February 24, 2014

பறவை ஸ்நேகிதம்



இரண்டு வருடங்கள் இருக்குமா.. இருக்கலாம். பறவைகளுடனான என் சிநேகிதம்.. 

‘காலை வேளைல என்ன பண்ணுற’

‘7 மணி ஆபிசுக்கு கிள்ம்புற அவ்சரத்துல இருப்பேன்..’

’மொட்டை மாடி இருக்கா’

‘ம்’

’பறவைகள் வருமா’

‘காக்கா வரும்’

‘உனக்கு அதுவே அதிகம்..’

‘கலாய்ச்சுட்ட..’

‘சரி.. கெளம்புறதுக்கு முன்னால கொஞ்சம் சாதம்.. இல்ல அரிசி.. வாயகன்ற பாத்திரத்துல தண்ணி வச்சுட்டு போயேன்..’

‘எதுக்கு’

‘சொன்னா செய்யேன்’

செய்தேன். ஓரிரு காக்கைகள் என்னை உற்றுப் பார்த்தன. என் மீதான அவநம்பிக்கை அதன் கண்களில். நான் நகர்ந்ததும் பறந்து வந்து முகர்ந்தன. கொத்தி கீழே தள்ளியது ஒன்று.

சொன்னேன் அவளிடம்.

‘நீ சொன்னேன்னு செஞ்சேன்.. எனக்கு நோஸ் கட்’

‘பரவாயில்ல.. தொடர்ந்து செய்’

இன்று.. இரு வருடங்களுக்குப் பின்.. எனக்கு எத்தனை பறவை ஸ்நேகிதங்கள்.. சிட்டுக் குருவிகள்.. புறாக்கள்.. காகங்கள்..

வெளியூருக்குப் போகும் நாட்களில் மனசு தவித்துப் போகிறது.

திரும்பி வந்ததும்.. மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது.

முகம் திருப்பி கோபமாய் அமர்ந்திருக்கும் பறவைக்கு அருகே பறந்து போய் அமர்ந்து கெஞ்சத் தோன்றுகிறது.


அவைகள் உணர்வுபூர்வமானவை..  நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.

இப்போதும் என்னுள் அதே கோபங்கள்.. குமுறல்கள்.. ஆனந்தம்.. எல்லா

உணர்வுகளும்தான். ஆனால் அவற்றைப் பகிர விண்வெளி சிநேகிதங்கள் உண்டு
இப்போது என்னருகே.

எனக்கு இறக்கை ஒட்டிக் கொடுத்த சிநேகிதிக்கு ...    :)







   


February 21, 2014

3 கவிதைகள் !

எப்போதோ பேசிக் கொள்கிறோம்..
மூன்று மாதமோ..
ஆறு மாதமோ..
விட்ட இடத்திலிருந்து
தொடங்க முடிகிறது
நம் பேச்சை
எந்த நாளிலும்..
நீயோ நானோ
கேட்டுக் கொண்டதில்லை
ஏன் பேசவில்லை இத்தனை நாளென்று..

எப்படி சாத்தியமாயிற்று
நமக்குள்ளே இப்படி ஒரு அந்நியோன்னியம் ?!




நீ யாரோ
தெரியாது..
உன் முகமறியேன்..
காற்றின் வழி
செவி மோதுகிற
பிடித்த பாடலாய்..
நீ எனக்குப் ப்ரியமாகிறாய்.
உன் பெயர் கேட்க
புன்னகைத்துக் கொள்கிறேன்..
அவ்வப்போது உன் சிரிப்பில்
எனக்குள் முகிழ்க்கிறது
அதே ஆனந்தம்..
நாம் சந்திப்போமோ இல்லையோ..
எனக்கென்று
நீ இருக்கிறாயெனும்
நினைப்பில்
என் திமிருக்கு
சூட்டிக் கொள்கிறேன்
நிரந்தரமாய் ஒரு மகுடம் !



பார்க்காமல்
இருந்திருக்கலாம்..
நேசிக்காமல்
இருந்திருக்கலாம்..
அல்லது
அதைச் சொல்லாமலாவது
இருந்திருக்கலாம்..

இருந்திருக்கலாம் !