற்றுமுன் கோபம் வந்த மாதிரி உணர்ந்தது கூட பிரமையாகத்தான் இருக்க வேண்டும்.

அவள் ஏறி அமர்ந்ததும் சிரித்தான்.

"வெயிட்டே இல்லையே..."

அவன் மேல் படாமலேயே அமர முடிந்தது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஐஸ்கிரீம் பார்லரும் இருந்தது. கூட்டமில்லை. இவர்கள் உள்ளே போய் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர்.

“எனக்கு டூட்டி ஃப்ரூட்டி. உனக்கு..." என்றான். சொன்னாள். ஜில்லென்ற நீர் தொண்டையில் இறங்கியது.

"புவனி எதுவும் சொன்னாளா..." என்றான்.

"இல்லையே... என்னது...”

"அப்படியா..."

"அவ கல்யாண விஷயமாவா...'

"ம்ஹும்... வேற விஷயம்..."

“என்னது...”

"நீங்க... வந்து... உங்களுக்கு பிரதர்... சிஸ்டர்... உண்டா.."

"நான் மட்டும்தான்... தனி..."

"மதுரைக்குப் பக்கத்துல இல்லே உங்க சொந்த ஊர்..."

"ம்... எப்படித் தெரியும்... புவனி சொன்னாளா.." 

"இல்லே... உங்க ஆபீசுக்கு ஃபோன் பண்ணேன். லீவுன்னாங்க... அப்பதான் தெரிஞ்சது... மதுரை உங்க நேட்டிவ்னு..."

"எனக்கு எதற்கு ஃபோன் பண்ணீங்க...”

“இந்த ஸண்டே  மீட் பண்ணலாமான்னு 
கேட்கத்தான்"

ஐஸ்கிரீம் வந்தது. பேச்சு நின்றது. கொண்டு வந்த பையன் விலகி உள்பக்கம் போனான்.

"நானும் தனிதான். ஒரு விதத்துல.  ஒரே சிஸ்டர். கல்யாணம் ஆயிருச்சு. எப்பவும் டூர்தான். படிக்கிறப்ப ஹாஸ்டல். அப்பா... அம்மா எல்லாம் ஊருக்குப் போகிற சமயத்துலதான்.”

நந்தா ஸ்பூனால் மெல்ல கிளறிக் கொண்டிருந்தாள். செர்ரி உருகிய ஐஸ்கிரீமில் சிவப்பாய் அழகாய் மிதந்தது.

"எனக்கு எப்படிச் சொல்றதுன்னு முதல்லே புரியலே... உங்க ஃபோட்டோவை... புவனி ஒரு தடவை கொண்டு வந்தா... நீங்க எல்லாம் டூர் போனப்ப எடுத்ததாம். அப்பவே விசாரிச்சேன்... புவனி கூட கிண்டல் பண்ணா. என்னடா... அவளைப் பத்தியே கேட்கறேன்னு..."

மனசு என்ன சொல்ல வருகிறான். ஜிலீரென்று அவன் வார்த்தைகளைக் கேட்க தயாராகிக் கொண்டிருந்தது.

“அதனாலதான் கேட்டேன்... புவனி எதுவும் சொல்லலியான்னு... என் மனசைப் புரிஞ்சுகிட்டு இருப்பான்னு நினைச்சேன். அல்லது இதை நானே உங்ககிட்டே கேட்கணும்னு விட்டுட்டாளோ..."

சொல்லேன்... சீக்கிரம்...

"நந்தா..." என்றான். தன் பெயரை அவன் 
முதன் முறையாக சொல்ல பரவசம் உணர்ந்தாள். "என்ன...” நிமிர்ந்து அவனைப் பார்க்க எதுவோ தடுத்தது.

'ஐ லவ் யூ..." 

சட்டென்று காதடைத்தது. என்ன சொன்னான்! அதைத்தான் சொன்னானா! கேட்டது சரிதானா!

"நிஜம்மாவே உன்னை மனப்பூர்வமா நேசிக்கறேன். எங்க வீட்டுல கூட சொல்லி வச்சுட்டேன். உன்னோட விருப்பம் புரியாமே இதுல எதுவும் செய்ய முடியாதுன்னு தோணிச்சு... உடனே உன்னைப் பார்க்கணும், கேட்கணும்னு தோணிச்சு... என்னால உன்னைப் பார்க்காமே இருக்க முடியலே நந்தா..."

அத்தனை அழுத்தமானவன் போலத் தோன்றியவனா இப்படிப் படபடவென்று
பேசுகிறான்.

“ஏன் நந்தா... என்னை உனக்குப் பிடிக்குமா..."

கெஞ்சலான தொனியில் கேட்டான்.

நந்தாவுக்கு சட்டென்று சூழ்நிலை உறைத்தது. நல்ல வேளை பார்லரில் வேறு எவரும் இல்லை. கல்லாவில் இருந்தவரும் சற்று தள்ளி இவர்கள் பேச்சு கேட்காத தொலைவில் இருந்தார்.

"வேணாம்... இந்தப் பேச்சை விடுங்க..."

“ஏன்..."

“என்னை... என்னோட உடம்பு... குறை..." பேச்சு திணறிது. மனசுக்குள் அழுகை ததும்பியது.

"நந்தா... பிளீஸ். என்னைப் புரிஞ்சுக்க... ஐ நோ எவ்ரிதிங் அபவுட் யூ... எனக்கு நீ வேணும்... ஐ லவ் யூ... ஐ நீட் யூ..."

பாதி ஐஸ்கிரீம் உருகி ஜில்லிப்பு இழந்து விட்டது. மோகன் துளிக்கூட சாப்பிடவில்லை. இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவள் தவிப்பு முகத்தில் தெரிந்தது. கை விரல்களை மூடித் திறந்தான்.


(தொடரும்)

காதல் வரம் 4

 

#காதல்_வரம் - 4

ரிஷபன்

புவனி இரண்டு நாட்களில் வந்து விட்டாள். முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ரூமுக்குள் நுழைந்ததும் டிராவலிங் பேக்கை விசிறினாள். ரஞ்சனி எழுந்து ஓடிப் போய் அவளைக் கட்டிக் கொண்டாள்.

"என்னடி... குட் நியூஸ்தானே..."

"ம்..."

நந்தா நிதானமாய் எழுந்து புவனியிடம் வந்தாள். கைபற்றிக் குலுக்கினாள்.

“வாழ்த்துக்கள்..."

"எப்படி செலிபரேஷன்..."

"எப்ப வேணா...'

"இங்கே வா... உட்கார்... டீடெய்லா சொல்லு.. வுட் பி ஃபோட்டோ இருக்கா."

புவனி குதூகலமாய்த் தெரிந்தாள். ஹேண்ட் பாகினுள் கவரில் இருந்த போட்டோவை எடுத்துக் கொடுத்தாள். தடியான வாலிபன்தான். கரேல் என்று
நிறம். அடர்த்தியான மீசை. என்ஜினீயராம். பெயர் அஷோக்.

ரஞ்சனி நுணுக்கமாக விசாரித்துக் கொண்டிருந்தாள். நந்தா மனசு சட்டென்று அதில் பதிய மறுத்தது. எதிர்ச் சுவரில் நீர்வீழ்ச்சி வெறும் புகைப்படமாய்த் தெரிந்தது.

"டிரான்ஸ்பருக்கு டிரை பண்ணணும்... கிடைக்கு மாடி... "

"நிச்சயமா... ஆமா... உங்க வீட்டுல என்ன
சொன்னாங்க..."

நந்தா எழுந்து நின்றாள். கால்கள் இரண்டுமே தொய்ந்து போனது போல் பிரமை தட்டியது. ரஞ்சனி தான் ஓடி வந்து தாங்கியிருக்க வேண்டும்.

"என்னடி ஆச்சு..."

நந்தாவுக்கு விழிப்பு வந்தது.

"ஒண்ணுமில்லே... லேசாத் தலைவலி...

"டாய்லட் போகணுமா..."

"ம்ஹும்...சரியாப் போயிரும்... ஸாரி._"

புவனிக்குத் தனது கனவுகளைக் கலைத்து நந்தாவைக் கவனிக்கச் சில வினாடிகளாயின.

"ஆர் யூ ஆல்ரைட்.." என்றாள்.

 "ஸாரி..." என்றாள் நந்தா மீண்டும்.

"ஓகே... ஓகே... நீ ரெஸ்ட் எடு நந்தா. அப்புறம் பேசலாம்"

படுத்துக் கொண்டாள் நந்தா. கண்களை மூடி அமைதி கொள்ள முயன்றாள்.

"புவனி... வுட் பீக்கு லெட்டர் எழுதப் போறியா.." என்றாள் ரஞ்சனி.

சூழ்நிலையை மீண்டும் கலகலப்பாக்க முயல்கிறாள்.

"ஃபோனே பேசிட்டேன். டெய்லி... பேசலாம்னு ஐடியா..."

ஓங்கி முதுகில் அறைந்திருப்பாள் போலும்.

"ஸ்ஸ்... என்னடி இது..."

"வலிக்குதா...”

“பின்னே...”

"பரவாயில்லே... சகிக்சுக்கோ... பழகிக்க... இனிமே எல்லா வலியும் வரும்..."

நந்தா ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். எண்ணங்கள் தூங்கினாளோ. அலை பாய்ந்ததில் எப்போது தூங்கினாளோ.

அது பகல் கனவு ரகம்தான். பின்னே மாலை ஐந்து மணிக்குத் தூங்கிக் காணும் கனவு இரவில் வருவதோடு சேர்த்தி இல்லையே.

யாரது என்று தெரியவில்லை. ரொம்ப பழகிய நபர் போலத்தான் முகம் தெரிந்தது. அருகில் வந்து கன்னத்தைத் தொட்டான்.

'ஏன் இவ்வளவு லேட்..'

'இல்லியே... சொன்ன டயத்துக்கு வந்துட்டேனே.'

'எப்படி பதறிட்டேன்... தெரியுமா?'

கனவில் ஆச்சர்யம் காத்திருந்தது. நன்றாக நடந்தாள். கூடவே நினைப்பும். எப்படி நடக்க முடிகிறது... இது நான் இல்லையா... இல்லை... அவளேதான். உடை... உணர்தல்... எல்லாம்... அவளே...

"எதுக்குப் பதறணும்..."

"பிகாஸ்... ஐ...லவ்...யூ' என்றான் நிறுத்தி அழுத்தந்திருத்தமாக.

'என்னையா...'

உன்னைத்தான்... என் நந்தாவைத்தான்'

மேலும் வலுப்படுகிற தோரணையில் அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

விழிப்பு வந்து விட்டது.

சூழ்நிலை உணர சில வினாடிகளாயின. அறையில் எவருமில்லை. வெட்கமும் பதற்றமும் புரிந்து கேலி செய்ய ஆளில்லை. அப்படியே கனவை மனதில் மறுபடி ரீப்ளே செய்தாள்.

“யாரது. அந்த மனிதன் யார்.  நன்றாகப் பழகிய முகம் போல. நிறைவேறாத அடி மனசு ஆசையா. நந்தா யோசித்துக் கொண்டிருந்தாள்.


(தொடரும்)

காதல் வரம் 3

 

#காதல்_வரம் - 3

ரிஷபன்

பெரிய தொழிற்சாலை. டவுன்ஷிப்பில்
ஹாஸ்டல். கம்பெனியே கட்டிக் கொடுத்திருக்கிறது.

ஒன்பது மணி ஆபீசுக்கு எட்டு ஐம்பதுக்குக் கிளம்பினால் போதும். புவனி டி.வி.எஸ். 50 வைத்திருக்கிறாள். இல்லா விட்டாலும் பிரச்னை இல்லை. ஆபீஸ் ஷட்டில் வரும். 

"நீ ஒரே பொண்ணுன்னு சொன்ன மாதிரி
ஞாபகம்..." என்றாள் ரஞ்சனி.

 "ஆமா... யார் இல்லேன்னா... இப்ப..."

"உன் பிரதர் நேத்திக்கு தேடி வந்ததா..."

 “எனக்கு பெரியப்பா இருக்கக் கூடாதா...'

ரஞ்சனிக்கு அடர்த்தியான தலைமுடி. ஒல்லிதான். டிரஸ் லெக்ஷனில் நேர்த்தி இருக்கும். காட்டன் ஸாரியை அழகாகக் கட்டியிருந்தாள். பூக்களும் புள்ளிகளுமாய் க்ரீம் கலரில் ஸாரி.

"அசத்தறே...” என்றாள் புவனி.

தான் கலர் மட்டு என்ற குறை ரஞ்சனிக்கு உண்டு. "ப்ச்.. என்ன பண்றது.. கலரா இல்லையே..."

“ஆனா... அழகா இருக்கியே..."

"ராஜி என்ன கலர்... கடிச்சுத் திங்கலாம். ஒவ்வொரு ஸாரியும் நெஜம்மாவே தூள்...”

"ப்ச்... ஸாரி கட்டிக்கவே தெரியாது... சும்மா சுத்திக்கிட்டு வருவா..."

"அப்பவும் அழகாகத்தான் இருப்பா..."

'ஓகே... ஓகே... எல்லோருமே அழகுதான்..." என்றாள் நந்தா இடைமறித்து.

"என்னடி கிண்டலா பண்றே..."

"சீக்கிரம் கிளம்பணும்... மணி இப்பவே எட்டே முக்கால்..."

அறையைப் பூட்டிக் கொண்டு வெளியேறும் போது... எதிர் அறைப் பெண்களுக்கு 'மார்னிங்' சொல்லி... வாசலுக்கு வந்து... இவ்வளவு அவசரத்திலும் இரு பக்க பூச்செடிகளை ரசனையோடு பார்த்து...

ரஞ்சனி டாட்டா காட்டிவிட்டு நடந்தாள்.

புவனி கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டாள். வண்டியை ஸ்டார்ட் செய்து நந்தா அமர்ந்ததும் கிளம்பினாள். கையாட்டினாள். வழியில் மீண்டும் ரஞ்சனி

"என்னடி விஷயம்... இப்ப என்ன அவசரமா... ஊருக்கு..."

பாதி வார்த்தைகள்தான் புவனிக்குக் கேட்டன.

"அப்புறம் சொல்றேன்” என்று கத்தினாள்.

நந்தா சரியென்றாள். இவர்களை மற்ற நபர்கள் வேகமாய்க் கடந்து போனார்கள். மெயின் ரோட்டிற்கு வந்ததும் இதர வாகனங்களும் கூட விரைந்தன. மறுபடி தொழிற்சாலை ரோட்டில் திரும்பி வண்டி விரைந்தது.

மதியம் உணவு இடைவேளையின் போதுதான் புவனி அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.

"ஈவ்னிங் நீ ஷட்டில் பஸ்லதான் போகணும்."

"ஏன்...” என்றாள் நந்தா ஃபைல்களை ஒதுக்கியபடி.

அலுப்பாக இருந்தது. காலை வந்தது முதல் எத்தனை பில்கள்... சரிபார்த்து... கையெழுத்திட்டு... கை வலித்தது.

"நான் இப்பவே ரூமுக்குப் போறேன்... மோகன் வந்திருவான்..."

"மோகனா... யாரது..."

"நேத்திக்கு வந்தானே... அவன்தான்..."

"என்ன விஷயம். அர்ஜெண்டா கிளம்பறே..."

"தெரியலே... வந்து சொல்றேன். ரஞ்சனிகிட்டே சொல்லிடறியா..."

"சாப்பாடு..."

"..வேணாம். வெளியே பார்த்துக்கிறேன்...'

பனிரெண்டே காலுக்கு ரஞ்சனி வந்தாள்.

"வரியா..."

இருவரும் கேன்டீனை நோக்கி நடந்தனர். "புவனி கிளம்பிப் போயிட்டா..."

"ம்..."

"என்ன விஷயம்னு தெரியலே" என்றாள் நந்தா.

ரஞ்சனி நந்தாவைப் பார்த்தாள். இந்த முகத்தில் குழந்தைத் தன்மைதான் தெரிகிறது. விழிகளில்தான் எவ்வளவு கருணை. தன் குறையில் மனம் நொந்து வெறுப்பைப் பிரதிபலிக்காத விழிகள்.

"என்னடி... அப்படிப் பார்க்கறே..."

"...ம்... நான் ஆம்பளையா பொறந்திருந்தா... உன்னைத்தான் கட்டியிருப்பேன்..."

"ச்சீ... பொய் சொல்லாதே..."

"நெஜம்மாதான் சொல்றேன்... ஏண்டி... இவ்வளவு அழகாய் பொறந்தே."

"நான் அழகா! இப்ப சொல்லதே. நடக்கும் போது சொல்லு..."

தட்டுகளை வாங்கிக் கொண்டு... சாப்பிடும் இடத்தில் அமர்ந்தனர்.

"அதுதாண்டி எனக்கும் புரியலே. கடவுள் நம்பிக்கையே எனக்கு சில நேரங்களில் இல்லாம போயிரும்... அதுவும்... உன்னைப் பார்க்கும் போது... நிச்சயமா... கடவுள் மேல எரிச்சலே வரும்..."

நந்தா தலை குனிந்திருந்தாள். கை தன்னிச்சையாய் கவளம் விழுங்கியது. ரேடியோ இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தொழிலாளர் நிகழ்ச்சி ஏதோ ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பெண்களுக்காக இடம் ஒதுக்கி குறுக்கே பிளைவுட் தடுப்பு. வெளியே போகும் இடத்தில் மட்டும் தடுப்பு இல்லை. அந்த வழியாகப் போகும் சக சக ஆண் அலுவலர்களின் பார்வை சாப்பிடும் பெண்களின் மீது தற்செயலாகவும் வேண்டுமென்றும் பதிந்து போயின.

"இந்தத் தடுப்பு அனாவசியம் இல்லே" என்றாள் நந்தா திடீரென.

ரஞ்சனி நிமிர்ந்து பார்த்தாள். இவள் பார்வையைச் சந்தித்து ஒருவன் அசடு வழிந்து விட்டு நகர்ந்தான்.

"என்னமோ... அதிசயப் பொருளைப் பார்க்கிற மாதிரி வெறிச்சு பார்க்கிறாங்க. அதனாலதான் இந்த ஏற்பாடு..."

"என்னோட ஃபீலிங். இந்தத் தடுப்பு இல்லேன்னா இவங்க நடவடிக்கை மாறிடும்னு."

"இல்லே நந்தா. நீ நினைக்கறது தப்பு. அவ்வளவு சுலபமா ஆண் மனசு மாறாது. இது அடிப்படை குணம். இயல்பு..."

நந்தா பேசவில்லை. ரஞ்சனி சுபாவம் தெரியும். "புவனி எதுக்காக ஊருக்குப் போறா..."

"மேரேஜ் செட்டில் ஆகலாம்னு தோணுது.'

உள்ளூர என்னவோ உறுத்தியது. அதை ஏன் தன்னிடம் சொல்லியிருக்கக் கூடாது?

"தப்பா நினைக்காதே. என்கிட்டேயும் அதைச் சொல்லியிருக்க மாட்டா. நேத்து நாங்க வெளியே போனபோது தற்செயலா பேச்சுவாக்குல விஷயம் வந்திருச்சு. ஃபைனலா ஒரு முடிவு தெரிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தாளாம்"

"ஓ..."

"பெண் பார்த்துட்டு போனாங்களாம். ஒருவேளை அதற்காகத்தான் போயிருப்பான்னு நினைக்கறேன். இந்த வாரம் முடிவை சொல்லி அனுப்பறேன்னு சொன்னாங்களாம்.அப்படின்னா நிச்சயம் செஞ்சுக்குவாங்கன்னு நினைக்கறேன்..."

கை கழுவிக் கொண்டு வெளியில் வந்தனர். எதிர்ப்படுகிற நபர்களுக்கு வழிவிட்டு வழிவிட்டு நீண்ட காரிடாரில் நடந்தபோது புது மனிதர்களின் பரிதாபம் கலந்த பார்வையைச் சந்திக்க நேர்ந்தது.

"என்ன நந்தா..."

"ஒண்ணுமில்லே. என்னைப் போய் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னியே. கேலியா பரிதாபமா..."

"இரண்டும் இல்லே. ப்யூர் லவ்..."

"பொய் சொல்லாதே..."

"நம்பலேன்னா போ..."

நந்தாவை அவள் சீட்டில் விட்டு விட்டு ரஞ்சனி போய் விட்டாள். ஃபைலில் மனசு பதிய மறுத்தது. ப்யூர் லவ்... நிஜமான நேசம்... இருக்கிறதா... எப்படி சாத்தியம்... அதுவும் என் மீது.

முதல் தடவையாக அழுகை வந்தது. என்னை மட்டும் ஏன் இப்படி படைத்தாய்? எழுந்து டாய்லட்டிற்குள் போனாள்.

(தொடரும்)



காதல் வரம் 2

 


#காதல் வரம் - 2

ரிஷபன்

மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வருகிற வழியில்தான் சந்திரிகா எதிரில் வந்தாள்.

“...புவனி எங்கே... அவளைத் தேடிக்கிட்டு அவ அண்ணனாம்... வந்திருக்காரு..."

"அவ வெளியே போயிருக்காளே..."

"எப்ப வருவா... ஏதோ அர்ஜெண்டாப் பேசணும்னு சொன்னாரு..."

"நான் போறேன்..."

செருப்பு போட முடியாது. ஆனால் பழகி விட்டது. பரபரக்கிற வெயிலில் கூட அடி பதித்து நடப்பாள்.

"சுடாதா..."

ஊஹும்..."

“கஷ்டமா இல்லே.."

சிரிப்பாள். எங்கும் அனுதாபப் பார்வைகள். மெஸ்ஸில் கூட ஆரம்பத்தில் இவளைப் பார்த்ததும் முன் வரிசையில் உடனே இடம் கொடுப்பார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள்.

"எனக்கு நெஜம்மாவே கஷ்டமா இல்லே..."

"...பரவாயில்லே..."

ஊனத்தைக் காட்டிலும் இதுதான் உறுத்தியது. என்னால் முடியும் என்று மனசுக்குள் வளர்த்து வைத்திருக்கும் பிம்பம் ஆடும். ஆனால் ஊனத்தைப் போலவே இந்த மரியாதைகளும் இப்போது பழகிப் போய் விட்டது.

சாயம் போன மாதிரி ஜீன்ஸ்... ஃப்ரீசைசில் ஷர்ட்... கண்ணாடியை மீறி விழிக்கிற பார்வை. ஷூக்கள்...

“நீங்க புவனியோட பிரதரா..." என்றாள் நந்தா. இவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் எந்த

மாற்றமும் இல்லை. முதலில் அதுவே அவளுக்குப் பிடித்திருந்தது. 'பாவம்... ச்சி...' என்று பார்வையில் எடுத்த உடன் தொனிக்கும் 'பாவம்' இல்லாத மனிதன்.

"ம்... அவ இல்லையா..."

'...ஈவ்னிங்தான் வருவா. ஏதாவது 
சொல்லணுமா..."

"...எங்கே போயிருக்கா?”

"இன்னைக்கு லீவு தானே...”

இவனிடம் சொல்லலாமா... வேண்டாமா என்று யோசிப்பது புரிந்தது.

“லீவுதான்... இன்னொருத்தியும் அவளுமா. கலீக் ஒருத்தி வீட்டுக்கு போயிருக்காங்க..."

“அவங்க வீட்டுல ஃபோன் இருக்குமா..."

"தெரியலையே... இல்லேன்னுதான் நினைக்கிறேன்..."

அவன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

“நான் நாளைக்கு ஆபீசுக்கு ஃபோன் பண்றேன்.. நாளைக்கு ஈவ்னிங் ஊருக்குக் கிளம்பற மாதிரி இருக்கும். அதை மட்டும் அவகிட்டே சொல்லிருங்க."

நிதானமாக நடந்து போனான். நந்தாவை மறுபடி திரும்பிப் பார்க்கவே இல்லை. அது மட்டும் இல்லை. வெளி கேட் போகிற வரை... இது பெண்கள் ஹாஸ்டல்.... என்கிற பிரக்ஞை இல்லாதவன் போல... இயல்பாக நடந்து போனான்.

"ஹாய் நந்தா...நீ எங்கேயும் போகலையா.." குரல் கேட்டுத் திரும்பினால், வனிதா, அவளும் வெளியில் போகிறாள் என்று தெரிந்தது.

"இல்லே..."

"யாரது? உன் பாய் ஃப்ரண்டா..."

"ச்சீ... புவனியோட அண்ணா..."

"ச்சே... மிஸ் பண்ணிட்டேன்... டிராப் பண்ணச் சொல்லியிருக்கலாம்" என்றாள் வனிதா, வாசலில் அவன் ஸ்கூட்டரில் ஏறிப் போவதைப் பார்த்து.

நந்தா சிரித்தாள். இதே வனிதா... என்ன
சொன்னாள் தெரியுமா...

"இந்த மாதிரி குறை இருக்கறவங்க... ரொம்ப குசும்பு பிடிச்சவங்களா இருப்பாங்க... தெரியுமா...”

"அப்படீன்னா..."

“கர்வமா.. எடுத்தெறிஞ்சு பேசற டைப்பா..."

“நந்தா அந்த மாதிரி இல்லே..."

*சொல்லாதே... போன வாரம்... அவ பாவம் விந்தி...விந்தி நடக்கணுமேன்னு... நானே காபியைக் கொண்டு வந்து கொடுத்தேன்... வேணாம். எனக்கு கை இருக்கு. நானே வாங்கிப்பேன்னு சொல்லிட்டா..."

"அதுல என்ன தப்பு..."

“திமிர்தானே அது.. ஹெல்ப் பண்ணா... ஏத்துக்கற புத்தி ஏன் இல்லே..."

 'உன் ஹெல்ப் அவளுக்கு அவசியம்னு படலே..'

“அதைத்தான் குசும்புன்னேன்.”

 புவனிதான் வந்து சொன்னாள். 

"அவளைச் சும்மா விடலே... பளிச் பளிச்சுன்னு கேட்டுட்டேன்.''

நந்தா பேசாமல் சிரித்தாள். பழகிப் போய் விட்டது. சாதாரணமாக அவளே இம்மாதிரி அனுசரணைகளை ஏற்றுக்கொண்டு விடுகிறாள். அவசியமில்லை என்றாலும், அதையும் மீறி சில நேரங்கள்... இந்த மாதிரி... வனிதா மாதிரி நபர்கள்.

அறையை நோக்கி நடந்தாள். அடி வயிறு இன்றைய உபத்திரவம் காரணமாக வலிக்கத்தொடங்கியது. 

(தொடரும்)

காதல் வரம் 1

 #காதல்_வரம் - 1


ரிஷபன்


நந்தாவின் காலைப் பொழுது ஆரம்பித்து விட்டது. கண்களை மூடியபடியே எழுந்து கட்டிலில் அமர்ந்த நிலையிலேயே தரையில் கால்களை ஊன்றினாள். 


கண் விழித்தாள். எதிர்ச் சுவரில் பெரிய அளவில் நீர்வீழ்ச்சி புளோ அப். திவலைகள் மேலே தெளித்து விடலாம் என்று உற்சாகப்படுத்துகிற அளவு துல்லியம்.


தினசரி வழக்கம். குறைந்தது ஐந்து  நிமிடங்களாவது மனசு இதில் தோயும்.


'அப்படி என்னதான் தோணும், உன் மனசுக்குள்ளே’ என்றாள் ரஞ்சனி ஒருநாள். 


நந்தாவிற்கு விழிகள் பெரிது. அதில் பரவசம் கலக்கும்போது தனி கம்பீரம் தட்டும்.


'நாமே அந்த நீர்வீழ்ச்சிக்குள்ளே இருக்கிற மாதிரி தோணுது'


சொல்லி முடிப்பதற்குள் உடம்பு சிலிர்த்து விடும். ரஞ்சனி அலட்சியமாய் தோளைக் குலுக்குவாள்.


சிநேகிதியின் மனசு நோகக் கூடாது என்றில்லை. அவளுக்கு நிறைய விஷயங்களில் அபிப்பிராயம் மாறும். அந்தந்த நேர மனநிலையைப் பொறுத்துத்தான் வெளிப்படுத்துவதும், சொல்லாமல் புரிய வைப்பதும்.


எதிரே மேஜையில் இவள் பார்வையில் பட வேண்டும் என்று ஒரு காகிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.


அதில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியும். நேற்றிரவே முடிவான விஷயம்.


"என்ன நந்தா... உன் பிளான் என்ன?”


"ஸ்டேயிங் ஹியர்..."


"ஓகே. உன்னோட சாய்ஸ்... நானும்... புவனியும் காலையில் கிளம்பிப் போறோம்."


"இந்தக் குழந்தை... வழக்கம் போல... எட்டு மணி வரை தூங்கட்டும்” என்று புவனி நந்தாவின் மூக்கைச் செல்லமாகத் திருகினாள்.


"சாயங்காலம்தான் வருவோம்."


"ஹும்... சுத்த போர். இப்பதான் போன வாரம் ஊருக்குப் போனது. ஒவ்வொரு ஸண்டேயும் ஏன் வருதோன்னு இருக்கு..."


"இவ எப்படித்தான் ரூம்லயே அடைஞ்சு கிடக்கறாளோ..."


"எப்பப் பார் ரூம்லயே இருக்கற மாதிரியே பேசறே... போனவாரம் நானும் ரஞ்சனியும் ஊர் சுத்தினோம். இந்த வாரம் அந்த மாதிரி நேர்ந்து போச்சு..."


'ஓகே... அக்செப்டட்.”


ரஞ்சனிக்கு 'ஓகே' கலக்காமல் வார்த்தை வராது. காலையில் எழுந்து போகும்போது... இவளுக்கு 'குட் மார்னிங்' எழுதி வைத்து விட்டு போயிருப்பார்கள்.


நிதானித்துக் கொண்டு எழுந்தாள். சின்ன வயதிலிருந்தே பழக்கம். பதற்றம் வராது. இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று மனதில் பதிந்து போன விஷயம்.


நந்தா எழுந்திருக்கும்முன் அவளைப் பார்த்தால் குறை தெரியாது. நடக்கும்போதுதான் புரியும்... இவளா... இவளுக்கா...


வலது கால் அழுத்தமாய்த் தரையில் பதிய இடது கால் ஊசலாடிப் பதிந்தது. மறுபடி மெல்ல வலது காலைப் பெயர்த்து... இடது காலுக்கு முழு கனமும் தராமல் அடுத்த அடி. இத்தனை வருஷப் பழக்கத்தில் இதை இயல்பாகச் செய்வதால்... அவ்வளவாகத் தடுமாற்றமில்லாத நடை.


'குட் மார்னிங்' கூடவே குறும்பாக ஒரு படம். குச்சி மாதிரி கை... கால்கள்... யானை சைசுக்கு உடம்பு. பெரிதாய் விழிக்கிற முகம்.


சிரித்து விட்டு டிக்சனரியில் பேப்பரைச் சொருகினாள். மெல்ல நடந்து பாத்ரூமிற்குள் போனாள்.


(தொடரும்)