Showing posts with label டீச்சர். Show all posts
Showing posts with label டீச்சர். Show all posts

September 05, 2011

காளியம்மாள் டீச்சர்

இரண்டாம் வகுப்பு.
வீட்டில் எதற்கோ கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து விட்டேன்.
(அந்த வயசிலேயே கோபமா என்று நீங்கள் புருவம் சுழிப்பது தெரிகிறது.)
நேரம் ஆக ஆக பசி வயிற்றைக் கிள்ளியது.
வகுப்பு ஆசிரியை காளியம்மாள் எனக்கு மிகவும் பிடித்தவர்.
அவர் பாடம் நடத்தும் போது கவனம் வேறெங்கும் போகாது .
இன்று பசியில் நெளிவதை அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை.
மணி பதினொன்று.
வகுப்பு அறை வாசலில் யாரோ.
"டீச்சர் .. டீச்சர் " என்று சக மாணவர்கள் கத்துவது கேட்க நானும் நிமிர்ந்து பார்த்தேன்.
என் அத்தை.
டீச்சர் அவரிடம் என்ன விஷயம் என்று விசாரிக்க, நான் கோபத்தில் சாப்பிடாமல் வந்த விவரம் அத்தனை பேருக்கும் தெரிந்து விட்டது.
'அவன் பசி தாங்கமாட்டான். அதான் நான் வந்தேன் .. " என்றார் அத்தை.
காளியம்மாள் டீச்சர் என்னைப் பார்த்தார்.
'ஏண்டா சாப்பிடலியா .. அப்படி என்ன கோபம் ' என்கிற விசாரணை எதுவும் இல்லை.
'போ.. போ.. சீக்கிரம் சாப்பிடு '
வராண்டாவில் என்னை உட்கார வைத்து நெய் மணக்க ரசம் சாதம், தொட்டுக் கொள்ள கீரை .. ஊட்டியே விட்டார் அத்தை.
டிபன் பாக்ஸ் தெரியாமல் கண்ணீர் மறைத்தது.
பைப்பில் வாய் துடைத்து விட்டு உள்ளே அனுப்பினார்.
என் இருக்கையில் வந்து அமர்ந்தபோதுதான் டீச்சர் சொன்னார்.
'அட.. அசடு.. என்ன கோபம் வந்தாலும் பட்டினி கிடக்காதே '
இன்றும் ரசம் சாதம் நெய் மணக்கும்போது காளியம்மாள் டீச்சரும் கல்யாணி அத்தையும் நினைவில் வந்து போகிறார்கள்.
இரண்டு பேரும் ஒரே பாடம் கற்றுக் கொடுத்தவர்கள்.
'பட்டினி கிடக்காதே '

ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்.