June 30, 2012

பயணம்

ஏர்போர்ட் வரை போக வேண்டி இருந்தது. அட.. அந்த ஏரியால குடி இருக்கிற நண்பரைப் பார்க்கத்தான்.
பஸ்ஸுல ஏறி கொஞ்ச தூரம் போயாச்சு. என் பக்கத்துல இருந்தவர் ஏதோ ஒரு ஸ்டாப் பேரைச் சொல்லி டிக்கட் கேட்டார். கண்டக்டர் முரட்டு உருவம்.. முகத்தில் பாதி மீசை.
‘இந்த வண்டி அங்கே போகாது’ என்றார்.
பயணி உடனே “கூட்டு ரோட்டுல இறங்கிக்கறேன்.. அதுக்கு டிக்கட் கொடுங்க’என்றார்.
அங்கே இறங்கி ஒரு கிமீ நடக்க வேண்டும் !
நடத்துனர் டிக்கட் தராமல்.. நோட்டையும் திருப்பித் தராமல் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கொஞ்ச நேரம்.
“கூட்டு ரோட்டுக்கு டிக்கட் கொடுங்க” என்றார் பயணி பொறுமை இழந்து.
நடத்துனர் நிதானமாய் “இறங்கி பின்னால ரெண்டு பஸ்ஸு வருது.. அதுல ரெண்டாவதா வர பஸ்ஸுல போய் ஏறிக்குங்க.. அதுதான் நீங்க போக வேண்டியது”
ரூபாயையையும் திருப்பிக் கொடுத்தார் !
“பாவம் எதுக்கு நடக்கணும்” என்றார் அவர் இறங்கிப் போனதும்.
கையைப் பற்றி குலுக்கினேன்!


அதே பஸ்ஸில் ஜன்னல் வழியே சாலையைப் பார்த்தபோது..
ஒரு அம்மா.. அவங்களோட (முப்பதுக்குள் இருக்கும்) மகள்.. மகள் கையில் குழந்தை.. அவர்கள் தலையில் பாதி பின்னிய ஒயர் கூடை.. அதற்கான பொருட்கள்..
அவர்கள் வாழ்க்கை அதன் விற்பனையில்தான்,, ஆனால்.. என்னவொரு ஆனந்தம்.. அவர்கள் முகத்தில்.
கோடி கோடியாய் வைத்திருக்கிறவர்களிடம் இல்லாத மலர்ச்சி..

மனிதர்களைத் த்ரிசிக்கும்போது நமக்கே ஒரு உற்சாகம்..