Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

August 19, 2012

சதுரகிரி - சில அனுபவங்கள்


கோரக்கர் குகை இது. அவர் தவம் செய்த இடம். அங்கே இப்போது ஒரு பெண்மணி இருக்கிறார். அருள் வாக்கும் சொல்கிறார். 18 சித்தர்களையும் தரிசித்ததாகவும் சொல்கிறார்.

மேலே படத்தில் ஷானும்.. மஹேஸ்வரனும்.

அவர் தீபாரத்தி காட்டும்போது கண்ணாடி அணிந்து தரிசித்ததும் சிரித்தார் கேலியாக.

“இது என்ன வழக்கம்.. கண் நல்லாத் தெரியணுமா வேண்டாமா..  போட்டுகிட்டே தரிசனம் பண்ணா அப்புறம் எப்படி பார்வை சரியாகும்”

அவர் சொன்ன அர்த்தம் இது. அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே எழுதவில்லை. 

அப்புறம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத்தான் தரிசித்தோம். அதன்பின் இப்போது எந்த கோவில் போனாலும் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கிடைக்கிற காட்சியைத்தான் தரிசிக்கிறேன் !

எங்களுடன் மலை ஏறி .. இறங்கிய இன்னொரு நட்பு ஜோடி.

“நீ 96 ஜூன்ல ரிடையர் ஆன..  நான் டிசம்பர்ல..”

அவ்வப்போது மூச்சிரைக்கையில் பாறை மீது உட்கார்ந்து பேசிக் கொண்டே போன நண்பர்கள்.  74 வயதுக்காரர்கள்.

ஒருவருகொருவர் துணையாய் முழுப் பயணமும் அவர்கள் இணைந்து வந்த விதம் மனதைத் தொட்டது.

இன்னொரு குடும்பம்..  பாலிதீன் பையில் பர்சும் வேறு ஏதோ தின்பணடமும் வைத்திருந்த பெண்மணி.. குரங்கு பாய்ந்து பறித்துக் கொண்டு மரமேறி விட்டது. மரமோ மலைச் சரிவில்.

‘பர்ஸு போச்சு” என்று அவர் அலறினார்.

எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் என்ன சாமர்த்தியமாய் அதை மீட்டார் 
சரிவில் இருந்த மரத்தில் குரங்கு.. பையை ஆராய்ந்து தனக்கு பர்ஸ் உதவாது என்கிற முடிவுக்கு வருவதற்குள் .. இந்த நண்பர் நடக்க உதவியாய் கொண்டு வந்த கொம்பை குரங்கின் முகத்திற்கு எதிரே ஆட்டினார். கடுப்பான குரங்கு பர்ஸை வெளியில் எடுத்து கீழே போட்டது.

சரியான சறுக்குப் பாறை. எங்கும் பிடிமானம் இல்லை. நண்பர் சளைக்கவில்லை. கொம்பை வைத்தே மெல்ல பர்ஸை நகர்த்தி ஒரு லெவல் வரை மேலே கொண்டு வந்தார்.  அதன்பின் ஒருவர் கையைப் பிடித்து இன்னொருவர் என்று அந்த சறுக்கில் தவழ்ந்து பர்ஸைக் கைப்பற்றி மேலே கொண்டு வந்தார்கள்.

உள்ளே எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. 
பர்ஸ் திரும்பிக் கிடைத்ததும் பெண்மணி முகத்தில் நிம்மதி..

அந்த இரவில்.. பௌர்ணமி வெளிச்சத்தில் எவ்வித பயமும் இல்லாமல் எல்லாப் பெண்களும் (வயது வித்தியாசமின்றி) மலையில் போய் வந்ததைப் பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது. 

குட்டி குட்டியாய் சுவையான சம்பவங்கள்..  சதுரகிரி பயணம் மனதை விட்டு அகல வெகு நாட்களாகும் போல..


August 16, 2012

சதுரகிரி - 3

விடியலில் நான்கு மணிக்கே அபிஷேகம் இருக்கும் என்று சொல்ல.. 12 மணிக்கு படுத்தவர்கள் 3 மணிக்கே விழித்து விட்டோம்.
தூங்கினோம் என்று சொல்ல முடியாது.  பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு குளிர் காற்று ஜிவ்வென்று அடித்து உடம்பை உலுக்கி விட அரைகுறைத் தூக்கம்.

எழுந்தோம். மறுபடி டார்ச் லைட். சந்தன மஹாலிங்கம் தரிசிக்க நடந்தோம். 
5 மணி வரை காத்திருந்து.. அபிஷேகம் ஆரம்பிக்கிற வழியாய் இல்லை.
அவ்வளவு நேரம் இருந்த மின்சாரம் போனது. 

ஒரு வழியாய் குருக்கள் வந்து கதவைத் திறக்க ஆனந்த தரிசனம்.

பிறகுதான் அபிஷேகம். மணி மெல்ல ஆறரையைத் தொட்டது.. இப்போது இறங்க ஆரம்பித்தால்தான் என்று ஷான் சொல்ல.. சந்தன .. சுந்தர மஹாலிங்க தரிசனம் பார்த்து நடக்க ஆரம்பித்தோம்.

அகத்தியர் உருவாக்கிய தீர்த்தம் என்று மலை மேல் ஒரு ஊற்றுக் கிணறு.  பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு வாளியில் இறைத்து ஊற்றினார்கள். எங்களுக்கும் ஆசை வர குளித்தோம். அற்புதக் குளியல். ஜில்லென்று  நீர் பட்டதும் உடம்பு வலியெல்லாம் ஓடிப் போனது.

11 மணி .. மீண்டும் அடிவாரம் வர.  எதுவும் சாப்பிடாத எனக்கு பாதி வழி இறங்கும்போது அயர்ச்சி. ஆனால் கீழ் வரை பத்திரமாய் வந்து சேர்ந்தாகி விட்டது.

மீண்டும் ஆட்டோவில் வத்ராப் எனப்படும் வத்திராயிருப்பு.. அப்புறம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.. ஆண்டாள் தரிசனம்.. (அன்றுதான் ரெங்கமன்னார் பிறந்த நாள்) மதுரை.. இரவு 7 மணிக்கு திருச்சி..

ஆத்மார்த்தமாய் பக்தி.. பரஸ்பர மனித நேயம்.. (குரங்கு தள்ளிக் கொண்டு போன பர்ஸை - ஒரு பெண்மணியுடையது - லாவகமாய் மீட்டுத் தந்த யாரோ). நடக்க நடக்க மனசுக்குள் பீரிட்ட உற்சாகம்.. இயற்கையுடன் ஒன்றி இருந்த அனுபவம்.. மலை உச்சியிலும் சுவையான உணவு.. 

சதுரகிரி - வாய்ப்பு கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள்.  



August 15, 2012

சதுரகிரி - தொடர்ச்சி 2

பயணங்களில் ஒரு தனி சுவாரசியம் இருக்கிறது. அதிலும் குறிப்பாய் மலை மேல் போகும்போது.
இயற்கை அதன் எழிலைக் கொட்டி வைத்திருக்கிறது.
ரசிக்கிற சாக்கில் ஆங்காங்கே பாறை மீது அமர்ந்து தான் போனோம்.

குழந்தைகள் பயமே இல்லாமல் ஏறி வருவதைப் பார்த்தால் கூச்சமாய் இருக்கிறது. அதிலும் சிலர் ஏகத்துக்கு குண்டு.. அவர்கள் உடம்பை  தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறி வந்ததைப் பார்த்தால் நமக்கே உற்சாகம் வருகிறது.

ஒரு தாத்தா.. பாட்டி.. அவர்கள் குடும்பம்.. என்று ஏழெட்டு பேர்.  தாத்தா வருவது நான்காவது தடவையாம்.
பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.
"நீங்க எந்த ஊர் ?"
"திருச்சி.. நீங்க..”
“மாம்பழச்சாலை”
அட.. அவரகளும் திருச்சி.. அப்புறம் என்ன.. ஒரே ஊர்க்காரர்கள் என்கிற பாசம் பீரிட திராட்சைப் பழங்களைப் பகிர்ந்தோம்.

முதல் தடவை என்பதால் எங்களுக்கு ரூட் பற்றிய பயம். ஷான் எங்கே என்று பார்த்துக் கொண்டுதான் நடந்தோம்.  அவர் பழகின பாதை என்பதால் சற்று முன்னே வேகமாய் போய்விட்டு எங்களுக்காகக் காத்திருப்பார்.

புதிதாய் போகிறவர்கள் நிச்சயம் பயமே இல்லாமல் போகலாம். அதாவது இம்மாதிரி விசேஷ தினங்களில். யாராவது கூட்டமாய் போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். எங்காவது வழிதப்பிப் போவோமோ என்கிற கவலை வேண்டாம். நூல் பிடித்தமாதிரி வழி. 

வழி தப்பினாலும் நாய் உருவத்தில் பைரவர் வந்து வழிகாட்டுவதாய் ஒரு நம்பிக்கை. நாங்கள் போனபோதும் இம்மாதிரி வழி காட்டிப் போன பைரவர்களைப் பார்த்தோம். எங்களுக்கு முன் மலையேறி உச்சியில் நின்றிருந்தன.

இந்த பதிவுகளில் நான் சதுரகிரி புராணம் சொல்லப் போவதில்லை. என பார்வையில் பயண அனுபவம் மட்டுமே. சதுரகிரி பற்றி நிறைய பேர் அழகாக, சுவாரசியமாக பதிவிட்டிருக்கிறார்கள். 

ஆங்..  எங்கே விட்டேன்.. மெல்ல இருட்ட ஆரம்பித்தது. டார்ச் லைட்டை ஒளிர விட்டோம். அதன் வெளிச்சம் பரவிய இடம் மட்டும் பாதை தெரிந்தது. அதற்கு மேல் கும்மிருட்டு.

முன்னால் போனவர்களின் அடியொற்றி   
போக வேண்டி இருந்தது.
வெளிச்சத்தில் எடுத்த புகைப்படம் இது. இதை விட மோசமாய் சில இடங்கள். இருட்டில் எங்கே கால் வைக்கிறோம் என்று புரிபடாத நிலையில் ஏறக்குறைய தவழ்ந்து போகிற மாதிரி. 




ஆனால் எங்களுடன் வந்தவர்கள் அனாயசமாய் போனார்கள்.  வலது கைப்புறம் மலை. இடது கைப்புறம் அதல பாதாளம் !
நடுவில் ஒரு இடத்தில் என்னுடன் வந்தவர்கள் மலையை ஒட்டி மேலே நடக்க நான், எனக்கு முன் போன இருவரைப் பின்பற்றி இடது கைப்பக்கம் இறங்கி... அவ்வளவுதான்.. அதற்கு மேல் இருட்டு.

“அங்கே எங்கே போறீங்க.. வழி கிடையாது..”
“இவங்க போனாங்களே”
“வனதேவதை சிலை இருக்கு பாருங்க.. அதைக் கும்பிட போனாங்க”

வனதேவதையை படம் பிடிக்காதீர்கள் என்று சொல்லி விட்டார்கள்.

அது ஏன் மாலை/இரவில் தான் போகணுமா என்றால்.. பகலிலும் போகிறார்கள். ஆனால் சூடு தாங்காது. கால் வைத்தால் கொப்பளித்து விடும்.  இதனால் விடியல் அல்லது இரவு நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பிலாவடிக் கருப்புசாமி கோவில் .. வழியில் வருகிறது.
இது ஒரு லேண்ட் மார்க். 



எப்படியோ  இரவு ஒன்பதரை மணிக்கு மலை உச்சிக்கு போய்விட்டோம்.
கடைகளும் ஸ்பீக்கர் அலறலும்  சுடச்சுட இட்லி தோசை போண்டா சுக்கு காபி என சாப்பிட எந்தக் குறையும் இல்லாத பிக்னிக் ஸ்பாட் போல மலை உச்சி.

ஆனந்தமாய் சுந்தர மஹாலிங்க தரிசனம்.. இதற்குத்தானே அவ்வளவு முயற்சிகள்.  சின்ன கோவில் தான்.  ஆனால் சற்றே சாய்ந்த சிவலிங்க தரிசனம் பார்த்து மனசுக்குள் ஒருவித பரவசம். 

அன்னதானம் அழைத்து அழைத்து தருகிறார்கள். நண்பர்கள் கடையில் டிபன் சாப்பிட எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை. வீட்டை விட்டு கிளம்பியது முதல் குளுகோஸ் நீரும். திராட்சையும்தான்.

எனக்கு இருந்த ஒரே ஒரு சந்தேகம்.. இயற்கை உபாதைகளுக்கு என்ன வழி..  சிறுநீர் கழிக்க சிக்கலில்லை.. அடுததது.. என்ன செய்வது.. என்கிற கவலை.. நல்லவேளையாய்  மலை விட்டு இறங்கும் வரை அந்தத் தொல்லை வரவில்லை.

ஆங்காங்கே இருட்டில் ஒதுங்கி விடுகிறார்கள்.  அங்கிருக்கும் அருவியில் அவ்வளவாய் இப்போது நீர் வரத்து இல்லையாம். ஒரு தொட்டியில் நீர் பிடித்து வைத்திருக்கிறார்கள். 

பிறகு பௌர்ணமி வெளிச்சத்தில்  இதோ கீழே இருக்கிற வெட்டவெளியில் தான் நியூஸ்பேப்பரைப் போட்டு படுத்திருந்தோம்.




இங்குதான் இரவு படுத்தோம். குளிர் நடுக்கி விட்டது.

போர்வை கொண்டு போகாதது தப்பாகி விட்டது. ஆனால் அந்தக் குளிரும் படுசுகம்.

(முடிச்சிரலாம்)

August 12, 2012

சதுரகிரி



வெகு நாட்களாய் எதிர்பார்த்த ஆன்மீகப் பயணம். இந்த பௌர்ணமிக்கு வாய்த்தது.
அலுவலக நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். 
‘சதுரகிரி போனால் சொல்லுங்க’ என்று.
ஆவணி அவிட்டம் அன்று காலை கிளம்பினோம். இரு நண்பர்களும் நானும்.
சண்முகசுந்தரம் முன்பு போய் வந்தவர். நானும் மஹேஷ்வரனும் புதுசு.
‘தங்க இடம் இருக்குமா.. என்னென்ன எடுத்து வரணும்.. கஷ்டமா இருக்குமா’
எஙகள் கேள்விகளுக்கெல்லாம் ”ஷான்” (அப்படித்தான் செல்லமாய் சண்முகசுந்தரத்தை அழைப்போம்) மையமாய் புன்னகைத்தார்.
டார்ச் லைட்.. குளுகோஸ்.. தண்ணீர் பாட்டில்.. ஜோல்னா பை சகிதம் கிளம்பியாச்சு.
திருச்சி டூ மதுரை..  அப்புறம் மதுரை டூ ஸ்ரீவில்லிப்புத்தூர்.. வத்திராயிருப்பு.. அங்கிருந்து ஆட்டோவில் தாணிப்பாறை. இதுதான் சதுரகிரி மலை அடிவாரம்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிஸ்கட் பாக்கட், ப்ரெட் என்று ஷான் வாங்கிக் குவிக்க.. ‘மலை மேல நாம சாப்பிடவா’ என்று ஆர்வமாய்க் கேட்டோம்.
ஷானின் மர்மப் புன்னகை இப்போதும்.
கீழேயும் கடைகள். ஆட்டோ கார் வேன் என்று சகலமும் மலை அடிவாரத்தில்.
‘செருப்பை எங்கே விடலாம்’
பாதிப் பேர் செருப்புடன் தான் நடந்தனர். நாங்கள் ஒரு புதருக்குள் அடையாளம் தெரிகிற மாதிரி போட்டு விட்டு நடந்தோம்.
பக்கா ரோடு இல்லை.. திருப்பதி போல. மலை.. அதன் இயல்பில். பாறை.. கற்கள்.. கால் அழுத்தி வைக்க முடியாமல் குத்தியது பாதை. 
நாங்கள் கிளம்பிய நேரம் மாலை. இன்னும் இருட்டவில்லை. 
ஒரு பக்கம் மலை.. மறுபக்கம் அதல பாதாளம். சறுக்கினால் யாராவது வந்து கண்டு பிடிக்கணும்.
தண்ணீருடன் குளுகோசை கலந்து வைத்துக் கொள்ளச் சொன்னார் ஷான்.
ஆச்சு.. நடக்க நடக்க ஒரு பக்கம் ஆர்வம்.. கூடவே எத்தனை மனிதர்கள்.. எல்லா வயதிலும்.  குழந்தை முதல் தொண்டு கிழம் வரை..
அதிலும் சிலர் தூக்கிக் கொண்டு போன மூட்டைகள்.. ஏயப்பா..
அடிவாரத்தில் ஏறும் போதே எச்சரிக்கை.. பிளாஸ்டிக்.. பாலிதீன் கவர்களை மேலே போடாதீர்கள் என்று. ஆனால் யாரும் கேட்பதாயில்லை.. ஆங்காங்கே இறைந்து கிடந்தன.  200 வாலண்டியர்களை அடுத்த மாதம் வரவழைக்கப் போகிறார்களாம்.. மலை முழுக்க இப்படி கிடக்கும் குப்பைகளை திரட்டி கொண்டு வர. இப்படி அடிக்கடி செய்து மலையை காப்பாற்றுகிறார்கள்..
புனிதமான மலை என்கிற உணர்வில் பலர்.. சினிமாப்பாட்டு அதிர சிலர்.. சிகரெட் குடித்து அப்படியே வீசி விட்டு போன சிலர்.. மதுபாட்டில் கூட..
’நமக்கு பயந்து சாமி மலை மேல வந்து உக்கார்ந்தா.. நாம விடாம துரத்தி வரோம்..’ என்று ஒருவர் கிண்டலடித்தார்.
நாய்களும் குரங்குகளும் தென்பட்டன. உடனே ஷான் உற்சாகமாகி விட்டார்.
பிஸ்கட் பாக்கட்டை பிரித்து கையில் வைத்து நீட்ட அவை அருகில் வந்து எடுத்துக் கொண்டது கண்கொள்ளா காட்சி..
இறங்கியவர்களில் இருவர் எங்களிடம் அவர்கள் கையில் இருந்த கொம்பை கொடுத்தார்கள். 
‘வச்சுக்குங்க.. இப்ப இல்லாட்டியும் இறங்கறப்ப பயன்படும்’
சுந்தர மஹாலிங்கம் தான் அவர்கள் வடிவில் வந்திருக்க வேண்டும். ஏறும்போதே அது மிகவும் பயன்பட்டது. அனாயசமாய் ஏறிப்போன.. இல்லை;.. இல்லை.. தாவித் தாவிப் போனவர்களை பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம்.
கொஞ்சம் ‘ஸ்லிப்’பினால் சர்ரென்று போய் விடக்கூடிய இடம்.  கால் ஜதி சொல்லாமலேயே ஆட ஆரம்பித்து விட்டது.
‘லிப்ட்ல போனா இப்படித்தான்.. நடக்கணும்’ என்றார் ஷான்.
ஆங்காங்கே இருந்த குட்டி குட்டி கோவில்களை தரிசித்துக் கொண்டு சூழலின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தோம்.
இருட்ட ஆரம்பித்தது..  இத்தனைக்கும் பௌர்ணமி.. நிலா வெளிச்சம் தெரியவில்லை.  கும்மிருட்டு.. முன்னே பின்னே நடப்பவர்களின் பேச்சு சத்தம்.. சிலர் கையில் டார்ச்..
பத்தடிக்கு மேல் பாதை புலப்படவில்லை.. எங்கே கால் வைப்பது என்று புரியாமல்..
“போன தடவை அமாவாசைக்கு வந்தோம்..”என்றார் ஷான். 
அந்த இருட்டிலா..

(தொடரும்)

(படம் கூகுள் உதவி)




February 17, 2012

போபால்-படா தாலா



முதல் நாள் அலுவலக வேலை முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பியதும் எதிரே இருந்த ஷாப்பிங் மாலுக்கு போனோம்.

திருச்சியில் பார்த்ததை விட மிகப் பெரிய அளவு. ஆறு மாடி. எஸ்கலேட்டர்தான் எல்லா மாடிக்கும். அதைத்தவிர கண்ணாடிகூண்டு லிப்ட்.

50% தள்ளுபடி.. 60%.. 70% என்று ரகவாரியாய் தள்ளுபடிகள். பார்த்ததெல்லாம் ‘தள்ளும்’படிதான் இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றியும் முடியவில்லை. அவ்வளவு பெருசு..

எப்படியும் செலவு வைக்க வேண்டும் என்று தீர்மானித்து, டார்க் ஷோவுக்குள் போனோம்.

பேய் அறை என்று அதைச் சொல்லலாம். கையில் திருப்பதி போல ஒரு பேண்ட் கட்டி இருட்டறைக்குள் அனுப்புகிறார்கள்.

அதற்கு முன் எச்சரிக்கை. இதயபலவீனமுள்ளவர், குழந்தைகள், கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று.

ஆ.. ஊ.. என்று பேய் அலறல்கள். சவப்பெட்டி திறந்து வெளியே வந்த உருவம் அந்த அரை இருட்டில் கலவரப்படுத்துகிறது. குறுக்கே எலும்புக் கை நீண்டு மறிக்கிறது. பட படவென பட்டி அதிருகிறது. இத்தனைக்கும் ஐந்து நிமிடம்தான்.
அத்தனை பயமுறுத்தல்கள்.

வெளியே வரும்போது - உள்ளே வரமறுத்து வெளியே நின்ற நண்பர் கேட்டார்.

‘பேய் அனுபவம் எப்படி’

சகோதரி சொன்னார். ‘அது கூடத்தான் இருபது வருஷமா குடும்பம் நடத்தறோமே’

மறுநாள் ‘படா தாலா’ போனோம்.

மிகப் பெரிய ஏரி. போபாலுக்கு குடிநீர் சப்ளை அங்கிருந்துதான்.

ஆறு கிலோமீட்டர் நீளம். அடுத்த கரை தெரியவில்லை.




நீங்களே பாருங்க.. அடுத்த கரை தெரியுதான்னு..

ரகவாரியாய் படகு சவாரி. முதலில் ஸ்பீட் போட்டில் போனோம். அப்புறம் மனசு அடங்காமல் பெடலிங் போனோம்.

நாமே பெடல் செய்து போவதில் ஒரு த்ரில்லிங் தெரிந்தது. நம் படகை மோட்டார் போட் கிராஸ் செய்யும்போது படகில் மோதிய அலை நீரில் படகு ஆடி.. கவிழப் போகும் அபாயம்.. ஆஹா..

‘நீச்சல் தெரியுமா..’ என்று ஒவ்வொருவரைக் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் நால்வரில் இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும்.

‘கவலையே இல்லை.. நீ அவன் கையை பிடிச்சுக்க.. நான் இவர் கையைப் பிடிச்சிக்கிறேன்’ என்றேன்.

வாத்துக்கள் ‘கக்.. கக்’ என்று சப்தமிட்டு நாம் போடுகிற பாப்கார்ன் சாப்பிடும் அழகே அழகு.




இருபுறமும் நீர்.. நடுவே நாங்கள்.. மனசு குழந்தையாய் மாறி கும்மாளமிட்டது..

மறக்க முடியாத அனுபவம்.




(பயணம் தொடரும்)



February 18, 2011

சார்மினார் சலோ

முன்பெல்லாம் ஊர் போவதென்றால் உற்சாகமாய் இருக்கும். இப்போது சரியான துணை கிடைத்தால் தான் சுவாரசியம் என்றாகி விட்டது.
தனியாக ஊர் சுற்றி இருக்கிறேன். பேனா நட்பைத் தேடி. அத்தனை நாட்கள் கடிதங்கள் மூலம் பழகிய நண்பர்களை நேரில் பார்க்கும்போது விட்டுப் பிரியவே மனசு வராது.
இப்போது கடிதம் இல்லாத .. அலைபேசியில் ஒப்புக்கு பேசும் மன நிலையில் (ஏதேனும் ஒரு அலுவலை கையில் வைத்துக் கொண்டு சட்டென்று பேசி முடித்து விடும் மனநிலையை சொன்னேன் ) இப்படி அலுவலக நிமித்தம் நண்பர்களுடன் போவதில் பழைய உற்சாகம் திரும்பி விட்டது.
நாம் சோர்ந்தால் கூட அவர்கள் நம்மை பிடித்து இழுத்து போகும் போது என்னமாய் ஒரு துள்ளல் மனசுக்குள் !
சுகுமார், மகேஸ்வரன் இருவரும் என்னுடன் வந்திருந்தார்கள். அவர்களுடன் தான் இந்தப் பயணம்.
மூன்று நாட்கள் அலுவலக வேலை முடிந்து நாலாம் நாள் மாலை ரெயிலை பிடிக்க வேண்டும். காலையில் சார்மினார் போனோம்.
அதற்கு முன் வரை சார்மினாரை ஏதோ தாஜ்மகால் ரேஞ்சுக்கு நினைத்திருந்தேன். வெறும் நான்கு பெரிய தூண்கள் போல ஒரு கட்டிடம்! அவ்வளவுதான். அதுவும் படு அழுக்கு. ஒருத்தர் மட்டும் மேலேறி செல்லும் அளவு மாடிப்படி போல படிக்கட்டுகள். மேலே போனால் வட்டமாய் சுற்றி வரும் அளவுக்கு வராண்டா ..

சார்மினாரின் உட் புறத் தோற்றம் ..




மேலே நின்று பக்கவாட்டில் சார்மினார் தோற்றம்.




சார்மினார் உள்ளே நின்று கீழே சாலையை படம் பிடித்த போது..




சார்மினாருக்கு எதிரே அழகான மசூதி !




பின்னர் சாலர்ஜங் மியூசியம் போனோம். மஸ்லின் துணி அணிந்த பெண் சிலை கொள்ளை அழகு. தலையை சுற்றி முக்காடு போட்ட தோற்றம். அந்த சிலை வடித்த சிற்பி நிஜமாகவே ரசனைக் காரர். எப்படித்தான் சாத்தியமாயிற்றோ. அந்த பெண்.. அவளுடலைத் தழுவி மஸ்லின் துணி.. எல்லாம் அதே சிலையில். சொன்னால் புரியாது. பார்த்து ரசிக்க வேண்டும் அந்த அழகை.
இன்னொரு சிலை முன் புறம் ஒரு வயதான வீரர்.. பின்புறம் அதே சிலையில் அழகான பெண்.. பின் பக்கம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். பெண்ணின் உருவம் அதில் தெரிகிறது கிபி ஒன்று .. இரண்டாம் நூற்றாண்டு சிற்பங்கள் எல்லாம் காட்சியில். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.. பழைய காலக் கடிகாரம் ஒன்று.. பனிரண்டு மணிக்கு அதனுள் இருந்து ஒருவர் வெளியே வந்து மணி அடிக்கும் காட்சிக்கு அந்த ஹால் முழுவதும் கூட்டம் காத்திருந்தது.. வேடிக்கை பார்க்க. இன்று வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அதிசயம்.
பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..
எங்களை நன்றாக வைத்திருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு ஸ்பெஷல் நன்றி!



February 16, 2011

என் டி ஆர் பார்க்

போகும் போதே ரயிலில் ஒரு சுட்டிக் குழந்தை .. சுந்தரத் தெலுங்கில் மழலை பேசி எங்களைக் கவர்ந்து விட்டது.
என்ன கொடுமை என்றால் எங்களுக்கு அந்தக் குழந்தை பேசியது புரியவில்லை. நாங்கள் பேசிய தமிழ் அதற்குப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் வந்து எங்களை சீண்டிக் கொண்டிருந்தது. பூமிகா சின்ன வயசில் இப்படித்தான் இருந்திருப்பார் என்று சினிமா ஞானம்இல்லாத நண்பரிடம் சொல்ல .. 'உங்க சிஸ்டரா ' என்றார் அப்பாவியாய்.
எல்லா யுனிட்டிலிருந்தும் வந்த அலுவலர்கள் ஏதோ பேய் பிடித்த மாதிரி கணக்கு போட .. நான் மட்டும் எப்போது சுற்றிப் பார்க்க போகலாம் என்று அரித்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் ஹோட்டல் திரும்பியதே இரவு ஏழரைக்கு .
அதனால் எங்கும் போக முடியவில்லை. அலுப்பு வேறு.

மறுநாள் மாலை பிர்லா மந்திர் போனோம் . தமிழகக் கோவில்கள் பார்த்த கண்களுக்கு அது ஏதோ எக்சிபிஷன் பார்த்த பீலிங் .

அதற்கு அடுத்த நாள் ஹுசைன் சாகர்.. லும்பினி பார்க் .. என் டி ஆர் பார்க்..

அந்த ஏரியில் நடுவே மிகப் பெரிய புத்தர் சிலை. ஸ்பீட் போட்டிங் போனோம்.

அதற்கு முன் லைப் ஜாக்கட் கொடுத்து போட்டுக் கொள்ள சொன்னதும் சற்றே மிரண்டேன். சாக்கடை போல தண்ணீர் .. அதில் யார் விழறது?

நிலாவில் இறங்கிய மனிதன் போல மஞ்சள் ஜாக்கட்டுடன் மூன்று பேரும் அடுத்தவரைப் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

உண்மையிலேயே த்ரில்லிங். சும்மா சர்ர்ரென்று போட் கிளம்பி புத்தரை ஒரு சுற்று சுற்றி திரும்பியதும் .. அந்த ஐடியா கொடுத்த நண்பருக்கு கை கொடுத்தேன்..

என் டி ஆர் பார்க்கில் சம்பத் என்கிற சுவாரசியமான இளைஞன் .. தாவரவியல் நிபுணன் ..








பாலைவனப் பகுதிகளில் வளரும் தாவரங்களுக்காக ஒரு பகுதி அவன் மேற்பார்வையில். ஒவ்வொரு செடி.. கொடியை விலாவரியாய் விவரித்து அடுத்த பகுதியான போன்சாய் தொட்டிகளையும் காட்டினான்.

'இது பன்னண்டு வருஷம்.. இது இருபத்தஞ்சு வருஷம் .. ' என்று அவன் சொன்னது எல்லாம் என் இடுப்பு உயரம் கூட இல்லை.

'பிடிச்சிருக்கா ' என்றான். நான் ' கஷ்டமா இருக்கு மனசுக்கு ' என்றேன். அதற்கு பின்..

பூக்கள் .. பூக்கள்.. ஹப்பா.. எத்தனை அழகு..




அப்படியே சுற்றி வந்தோம் அலுப்பு போன இடம் தெரியவில்லை.. நுழை வாசலில் மிகப் பெரிய நந்தி.. 'அட நம்ம ஆளு.. '





நடந்து நடந்து கால் வலி .. இப்பதான் தெரியுது.. கொஞ்சம் ரெஸ்ட் .. ஓக்கேவா .. சார்மினார் பத்தி அடுத்த பதிவுல..

February 14, 2011

ஹை ஹைதராபாத்



அலுவலக வேலை நிமித்தமாக ஒரு வாரம் ஹைதராபாத் பயணம். தங்கும் வசதி அவர்களே ஏற்பாடு செய்து விட்டார்கள். கோல்கொண்டா ஹோட்டலில் ..

அறைக்குள் நுழைந்தால் ..




பாத் ரூமிற்கு கண்ணாடி சுவர்! குளியல் அறையும் அதற்குள் .. கண்ணாடி சுவருடன்.



இப்படி முதல் அனுபவமே வித்தியாசமாய்.. நடுநடுவே மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் திரும்பியதும் ஊர் சுற்றிய அனுபவம்..
ஆட்டோக்காரர்கள் சாதாரணமாய் ஒரு இடத்திற்குப் போகவர நூறு ரூபாய் கேட்டால்.. அவர்கள் சொல்கிற கடைக்கு வரச் சம்மதித்தால்.. பாதி கட்டணம் போதும் என்கிறார்கள். ‘சும்மா வாங்க.. அஞ்சு நிமிஷம் கடைக்குள்ர போயிட்டு வந்தா போதும்.. அம்பது ரூபா கொடுங்க’
நிஜமாகவே அதே போலத்தான். முத்து பேமஸ்.. முத்துக்கள் விற்கும் கடைக்குள் போய் எதுவும் வாங்காமலேயே பாதிக் கட்டணம்!

தொடரலாம்..