December 10, 2020

 பேச்சு

ரிஷபன்
ஆறு வருஷங்களாச்சு, பொன்னியை தத்து கொடுத்து. மனசே ஆறலை. அஞ்சும் பொட்டையாப் பொறந்தா குடித்தனம் எப்படி நடத்தறதாம்.
பக்கத்து வீட்டம்மா, அப்ப பக்கத்து வீட்டுலதான் குடியிருந்தாங்க. "ஏண்டி செல்லி... எனக்கோ புள்ளையே இல்லே. அஞ்சும் பொட்டையா பெத்து வச்சிருக்கியே ஒருத்தியை நான் எடுத்து வளர்க்கிறேனேன்னாங்க."
வேலுவும் ஒத்துகிச்சு. அதான் மறுத்துப் பேசும்னு நினைச்சேன்
நம்மகிட்டே சோறு, தண்ணி இல்லாம சாவுறதுக்கு எங்கனாச்சும் நல்லா இருக்கட்டும்னாரு.
மவராசி. பொன்னியை அதான் நாலாவதா பொறந்ததை எடுத்துகிட்டா.
ஒரு வயசு.
"கைக்குழந்தைக்கு தாய்ப்பால் வேணும்டி. அதனால இவளை எடுத்துக்கிறேன்"
தாய்ப்பாலா. சுரப்பு வத்திப்போன மாரை நானே பார்த்து சிரிச்சுகிட்டேன்.
"என்னடி சிரிக்கிற. வாரந்தப்பாம அரிசி பருப்பு தரேன். கூச்சப்படாம வந்து வாங்கிக்க. பக்கத்துலயே வளர்ந்தா யார் மனசு எப்படி மாறும்னு சொல்ல முடியாது"
அடுத்த டவுன்ல தான் இருக்கப் போறோம்னாங்க.
சொன்ன வாக்கு மீறலே. போவேன். தவறாம படியளந்தாங்க. ஒரு தடவை கொடுத்தா ஒரு மாசம் தாங்கறாப்ல.
ஆனா ஒண்ணு. எம்புள்ளையைப் பார்க்கணும்னு நினைக்கவே இல்லே. கண்ணுல படாம காத்து மாதிரி போய்த் திரும்பிருவேன்.
நல்லாப் பேசுதாம். வெடுக்வெடுக்குன்னு.
"இப்ப என்னடி, உன்னைய அதுக்கு அடையாளமா தெரியப்போவுது. நின்னு பார்த்துட்டு போயேன்னாங்க" பெரிய மனசா.
"வேணாம்மா. கடைசி வரை கண்ணுல படாமயே போயிடறேன். ஒரு புள்ளையைக் கொடுத்ததுக்காக. ஆறு உசுரைக் காப்பாத்தற உங்களுக்கு... எப்படி நன்றி சொல்லப்போறேன்னு" புலம்பினேன்
உள்ளார போனாங்க. வழக்கம்போல அரிசி, பருப்பு எடுத்தார. கூடவே இன்னொரு குரலும் கேட்டுச்சு இளசா...புதுசா... எம் பொன்னியா.
"ஏம்மா இப்படி யாருக்கோ அள்ளிக்
கொடுக்கறீங்க... பணத்தோடு அருமை தெரியுதா. தர்மம் பண்ணவும் ஓர் அளவு இருக்கு"
நான் பெத்த மவ பேச்சைக் கேட்டீங்களா?
- தமிழ் அரசி பிரசுரம்

December 08, 2020

அப்பாவாம் அப்பா

 அப்பாவாம் அப்பா


ரிஷபன்


வலது காலை வாசற்படிக்கு வெளியிலேயே

வைத்திருந்தேன். தப்பு... வைத்திருந்தோம்.


நான்தான் மிரண்டிருந்தேன். ரமா தைரியமாக  நின்றாள்.


"கூப்பிடுங்க"


தாலி ஏறிய நான்கு மணி நேரத்திற்குள் உரிமையான தொனி.


கூப்பிட்டேன். "ம்மா..."


அப்பாவைக் கூப்பிட முடியாது. பயம்


"யாரு"


"நான் தாம்மா. ஆசீர்வாதம் பண்ணும்மா,"


விழப் போனவன் அப்படியே காலருடன் தூக்கி நிறுத்தப்பட்டேன்.


நிறுத்தியவர் அப்பா.


"நீ உள்ளே போடி. நீ வெளியே போடா” என்றார் ஸ்பஷ்டமாக


அவர் பத்தினி உள்ளே போக, என் பத்தினியுடன் வெளியே நின்றேன்.


"ப்பா... ஸாரிப்பா.... வந்து..."


கெட் அவுட்"


"மாமா நான் சொல்றதை"


"போடா "


“ப்பா "


முகத்தில் கதவு அறையப்பட்டது. சில வினாடிகள் வழி தப்பியவர்கள் போலத் திணறி நின்றோம்.


" போலாம் வா . அப்புறமா கன்வின்ஸ்

பண்ணுவோம்"


"அப்பவே சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க"


"ஸ்ஸ் சத்தம் போடாதே பக்கத்து வீடுகள்ல வேடிக்கை பார்க்கிறாங்க...''


தலை குனிந்து வீதி கடந்தாலும் இரு பக்கங்களிலுமுள்ள வீடுகள் எங்களை உற்றுப் பார்ப்பதை உணர முடிந்தது


பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தோம்


காதல் பெரிதெனக்கு - வீடு பெரிதில்லை என்று அவசர முடிவு எடுத்தது சரிதானா என்று புத்தி குழம்பியது


இத்தனைக்கும் அப்பாவி ன் உயிருக்குயிரான சிநேகிதர் சந்தானத்தின் கடைசிப் பெண்தான் ரமா. நான்கு பெண்கள் அவருக்கு. மகனில்லை. முதல் மூன்று பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்க சிரமப்பட்ட போது, அப்பா தம்மால் முடிந்த அளவு உதவினார், நல்ல வரன்களாகப் பார்த்துக் கொடுத்ததின் மூலம்.


சந்தானம் சுயமரியாதை உள்ளவர். எளிதில் அடுத்தவர் உதவியை ஏற்க மாட்டார். அந்தத் தன்மானம் எனக்குப் பிடித்திருந்தது. ரமா வளர்க்கப்பட்ட விதமும் அப்படியே. நல்ல மருமகளுக்குரிய குணங்களுள்ள அவளை அப்பா மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் காதலித்துத் தொலைக்க, எதிபாராத திருப்பம்


"அவளை மறந்துரு"


"முடியாதுப்பா"


"அப்ப வீட்டைவிட்டுப் போயிடு"


அம்மா, தம்பி இருவரும் மௌனமாய் வேடிக்கை பார்த்தார்கள்


அசட்டுத் துணிச்சலில் ரமாவை வற்புறுத்தி நண்பர்கள் முன்னிலையில் ஒரு கோயிலில் வைத்துத் தாலியும் கட்டிவிட்டேன். இப்போது பிரச்சனை வெடித்தே விட்டது. அப்பாவிற்கு பிடிவாதம் அதிகம். பிரிவு நிரந்தரம் தானா.


பஸ்ஸைப் பிடித்து சந்தானம் வீட்டை அடைந்தோம்


அப்பா அளவிற்குக் கோபப்பட்டாலும் எங்களின் நிராதரவான நிலையும், மன்னிப்புக் கோரிய விதமும் அவரைச் சமாதானப்படுத்திவிட்டன. மேலும் ரமா என்னை மணந்ததில் அவருக்குச் சம்மதம்தான். வீட்டை விரோதித்துக் கொண்டதில்தான் வருத்தம்.


"ப்பா... நாங்க தனியா இருக்கறதைக் காட்டிலும் இங்கே நம்ம வீட்டோடவே இருந்துடலாம்னு அவர் பிரியப்படறார். பெரியவங்க கவனிப்புல இருக்கத்தான்

அவருக்கு இஷ்டம்"


"ஊர் என்ன சொல்லும்?"


"எனக்கு ஊரைப்பத்திக் கவலையில்லே.... ரொம்ப நாள் அப்பா, அம்மா கூடவே இருந்து பழகிட்டேன். இப்ப நீங்களும் விலக்கி வச்சுட்டா... அதை என்னால தாங்க முடியாது...” என்றேன்.


பின்னொரு நாள் அம்மாவைக் கடைத்தெருவில் சந்தித்த போது ஏளனமாய்ச் சுட்டிக் காட்டினேன்.


" இப்ப நாங்க நல்லா இருக்கோம். அப்பாவுக்கும் மேல அவர் பிரியமா இருக்கார்."


அம்மா சிரித்தாள்.


"போடா முட்டாள்.... நட்புக்காகப் பையனையே விட்டுக்கொடுத்திட்டார்டா. எந்த உதவி செஞ்சாலும் ஏத்துக்காமே கஷ்டப்படறதைப் பார்த்து சந்தானத்துக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்யத்தான், கோபமா இருக்கற மாதிரி நடிச்சார்... காப்பாத்த ஆண் வாரிசு இல்லாமே அவதிப்படற நண்பருக்குத் தன் வாரிசையே கொடுத்துட்ட அவர் மனசு உனக்குப்புரியாதுடா" என்றாள்.


என் கண்களில் நீர் கசிந்தது.


- சாவி பிரசுரம்

November 30, 2020

 ஈரம்

ரிஷபன்
_____________
மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது.
--- மார்க்ஸ் அரேலியஸ்.
_______________
"கிழம் கடைசியில என்னதான் சொல்லிச்சு ? " என்றார் தட்டிலேயே கை கழுவியபடி. பேசாமலிருந்தேன். இவர் எதிர்பார்க்கிற பதில் என்னிடம் இல்லை .
"கிழவிக்கு என்னைத் தவிர மத்தவங்க எல்லோர் மேலயும் அன்பு பொங்கி வழியுது. கேட்காமலேயே பணம் தருது " என்றார் மறுபடி.
மூலையில் கட்டிலில் படுத்திருந்த மாமியாரிடம் அசைவில்லை. மகன் பேசுவதைக் கவனித்துக்கொண்டு இருக்கிறாரா.. அல்லது, தூங்கிவிட்டாரா என்று புரியவில்லை. இப்போதே மணி
பதினொன்றரை ஆகி விட்டது.
இப்போதெல்லாம் தாமதமாகத்தான் இரவில் வீடு திரும்புகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் மூன்று மணிக்கு மேலும்! இதர தினங்களில் இரவு ஒன்பது மணிக்குள் கடை அடைத்துவிடுவார் முன்பெல்லாம். சரியாக ஒன்பது பதினைந்துக்கு வீட்டில் இருப்பார். வாசலில் மொபெட்டின் சத்தம் கேட்கும்.
இப்போது சைக்கிள்தான். மொபெட்டையும் விற்றாகிவிட்டது. கடையை மூடிவிட்டாலும் திரும்புவது லேட்டாகத்தான். கேட்டால், 'சரக்கு பிடிக்க போனேன். அது.. இது.' என்று ஏதேதோ காரணங்கள்
கடை அப்படியொன்றும் இப்போது பிரமாதமாக நடக்கவில்லை அருகிலேயே இருபது அடியில் இன்னொரு கடை... அழகான கண்ணாடி ஷோகேஸ்களுடன். கூட்டம் இப்போது அங்கே போகிறது பின்னே... எந்தச் சாமானைக் கேட்டாலும் 'இல்லை' என்று பதில் வந்தால் யார்தான் விரும்புவார்கள், கடைக்கு வர.
சொன்னால் இவருக்குக் கோபம் வரும்
"என்னையே குறை சொல்லு... நான்தான் தலைதலையா அடிச்சுகிறேனே... கையில பணம் இல்லே.. சரக்கு வாங்கிப் போடணும்னு .... கிழவி வச்சுக்கிட்டே தரமாட்டேங்குது.''
தராமல் இல்லை. முன்பெல்லாம் கொடுத்தவர் தான். ஆனால், பண விஷயத்தில் கிழவி கெட்டி. கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு, பேங்க் வட்டி கொடுக்கவேண்டும் என்று கறராகச் சொல்லிவிடும்.
இவரும் நாலைந்து முறை ஐந்து ஐந்தாகப் பணம் வாங்கிவிட்டு, இன்று வரை வட்டியில் பாதிதான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதைத் தவிர வெளியிலும் கடன். கேட்டால் என்னென்னமோ பதில்கள்.
நல்ல வேளை. குழந்தை ஒன்றோடு நின்றது. பிறந்ததும் பெண். அபிராமியை வளர்த்து ஆளாக்கினால் அதுவே பெரிய காரியம் என்று பெருமூச்சுவிடத் தோன்றும்.
படுக்கையில் முன்பு போல் படுத்ததும் தூக்கம் வருவதில்லை. இப்போது என்னென்னவோ நினைவுகள் மனசு அலை பாய்கிறது. கணவனும் முன்புபோல் இல்லை. ஆதரவான தொடுதல்களும், சீண்டல்களும் அற்று, தேவைக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் இயந்திரத்தனமாய் இயக்கங்கள். மனசு ஒட்டாமல் காரியங்கள். எதிர்பார்க்கிற ஆசையும் அற்றுப்போய் எதிர்பார்க்க வைக்கிற தூண்டுதல்களும் இல்லாமல் போனது
"தூங்கிட்டியா"
எப்படித் தூக்கம் வருமா....? இந்த மனிதர் ஏதோ கடை கண்ணி வைத்தும் நல்ல செயலாக இருக்கிறார் என்றுதான் கட்டிக் கொடுத்தார்கள். முதலிரவன்றே நாலு பவுனில் செயினை அன்புப்பரிசு என்று போட்டவர் தான்.
அது பழங்கதை. நான் போட்டுக்கொண்டு வந்ததும் சேர்த்து இப்போது போய்விட்டது. கேட்டால் எவர் நம்புகிறார்கள்.
" உம் புருஷனுக்கு ஏதாச்சும் கெட்ட பழக்கம் இருக்குதோ என்னவோ.. எப்படி இந்த மாதிரி செலவாகும்....?'' என்றுதான் சொல்கிறார்கள்
எனக்குத் தெரிந்து வேறு பழக்கங்கள் இல்லை. என்ன.. கொஞ்சம் செலவாளி! கையில் பணம் இருந்தால் கண் மண் தெரியாது. செலவாகிற வரை தூக்கம் வராது. அபிராமிக்கே செயின், வளையல் என்று வாங்கித் தந்து அசத்தியவர்தான். இப்போது அதுவும் இல்லை .
"அபிக்குட்டி அதுக்குள்ளாற தூங்கிருச்சா?'' என்றார் மறுபடி
"இப்ப மணி என்ன தெரியுமில்லே?"
"என்ன பொழைப்பு போ. கடையைக் கொஞ்சம் நல்லா பண்ணிரலாம்னுதான் பார்க்கிறேன் ரெண்டு மூணுபேர்கிட்டே பணத்துக்கு அலைஞ்சு பார்த்தேன். ஒண்ணும் தேறலே...''
கால்களை நன்றாக நீட்டிக் கொண்டேன் காலையிலிருந்து ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை. இரவு படுத்தால் இடுப்பு நோகிறது
"இந்தக் கிழவி கூட இப்படிச் சதி பண்ணுதே..."
"அவங்களைக் குறை சொல்லாதீங்க... முன்னால் கேட்டப்ப எல்லாம் கொடுத்தவங்கதானே?" என்றேன் உணர்ச்சியை அடக்க இயலாமல் .
"அதையே சொல்லு. இப்ப என்ன... வேணும்னா கேட்கறேன். தேவை வந்திருச்சு"
"அப்படி என்ன தேவை? முன்னால் எல்லாம் நீங்களே சமாளிச்சீங்களே...?''
"அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. ஏதோ... ரெண்டு ஒண்ணு தப்பா முடிவு எடுத்து.. பணம் நஷ்டமாயிருச்சு.... சரி இப்ப ஈடு கட்டிரலாம்னு பார்த்தா ஒத்து வர மாட்டேன்னா"
சுருண்டு கிடக்கிற புருஷன் மீது அனுதாபம் சுரந்தது. ஆனாலும், என்னால் ஏதும் செய்ய இயலாது. இனி கழற்றிக் கொடுக்க கட்டிய சேலை மட்டும்தான் மிச்சம். ஒரிஜினல் இருந்த இடங்களில் இப்போது கவரிங் மட்டுமே!
"இவகிட்டே தொங்கக் கூடாதுன்னுதான் பார்க்கறேன். சனியன் பிடிச்ச விதி. வெளியே நமக்கு தோதுப்பட மாட்டேங்குது "
கிழவியின் சாதாரண இருமல்கள் இவ்வளவு பெரிய ஜுரத்திற்கு அஸ்திவாரம் என்று முதலில் புரியவில்லை.
சோதனையாய் கிழவியின் உயிர் பிரிகிற நேரம் இவர் வீட்டில் இல்லை. அபிராமியைத்தான் அனுப்பினேன் கூட்டிவரச் சொல்லி.
" கொஞ்சம் பொறுத்துக்குங்க. இதோ வந்திருவாரு" என்றேன், மாமியாரின் நெஞ்சை நீவி விட்டு
"எனக்குத் தாங்காது... போதும் போ! இனிமே இருந்து என்ன செய்யப்போறேன்?'' என்றார் மூச்சுத் திணறல்களுடன்
வென்னீரின் பலத்தில் மறுபடி சொன்னார். டம்ளரைக் கீழே வைத்தேன்.
"இங்கே பாரு.. நீ எனக்கு ஒரு சத்தியம்
செய்யணும் "
"எ...ன்னம்மா ?"
''தலையணைக்குக் கீழே ஆறு ரூபா இருக்குது. புரியுதா...? ஆறாயிரம்"
தொண்டை உலர, மாமியாரையே வெறித்தேன்
''அவன்கிட்டே காட்டிராதே... எல்லாம் என் பேத்திக்குத்தான். புரியுதா? அப்புறமா பேங்க்ல போட்டிரு... அவ பேர்ல இது இருக்குதுன்னு தெரிஞ்சா
இதையும் காலி பண்ணிருவான்.."
அந்த நிலைமையிலும் எனக்கு ரோஷம் வந்தது.
"அவரு ஒண்ணும் மோசமான ஆளில்லே"
"புரியுதுடி... ஆனா.. பிடிவாதக்காரன். எது நமக்கு ஒத்துவரும், ஒத்துவராதுன்னு விவேகம் வேணும். பிஸினஸ்ல லாபநஷ்டம் வரலாம்... ஆனா... இப்படிப் பணத்தை அழிச்சுக்கிட்டே இருக்கிறது புத்திசாலித்தனமில்லே.. அதனாலத்தான் கடைசியா இந்த பணத்தையாவது சேர்த்து வச்சிரணும்னு பார்த்தேன் போ...! இதைப் பத்திரமா வச்சிட்டு வா. அவன்கிட்ட காட்டாதே"
உள்ளூற உறுத்தியது. கிழவியின் பேச்சில் தெரிந்த நியாயத்தையும் மீறி தாலி கட்டிய கணவனுக்குத் தெரியாமல் ஒரு காரியம் செய்வதா என்ற தடுமாற்றம்
"ஏதாச்சும் அப்புறம் கேட்டா நான்தான் சத்தியம் வாங்கிட்டேன்னு சொல்லிக்க.. அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்.. புத்தியா நடந்துக்க... அவனை மட்டும் நம்பி புண்ணியமில்லே. நீயும் சமயத்துல உஷாரா இருந்தாதான் குடும்பம் ஓடும். போ... போ!''
கிழவி மனசு அப்படி ஒன்றும் கல் இல்லை. உள்ளூர குடும்ப நன்மைக்கு உருகுகிற ஈரம் இருந்திருக்கிறது என்று எனக்கு மட்டும் புலப்பட்டு என்ன பயன்....? இதை மறைக்காமல் அவருக்கும் வெளிப்படுத்தினால் ஒரு
வேளை அவரும் மாறுவாரோ....?
"சமயம் வரப்ப... பேசிக்க... இப்ப வேணாம்" என்றார் என் மனசு புரிந்தவர் போல .
எழுந்து போனேன். பணத்தைப் பத்திரப்படுத்தி விட்டுத் திரும்பியபோது, வாசல் கதவு திறந்து இவரும் அபிராமியும் உள்ளே வந்தார்கள்
கிழவியின் தலை தொங்கியிருந்தது.
- சாவி - "பொன்மொழிக்கதைகள்"