December 31, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துகள்


வா.. ஒரு கை கொடு.
சூரியனை திசை மாற்றலாம்!
பிரதேசங்கள் எல்லாம்
இருட்டில்லாமல் செய்வோம்.

புதிய பூச்செடிகள்
உண்டாக்குவோம்.
குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.

அறியாமை என்பது
குணப்படுத்த முடியாத
நோயல்ல..
கூடங்களை விட்டு கல்வியை
வெளிக் கொணர்ந்து நம்
கையகப்படுத்துவோம்.

நேசிப்பது சொல்லிப் பெறுவதல்லதான்.
பரவாயில்லை..
மறதி இயல்பான மாந்தருக்கு
வகுப்பெடுப்பொம்.

எதிர்கால இனிமை
கனவு கண்டால் சாத்தியம் என்று
எத்தனை நாளைக்குக்
கண் மூடி எதிர்பார்ப்பது?
கனவு காணவே அவசியமற்ற
நிகழ்காலப் புதுமைகளைப்
பொதுவுடமையாக்குவோம்.

இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்..
நாம் இதுவரை சேர்த்து வைத்த
தனி மனித அநாகரிகங்களை!


December 28, 2011

சூர்யா

மார்பில் வலித்தது அனுவுக்கு.

'
ம்மா'... என்று மனசுக்குள் அரற்றினாள். புரண்டதில் கட்டில் கிறீச்சிட்டது.

"
என்னடி..." அம்மாதான் எதிரில் வந்து நின்றாள்.

மூன்று நாட்களாய்ப் பொங்குகின்ற துக்கம் மறுபடி பிரவகித்தது. அம்மாவின் கண்ணீர் அவள் தலையில் பட்டு... ஒரு துளி தெறித்தது.

எத்தனை பிரசவம்... என் கையால பார்த்திருப்பேன்... எத்தனை குழந்தைகள் வளர்ந்து ஆளாக்கி... எல்லாம் இப்ப ஜாம்... ஜாம்னு இருக்கு... என் பேத்தி மட்டும் எனக்குத் தங்காமே..."

மூன்று நாட்களாக அம்மா இதையேதான் சொல்லிச் சொல்லி அழுகிறாள்.

என்ன செய்து... என்ன. பிறந்து பூமியைத் தொட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் 'திரும்பப் போகிறேன்' என்று அதுவும் சொல்லவில்லை. இவர்களுக்கும் முன்பே தெரிந்திருக்கவில்லை. தெரிந்துதான் என்ன செய்திருக்கப் போகிறார்கள்!

"
அம்மா என்ன இது?" பாலு இவர்களின் அழுகைக் குரல் கேட்டு வந்து விட்டான்.

"
அவளைச் சமாதானம் பண்ணுவியா... அதை விட்டுட்டு இப்படியா... ச்சே ... ஏய் ... அனு... என்னம்மா இது... டாக்டர் சொன்னது மறந்து போச்சா... ? மாப்பிள்ளை எங்கே போனார்...?"

ராஜன் தோளில் டவலுடன் வந்தான். அழுதழுது அவன் கண்களும் இடுங்கியிருந்தன.

"
ப்ளீஸ்... இவளைத் தனியா விடாதீங்க, இவ பக்கத்துலேயே கொஞ்சம் இருங்களேன்..."

அம்மா விலகி சமையலறைக்குள் போனாள். ராஜன் அனுவின் கட்டிலில் அமர்ந்து கொண்டான். அண்ணனின் கண்டிப்புக் குரலுக்குக் கட்டுப்பட்டோ... ராஜனின் அருகாமையோ... ஏதோ ஒன்றில் மனசு சமாதானமாகி... அனு மெல்ல அழுகையை நிறுத்தினாள்.

பாலு சமையலறைக்குள் நுழைந்தான். "என்னம்மா இது... உனக்கு என்ன ஆச்சு..."
"...
போடா... உன்னால முடியும்... என் கண் முன்னால எத்தனை குழந்தைகளைப் பார்த்து..." முடிக்க முடியாமல் அரற்றினாள்.

"...
கஷ்டம்தாம்மா... அதுக்காக... அனுவையும் சோகம் பாதிச்சு... அவளுக்கும் ஏதாவது ஆகணும்னு ஆசைப்படறியா..."

"...
இப்படி... ஆயிருச்சே... எத்தனை... பூஜை... அபிஷேகம்..." மறுபடி மறுபடி நினைத்து அழுதாள்.

"...
அம்மா... ப்ளீஸ்ம்மா... உன்னைக் கன்ட்ரோல் பண்ணிக்க... அட்லீஸ்ட்... அவளுக்கு எதிர்லயாவது துக்கத்தைக் காட்டாதே. ம்ம்... அப்புறம் யாராவது விசாரிக்க வந்தா... அனுவைத் தொந்தரவு பண்ணாதே. நீயே பேசி அனுப்பிரு... வர்றவங்க சும்மா இல்லாமே... எதையாவது சொல்லி துக்கத்தைக் கிளறிட்டுப் போயிடறாங்க..."

பாலு மெளனமாய் விலகி வெளியில் வந்தான். கிணற்றடி மேடையில் அமர்ந்து வாழை மரத்தையும்... அதன் அடியில் அதை ஒட்டியே வளரும் கன்றினையும் பார்வை தன்னிச்சையாய் நோக்க... உள்ளூர அழுதான். அனு... உனக்கா... இந்த சோகம்...!

தோளை யாரோ தொட்டார்கள்.

ராஜன்.

"...
வாங்க...

அனு என்ன பண்றா..."

"
தூங்கிட்டா..."
எதிரில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

"...
ஆபிசுக்கு லீவு சொல்லியாச்சா..."

"...
ம்..."

"
டிக்கட் ரிசர்வ் பண்ணனும்... எட்டாம் தேதி நைட் டிரெயின்தானே..."

"...
ம்..."

"...
மழை இப்ப எப்படி... ஒரு தடவை மழை சீஸன்ல நான் அங்கே வந்துட்டு... ஹப்பா... திணறிப் போயிட்டேன்... தண்டவாளமே தெரியலே... டிரெயின்லாம் கேன்சல்..."

ராஜனின் பார்வை இலக்கின்றி அலைபாய்ந்தது.

"...
உங்க ஆபீசுல... ஞாபகமறதியா... ஒருத்தர் இருப்பாரே... இன்னும் சர்வீஸ்லதான் இருக்காரா..."

பாலுவின் எந்த விசாரணைக்கும் பதில் சொல்லாத ராஜன் மெல்ல முனகினான்.

"...
ஹரீஷ்னு பேர் வச்சோம். பொண்ணா இருந்தா... சூர்யான்னு..."

பாலு எதைப் பற்றிய நினைவு வரக் கூடாது என்று தவிர்க்க நினைத்தானோ... மிக இயல்பாக அதுவே மேலெழுந்து திணறடித்தது.

"...
ஃபர்ஸ்ட் ஒரு டெலிகிராம் வந்தது. நானே அதுக்குள்ளே டிக்கட் ரிசர்வ்... பண்ணிட்டேன். அவசரம் அவசரமா போய் பாலபிஷேகம் பண்ணிட்டு வந்தேன். இங்கே வீட்டுக்குள்ளே நுழையும் போது... என் பெண்... எனக்கு இல்லே..."

"...
வந்து... ராஜ்..."

"...
நான் என்ன தப்பு பண்ணேன்... எனக்கு ஏன் இந்த தண்டனை... என்னை விடு. அனு... பாவம்... ஏங்கினா... அவளுக்காகவாவது..."

"...
குழந்தை பிழைக்க சான்ஸே இல்லை... ஒரு மாசமோ... ரெண்டு மாசமோ... மேக்சிமம்... கொஞ்ச நாள்தான் இருக்க முடியும்னு... டாக்டர்தான் சொல்லிட்டாரே... இருந்து அவஸ்தைப் படறதுக்கு..."

"...
முடியலே பாலு. மனசை சமாதானப்படுத்த முடியலே. எனக்கு ஏன் குறையோட குழந்தை பிறக்கணும். நல்லபடியா ஒண்ணு பிறந்து... அது உயிரோடு இருக்கக் கூடாதா..."

"
ஊஹும்... இனிமே இருக்க வேண்டாம். கிளம்புங்க... வெளியில் எங்கேயாவது போயிட்டு வரலாம்..." என்றான் பாலு.

"...
அவளைப் பாதிக்கப் போவுதுன்னு... நான் என்னோட ஃ பீலிங்சை மறைச்சுக்கிட்டு..."

பாலு விடாப்பிடியாய் ராஜனை எழுப்பினான்.

"...
மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வரேம்மா..."

ராஜன் சுயநினைவிழந்தவன் போல பாலுவைத் தொடர்ந்தான்.

இளைஞர் நற்பணி மன்றம் என்றது வாசலில் இருந்த தட்டி. கீற்றுக் கொட்டகையினுள் தினசரிகளைப் படித்தபடி சில பெரியவர்கள். மேஜை, நாற்காலி என்று மூலையாக அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

"
வாடா பாலு... வாங்க ஸார்..."

"
என்ன கணேஷ்... போஸ்டர் ரெடியா..."

"
என்ன எழுதணும்னு... நீ சொல்றேன்னு சொன்னே... அதுக்குள்ளே... உங்க வீட்டுல இப்படி..."

"...
ப்ச்... அதை விடு... நீயே ஏதாவது டிரை பண்ண வேண்டியதுதானே! பிரச்னை என்னன்னு தெரியும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிங்க மனசுல பதிய வைக்கணும். பொது மக்கள் கவனத்தையும் கவரணும். யாரையும் தூண்டி விடாமே... மனசு புண்படாதபடி... எழுத வேண்டியதுதானே..."

"
இதோ பாரு... ஒண்ணு எழுதி வைச்சிருக்கேன்..." என்று ஒரு காகிதத்தை நீட்டினான்.

படித்துவிட்டு பாலு திருப்பிக் கொடுத்தான்.

"
இது வேணாம். இந்த வரியை மட்டும் மாத்தி எழுதச் சொல்லிரு. ஈவினிங் மறுபடி வரேன்... மணி, சுந்தர் எல்லாம் போயிட்டாங்களா..."

"...
ம்... நேத்து பாதிதான் கிளீன் பண்ண முடிஞ்சுது... அந்தத் தெரு ஆட்களும்
சேர்ந்துக்கிட்டாங்க... குப்பைத் தொட்டி ஐடியாவை அவங்களும் ஏத்துக்கிட்டாங்க..."

"
யெஸ்... எல்லோருக்கும் அந்த அவர்னஸ் வந்திருச்சுன்னா போதும்..."

சிறுவன் ஒருவன் வேகமாய் ஓடிவந்தான்.

"...
அண்ணே... ஒரு குழந்தையை யாரோ குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்க..."

"...
எங்கேடா..."

"...
நேதாஜி தெருவுல..."

பாலு சைக்கிளை வேகமாய் அழுத்தினான். பின் சீட்டில் ராஜன். இந்த ஒரு மணி நேரத்தில் சுய துக்கம் மறந்து ஒருவித பரபரப்பு ஆட்கொண்டிருந்தது. இடையிடையேதான் மெல்லிய முனகல் மனசுக்குள் கேட்டது.

தொட்டியைச் சுற்றி இருபது, முப்பது நபர்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய். எல்லோர் முகத்திலும் ஆர்வம்...

பாலு அவசரமாய்க் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனான்.

பிறந்த சிசு. கண் மூடிப் படுத்திருந்தது. வாழை இலை ஒன்றின் மேல் விடப்பட்டிருந்தது. சுள்ளெறும்புகள் மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தன. அவசரமாய் வாரித் தூக்கினான். மேலே ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டான்.

"...
குழந்தை யாருதுங்க..."

கூட்டம் மொத்தமும் தெரியாதென்று தலையாட்டியது.

"...
ஏம்மா... நீயும் புள்ளையப் பெத்தவதானே... அட... புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது... எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல..." என்றான் பாலு ஆற்றாமையுடன்.

"...
நல்லா இருக்கே... நீ சொல்ற நியாயம்! எவ பேட்ட புள்ளையோ... கண்ட சிறுக்கிக்கு பிறந்ததை எல்லாம் எங்க ஊட்டுல சேர்க்க முடியாதுப்பா..."

"
உங்களை என்ன... எடுத்தா வளர்க்கக் சொன்னேன்... கொஞ்சம் பத்திரமா வச்சிருக்கக் கூடாதுன்னுதானே கேட்டேன்..."

"...
யோவ்... எங்கேய்யா போனான் எம் புருசன்... இந்தாளு என்ன கேட்கிறான் பார்த்தியா... கேட்டுக்கிட்டு கம்முனு இருக்கியே..."

அந்தப் பெண்மணி ஆவேசமானாள். பாலு மனசுக்குள் கொஞ்சம் நொறுங்கிப் போனான். குழந்தை மெல்லக் கண் திறந்து சிணுங்கியது.

கணேசன் பாலுவின் தோளைத் தொட்டான். "போலிசுக்குச் சொல்லிரலாமா..."

"...
ம்... அதுக்கு முன்னால... இதன் பசிக்கு எதாவது..."

"
இங்கே என்ன கொடுக்கறது..."

ராஜன் இதுவரை மெளனமாக நின்றவன் கை நீட்டினான். "என்கிட்டே கொடு பாலு
புரிந்தது பாலுவுக்கு. "...எ...என்ன ராஜன்..."

"...
அனு கொடுப்பா... வா சீக்கிரம் போகலாம்... அப்புறம் மத்த விவரமெல்லாம் பார்த்துக்கலாம்..."

பாலுவும் ராஜனும் குழந்தையுடன் கிளம்பிப் போனார்கள்.

"...
எம்மா... குழந்தையை விட்டுட்டுப் போயிட்டா... குப்பை தொட்டில... யாரு செஞ்சாங்க..." சிறுமி .

"
எவளோ செஞ்சா... நீ பேசாமே போடி..." என்றாள் அதன் தாய் எரிச்சலுடன்.

"...
இவங்க எடுத்துக்கிட்டு போறாங்களே... என்ன செய்வாங்க..." என்றது
மறுபடியும்.

"...
சனியனே... வாயை மூடிக்கிட்டு... இருக்க மாட்டே...சைக்கிளில் ஏறப் போனவன் கீழே இறங்கினான் கணேசன்.

"...
பாப்பா... இங்கே... வா..." தயங்கி அருகில் வந்தது.

"
உனக்கு அம்மா... அப்பா இருக்காங்க... அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க... இல்லையா... பாவம்... அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லே... அதனால தான்... நாங்க எடுத்துக்கிட்டுப் போய்... வளர்க்கப் போறோம்..."
புரிந்தவள் போல தலையாட்டியது.

"...
ஏய்... இங்க வாடி... அங்கெ என்ன பேச்சு. இவனுகளுக்கு வேற வேலை இல்லை... எடுத்து வளர்க்கிறானுவளாம்... அப்புறம்... அவ... அவ பெத்துப் போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பா..."

கணேசன் சிரித்துக் கொண்டான். மெல்ல... மெல்லத்தான் மனமாற்றங்கள் நிகழும். அது வரை இம்மாதிரி இயக்கங்கள் தேவைப்படத்தான் செய்யும். அதை இப்போது இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.

"
என்ன குழந்தை அது..." என்றது கூட்டத்தில் ஒரு குரல்.

"
என்ன..."

"
இல்லே... ஆம்பளைப் புள்ளையா... பொட்டைப் புள்ளையான்னு கேட்டேன்..."

"
சூர்யா" என்றான் ராஜன்.

குழந்தையை அனு அருகே படுக்க வைத்திருந்தாள்!




December 15, 2011

ஸ்ரீரஞ்சனி

கொஞ்சம் அழகாய் கொஞ்சம் சங்கீதமும் தெரிந்த பெண்ணாய் இருந்தால் அவளையும் மீறி ஒரு அலட்டலும் கம்பீரமும் வந்து விடுகிறது. ஸ்ரீரஞ்சனிக்கும் அதே விதி.

ஷங்கர்நாராயணன் எனக்கு போன் செய்தபோது என் மடிக்கணினியில் பி. சுசீலாவின் பின்னணிக் குரலுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ஆர். ஆர். சபால கச்சேரி.. புதுமுகம்.. ஆனா வாய்ஸ்ல அப்படி ஒரு மிக்ஸிங்க்.. வந்து கேளு.. டோட்டல் சரண்டர்தான்"

இஷ்டத்துக்கு ஏற்றி விட்டான்.

என் சங்கீத ஞானம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. சித்திரை வீதிகளில் வருடா வருடம் ஆராதனை உத்ஸவங்களில் பிரபலங்கள் பிளஸ் புதுமுகங்கள் பெயர்களை ஆளுயர நோட்டிஸ் போர்டில் படித்துவிட்டு, இயன்ற நாட்களில் எட்டு மணிக்கு போகிறவன். பந்தலுக்குள் உட்கார்ந்தால் சுலபமாய் எழுந்து வர முடியாமல் போனதில் நீண்டு கிடக்கிற வீதியில் யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து கேட்பேன். எதிரில் உட்கார்ந்தால் சில சமயம் சேஷ்டைகள் பார்க்க அடக்க இயலாமல் சிரிப்பு வரும் அபாயம் எனக்கு உண்டு.

எனக்கு இன்னார் என்கிற ஆதர்ச கோட்பாடுகள் இல்லை. சூப்பர் சிங்கரில் குழந்தைகள் சரளமாய் கைக்குறிப்புகள் இல்லாமல் முழு பாடலையும் அப்படியே பாடும் சுட்டித்தனத்திற்கு சல்யூட் வைக்கிறவன். இசை.. இசை.. அது போதும். ஆள் எவராய் இருந்தால் என்ன.. வடிவம் எதுவாய் இருந்தால் என்ன..

"வந்து.." என் சால்ஜாப்பு கேட்க ஷங்கர் தயாராய் இல்லை.

"நீ வருகிறாய்.. ஷார்ப்பா ஆறு மணிக்கு" கட் செய்து விட்டான்.

5.59க்கு ஆர்.ஆர் சபா வாசலில் வந்து நின்ற போது ஷங்கர் என்னைப் பேச விடாமல் மாடிக்குக் கொத்திக் கொண்டு போனான்.

"எப்படி வந்தே" என்கிற கேள்வியுடன்.

"புரியல.. என் பைக்ல தான்"

"டோட்டல் டவுனே இன்னிக்கு ஷட் டவுன்.. ரோட்டுல ஒரு பஸ் பார்த்தியா.. "

"எனி பிராப்ளம்"

"தெரியல.. ஆளுக்கொரு தகவல் சொல்றாங்க.. பட் நெட் ரிசல்ட் நோ ட்ராபிக்"

"அப்போ கச்சேரி?"

"மேலே போனாத் தெரியும்"

எண்ணி பத்தே பேர். அரங்கு நிறைய காலி இருக்கைகள். அஞ்சு மணிக்கே வந்து விட்டார்களோ என்னவோ.

செகரட்டரி ஷங்கருக்குத் தெரிந்தவர். அத்தனை டென்ஷனிலும் அரைச் சிரிப்பு சிரித்தார்.

"பவர் கட்டும் சேர்ந்தாச்சு.. " என்றார்.

அப்போதுதான் அதையும் கவனித்தோம்.

"ஜெனரேட்டர்?"

"அதுலயும் ஒரு பிரச்னை.. ஸ்டார்ட் ஆகல"

"சூப்பர்" என்றேன் சிரிக்காமல்.

மணி 6.10. மேடையில் சுருதி சேர்க்கிற ஒலி. ஆச்சர்யமாய் பார்த்தால்.. பக்க வாத்தியங்களுடன் நடுவே அவள். ஸ்ரீரஞ்சனி!

ஆங்காங்கே அசட்டையாய் நின்றவர்கள் பத்து பேரும் ஏதோ வகுப்பு ஆரம்பித்த கவனத்தில் தடதடவென்று வந்து அமர்ந்தார்கள்.

"நல்ல இசைக்கு எதுவும் அவசியம் இல்லை.. லயிச்சு கேட்கிற பத்து பேர்.. பாடறதுக்கு நான்.. போதும் தானே" என்றாள் மைக்கில்லாமல்.

எனக்குள் கிடாரின் தந்தி அதிர்ந்தது. புன்னகையுடன் நானும் ஷங்கரும் அமர்ந்தோம். அத்தனை பேரும் சொல்லி வைத்த மாதிரி எழுந்து முன் வரிசைக்குப் போய்.

வழக்கம் போல விநாயகர்.. அப்புறம் சிம்மேந்திர மத்யமத்தில் "தாழ்சடையும் நீள் முடியும்." பெரியாழ்வார் பாசுரம்.. 'மருகேலரா' ஜெயந்தாஸ்ரீ.. "வசுதேவயனி" கல்யாணி.. "மோஷமுகலதா" சாருமதி .. "மாமவ பட்டாபிராம" மணிரங்கு.. (இதெல்லாம் ஷங்கர் அப்புறம் சொன்னது.. நான் தான் ஆரம்பத்திலேயே எழுந்து வந்து விட்டேனே)

அரை மணிக்குப் பின் என் மொபைல் ஒலித்தது. அமைதியான சபாவில் இடைச்செருகலாய். லேட்டஸ்டாய் வைத்த டியூன். மலையாளப் பாடல்.
ஸ்ரீரஞ்சனி முகம் சுளித்தாள்.

"வில் யூ பிளீஸ் ஸ்விட்ச் ஆப் யுவர் செல்" என்பது போல முறைப்பு.
அழைத்தது என் பாஸ்.

எழுந்து வெளியே வந்து விட்டேன். வேண்டுமென்றே நான் நடந்து போகிறவரை அதன் இசை ஒலித்துக் கொண்டு. பேசி விட்டுத் திரும்பியபோது அடுத்த கீர்த்தனைக்கு ஆயத்தமாய் இருந்தாள்.

என் போதாத காலம் மீண்டும் என் செல்லில் அழைப்பு.

"உங்களால் ஒத்துழைக்க முடியாதா" என்றாள் ஸ்பஷ்டமாய்.

ஷங்கர் என்னை அழுத்தினான். வெளியே வந்து விட்டேன் மறுபடி. ஒரு மணி நேரம் கழித்து ஷங்கர் வந்தான்.

"போடா.. மிஸ் பண்ணிட்ட.. ஷீ ஈஸ் மார்வலஸ்"

அப்புறம் போகும் வழியெல்லாம் என் ஹெல்மெட்டைக் கழற்றி வாங்கிக் கொண்டு அவள் புகழை ராகமாலிகையாய் பாடிக் கொண்டிருந்தான். தேர்ட் கிராஸில் அவனை இறக்கி விடும் வரை ஓயவில்லை.

இறங்கியபிறகும் பைக்கைப் பிடித்துக் கொண்டு ப்ளா.. ப்ளா.

"டேய் வுடுரா.. நான் நைட் சென்னை போகணும்.. தல வரச் சொல்லிட்டான்.." என்று தப்பித்தேன் .

கச்சேரி நடுவில் வந்த இரு அழைப்புகளும் பாஸிடமிருந்துதான்.
'
இப்பவே கிளம்பு.. சென்னைக்கு போ. கிளையண்ட்டை பார்'

ராத்திரி ராக்போர்ட் வரை அவகாசம் கேட்டு வைத்தேன். ஈகியூவில் ஏசி டூ டயரில் கிடைத்தது ரயில்வே நண்பர் உபயத்தில். அடுத்த ஆச்சர்யம் அதே கம்பார்ட்மெண்ட்.. எதிர் சீட்டில் ஸ்ரீரஞ்சனி.. மற்ற இரு சீட்டுகளும் ஆள் இல்லை.
என்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் எந்த குறிப்பும் இல்லை.

என் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் " இன்னிக்கு உங்க கச்சேரி சூப்பர். ஆர். ஆர் சபால" என்றேன்.

"ம்" என்றாள் எனக்குக் கேட்காத குரலில்.

"டு பீ ப்ராங்க்.. எனக்கு அவ்வளவா சங்கீத ஞானம் இல்லை.. ஆனா எனக்கே உங்க வாய்ஸ் பிடிச்சுது"

உண்மையான தொனியில் சொன்னேன்.

"தெரியும்"

"எப்படி" என்றேன் வியப்புடன்.

"அதான் பார்த்தேனே.. மொபைல் அட்டெண்ட் பண்ணவே நேரம் சரியா இருந்துச்சே.. "

வித்தியாசமானவள்தான். என்னைக் கவனித்திருக்கிறாள்.

"ஸாரி.. ஸாரி.. கொஞ்சம் குழந்தைத் தனமாவே நடந்துகிட்டேன்.. "

"ஒரு அட்வைஸ்.. ரசனை இல்லாம கச்சேரிக்கு போகாதீங்க.. உங்களால மத்தவங்களுக்கும் தொந்திரவு" என்றாள் என்னை சீண்டி விடும் தொனியில்.

" அப்படியா.. எனக்குத் தெரிஞ்சு சில பெரிய பாடகிகள் எல்லாம் அவங்க கணவர் பேச்சைக் கேட்டுத்தான் அடங்கிப் போயிருக்காங்க.. இன் ஃபாக்ட் சில பேரோட ஹஸ்பண்ட் சங்கீத ரசனையே இல்லாதவங்க"

இதற்கும் அவள் சொன்னதற்கும் என்ன சம்பந்தம்.. என்பது போல பார்த்தாள்.

என் அம்மாவுக்கும் இப்படித்தான் ஆச்சு

என் குரல் பிசிறியது. அதை ஏன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை. அரியலூரைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. எங்கள் தனிமை.. என் அலுவலக அயற்சி.. ஸ்ரீரஞ்சனியின் இயல்பான பேச்சு. எதுவோ என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.

அவள் 'சொல்' என்று கேட்கவில்லை. சொல்லிக் கொண்டே போனேன்.

'அம்மாவுக்கு படிப்பு வரவில்லை. கேள்வி ஞானத்திலேயே பாடுவாள். தாத்தாவின் செல்லம். அவர்தான் பிடிவாதமாய் தஞ்சாவூருக்குக் குடி போனார். சொந்த வீடு, நிலம் எல்லாம் விட்டு விட்டு. அம்மா சங்கீதம் கற்றுக் கொண்டது எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. தாத்தாவின் கோபத்திற்கு பயந்தார்கள். எங்கள் கிராமத்து கோவிலில் அம்மா உத்ஸவத்தின் போது பாடினாள். அதுதான் முதலும் கடைசியுமான கச்சேரி. வீட்டுக்குள் பாடிக் கொண்டிருப்பாளாம். பாட்டி சிரமப்பட்டு அடுப்பூதி சமையல் செய்த போது அம்மா முற்றத்தில் ராக ஆலாபனையுடன்..'

ஸ்ரீரஞ்சனியின் முகத்தில் இப்போது கதை கேட்கும் சுவாரசியம் ததும்பியது.

'அந்த உத்ஸவத்தில்தான் அப்பா அம்மாவைப் பார்த்திருக்கிறார். அண்டர்லைன் இட்.. பார்த்தார்.. கேட்கவில்லை! அம்மாவின் அழகு ஜொலித்துக் கொண்டிருந்தது.. அப்பாவுக்கு எதுவுமே தனக்குத்தான் என்கிற பேராசை.. தாத்தாவை என்ன சொல்லி மயக்கினாரோ.. அம்மாவைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு விட்டார். ஃபர்ஸ்ட் நைட்டில் ஒரே கண்டிஷன்.. கச்சேரி பாடக் கூடாது..'

'குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு.. பாட்டு கேட்டதுண்டா.. அது அம்மாவைப் பத்திதான்..அப்பா இல்லாத நேரத்தில் அம்மா பாடிக் கொண்டிருப்பாள். போறாத நேரம்.. அப்படி ஒரு சமயம் பாடும்போது யாரோ ஒருத்தர்.. அப்பாவைப் பார்க்க வந்தவர் கேட்டுத் தொலைத்து விட்டார்.. அப்பாவிடம் புகழ்ந்து பேச.. வீட்டிலும் பாடாதே என்று அடுத்த கட்டளை.'

ஸ்ரீரஞ்சனி இப்போது முழுவதுமாய் கவனம்.

'நான் பிறந்தபோது எனக்கு தாலாட்டு கிடையாது.. அழகில் நான் அம்மாவைக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.. விவரம் தெரிந்தபோது அப்பாவின் மேல் கோபம் வந்தது. சங்கீதத்தின் மேல் எரிச்சல் வந்தது. அம்மா என் மனசை மாற்றினாள்.. அப்பாவின் கோபத்துக்கு சங்கீதம் என்ன பண்ணும்.. கொஞ்சம் லேட்டாய் இசையில் லயிக்க ஆரம்பித்தேன்.. என் டென்ஷனுக்கு அங்கே நிம்மதி கிடைத்தது.. இப்போதும் எனக்கு ராகம், தாளம் தெரியாது.. அப்பா தவறிப் போனார்.. இப்பவாச்சும் பாடும்மா.. என்றேன்.. முடியலடா.. என்கிறாள்..'

அழுதிருக்க வேண்டும். ஸ்ரீரஞ்சனி என்னைக் கரிசனமாய்ப் பார்த்தாள்.

'ஸாரி.. என் கதையைச் சொல்லி அனாவசியமாய் உங்கள் தூக்கத்தைக் கெடுத்து விட்டேன்'

சேச்சே.. அதெல்லாம் இல்லை

ம்

நான் உங்கம்மாவைப் பார்க்கணும். ஆசையா இருக்கு

.. என்னைப் பத்தி புகார் சொல்லவா

ஆமா. இப்படி சங்கீதம் தெரியாத மக்கா வளர்த்துட்டீங்களேன்னு

ஸோ.. வாட்.. தெரிஞ்ச ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டா போச்சு

ரியலி..

யெஸ்

அம்மா இப்பவும் பாடுவதில்லை. ஆனால் கச்சேரிக்கு வருகிறாள். முன் வரிசையில் இருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பியதும் அம்மாவும் ஸ்ரீரஞ்சனியும் அன்றைய கச்சேரி பற்றி பேசுகிறார்கள். அம்மா சிலாகித்த.. 'இந்த இடத்துல உன்னோட நிரவல் கிளாஸ்'.. 'இல்லம்மா.. எனக்கு இன்னும் முழு திருப்தி வரல..' நடுங்கும் குரலில் அம்மா அந்த வரியைப் பாடிக் காட்ட.. ஸ்ரீரஞ்சனி அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு 'நீங்க விட்டிருக்க கூடாதும்மா'

யார் சொன்னது.. சங்கீதம் தெரியாமல்.. ரசனை இல்லாமல் பாடகியுடன் குடித்தனம் பண்ண முடியாது என்று.

இதோ நானும் ஸ்ரீரஞ்சனியும் அம்மாவும் இருக்கிறோமே.. ஆனந்தமாய்.


(கல்கி - சீஸன் ஸ்பெஷல் - 18.12.2011 பிரசுரம்)