September 02, 2010

ஸ்ரீ சந்திக்கு காசு

ஸ்ரீ சந்திக்கு காசு..
கோகுலாஷ்டமி சமயத்தில் இப்படி பல குரல்கள் வாசலில் கேட்கும்.
சின்ன வயசில் அதன்அர்த்தம் புரியவில்லை.
வீட்டில் பெரியவர்களும் அதையே திருப்பி சொல்லி காசு கொடுத்து அனுப்புவார்கள்.
கண்ணன் பிறந்த நாளே 'ஸ்ரீ ஜெயந்தி '
ஸ்ரீ ஜெயந்திக்கு காசு தான் 'ஸ்ரீ சந்திக்கு காசு' ஆகிவிட்டது..
இன்றும் ஸ்ரீரங்கம் தெருக்களில் ஏதோ ஒரு டப்பாவை அடித்து கொண்டு தெருவில் போவார்கள். அவரவர் கற்பனை.. சக்திக்கு ஏற்ப அட்டை டப்பாவில் கிருஷ்ணர் படம்.. அல்லது நடைவண்டியில் கிருஷ்ணர் பொம்மை.. சிலர் பல்லக்கு போல சுமந்து ..
உற்சாகம்.. குதூகலம் .. மகிழ்ச்சி ..
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இத்தனை வருடங்கள் ஆனாலும் அதன் தாக்கம் கொஞ்சங்கூட குறையவில்லை. தொலைக் காட்சி பாதிப்பிலிருந்து விடுபட்டு தெருவில் மனிதர்கள்.. அவர்களின் பரவசம்.. கலை.. ஆட்டம் பாட்டம்..
தமிழ்ப் பாசுரங்கள்..

பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய். (பெரியாழ்வார்)

என்ன ஒரு அழகான தமிழ்!