March 02, 2014

பிரார்த்தனை

குறுஞ்செய்திகளுக்காய் நிறைய பேர் இதழ் நடத்துகிறார்கள்.. அவ்வப்போது எனக்கும் சான்ஸ் தருவார்க்ள். அந்த குரூப்பில் சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் எழுதியதும் அனுப்பி வைப்பார்கள்.
அப்படி அறிமுகமானவர் தான்.. 
‘நல்லா இருக்கு’ன்னு ஒரு மெஸெஜ் அனுப்பியபோது தெரியவில்லை.. அவரைப்பற்றி எதுவும்.
6 மாதங்கழித்து வேறேதற்கோ பழைய செய்திகளை அலசியபோது.. டிலீட் ஆகாமல் இருந்த அவரின் ரெண்டு வரிக் கவிதை கண்ணில் பட்டது.
’எப்படி இருக்கீங்க.. அப்புறம் எதுவும் எழுதலியா’ன்னு ஒரு மெசேஜ் தட்டினேன்.
’உடம்பு சரியில்ல’
‘சரி பார்த்துக்குங்க.. முடிஞ்சப்ப எழுதுங்க’
’என்னைப்பத்தி தெரியுமா’
‘தெரியாது..’
சொன்னார். வீல் சேரில்தான் வாழ்க்கை. உடல் நலம் பாதித்து எப்போதும் ஹாஸ்பிடல்.. ட்ரீட்மெண்ட்.. 
வீட்டில் இருந்தபடியே ஏதோ ஒரு வேளை செய்து நாட்களைக் கழிக்கிறார்.
‘சரிங்க’
இன்னொரு 6 மாதம் கழித்து ‘நலமான்னு’ செய்தி அனுப்பினேன்.
இல்லையாம். அவர் அடுக்கிய உடல் உபாதைகளைப் படிக்கவே பயமாக இருந்தது. 
‘பேசட்டுமா’
‘வேணாம்.. அழுதுருவேன்.. அப்புறம் ஒரு சமயம் பேசலாம்.. ‘
‘டேக் கேர்’
’ஒண்ணு சொல்லட்டுமா’
‘சொல்லுங்க’
‘என்னையும் ஒருத்தர் விரும்பறார்.. இந்த நிலையிலும்.. கல்யாணம் கட்டிகிட்டா என்னைத்தான் கட்டிப்பாராம்..’
‘வாவ்.. நல்லது.. ரொம்ப மகிழ்ச்சி’
’எங்க வீட்டுல தயங்கறாங்க’
‘பேசிப் பாருங்க’
‘ம்ம்..’
‘நல்லதே நடக்கட்டும்.. உங்க கல்யாணத்துக்கு அவசியம் வரேன்’

இதுவரை பார்த்திராத.. பேசியிராத.. வெறும் குறுஞ்செய்தி மூலமே பழகிய.. அந்த நட்பு.. நினைத்தபடி நல்ல வாழ்க்கை அமையணும்னு இப்போ என் பிரார்த்தனை !