Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

February 14, 2015

வைரஸ் படலம் - முக நூலில் !



                             வைரஸ் படலம் - முக நூலில் !


இப்போது நினைத்தால் சிரிப்பு பீரிட்டுக்கொண்டு வருகிறது..காரணம் இதை வைத்து என் நண்பர்கள் என்னை ஓட்டியது.. ஆனால் அந்த பயங்கர நிமிடம்.. இப்போது நினைத்தாலும் தூக்கி வாரிப் போடுகிறது.
ஓட்டு போட்டு ஜனநாயகக் கடமையை முடித்த திருப்தியுடன்.. அதையும் பதிவு செய்யும் ஆவலில் மையிட்ட விரலை அழகாய்ப் படமெடுத்துப் போட்டு விட்டு பிறர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன் .  நமுட்டு சிரிப்புடன் வைரஸ் வில்லன் காத்திருந்தது தெரியாமல்.
நண்பர் ஒருவர் பதிவில் அவசியம் பார்த்தே தீரவேண்டிய வீடியோ என்ற குறிப்புடன் சாதுவான லிங்க் போடப்பட்டிருந்தது. வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு என்கிற அசால்ட்டான ஆசையில் கிளிக்கினேன்..அவ்வளவுதான்..
 பயங்கர பின்புலத்துடன் ஒரு அன்னிய அம்மையார்.. என்பக்கத்தில் வந்து ' கண்ணுக்குள் பொத்தி வைத்த என் செல்லக் கண்ணனே..' என்று பீட்டில்ஸ் பீட்டில் பாட ஆரம்பித்தார்.
 மௌஸ் அந்த நிமிஷம் கைக்கு அகப்படாமல் துள்ளிக் குதித்து கீழே விழுந்தது.
'
இன்னொரு டோஸ் காப்பி வேணுமா.. சாப்பாடு லேட் ஆகும்' சமையற்கட்டிலிருந்து குரல் கேட்டது.
அய்யோ .. வந்துரப் போறா..இந்த கண்ராவியை பார்த்துட்டு 'ஓ.. இதான் எப்ப பார் பேஸ்புக்ல இருக்கற ரகசியமான்னு'  சண்டை ஆரம்பிக்கப் போகிறதுன்னு பயத்துடன் அந்த 'அம்மணி'யை விரட்டப் பார்த்தேன்..போவேனா என்று அப்படியே நின்றாள். டிலீட் ஆப்ஷனே காணோம். மௌஸ் தானும் திக்பிரமித்து அசைய மறுத்துவிட்டது.
கடவுளே.. கடவுளே.. என்ன செய்வேன்..
இதற்குள் என் பெயர் போட்டு 20 பேருக்கு (உடனே அனுப்பாவிட்டால் கெடுதல் நிகழும்னு யாரோ சொன்ன மாதிரி) வைரஸ் விடியோ போய்விட்டது. அவர்கள் எல்லாம் (பாவம்..அப்பிராணிகள்.. ஒருத்தரைத் தவிர) என்ன ஸார் அனுப்பி இருக்கீங்க.. ஓப்பனே ஆகமாட்டிங்குது என்று விகல்பமே இல்லாமல் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
'உங்களுக்கு ஓப்பன் ஆகல.. எனக்கு மூட மாட்டிங்குது' என்கிற அவஸ்தையில் என்னென்னவோ வகையில் போராடிக் கொண்டிருந்தேன். 'ஹே கோவிந்தா.. என்னை ரட்சி' என்று அபயக் குரல் எழுப்பி (அஞ்சாறு பேருக்கு தொலை பேசி) இதிலிருந்து என்னை எப்படி மீட்டெடுப்பது என்று விசாரித்தேன்
அவர்கள் சொன்ன எந்த ஐடியாவும் வொர்க் அவுட் ஆகவில்லை முதலில். என் கம்ப்யூட்டர் சட்டென அன்னிய செலாவணிக்குப் போய்விட்டது.. களவாணித்தனம் செய்து !
3 முறை ஷட் டவுன் செய்தேன்.. ஒவ்வொரு முறையும் அவிங்க மட்டும் மாறாமல்..
இதற்குள் என் கெஞ்சலை ஏற்று பெரும்பாலான நண்பர்கள்  'சரி ஸார் விடுங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'  என்று விலகிப் போக.. ஒருத்தர் மட்டும் இன்பாக்ஸில் சொன்னார்.
'
ஸார்.. இதெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது. ப்ளீஸ் இந்த மாதிரி எனக்கு அனுப்பாதீங்க இனிமேல்.. உங்களை அன்ப்ரெண்ட் பண்ணப் போறேன்' என்றார் சீரியசாய்.
அய்யா.. சாமி.. நான் வேணும்னா அனுப்பறேன்..என் பேரை போட்டு எவனொ சித்து விளையாட்டு விளையாடறான்னு சொல்லப் பார்த்தேன்..அவர் கோவிச்சுட்டு போயிட்டார்.
'உங்களை நம்பி வந்தவளைக் கை விடாதீங்கன்னு' நண்பர் ஒருவர் கிண்டல்..
அவளை இப்படியே கூட்டிண்டு தாயார்.. பெருமாள்சன்னிதிக்குப் போக முடியுமா என்ன !
'வாலண்டைன்ஸ் டே கிப்ட் உங்களுக்கு'  இது இன்னொருத்தர் !
இடுக்கண் வருங்கால் நகுக.. சரி.. அதுக்காக இப்படியா கலாய்க்கறது..
சுத்தமாய் வியர்த்துவிட்டேன்.. டியாக்டிவேட் பண்ணுங்க என்கிற அட்வைஸ் என்னால் போராடித்தான் செயல்படுத்த முடிந்தது.
பாஸ்வேர்ட் மாற்றினேன்.  பிறகு டியாக்டிவேட்..
இந்த பதற்றம் அடங்க லாரல் ஹார்டி மூவிஸ் அஞ்சாறு வரிசையாய்ப் பார்த்து மனம் விட்டு சிரித்தேன்.
மாலையில் உள்ளூர பயத்துடன் பேஸ்புக் ஓப்பன் செய்தேன். ஓப்பன் ஆகிவிட்டது. அந்த பதற்றத்தில் எனக்குக் குழப்பம் வேறு. எப்படி ஆகும்.. நான் தான் டியாக்டிவேட் செய்திருக்கிறேனே.. அப்புறம் நண்பர் சொன்னார்.. 'நீங்க பாஸ்வேர்ட் போட்டா ஓப்பன் ஆகிரும்'
ஒரு விதத்தில் நிம்மதி..செல்வி சங்கர் மேடம் என் சார்பில் என் கஷ்டத்தைப் போட்டிருந்தாலும் நானும் சொல்லிவிடலாம் என்று பதிவிட்டேன். உடன் சிலர் கமெண்ட்ஸ் பார்த்து ஆஸ்வாசம்.

யப்பா..பேர் தெரியாத புண்ணியவானே.. உன் அறிவு சாமர்த்தியத்தை வேற வழியில் காட்டக் கூடாதா..இப்படி எல்லாமா விளையாடறது..
ஏதோ வசனமா எழுதுவேன்.. என்னையும் புலவன்னு ஒத்துகிட்டிருக்காங்க.. இப்போ யாரோ துரத்தற மாதிரியே இருக்கு.. இனிமே நான் அனுப்பாட்டியும்.. இது நீங்க அனுப்பினதான்னு கேட்கமாட்டாங்களா..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா.. போதும் டா சாமி !

அந்த நேரத்தில் வந்து எட்டிப் பார்க்காத என் அப்பாவுக்கும், துணைவிக்கும் கோடானுகோடி நன்றிகள் !

March 02, 2014

பிரார்த்தனை

குறுஞ்செய்திகளுக்காய் நிறைய பேர் இதழ் நடத்துகிறார்கள்.. அவ்வப்போது எனக்கும் சான்ஸ் தருவார்க்ள். அந்த குரூப்பில் சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் எழுதியதும் அனுப்பி வைப்பார்கள்.
அப்படி அறிமுகமானவர் தான்.. 
‘நல்லா இருக்கு’ன்னு ஒரு மெஸெஜ் அனுப்பியபோது தெரியவில்லை.. அவரைப்பற்றி எதுவும்.
6 மாதங்கழித்து வேறேதற்கோ பழைய செய்திகளை அலசியபோது.. டிலீட் ஆகாமல் இருந்த அவரின் ரெண்டு வரிக் கவிதை கண்ணில் பட்டது.
’எப்படி இருக்கீங்க.. அப்புறம் எதுவும் எழுதலியா’ன்னு ஒரு மெசேஜ் தட்டினேன்.
’உடம்பு சரியில்ல’
‘சரி பார்த்துக்குங்க.. முடிஞ்சப்ப எழுதுங்க’
’என்னைப்பத்தி தெரியுமா’
‘தெரியாது..’
சொன்னார். வீல் சேரில்தான் வாழ்க்கை. உடல் நலம் பாதித்து எப்போதும் ஹாஸ்பிடல்.. ட்ரீட்மெண்ட்.. 
வீட்டில் இருந்தபடியே ஏதோ ஒரு வேளை செய்து நாட்களைக் கழிக்கிறார்.
‘சரிங்க’
இன்னொரு 6 மாதம் கழித்து ‘நலமான்னு’ செய்தி அனுப்பினேன்.
இல்லையாம். அவர் அடுக்கிய உடல் உபாதைகளைப் படிக்கவே பயமாக இருந்தது. 
‘பேசட்டுமா’
‘வேணாம்.. அழுதுருவேன்.. அப்புறம் ஒரு சமயம் பேசலாம்.. ‘
‘டேக் கேர்’
’ஒண்ணு சொல்லட்டுமா’
‘சொல்லுங்க’
‘என்னையும் ஒருத்தர் விரும்பறார்.. இந்த நிலையிலும்.. கல்யாணம் கட்டிகிட்டா என்னைத்தான் கட்டிப்பாராம்..’
‘வாவ்.. நல்லது.. ரொம்ப மகிழ்ச்சி’
’எங்க வீட்டுல தயங்கறாங்க’
‘பேசிப் பாருங்க’
‘ம்ம்..’
‘நல்லதே நடக்கட்டும்.. உங்க கல்யாணத்துக்கு அவசியம் வரேன்’

இதுவரை பார்த்திராத.. பேசியிராத.. வெறும் குறுஞ்செய்தி மூலமே பழகிய.. அந்த நட்பு.. நினைத்தபடி நல்ல வாழ்க்கை அமையணும்னு இப்போ என் பிரார்த்தனை !







February 24, 2014

பறவை ஸ்நேகிதம்



இரண்டு வருடங்கள் இருக்குமா.. இருக்கலாம். பறவைகளுடனான என் சிநேகிதம்.. 

‘காலை வேளைல என்ன பண்ணுற’

‘7 மணி ஆபிசுக்கு கிள்ம்புற அவ்சரத்துல இருப்பேன்..’

’மொட்டை மாடி இருக்கா’

‘ம்’

’பறவைகள் வருமா’

‘காக்கா வரும்’

‘உனக்கு அதுவே அதிகம்..’

‘கலாய்ச்சுட்ட..’

‘சரி.. கெளம்புறதுக்கு முன்னால கொஞ்சம் சாதம்.. இல்ல அரிசி.. வாயகன்ற பாத்திரத்துல தண்ணி வச்சுட்டு போயேன்..’

‘எதுக்கு’

‘சொன்னா செய்யேன்’

செய்தேன். ஓரிரு காக்கைகள் என்னை உற்றுப் பார்த்தன. என் மீதான அவநம்பிக்கை அதன் கண்களில். நான் நகர்ந்ததும் பறந்து வந்து முகர்ந்தன. கொத்தி கீழே தள்ளியது ஒன்று.

சொன்னேன் அவளிடம்.

‘நீ சொன்னேன்னு செஞ்சேன்.. எனக்கு நோஸ் கட்’

‘பரவாயில்ல.. தொடர்ந்து செய்’

இன்று.. இரு வருடங்களுக்குப் பின்.. எனக்கு எத்தனை பறவை ஸ்நேகிதங்கள்.. சிட்டுக் குருவிகள்.. புறாக்கள்.. காகங்கள்..

வெளியூருக்குப் போகும் நாட்களில் மனசு தவித்துப் போகிறது.

திரும்பி வந்ததும்.. மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது.

முகம் திருப்பி கோபமாய் அமர்ந்திருக்கும் பறவைக்கு அருகே பறந்து போய் அமர்ந்து கெஞ்சத் தோன்றுகிறது.


அவைகள் உணர்வுபூர்வமானவை..  நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.

இப்போதும் என்னுள் அதே கோபங்கள்.. குமுறல்கள்.. ஆனந்தம்.. எல்லா

உணர்வுகளும்தான். ஆனால் அவற்றைப் பகிர விண்வெளி சிநேகிதங்கள் உண்டு
இப்போது என்னருகே.

எனக்கு இறக்கை ஒட்டிக் கொடுத்த சிநேகிதிக்கு ...    :)







   


August 27, 2013

வித்தியாசம்



”ஹலோ.. அக்கவுண்ட்ஸ்ங்களா”
“ஆமா..”
“மெடிகல் கிளைய்ம்ல ஒரு டவுட்டு”
“அது வேற செக்‌ஷன்.. நம்பர் சொல்லவா”
“அது எனக்குத் தெரியும்.. நான் டவுட் கேக்கறது உங்ககிட்டதான்”
“கேளுங்க”
“ஒரே ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி.. சிசேரியன் .. ஆச்சு.. ரெண்டு பேருக்கு.. ஆனா பில் செட்டில் பண்ணதுல பணம் கூடக் குறைய இருக்குதுங்களே”
”அப்படியா.. “
”ஒரே நாள்.. ஒரே மாதிரி சிசேரியன்.. அரை மணி இடைவெளில.. 1500 ரூபா குறைச்சு கொடுத்திருக்காங்க ஒருத்தருக்கு..”

(இதையே பத்து நிமிஷம் விடாமல் கேட்டார்)

“ரெண்டும் என்ன குழந்தைங்க”
“ரெண்டுமே ஆண் குழந்தைங்கதான்”
“ஓ.. அப்போ அதுலயும் வித்தியாசம் இல்ல.. ம்ம்”

எதிர்முனையில் வெற்றிக் களிப்பு.
“அதாங்க சொல்றென்.. எப்படி குறைக்கலாம்”
“ஆங்.. குழந்தை என்ன வெயிட்”
“ம்ம்.. என் குழந்தை 2.9 இன்னொன்னு 3.2”
“அதானே பார்த்தேன்.. வித்தியாசம் இருக்குல்ல.. அதான் குறைச்சு பாஸ் பண்ணி இருக்காங்க “
“ஓ.. அப்படியா.. அக்கவுண்ட்ஸ்ல தப்பு பண்ண மாட்டாங்கன்னு அப்பவே சொன்னேன் அவகிட்ட.. இப்ப புரிஞ்சிருச்சு.. நன்றி ஸார் “

(ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா.. கண்ணைக் கட்டுதே.. )

எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து இருக்கைக்காரர்களுக்கு சிரிப்பு.

உண்மையில் என்னவென்றால்.. ஒரு டெலிவரிக்கு கூடுதலாய் ஊசி.. மருந்து தேவைப்பட்டிருந்தது.. அதான் அந்த தொகை வித்தியாசம். விசாரித்த நபர் என்னிடமும் பதினோராவது ஆளாய்க் கேட்டார். வேறு வழியின்றி இப்படிப் பேசி அக்கவுண்ட்ஸ் மானத்தைக் காப்பாத்தினேன்.




March 15, 2013

ஒரு அனுபவம்.. ஒரு கவிதை..

’கால்.. அம்பது சிக்கரி’ 
(அதாவது கால் கிலோ ப்யூர் காபியும் 50 கி சிக்கரியும்)
பையன் துடியாய் இருந்தான்..

மெல்லிய பாடல் கேட்கிற பாவனை எனக்குள் அவன் இயங்கிய விதம்.
காப்பிக்கொட்டையை மெஷினில் போட்டு ஸ்விடசைத் தட்டினான்.
ஒரு இரும்புக் கம்பியால் மெஷின் ஓட்டும்போதெ உள்ளிருந்ததை தட்டிக் கொண்டிருந்தான். சீரான அரவை.

உய்ய்ங்.. என்று ஆம்புலன்ஸ் ஒலி அப்போது தான் கேட்டது. ரோட்டில் எங்களைக் கடந்து போன அந்த ஒலி.
எனக்கு ஏதோ ஒரு பழைய அச்சத்தில் உடம்பு தன்னிச்சையாய் சிலிர்த்து அடங்கியது.

அதே நிமிடம்..
அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. மெஷினுக்குள் வைத்திருந்த பார்வை விலகவில்லை.. விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக !

அவ்வளவுதான்.. அரைத்ததை டின்னில் கொட்டி சிக்கரி கலந்து பாக்கட்டில் போட்டான்.

அவன் கையைப் பற்றிக் கொள்ளத் தோன்றியது அப்போது !



-----------------------------------------------------------------------------------------------------

எழுந்ததும்
ஒரே ஒரு நிமிடம்
நின்று
படுத்திருந்த இடத்தைப்
பார்த்தேன்..

வழக்கமாய்
அன்றைய தின பரபரப்பில்
விலகிப் போகிறவன் தான்..

அது ஏதோ சொல்வது
போலில்லை?

இரவு முழுவதும்
என்னைக் காத்திருந்தது..
இனி
இன்னொரு இரவுக்காய்
காத்திருக்கப் போகிறது..

உறவாடுவதும்
உதறுவதும்
மனித இயல்பென
படுக்கைகளுக்குத் தெரியும்..

மடித்து கூட வைக்காமல்
விலகிப் போகிற
எனக்குத்தான் வலிக்கிறது
அதன் ஊமை பாஷை !


------------------------------------------------------------------------------------------------------

October 06, 2012

வாழ்வெனும் அற்புதம்



படுத்தால் தூக்கம் வருகிறது.. அடுத்த நிமிடமே.

பகலில் வருகிற கோப தாபங்கள் கூட மறந்து நன்றி சொல்லி தூங்கிப் போகிற  மனதைக்  கொடுத்த இறைவனுக்கு அவன் கொடுத்த மனதாலேயே நன்றியும்.

இன்னமும் கடக்க வேண்டிய தூரம் பாக்கி நிற்கிறது..

துணைக்கு எங்கெங்கோ இருக்கிற நட்பின் வாழ்த்துகளும்..

வாழ்க்கை சுவாரசியமாய்த்தான் இருக்கிறது.. அதன் போக்கில்.  



August 23, 2012

ரயிலில்..

சென்னை எக்மோர்.

பல்லவனுக்காகக் காத்திருந்தோம். பெஞ்சில் இரண்டு பேர். சூழ்நிலை மறந்து.. அவள், அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு.. இருவருமே அப்படி ஒரு அழுகை. என்ன காரணம் என்றே புரியவில்லை. இயல்பான அழுகை. 
அப்புறம் அவர்களாகவே சமாதானமானார்கள். 

ஏன் அழுதார்கள்.. புரியவில்லை.

ரயிலில் ஏறியதும் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்.  எனக்கு அருகில் ஒரு இருக்கை காலியாய். அதற்குரியவர் வந்ததும் சொல்லி விட்டு மாற்றிக் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் நான்.

தாம்பரத்தில் ஒரு பெண்மணி வந்தார். எழுந்து நின்றேன். ஜன்னல் பக்கம் அவர் அமர.. நான் என்னிடத்தில் உடகார்வதற்குள் இன்னொரு பெண்மணி வந்து ஜம்மென்று என்னிடத்தில் அமர்ந்தார்.

“இது என் சீட்” என்றேன்.

“இல்ல.. என் சீட்”

“சி2  58 என்னோடது..”

”59 என்னோடது..”

“அது அடுத்த சீட்..”

“அங்கே அவங்க உட்கார்ந்திருக்காங்களே”

“ அதை அவங்ககிட்ட கேளுங்க” இது நான்.

உடனே அந்தப் பெண்மணி “இது என் சீட்” என்றார்.

எனக்கு வாழைப்பழ காமெடி ஞாபகம் வந்தது.  அலுத்துப் போய் எதிரில் காலியாய் இருந்த சீட்டில் அமர்ந்து விட்டேன். சற்று தள்ளி டிடிஆர்..

மெல்ல எங்கள் பகுதிக்கும் வந்தார்.  இரு பெண்மணிகளுக்கும் டிக் அடித்து கொடுத்தார்.  அப்புறம் என் டிக்கட்டை வாங்கிப் பார்த்தார்.

இப்போதுதான் அவருக்குக் குழப்பம்..

மறுபடி அந்தப் பெண்மணியிடம் டிக்கட்டை வாங்கிப் பார்த்தார்.

“இதுல டிராவல் பண்ணமுடியாதுங்க”

“ஏன்”

“இது வைகைக்கு வாங்கினது.. நீங்க பைன் கட்டணும்.. 340 ரூபா கொடுத்தா அடுத்த கம்பார்ட்மெண்ட்ல வரலாம்..  ஏசில வரமுடியாது”

என்னோடு மல்லுக்கட்டி விவாதித்த பெண்மணி மொபைலில் யாரையோ திட்டினார். அப்புறம் எழுந்து போனார்.

இன்னொரு சம்பவம்..

கணவன்.. மனைவி.. குழந்தை. வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை குழந்தைக்கு ஊட்ட முயல அது பிடிவாதமாய் டிரெயினில் வாங்கிய ஏதோ டிபனுக்கு ரகளை செய்தது.  வீட்டு உணவை தள்ளிவிட பார்த்தது.

அப்பா கோபமாகி ஒரு அடி வைத்து விட்டார். அழுகை. அப்புறம் அரைகுறையாய் சாப்பிட்டது.  நான் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால்.. அப்பா மடியில் குழந்தை.. அவர் மார்போடு சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்க.. அவர் ஒரு கை அணைத்துக் கொண்டு.. இன்னொரு கை தலையை வருடிக் கொண்டு.. அவர் முகத்தில் ததும்பிக் கொண்டிருந்த இனம் புரியாத உணர்வுகள்.. சங்கடம்.. லேசான வருத்தம்..

அப்புறம் குழந்தை விழித்துக் கொண்டு.. முழுப் பயணமும் அப்பாவின் கொஞ்சலை அனுபவித்துக் கொண்டு.. ரசனையாய் இருந்தது.

எல்லோரும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள். அப்பாவின் பாசம் அழகான கவிதை. 

June 30, 2012

பயணம்

ஏர்போர்ட் வரை போக வேண்டி இருந்தது. அட.. அந்த ஏரியால குடி இருக்கிற நண்பரைப் பார்க்கத்தான்.
பஸ்ஸுல ஏறி கொஞ்ச தூரம் போயாச்சு. என் பக்கத்துல இருந்தவர் ஏதோ ஒரு ஸ்டாப் பேரைச் சொல்லி டிக்கட் கேட்டார். கண்டக்டர் முரட்டு உருவம்.. முகத்தில் பாதி மீசை.
‘இந்த வண்டி அங்கே போகாது’ என்றார்.
பயணி உடனே “கூட்டு ரோட்டுல இறங்கிக்கறேன்.. அதுக்கு டிக்கட் கொடுங்க’என்றார்.
அங்கே இறங்கி ஒரு கிமீ நடக்க வேண்டும் !
நடத்துனர் டிக்கட் தராமல்.. நோட்டையும் திருப்பித் தராமல் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரம்.
“கூட்டு ரோட்டுக்கு டிக்கட் கொடுங்க” என்றார் பயணி பொறுமை இழந்து.
நடத்துனர் நிதானமாய் “இறங்கி பின்னால ரெண்டு பஸ்ஸு வருது.. அதுல ரெண்டாவதா வர பஸ்ஸுல போய் ஏறிக்குங்க.. அதுதான் நீங்க போக வேண்டியது”
ரூபாயையையும் திருப்பிக் கொடுத்தார் !
“பாவம் எதுக்கு நடக்கணும்” என்றார் அவர் இறங்கிப் போனதும்.
கையைப் பற்றி குலுக்கினேன்!


அதே பஸ்ஸில் ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபோது..
ஒரு அம்மா.. அவங்களோட (முப்பதுக்குள் இருக்கும்) மகள்.. மகள் கையில் குழந்தை.. அவர்கள் தலையில் பாதி பின்னிய ஒயர் கூடை.. அதற்கான பொருட்கள்..
அவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.
கோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..

மனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..






March 19, 2012

கன்னுக்குட்டி




அலுவலக வளாகத்தின் முன் அவ்வப்போது மாடுகள் கூட்டமாய் போவதை பார்ப்போம் .


'புது ஸ்டாப் போல இருக்கு ' என்று மொக்கையுடன்.


கட்டிடங்கள்.. நடு நடுவே மரங்கள் புதர்கள் .. இப்படித்தான் எங்கள் அலுவலகம்.


யார் கவனித்தார்களோ ..


பிறந்து ஓரிரு நாட்களே ஆன கன்றுக் குட்டி..


விட்டுவிட்டு போய் விட்ட தாய்ப் பசு...


'தலைச்சன் கிடேரி.. அதான் விட்டுட்டு போயிருச்சு'


'அப்படின்னா'


'மொதக் கன்னு .. கிராமத்துல என்ன செய்வாங்கன்னா பசு குட்டி ரெண்டையும் ஒரே கொட்டில்ல வச்சு அடைச்சிருவாங்க.. மொதல்ல மிரண்டாலும் அப்புறம் குட்டியை சேர்த்துக்கும்.. பால் ஊட்ட ஆரம்பிச்சிரும்.. இந்த மாதிரி தெரு மாடுங்க இப்படித்தான் குட்டியை போட்டுட்டு போயிரும்..'


கால்கள் பிடிமானம் இல்லாமல் தள்ளாட்டமாய் நின்றது.


ஜக்கில் நீர் கொண்டு வந்து மெதுவாய் ஊற்றியதும் விழுங்கியது. மேலே தண்ணீர் தெளித்ததும் மூத்திரம் பெய்தது.


அதை தூக்கி வந்தவர் முகத்தில் நிம்மதி.


'எங்க வீட்டுக்கு கொண்டு போறேன்.. மாடு வச்சிருக்கேன்.. அதுவும் இப்பதான் குட்டி ஈனுச்சு.. இதுவும் அது கிட்ட பால் குடிக்கட்டும்.. '


மிக சுலபமாய் தத்து !




February 16, 2012

போபால்



பத்து நாட்களாய் ஊரில் இல்லை...

‘அதான் பிளாக் அப்டேட் ஆகாததைப் பார்த்தாலே தெரியுதே’

போபால் பயணம் ! ஆபிஸ் வேலையாய்.. எல்லா யூனிட்காரார்களும் கூடி கும்மி அடித்தோம்.

அங்கே எங்கெங்கே போனோம் என்று பகிர்வதற்கு முன் ஒரு ரிவர்ஸ் கியர்..

பயணம் முடித்து சென்னை திரும்பியபோது பேஸின்பிரிட்ஜில் வழக்கமாய் அரை மணி போட்டு விடுவார்கள்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்..

கொருக்குப்பேட்டையில் கொஞ்ச நேரம்..

அப்போது அருகில் இருந்த ரயில்வே டிராக்கில்..







தங்களை மறந்து .. அங்கிருந்த அசிங்கம் மறந்து.. மிக்ஸ் பண்ணி அடித்த இரண்டு குடிமகன்கள் !


(பயணம் தொடரும் )


January 29, 2012

பெரிய கோவில்




தஞ்சை பெரிய கோவில் உள்ளே போகும்படியான ஒரு வாய்ப்பு.

ரொம்ப நாளைக்கு அப்புறம் போவதால் - நினைவடுக்குகளின் மேல் எதுவுமின்றி - முதல் முறை பார்க்கிற ஆர்வம்.

ரொம்ப ஒழுங்காய் கட்டப்பட்ட - யாரும் என்னை அடிக்காதீங்க - கோவில் மாதிரி ஒரு இடம்னு தோன்றியது.

சாந்நித்தியம் என்று சொல்வோமே.. தஞ்சை பக்கம் பல கோவில்களில் கிட்டுகிற ஒரு உணர்வு.. அது எனக்கு மிஸ் ஆச்சு.

ஒரு வேளை நான் பரபரப்பாய் போய் வந்ததாலோ என்னவோ.

அதன் அழகை ரசித்தேன். உண்மை. ரசனைக்கு உரிய இடம் என்றுதான் மனசில் பதிந்ததே தவிர, உள்ளே எனக்கு மணி ஒலிக்கவில்லை.




வரிசையா வந்து என்னை அடிங்க !



January 25, 2012

அத்யயன உதஸவம்-2



இன்றோடு ராப்பத்து தாயாருக்கு பூர்த்தி ஆனது.

சேர்த்தி மண்டபத்தில் தான் தரிசனம். போய் உட்கார்ந்ததும் ஆழ்வார் பாசுரங்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் அரையர் ஸ்வாமி..

வெளியூர்.. உள்ளூர் என்று ஸேவார்த்திகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் அமர்ந்து பாசுரம் கேட்டுக் கோண்டிருந்தார்கள்.

சற்று தள்ளி தான் அமர்ந்திருந்தேன். எங்கிருந்தோ ஒரு குழந்தை தன் கையில் விளையாட்டு பொருள ஒன்றை வைத்துக் கொண்டு கால் தரையில் சரியாகப் பாவாத நடையில் வந்தது.

என்னைப் பார்த்ததும் அதற்கு என்ன தோன்றியதோ.. அருகில் வந்து நின்றது.

அதன் விரல்களைப் பிடித்துக் கொண்டேன். மடியில் அமர வைத்தேன். ஏதேதோ கேட்டுப் பார்த்தேன்.

பதில் மையமாய் சிரிப்புத்தான்.

பத்து நிமிடங்கள் என் கொஞ்சலை அனுபவித்து விட்டு பின்னால் நின்ற அதன் பாட்டியிடம் போனது.

‘மாமாக்கு உன் பேரைச் சொல்லு.. தேஜஸ்ரீ.. சொல்லு “

பிராகாரம் வலம் வந்து வில்வ மரம் எதிரே (ஸ்தல விருட்சம்) அமர்ந்த போது கரெண்ட் போனது. திரும்ப ஜெனெரேட்டர் உபயத்தில் விளக்கு எரிவதற்குள் செல் கேமிராவில் பிடித்த போட்டோ..



இரு அகல் விளக்குகளின் ஒளி..

****************************


உதடுகளைப் பார்த்ததும்
ஊதித் தள்ளி விடுகிறது
புல்லாங்குழல்.

*****************************


விளையாடியபின்
வீட்டுக்குத் திரும்பும் நேரம்.
பொறுக்கிய கூழாங்கற்களை
ஆற்றுக்குள்
வீசி எறிந்தாள் ஜ்வல்யா.
‘அதுவும் வீட்டுக்கு
போவட்டும்’




January 22, 2012

தாயார் அத்யயன உத்சவம்





”அப்பா” டிராயிங் மாஸ்டர். அவரிடம் நானும் ஞானப்பிரகாசமும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளப் போனோம். (இப்படி வீணை, புல்லாங்குழல் என்று சகலமும் முயற்சித்து எதுவும் வரவில்லை உருப்படியாய் என்பது வேறு விஷயம்)

ரொம்ப நாள் கழிச்சு ’அப்பா’ என் வீட்டுக்கு வந்தார். இதற்குள் நான் கீழச்சித்திரைவீதி சித்திரைத்தேர் விட்டு மேற்கே வந்தாச்சு. எப்படி அடரஸ் கண்டுபிடிச்சாரோ.. படியேறி வந்தார். பல வருஷ இடைவெளிக்குப் பின் மீட் பண்றோம்.

இளைத்திருந்தார். ஏற்கெனவே ஒல்லி தான். பையனும் இதே லைன்ல ஆர்வம்.
‘படம் வரையறான்.. இப்ப குணசீலம் பெருமாளை ஸ்கெட்ச் எடுத்துருக்கான்’ என்றார்.

அவருடன் போய்விட்டேன். கோடுகளாய் இன்னும் முழுமை பெறாமல் பிரசன்ன வெங்கடாசலபதி.

“சிருங்கேரி பெரியவா.. படம் வரைஞ்சிருக்கேன்.. “ என்றான் பையன்.
அதுதான் மேலே..

அப்பா ஜெகன்னாதன். பையன் பாலாஜி. ’அப்பா’ வரைந்த ஸ்ரீரெங்கநாதர் இப்போதும் நிறைய வீடுகளில்.

ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.


ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் அத்யயன உத்ஸவம் இப்போது. பெருமாளுக்கு பகல் பத்து, ராப்பத்து போல தாயாருக்கு ஐந்து, ஐந்து நாட்கள் உதசவம். இப்போது ரா-அஞ்சு.

காணக் கண்கோடி வேண்டும்.. ஸ்ரீபாதந்தாங்கிகள் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரும் நடை அழகை தரிசிக்க.


சேர்த்தி மண்டபத்தில் தாயார் .. திருவந்திகாப்பு (தீபாரத்தி) ஆனதும் திரை. கிளம்ப மனசில்லாமல் உட்கார்ந்திருந்தோம்.

பெருமாள் பிரசாதம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க ஸ்ரீபண்டாரம் (பிரசாத விற்பனை இடம்) போனேன்.

வடை சூடாக இருந்தது. வாங்கும்போது ஒருவர் -காவி சட்டை, காவி வேட்டி- கன்னட சாயல் பேச்சு - முகம் பிரகாசமாய்.. வந்தார்.

‘தோடிசி ப்ரசாதம்’ என்றார்.

‘நோ.. நோ’ என்றார் விற்பனையில் இருந்த இருவரில் ஒரு பெரியவர். அதாவது ப்ரீயா தர முடியாதென்று. (முதலில் தமிழில் தரமாட்டேன்.’ என்று சொல்லி அப்புறம் தமிழ் தெரியாது என்று புரிந்து.. நோ.. நோ..

கேட்டவரோ ‘இதுல என்ன கஷ்டம்.. ஒரு ஸ்பூன் ஜஸ்ட் பிரசாதம்’ என்கிற தொனியில் மீண்டும் வேண்டினார்.

எனக்கு மனசாகவில்லை. பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த இன்னொரு சிறு வயசுக் காரரிடம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை இரண்டும் ஒவ்வொரு கரண்டி தரச் சொல்லி ஒரு இலையில் வைத்து அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டு அதற்கும் பணம் எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.

நான் வாங்கிய வடைக்கு மட்டும் பணம் எடுத்துக் கொண்டு அந்த பிரசாதங்களுக்கு பணம் வேண்டாம் என்று ...

சைகையில் சொன்னார் அந்த இளைஞர் ! வாய் பேச முடியாதவர் என்று புரிந்தது.

இறைவன் விளையாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை!



December 06, 2011

ரசனை



இதற்கு முன் யாரேனும் இதைப் பற்றி பதிவிட்டு இருக்கிறார்களா.. என்று தெரியவில்லை.

எனக்கு மெயிலில் வந்தது.

வாஷிங்டன் டிசி.. பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் அந்த நபர் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்.. ஒரு மணி நேரமாக.

கிட்டத்தட்ட 2000 நபர்கள் அவரைக் கடந்து போனார்கள்.

ஒரு பெண்மணி ஒரு டாலரை அவரது தொப்பியில் போட்டு விட்டு போனார்.

6 பேர் மட்டும் கொஞ்ச நேரம் நின்று கேட்டார்கள். சுமார் 20 நபர்கள் பணம் போட்டார்கள். வசூலானது 32 டாலர்கள் மட்டுமே.

யாரும் நின்று ரசிக்கவில்லை. கை தட்டவில்லை.

வாசித்தவர் ஜோஸுவா பெல் .. உலகின் நெம்பர் ஒன் வயலினிஸ்ட். அவர் கையில் வைத்திருந்த வயலின் விலை மூன்றரை மிலியன் டாலர்கள். அவர் வாசித்தது மிகவும் அபூர்வ சங்கதிகள்..

இரு தினங்கள் முன்புதான் அவர் கச்சேரிக்கு 100 டாலர் டிக்கட் வைத்து கூட்டம் அலைமோதியது இடம் கிடைக்காமல்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்தது.. மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. அவர்கள் விருப்பம்.. நுண்ணுணர்வு.. பற்றிய ஒரு சமுதாயத் தேடலுக்காக..

This experiment raised several questions:

*
In a common-place environment, at an inappropriate hour, do we perceive beauty?

*
If so, do we stop to appreciate it?

*
Do we recognize talent in an unexpected context?


One possible conclusion reached from this experiment could be this:


If we do not have a moment to stop and listen to one of the best musicians in the world, playing some of the finest music ever written, with one of the most beautiful instruments ever made . . ..


How many other things are we missing as we rush through life?


Enjoy life NOW ..
it has an expiry date !

(பின் பகுதியை அப்படியே தந்திருக்கிறேன்.. அது தரும் அதிர்வுக்காக..)

கொஞ்சம் வெட்கமாய்த்தான் இருக்கிறது.. பதில் சொல்ல.




December 02, 2011

அப்புச்சா




புரட்டாசி மாதம் வந்தாலே 'கோவிந்தா' கோஷம் தான். திருப்பதிக்கு நிகராய் ஸ்ரீரங்கமும் களை கட்டி விடும்.

மெயின் கோவிலை விடுங்கள். அது எல்லோருக்கும் தெரியும். அவ்வளவாய் தெரியாத இன்னொரு தகவல்.

பிரசன்னா பள்ளிக் கூடம் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதன் இடது பக்கம் எங்கள் பழைய (குடியிருந்த) வீடு. வலது பக்கம் ஒருஅரிசி மில். அதைத் தாண்டி ஒரு வீடு.

இப்போது அந்தப் பக்கம் கிட்டத்தட்ட 90 வீடுகள் உள்ள பன்மாடிக் குடியிருப்பு வந்து விட்டது. க்ஷ வீட்டில் அந்த நாளில் 'அப்புச்சா' என்று ஒருவர். அவர் குடும்பம் குடியிருந்தது.

ஸ்ரீநிவாசர் உபாசனை அவருக்கு. புரட்டாசி கடைசி சனிக்கிழமை திண்டு போல மிகப் பெரிய பந்தம் கொளுத்திக் கொண்டு எட்டு, ஒன்பது மணிக்கு மேல் கிளம்புவார். அதற்கு முந்தைய தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கும்.

அவர் நான்கு வீதிகளையும் சுற்றிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவார். கிளம்பும்போது சாதா நடை. தெருவில் இறங்கியதும் அப்படியே ஜிவ்வென்று பறக்கிற (அ) ஓடுகிற நடை.

ஆங்காங்கே அவரிடம் தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி அருள் வாக்கு கேட்பார்கள். 'பெண் கல்யாணம்'.. 'மகன் படிப்பு/வேலை' இத்யாதி.

தீ பெரிதாய் ஜொலிக்க அவர் தெருவில் வரும் போது லேசாய் பயமும் ஒருவித ஆர்வமும் வரும். அவர் பாசிட்டிவாய் சொல்லிவிட்டால் கேட்டவர் முகத்தில் தெரியும் ஆனந்தம் சொல்லில் அடங்காது.

'அவர் பந்தம் எடுத்துண்டு கெளம்பும் போது கேட்கணும்.. அப்பதான் ஆவேசத்துல இருப்பார்' என்று கூட்டம் அவர் வீட்டை மறித்து நிற்கும்.

இத்தனைக்கும் ரொம்ப சின்ன வீடு. பத்துப் பேர் உள்ளே போனாலே தாங்காமல் அழும். மற்ற நாட்களில் வெறிச்சோடி கிடக்கும் வீடு புரட்டாசியின் வருகைக்கு வருடம் முழுக்கக் காத்திருக்கிறதோ என்று தோன்றும். (இப்போது அவர் வம்சத்தில் ஒருவர் பந்தம் எடுப்பதாய்த் தகவல். ஆனால் வேறொரு வீதியில் இருந்து.)

ரொம்பவும் தீவிரமாய் அலசிப் பார்த்தால் மனிதரின் தேவைகள் அப்படி ஒன்றும் பிரமாதமாய் இல்லை. பணம், சொத்து என்கிற தேடல்கள் வெளிப்பார்வைக்குத்தான்.

நான் சொல்வது சராசரி மனிதருக்கு. ஏதோ ஒரு வேலை.. கொஞ்சம் பணம்.. கொஞ்சம் மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. காவிரிக்கரை தகனம்.. முடிந்தபோது உள்ளே மூலஸ்தானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் (யாரும் விரட்டாமல்) கடைக்கண் பார்வை.. சொர்க்கவாசல் மிதித்தல்.. இப்படி ஒரு சின்ன லிஸ்ட்டில் அடங்கி விடும். 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா' என்றதும் துளசி தீர்த்தம் பாதி உள்ளே போய் புன்சிரிப்பு மாறாமல் டாட்டா காட்டும் பக்குவம் வந்தால் போதும் என்பதே அபிலாஷை.

என் சின்ன வயசில் (வயசு போட மாட்டேன்.. என்னை விட படிப்பவருக்குத்தான் அதில் ஏகப்பட்ட குழப்பம் வருது) அப்புச்சாவைப் பார்க்கக் காத்திருக்கும் ஜனங்களைப் பார்க்கும்போது 'அவரால் இப்படி இவ்வளவு பேரின் பிரச்னைகளைத் தீர்க்க இயலும்' என்று உள்ளூர உதறும்.

ஆனால் 'உன் பேத்திக்கு நல்ல இடம் அமையும்' என்று அவர் சொன்னதும் புளகாங்கிதமாகிற பாட்டி அடுத்தவருடம் வரை தாக்குப் பிடிப்பாரா.. தெரியாது. அந்த நிமிட நிம்மதியை அப்புச்சாவால் சுலபமாய்த் தர முடிந்தது.

வேலைக்கு போனதும் 'எப்படி கதை எழுதறது.. அதை எப்படி பத்திரிகைக்கு அனுப்பறது' என்கிற ஆலோசனைக்காக வெல்பேர் டிபார்ட்மெண்ட்டில் வேலை பார்த்த நண்பர் அழைத்தார்.

போனதும் என்னைத் தனியே ஒரு அறைக்கு அழைத்துப் போய் கதவைத் தாளிட்டார். மிரண்டு போய் 'அப்படி எதுவும் ரகசியம் இல்லை' என்றேன்.

"தொந்திரவு இல்லாம பேசலாம். பாஸ்கிட்ட கவுன்சலிங்க் கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்" என்றார்.

நான் பார்த்த படிப்பில்லாத அப்புச்சா தான் முதல் "ஆற்றுப்படுத்துபவர்" (வாழ்க தமிழ்)



December 01, 2011

கோடை ஜலம்


சம்மர் வந்து விட்டாலே 'ஹா.. ஹா' என்று பெருமூச்செறிந்து திண்ணையில் (இப்போது பெரும்பாலான வீடுகள் இடித்துக் கட்டப்பட்டதில் திண்ணை தான் முதல் இழப்பு) விசிறியுடன் திறந்த மார்புடன் அமர்வார்கள்.

பள்ளி / கல்லூரி தினங்களில் அப்போது தேர்வுகள் முடிந்து ஏ.வி. கே. (அவிழ்த்து விட்ட கழுதை) யாக நாங்கள் இருந்த நேரம்.

"சும்மாதானே இருக்க..வா.. கோடை ஜலம் கொட்டப் போகலாம்" என்று எனக்கு அழைப்பு வந்தது.

ஸ்ரீரெங்கனாதர் பள்ளி கொண்ட மூலஸ்தானம் காயத்ரி மண்டபம். உட்பக்கம் சின்ன அகழி போல் அமைப்பு. வெளிப்புறம் தொட்டி போல ஒன்று. பக்கத்திலேயே கிணறு. ஸ்ரீரங்கம் வந்தவர்களுக்குத் தெரியும். சேனை முதலியார் சன்னிதிப் பக்கம் அந்தக் கிணறு இருக்கிறது.

கிணற்றிலிருந்து நீர் எடுத்து தொட்டியில் ஊற்ற வேண்டும். அதன் அவுட்லெட்டில் களிமண் வைத்து அடைத்து வைத்திருப்பார்கள். ஊற்றும் தண்ணீர் உள்ளே போய் மூலஸ்தானம் சுற்றி அணை கட்டினாற்போல நிற்கும் இயற்கையாய் குளிர்ச்சி.

இரவு எட்டரை மணிக்கு மேல் களிமண்ணை நீக்கித் திறந்து விடுவார்கள். அதில் குளிக்க ஒரு கூட்டம் வரும்.

நீர் இறைத்து ஊற்றுவது ஒரு ஜாலக்கான வேலை.

கிணற்றில் அடி மட்டத்தில் இறங்கி ஒருவர் காலை விரித்து வாகாக நிற்க, கிணற்றின் நடுவே அதே போல ஒருத்தர். மேலே வளைவில் அமர்ந்து மூன்றாவது ஆள்.

மண் பானை தான் நீர் எடுக்க. கிணற்றின் விட்டம் இரண்டு ஆள் நிற்கும் அளவே. பானை கீழே போய் நீருடன் மேலே வரும் வேகம் என்னால் சொல்ல முடியவில்லை.

ஒரு தரம் கூட உடைந்ததில்லை. சர் சர்ரென்று காலிப் பானை கீழே போய் நீருடன் மேலே வரும் வித்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சொட்டச் சொட்ட நனைந்து விடுவோம்.

இது நடப்பது சேவை (தரிசனம்) நிறுத்தப்பட்ட மதிய இடைவெளியில். அதனால் யாரும் இருக்க மாட்டார்கள்.

உள்ளே கர்ப்பகிரகத்தில் அடுத்த பூஜைக்கான ஏற்பாடுகள் அல்லது சற்றே ஓய்வு. அக்னி நட்சத்திர நாட்களில் இது நடக்கும்.

வேலை முடிந்ததும் பானைகளை ஒரு ஜம்ப் பண்ணி சேனை முதலியார் சன்னிதி மேல் பகுதியில் உடையாமல் பத்திரமாய் வைத்துவிடுவோம், மறு நாள் உபயோகத்திற்கு.

எதற்காகவோ ஒரு முறை என்னை உள்ளே மூலஸ்தானம் போய் எதுவோ எடுத்து வரச் சொன்னார்கள். போனேன். ஆளே இல்லை.

"மாமா.. " என் குரல் எனக்கே கேட்கவில்லை.

துவாரபாலகர் பக்கம் திரை. படியேறி திரை விலக்கி உள்ளே பார்த்தால் யா..ரு..மே இல்லை.

தப்பு.. தப்பு.. பள்ளி கொண்ட பெருமாள் மட்டும் தன்னந்தனியே. ஏகாந்தமாய்.

'போ.. போ..' என்று சொல்ல ஆளில்லை. நானும் பெருமாளும் மட்டும்.

விளக்கின் ஜ்வாலை மெல்ல அசைந்து கொண்டிருந்தது.

ஒரே போஸில் படுத்திருப்பவர் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டு மறுபடி பழைய சயனக் கோலத்திற்கு வரும் அவகாசம்.

அந்த நாட்களில் நம்பிள்ளை என்னும் ஆசார்யன் காலட்சேபம் செய்கையில் திருவிளக்கு தூண்டுவான் மட்டும் ரெங்கனாதர் அருகே இருக்க மற்றவர்கள் சொற்பொழிவின் ஆனந்தத்தில்.

நம்பிள்ளை கோஷ்டியோ, நம்பெருமாள் கோஷ்டியோ என்பார்களாம். அந்த அளவு நம்பிள்ளை மேல் மக்களுக்கு ஈடுபாடு.

படுத்திருந்த பெருமாள் எழுந்து ஆர்வமாய் நம்பிள்ளை பேசுவதை எட்டிப் பார்த்தாராம்.

விளக்கு தூண்டுபவர் (அதாவது விளக்கு அணையாமல் நெய் ஊற்றி பார்த்துக் கொள்பவர்) அதே கோலால் ( குச்சியால்) தட்டி "போய்ப் படும்." என்று சொன்னாராம்!

அதாவது பெருமாள் அவர் பொசிஷனை மாற்ற வேண்டாம்..

இப்படி ஒரு சுவாரசிய கதை குருபரம்பரையில் பதிவாகி இருக்கிறது.

விருட்டென்று வெளியே வந்து விட்டேன்.

இப்போது உள்ளே நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வரும் போதெல்லாம் 'சே.. அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே அவரைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்' என்று மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்கிறேன்.