
உன் இதயப் பாத்திரத்தில்
ஊறும் அமிழ்தை
உன் கூட்டுப் பறவைகளுக்கு
பகிர்ந்தளித்தாய்..
நிராகரிப்பின் வலியோடு
காலித் தட்டுடன்
தெருவில் நடக்கும் நான் !
எல்லையற்ற பால்வெளியில்
இன்னொரு கிரகம்
கண்டுபிடிக்கப்பட்டது..
மனிதர்கள் இருப்பதாய்த்
தகவலுடன்..
இங்கிருந்து அங்கே
பயணத்திற்கும்
ஏற்பாடுகள்..
நீயிருக்கும்
இந்த பூமியை விட்டு
அகலாமல் நான் !
உன் வீட்டு வாசலைக்
கடக்கும் போதெல்லாம்
கதவில் ஒட்டிக் கொண்டு
வர மறுக்கும்
என் பார்வை..
மூடியிருந்த கதவை
மனசுக்குள்ளே
திறந்து பார்க்கும் நான் !