September 17, 2013

நேசம்



எப்பவும் அடுத்தவ்ருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !




ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும் 
ஒளிக்காமல் இருப்பதில்லை 
இந்த மனசு !



ப்ரியம் பூத்திருக்கும் 
பூவைப் பார்க்காவிட்டாலும் 
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது 
வாழ்நாள் முழுமையும் !




September 08, 2013

கொஞ்சம் கவிதைகள்

என்னைச் சிலுவையில் 
அறைந்தால்
உயிர்க்கத் தெரியாது..
விட்டு விடு !



அவர்களாக அறைக்குள்
வருகிறார்கள்..
வெளியேறுகிறார்கள்..
வாசம் சுமந்த
சுவர்கள்
ததும்புகின்றன
விம்மல்களில்..
நுழைவதற்கு முன்
இருந்த
சுயம் தொலைத்த
அறை
இப்போது ஏங்குகிறது
வரவிற்காக!


உன் மழை பற்றி நீயும்
என் மழை பற்றி நானும்
கவிதைகள் எழுதி
கை மாற்றிக் கொண்டோம்..
சேர்ந்து
வாசிக்கும் போது
அது நமக்கான மழையாய்
இருந்தது !



அமரவும்
விருட்டென்று
சிறகை விரித்துப் பறக்கவும்
ஆகிறது பறவைக்கு..
முடங்கிக் கிடக்காமல் !