நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
March 29, 2011
என் மேல் விழுந்த மழைத்துளியே 3
March 27, 2011
என் மேல் விழுந்த மழைத்துளியே 2
என் மேல் விழுந்த மழைத்துளியே
March 23, 2011
பூக்கும்
பொதுவாய் எரிந்து விழுகிற நடத்துனர்களைத் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் வேலை அப்படி.. நாள் முழுவதும் அதுவும் எரிச்சலூட்டுகிற உடை.. வெய்யில்.. யாருக்குமே பொறுமை பறிபோகும்.
இன்று மாலை வீடு திரும்பும்போது பஸ்ஸில் கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டை கொடுத்த டீன் ஏஜ் பையனிடம் திருப்பிக் கொடுத்து விட்டு 'வேற கொடு' என்றார்.
அவனிடம் வேறு சில்லறை இல்லை. டிக்கட்டும் தந்தாகிவிட்டது.
அவன் டிக்கட்டை திருப்பிக் கொடுக்க பார்த்தான்.
'வச்சுக்க'
அவ்வளவுதான். எதுவுமே நடக்காதது மாதிரி போய் விட்டார். செக்கரிடம் அவன் மாட்டக் கூடாது என்பதற்காக டிக்கட் !
நிலைமையை மிக அழகாய் அவர் கையாண்ட விதம் எனக்கு பிடித்துப் போனது.
இரைச்சலே நமது தேசிய கீதமாய் மாறிப் போன சூழலில் சிரிப்பும் நிதானமும் எவர் வசம் உள்ளதோ அங்கு இயல்பாய் மனம் லயித்துப் போகிறது.
தினசரி யாராவது ஏதாவது ஒன்றை கற்று கொடுத்து விடுகிறார்கள். அல்லது நினைவு படுத்துகிறார்கள்.
உதிர்ந்த மலர்கள்
இருந்த இடமாய்
அந்த பூச்செடி!
காற்றில் மிதக்கும் வாசம்..
மறுபடி பூக்கும் என
மனசுள் நம்பிக்கை பூக்கும்..
எதுவும் வீணாவதில்லை..
பூவும்
நம்பிக்கையும்..
March 20, 2011
சிவக்குமார்
March 14, 2011
யோசித்தால்..
"தாத்தா காலை வலிக்கிறது.. "
"கோவிலுக்கு வந்துட்டு கால் வலின்னு சொல்லலாமாடா “
"ஆனா வலிக்குதே "
"சரி.. ராமா ராமா ன்னு சொல்லு.. வலி போயிடும்.."
"தாத்தா .."
"என்னடா.."
"அம்மாவும் எப்பவும் ராமா ராமா ன்னு தான சொல்லுவா "
"..."
"அப்புறம் ஏன் செத்துப் போனா .. அதுவும் வலி தாங்க முடியாம.."
தாத்தா ஏன் பேசாமல் நிற்கிறார்.. பேரனுக்குப் புரியவில்லை..
========
அலுவலக வாசலில் உள்ளே நுழையும் போது அவனைப் பார்த்தேன் .. கூட வந்த
நண்பர்களுக்கு வேடிக்கை காட்ட .. சுவரில் தேமேன்னு இருந்த பட்டாம்பூச்சியை
கையில் பிடித்தான்.
'இதோ பாருங்கடா .. '
அதே நேரம் அவன் பார்வை என் மீதும்..
'விட்டுருப்பா..'
அவ்வளவுதான் சொன்னேன்.. அது மறுபடி சிறகடித்து போனது..
======
எனக்கு ஜோசியங்களில் நம்பிக்கை இல்லை.. கடவுள் உழைப்பவனுக்குத்தான் உதவுகிறார் என்று யோசிக்கிற ரகம்.
திருமணம் தடைப்பட்டு போனது என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த அலுவலக சிநேகிதியின் ஜாதகத்தை நான்கு மாதங்களுக்கு முன் வாங்கிப் போனேன் .
என் தெருவுக்கு அடுத்த தெருவில் அவர் இருக்கிறார்.
ஜாதகம் பார்த்து மார்ச் நாலாம் தேதிக்குள் வரன் செட்டிலாகும் என்றார். எழுதியும் கொடுத்தார்.
ஐந்தாம் தேதி அந்த சிநேகிதி சொன்னார்.. நேற்று அவரைப் பெண் பார்த்ததாகவும் வந்தவர்கள் விரைவில் நிச்சய தேதி சொல்வதாகவும்..
காக்கை உட்கார பனம் பழமா.. இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த திருமணம் சொன்ன தேதிக்கு செட்டிலானதில் எனக்கும் மகிழ்ச்சிதான்..
======
எனக்கு வண்ணக் கனவுகள்
வேண்டியதில்லை..
வரம் தரும் கடவுள்
அவர் வேலையைப் பார்க்கட்டும்..
சாகா நிலை கூட
சாத்தியமில்லை என்றே புரிகிறது..
ஆனாலும்
வாழ்வே போராட்டமாய் சிலரும்..
வழிப்பறிக்காரராய் சிலரும்..
தீர்க்காயுசு கொடுத்த இயற்கை ,
என்ன யோசித்தது
நல்ல ஆத்மாக்களை மட்டும்
சீக்கிரமாய்
அழைத்துப் போகும் போது..?
‘விட்டு வைத்தால்
துன்பப்படுவார்கள் என்றா?!’
March 10, 2011
பெயர்
நீ என் பெயரை
உச்சரித்ததில்லை..
'ஏய் ' தான் எப்போதும்.
பள்ளி நாட்களில்
'மூக்கொழுகி' என்று
கொஞ்ச காலமும்
வேப்பெண்ணை என்று
சில நாட்களும்..
'டி இவளே '
என்று சிநேகிதிகளும்..
ஏதோ ஒரு தேவதையின்
ஆசிர்வதிக்கப் பட்ட
நேரத்தில்
'ஹை ஸ்வீட்டி '
என்று ஒரு அற்ப நாள் காதலனும்..
இப்போது சொல்..
'புவனேஸ்வரி '
அல்லது 'புவனா '
என்கிற என் பெயரை
மறக்கடித்த
உங்களை எல்லாம்
எந்த சுண்ணாம்பு காளவாயில்
போடலாம்?
உபதேசம்

'அவர்ட்ட போ.. உன் குழப்பத்துக்கு பதில் கிடைக்கும்'
வந்து விட்டான். 'வாசல் கதவைத் தட்டு மெதுவா.. அவருக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணினா எழுந்து வந்து கதவைத் திறப்பார் '
நாதாங்கியை மிக மெலிதாக தனக்கே கேட்காத நிதானத்தில் ஆட்டினான்.
அந்த சில வினாடிகள் ..
முன்பு இராமகிருஷ்ண மடம் போய் ஒரு இரவு தங்கி விட்டு பிறகு திரும்பி வந்தது நினைவில் வந்தது. மடத்தில் சாமியார் பரிவாகத்தான் பேசினார்.
'லெட்டர் எழுதி வச்சுட்டு வந்துட்டேன்.. எனக்கு துறவறம் பிடிச்சிருக்கு'
புன்னகைத்தார்.
'தங்குப்பா .. காலைல பேசிக்கலாம்.. என்ன சாப்பிடுற.. '
'சாப்பாடு ஆயிருச்சு'
அவனுக்கு ஒதுக்கிய அறையில் ஒரு அயல் நாட்டினரும்.
'எங்கிருந்து வருகிறாய்'
ஊர் பெயரை சொன்னான். குட் நைட் சொல்லி தூங்கி போனார்.
விடியலில் ஒரு கனவு. அவனை நெருப்பு சூழ்ந்து கொள்வதாக. அதிலேயே மாட்டிக் கொண்டு விலக முடியாமல்.
ஆரத்தி நேரம் .. மற்ற பிரமச்சாரிகளுடன் அவனும் பூஜையில் கலந்து கொண்டான்.
'நல்லா தூங்கினியா '
'ம்.'
'ஏதாச்சும் நடந்துதா'
'ஒரு கனவு சுவாமி'
சொன்னான்.
'ஊருக்கு போ .. வீட்டில் சொல்லி விட்டு வா.. '
திரும்பி வந்தவனை பிடித்துக் கொண்டு உறவினர் அழுகை. கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தான். இதோ மீண்டும் திருவண்ணாமலை..
அழகான சிரிப்பு.. அவர் புகைத்தபோது சிகரட் நெடி தெரியவில்லை.
'உனக்கு என்ன பிடிக்கும்..' என்று அன்பாய் விசாரித்தார்.
'என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார்' என்றார்.
அவருடைய படம் கொடுத்தார். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை.
'எங்கே போகப் போகிறாய்'
'திருக்கோவிலூர்.. தபோவனம்..'
அனுப்பிவைத்தார்.
ஞானானந்தர் தபோவனம் சென்ற போது இருட்டி விட்டது. உணவுக் கூடத்தில் படுக்கச் சொன்னார்கள். காலை நான்கு மணிக்கு எழுந்து அதிஷ்டானத்தை நூற்றியெட்டு பிரதட்சிணம் செய்ய நினைத்திருந்தான். பயண அலுப்பு அவனை அப்படியே அசத்தி விட்டது. விடியலில் ஒரு கனவு. ஞானானந்தர் அவர் அறையில் இருந்து வெளியே வருகிறார். அவன் தலைப் பக்கம் வந்து கையைத் தட்டி ‘எழுந்திருக்கலாமே.. மணி நாலு ஆகிவிட்டது’ என்கிறார்.
திடுக்கிட்டு விழித்தால்.. ஹால் கடிகாரம் நாலு மணி அடித்தது!
நூற்றியெட்டு சுற்றி பிறகு ஊர் வந்து சேர்ந்தான்.
‘என்ன இன்னும் உன் அலைச்சல் விடலியா’
நண்பனின் கேலி.
‘ம்’
‘என்னதான் உன் முடிவு’
‘விசிறி சாமியார் சொன்னார்.. கல்யாணம் பண்ணிக்கோன்னு’
“ஓ”
‘இன்னிக்கு ஒரு கனவு..’
‘போச்சுரா.. என்னது’
‘கனவுல ஒரு சாமியார் எனக்கு உபதேசம் பண்ணார்..’
‘என்ன..’
“தாயை அறிந்து காண்
தந்தையை சொல்படி
தக்க குரு ஆத்ம நிவேதனம்
இஷ்ட தெய்வம் பூர்த்தி செய்யும்..”
நண்பன் பாதி புரிந்து பாதி புரியாமல் விழித்தான். இவனுக்கோ தனது ஆன்மத் தேடல் இன்னமும் தொடர்கிறது..
March 08, 2011
லைப்ரரி

கல்லூரி நாட்களில் வாரந்தவறாமல் போய் புத்தகம் எடுப்பேன். அப்போது தெரியவில்லை .. பின்னொரு நாளில் என் புத்தகமும் அங்கிருக்கப் போகிறது என்று.
பூங்கா ஓய்வுபெற்றவர்களின் சுக வாசஸ்தலமும் கூட. குடை போல் கவிழ்ந்திருந்த இடத்தில் அடியில் சிமென்ட் பெஞ்சுகள். பெரும்பாலும் அரசியல் பேச்சு. அதை எந்த அரசியல்வாதியாவது கேட்டால் மானஸ்தனாய் இருந்தால் தொங்கி விடுவான் முழம் கயிற்றில். ஆனால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நமக்கு இல்லை.
அறுபது பிளஸ் இத்தனை ஆங்காரத்துடன் இருக்கலாமா .. என்கிற படபடப்பு வந்து விடும். பொறி பறக்க அவர்கள் பேசும்போது. பேசுகிற இருவரை மற்றவர்கள் வந்து விலக்கும் போது திமிறுகிற காட்சி கண்கொள்ளாதது.
'என்ன அப்பு .. இவ்வளோ கோபம்.. '
'பின்ன என்ன மசிருக்கு அவன் பேசுறான் '
'விடுங்க.. நாம பேசி என்ன ஆகப் போவுது'
'பேசுனா ஒரு நியாயம் இருக்கணும்'
மெல்ல இருட்டுத் திரை இறங்கும். எட்டு மணிக்கு மேல் அங்கிருக்க இயலாது. ஒவ்வொருவராய் எழுந்திருக்க மனதின்றி ஊர்ந்து போவார்கள்.
வீடு திரும்பியதும் அவர்களை ஒரு வெறுமை தாக்கப் போகிறது.. மறுநாளின் விடியலுக்காய் காத்திருக்கவேண்டும்.
மற்றவர்கள் நகர்ந்ததும் சண்டையிட்ட இருவரும் கடைசியாய் போவார்கள்.
கீழே மஞ்சள் சரக்கொன்றை சிதறி நடைபாவாடை விரித்திருக்கும். அதன் மணம் சற்று காட்டமாகவே மூக்கில் இறங்கும்.
ஒருத்தர் தடுமாற அடுத்தவர் கை பிடிப்பார்.
'ஏலே .. பார்த்து..'
'ம்..'
'கணேசனும் போயிட்டான்.. ஒரு வருஷம் பெரியவனா ? '
'ஆமா'
'போன வருஷம் ஆறு பேர் இருந்தோம்.. மார்கழி மாசம் கோபால் போனான்..'
'ம்'
கண்கள் மறைத்த அந்த அரை வெளிச்ச மயக்கத்தில் ஒருவர் இன்னொருவரை பார்த்து கசிந்தது அவரவர் மனசுக்கு மட்டுமே புரிந்திருக்கும்.
'போடா.. எதுக்கு நாம சந்திச்சு பழகினோம்.. இப்படி பொசுக்குனு பிரிஞ்சு போகவா'
வாசல் கேட்டு மூடி இருக்கும். சுழல் கதவில் நுழைந்து வெளியே வரும்போது கொஞ்சம் குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கும்.
'பென்ஷன் வாங்க என்னிக்கு போற '
'சொல்றேன்.. உன்னை விட்டு போக மாட்டேன்..'
இரு திசைகளில் பிரிந்து அவர்கள் போகும் போது ஆண் பெண் காதல் எல்லாம் சற்றே அலட்சியமாய் தெரியும்.. அப்போது!
March 06, 2011
கணினி மொழி
தேடித் தேடி
புதுப் புது அனுபவங்களில்
எலியும் பூனையுமாய்
என் கணினியும் நானும்..
திருத்த முடியாத
தருணங்களில்
விட்டு விடுகிற
வார்த்தைகள்
நான் சொல்லாத அர்த்தம் காட்டி
பாராட்டும், விமர்சனமும்
வாங்கி தருகின்றன..
என்றைக்கேனும் ஒரு நாள்
என் மனசும்
எழுதுகிற கவிதையும்
ஒரே அலை வரிசையில்
வரக்கூடும்..
அன்று தான்
கவிதை குறித்த திருப்தி
எனக்குள்
கொடியேற்றி நிற்கும்.
அதுவரை
தேடலும் தவிப்புமாய்
என் கவிதைப் பயணம்..