Showing posts with label பேச்சு. Show all posts
Showing posts with label பேச்சு. Show all posts

June 19, 2011

பார்வை


’என் கிட்ட உனக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு’

வித்யா கேட்டதும் எனக்கு உடனே என்ன சொல்வதென்று புரியவில்லை.

‘எல்லாம்தான்’

‘லூசு.. குறிப்பா என்ன பிடிச்சிருக்கு’

‘இந்த மாதிரி உரிமையா திட்டறது’

’எதுக்குமே நேரடியா புரிஞ்சுகிட்டு பதில் சொல்ற புத்தியே உனக்குக் கிடையாதா’

‘சரி.. நீ சொல்லு.. என் கிட்ட உனக்கு என்ன பிடிச்சிருக்கு’

மடக்கப் பார்த்தேன்.

‘ஒண்ணே ஒண்ணுதான்.. நீ என் மேல வச்சிருக்கிறதா நான் நினைச்சுகிட்டு

இருக்கேனே.. அந்தப் பிரியம்’

‘ஏய்..’

’இப்ப நீ சொல்லு’

எதிரில் சாயம் போன சுடிதாரில் எந்த மேக்கப்புக்கும் முயற்சிக்காத

பெண்ணைப் பார்த்தேன்.

‘எவ்வளவோ சொல்லலாம்பா’

‘அதுல நெம்பர் ஒன் சொல்லு போதும்’

ம்ம்.. வேண்டுமென்றே யோசித்தேன். அவளை ஏற இறங்கப் பார்த்தேன்.

விரல்கள் நீளம். தலைமுடி குட்டையும் இல்லை.. ரொம்ப நீளமும் இல்லை.

கழுத்தில் ஒரு வசீகரம்.

‘சொல்லித் தொலை’ என்பது போல பொறுமையிழந்து பார்த்தாள்.

அந்தக் கண்கள்.

‘வித்யா.. சொல்லட்டுமா’

‘ம்ம்’

‘அப்புறம் கோவிச்சிக்கக் கூடாது..’

‘ஏன் எடக்கு மடக்கா ஏதாச்சும் சொல்லப் போறியா’

‘சேச்சே’

‘அப்புறம் என்ன.. சொல்லேன்.. ‘

‘முத முதல்ல உன்னைப் பார்த்தப்பவும் சரி.. இப்பவும் சரி.. உன்கிட்ட எனக்குப்

பிடிச்சது .. ‘

வித்யா இப்போது என்னையே உற்றுப் பார்த்தாள்.

‘உன்னையே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ஆனா உன் கிட்டன்னு குறிப்பா

சொன்னதால.. ‘

‘.....’

‘ உன் கண்கள் தான் வித்யா.. ‘

‘நிஜம்மா’

‘ம்.. ‘

சட்டென்று அவள் கண்களுக்குள் என் உருவம் குதித்து விழி நீரில் மிதந்து

நீச்சலடித்து எங்கோ தொலைந்து போனது.