April 26, 2013

நிஜத்திற்கு ஒரே நிறம்

தற்செயலாகத்தான் கவனித்தேன். டாய்லட் கதவின் உள்பக்கம் பால்பாயிண்ட் பேனாவினால் கிறுக்கலான கையெழுத்து.


கல்பனா + ராமகிருஷ்ணன்… இன்னும் ஏதேதோ படங்கள்… வக்கிர மனதின் வெளிப்பாடுகள்.

குப்பென்று வியர்த்தது. என்ன இது… யாருடைய வேலை? எப்போது எழுதினான்? நல்லவேளை, அந்த நேரம் வேறு எவருமில்லை. இதை அழிக்க இயலுமா?

முயற்சித்தேன். முடியவில்லை, தொடரவும் தயக்கமாக இருந்தது. சட்டென்று கதவைத் திறந்து யாராவது வந்து விட்டால்…

வாய் கொப்பளித்தபோது மனதின் மொத்த எரிச்சலையும் நீருடன் உமிழ்ந்தேன்.

எத்தனை பேர் இதைப் பார்த்திருப்பார்கள்? எத்தனை நாட்களாய் இது இருக்கிறது?

சீட்டில் அமர்ந்தபோது நெஞ்சம் படபடத்தது.

"ஹாய்… ராம்!…" கல்பனாதான். சுவாதீனமாய் அறைக்குள் வந்தாள். பிற இருக்கைகளின் நபர்கள் என்மேல் விசேஷக் கவனம் செலுத்துவது போல ஒரு பிரமை.

"காலைலேர்ந்து ரெண்டு தடவை ஃபோன் பண்ணிட்டேன். எப்ப பார்… நீ ஸீட்டுல இல்லைன்னுதான் பதில்" எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

இவளையா… எப்படி எழுத மனசு வந்தது! அவன் யாராக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது.

சோகையாய்ச் சிரித்தேன்.

"என்ன விஷயம்?"

"நத்திங்! எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் அல்லது…"

கீழே குப்பைக் கூடையைக் காட்டி 'விஷ்' என்று சப்தித்தாள்.

"கொடுத்துட்டுப் போ… அப்புறம் சொல்றேன்."

"என்னது… ஜஸ்ட் எட்டே வரி… இப்பவே சொல்லு!"

"ஸாரி! அவசரமா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணனும். மத்தியானம் போர்டு மீட்டிங்."

_என் சமாளிப்பில் எனக்கே தடுமாறியது.

"ஓகே! அப்புறம் வரேன்."

"நான் ஃபோன் பண்றேனே…"

அப்ப என்ன சொல்றே… நான் இங்கே வர வேண்டாமா?"

"நோ… நோ… அதுக்காக இல்ல… இந்த ரிப்போர்ட் டீடெய்ல்ஸ்க்காக… ரெண்டு மூணு பேரைப் பார்க்கணும். அதர் டிபார்ட்மெண்ட் பீபிள்… ஸீட்ல இருக்க மாட்டேன். அதனாலதான்…"

குனிந்த தலை நிமிரவில்லை. என் மனத் தவிப்பு அவளுக்குப் புரிய நியாயமில்லை. சுற்றி எதிரே அமர்ந்திருக்கும் ஆண்களில் எத்தனை பேர் டாய்லட் கதவைப் பார்த்தவர்களோ அல்லது இதில் எவனோ ஒரு அற்பன்தான் அதை எழுதியவனோ… அவரவர் மனதில் என்ன மாதிரி நினைப்புகள் ஓடுகின்றதோ…

"ஹலோ! என்ன அப்படியே துங்கியாச்சு? டீப் திங்கிங்கா… வரட்டுமா?"

கல்பனா போய்விட்டாள்.

ராஸ்கல்! என் மனது பொருமியது. தூய்மையான ஒரு நட்பைக் கேவலமான எண்ணத்துடன் கொச்சைப்படுத்தி… தரம் தாழ்ந்து போய்விட்டானே!

என்ன நினைப்பாள்… இதைக் கேள்விப்பட்டால் எப்படித் துடித்துப் போவாள்!

இன்னொரு முறை முயற்சித்துப் பார்த்தேன். எப்போது டாய்லட் போனாலும் யாராவது இருந்தனர். அழுத்தமான கறை அது… அழிக்க முடியவில்லை.

எதிரே இருந்த கோப்பில் மனசு பதியவில்லை.

கல்பனாவுக்கும் எனக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். அவள் அப்பா ரிடையர்ட் பேங்க் ஆபீசர். ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவு. ஒரு திருமணத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதும், வீட்டிற்கு அழைத்தார். கல்பனாவை அறிமுகப்படுத்தினார்.

"உங்க கம்பெனிலதான் எக்சிகியூட்டிவ் போஸ்ட்டுக்கு டெஸ்ட் எழுதியிருக்கேன். இண்டர்வியூக்கு கார்டு வந்தது…"

"அப்படியா… என்னைக்கு இண்டர்வியூ?" என்றேன்.

சொன்னாள். இண்டர்வியூ போர்டில் ஒருவர் என் நண்பர். புகழ்ந்தார். நல்ல பர்ஃபாமன்ஸ். மெரிட்லயே கிடைச்சிடும்.

கிடைத்து விட்டது. வேறு செக்ஷன்.

என்னை எப்போதாவது ஒரு முறையாவது நேரில் பார்த்து விடுவாள். வீட்டில் மனைவியிடமும் அறிமுகப்படுத்தினேன். சுலபமாய் ஈஷிக் கொண்டாள். அரவிந்துக்கு அவள் ஸ்வீட் ஆண்ட்டி, எப்போதும் ஃபைவ் ஸ்டார் கொண்டு வருவதால்.

புதுக்கவிதைப் பைத்தியம். எதாவது கவிதைத் தொகுப்பு பேரைச் சொல்லி, படித்தேனா என்று தொணதொணப்பாள்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்று படித்துக் கொண்டிருந்தவன் அவளால் புதுக்கவிதைகளையும் ரசித்தேன்.

எங்கள் நட்பிற்கு இப்படி ஒரு களங்கம் பூசவும் சில ஆத்மாக்கள் இருக்கின்றன என்பதை உணரும்போது சுலபமாய் அதை ஜீரணிக்க முடியவில்லை.

இப்படிக் கூட மனிதர்கள் இருக்கிறார்களா… ஜுரமே வந்து விட்டது உள்ளூர.

"படிச்சுட்டியா…?"

கல்பனாதான். "நீங்க, வாங்க, போங்க" என்பதில் எனக்கும் நம்பிக்கையில்லை. அப்பாவையும் "வா, போ" என்றுதான் சொல்வேன் என்றாள், மிகச் சிறந்த நண்பராம்.

என்னையும் ஒருமையில் அழைக்கச் சம்மதித்தேன். வித்தியாசமாகவும் எனக்குத் தோன்றவில்லை. சராசரி மரியாதையை மீறி நிஜமான நேசம் வெளிப்படுகிற இடங்களில் வெறும் வார்த்தைகள் அர்த்தமிழந்து போகின்றன.

"இங்கேதானே வச்சேன்…?" என்று மேஜை அறையில் தேடினேன்.

"படிச்சியா?"

"இ… இல்லே… இதோ இப்ப படிச்சிட்டு உடனே சொல்றேன்."

"ஹேய் ராம்… என்னைப் பார்!"

நிமிர்ந்தேன். என்னைக் கூர்மையாய்ப் பார்த்தாள்.

"என்ன ஆச்சு உனக்கு? ஸம்திங் ராங் வித் யூ! ஏதாவது பொய் சொல்லாதே… எனக்கு நிஜம் மட்டும்தான் வேணும்."

குரலின் அழுத்தம் என்னைச் சொல்ல வைத்து விட்டது.

"என்னால தாங்க முடியலே… என்ன பேத்தல், யாரைப் போய்… யாரோட... ஷிட்!"

சிரித்தாள் கண்களில் நீர் கட்டிக்கொள்ள!

"இதுக்கா இப்படி அப்செட் ஆயிட்டே…?"

"என்ன சொல்றே… எவ்வளவு அபாண்டமா எழுதியிருக்கான்?"

"அதனால்தான் கேட்கறேன். இதுக்குப் போயா… உன்னோட ஒரு நாளை வீணாக்கினே, அர்த்தமற்ற மனக் குழப்பத்துல?"

என்னது சீரியஸ்னெஸ் புரியாமல் ஏதேதோ பேசுகிறாள். இளங்கன்று பயமறியாது போல… பின்விளைவுகள் உணராத தன்மையா?

"என்னம்மா இது அப்பா கேள்விப்பட்டா...?" என்று சொல்ல ஆரம்பித்தவனைத் தடுத்தாள்.

"அதுல… ஒரு பர்செண்ட்டாவது நிஜமிருக்கா?"

"இல்லே… ஆனா…"

"போதும்! துளிக்கூட உண்மையில்லாதது தானே அழிஞ்சுரும். நம் சிந்தனையால அதை வளர்க்க வேண்டிய அவசியமில்லே" என்றாள் திடமான குரலில்.

கவிதை மேஜை மீதே இருந்தது. அனிச்சையாய்ப் பிரித்தேன்.

கறுப்பு சிவப்பு

பச்சை மஞ்சள் என்று

பொய்களுக்குத்தான்

விதவிதமாய் வர்ணங்கள்.

நிஜத்திற்கு

ஒரே நிறம்தான்…

எப்போதும்

தூய வெண்மை.

   

April 19, 2013

மனைவியின் மறுபக்கம்

பசித்தது. காலையில் டிபன் சாப்பிடவில்லை. கல்பனா டிபன் செய்திருந்தாள்; அவன்தான் சாப்பிடவில்லை. அலமாரித் தட்டில் அவனுடைய கைப்பைக்கு அருகில் டிபன் பாக்சும் இருந்தது. கிளம்பும்போது வேண்டுமென்றே எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டான்.


காலை நேர அலுவலகப் பரபரப்பில் முதலில் எதுவும் தெரியவில்லை. ஒன்பதரை மணிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குடித்த டீ வேறு பசியைத் தற்காலிகமாக மறக்கடித்திருந்தது.

பதினோரு மணிக்கு லேசாக வயிற்றைக் கிள்ளியது. நேரம் ஆக... ஆக… பசி அதிகமாகி… பனிரெண்டு மணிக்கு வரும் கேரியர்க்காரரை மனசு எதிர்பார்த்துத் தவித்தது.

"என்னடா… சண்முகம் ஒரு மாதிரி நெளியறே?" என்றான் பக்கத்து சீட்டிலிருந்த சுந்தர்.

"இன்னைக்கு என்னவோ… சீக்கிரமாவே பசிக்குது."

"டிபன் சாப்பிட்டீல்ல… காலைல…"

"ஆ… ஆங்…" என்றான்.

"அப்புறம் என்ன ஆச்சு… வீட்டு பிரச்னை?"

"எ… எது…?"

"அதான்… உன் சிஸ்டர் லெட்டர் போட்டிருந்தாங்கல்ல? பணம் வேணும்னு சொல்லி... உங்க வீட்டுல அதனால ஏதோ பிரச்னைன்னு…"

பாவம்! பழகின நட்பில் வீட்டுப் பிரச்சினையைப் பகிர்ந்து கொண்டதால் நினைவு வைத்துக் கொண்டு கேட்கிறான். ஆனால், இப்போதைய மனநிலையில் அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. காலையில் டிபன் சாப்பிடாத காரணமே அதுதான். நேற்றிரவு படுக்கப் போனதும் இதே வாக்குவாதம்.

"அப்புறம்... என்ன முடிவு எடுத்தீங்க?" என்றாள்.

"எதுக்கு?…"

"உங்க தங்கைக்கு பணம் அனுப்பற விஷயமா."

"பாவம்! அவளால முடியாம போனதாலதானே லெட்டர் போட்டிருக்கா?"

"இங்கே பாருங்க… எதற்கும் ஒரு அளவு இருக்கு! அதை நினைப்புல வச்சிருங்க."

"இப்ப நீ என்னதான் சொல்லுறே…" என்றான் எரிச்சலுடன்.

"நாளைக்கு நமக்கு கஷ்டம்னா… யாரும் வரமாட்டாங்க. அவ்வளவு ஏன், போன மாசம் பாத்ரூம்ல நான் தவறி விழுந்து காலை உடைச்சுக்கிட்டப்போ கையில் பைசா இல்லாம திண்டாடினமே… நினைவிருக்கா?"

"ம்… ம்…"

"உங்க தங்கை… வெறுங்கையை வீசிக்கிட்டு வருவான்னு நினைச்சேன். அது கூட இல்லே. ஒரு லெட்டர்… சீக்கிரமா உடம்பு குணமாவட்டும்னு. அவ்வளவுதான் உறவு…"

"இப்ப என்ன சொல்றே? உன்னை நேர்ல வந்து பார்த்தாதான் அன்பாயிருக்கிறதா அர்த்தமா… இல்லேன்னா பாசம் இல்லேன்னு ஆயிருமா?"

"உங்களுக்கு சொந்தமாவும் அறிவு இல்லே. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டீங்க. இப்ப இருக்குன்னு செலவழிச்சுட்டு… பின்னால எவன் கடன் கொடுப்பான்னு அலைவீங்க" என்றாள் முணுமுணுப்பாய்.

இதுவரை இருந்த பொறுமை விலகிப் போக… சண்முகம் இரைச்சலிட்டான்.

"நான் முட்டாள்தான். நேத்து வந்தவ நீ! அவ கூடப் பொறந்தவ! அந்த வித்தியாசம் உனக்கு ஏன் புரியலே… பெரிய புத்திசாலிக்கு…?"

விலகிப் படுத்து விட்டான். அழுது கொண்டிருந்தாள் போலும். விசும்பல் சத்தம் கேட்டது. எப்போது துங்கினாளோ…?

காலையில் எழுந்தபோது கண் எரிந்தது. பேசவேயில்லை. மௌனமாகக் குளித்து… தலை சீவி… உடை அணிந்து ஞாபகமாய் டிபன் பாக்சைத் தவிர்த்து ஆபீஸ் கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.

இதோ இந்த நிமிடம், பசிதான் சாஸ்வதம் என்று தோன்றியது. உணவுதான் உடனடித் தேவை. தொழிற்சாலையை ஒட்டி நல்ல ஹோட்டல்கூடக் கிடையாது. மதியம் கேரியர் எடுத்து வரும் நபரின் வரவுதான் இப்போது தேவை.

"சாப்பிடப் போகலாமா..." என்றான் சுந்தர் தோளைத் தட்டி.

ஓ… பனிரண்டு ஆகிவிட்டதா? டைனிங் ஹாலை நோக்கிப் போனார்கள்.

நல்லவேளை! கேரியர் வந்து விட்டது. கை கழுவிக் கோண்டு அவரவர் டிபன் அடுக்கைப் பிரித்தார்கள்.

என்ன இது… முதல் தட்டு காலியாக… இல்லை நான்காக மடித்திருந்த காகிதம்…
எடுத்துப் பிரித்தான்.

"டியர்… என் மேல் உள்ள கோபத்தில் உங்கள் வயிற்றுக்குப் பிரச்னை செய்து விட்டீர்கள். உங்களுக்குப் பசி தாங்காது. என்ன செய்தீர்களோ?… எனக்கு என் கணவர், என் குடும்பம் என்றுதான் நினைத்துப் பார்க்க முடியும். தவறானாலும் சரி... மற்றபடி, முடிவு எடுக்கிற உங்கள் சுதந்திரத்தில் தலையிடவில்லை. என்னுடைய கருத்தை நேற்றிரவு சொன்னேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். அதற்கும் உணவு விஷயத்துக்கும் முடிச்சுப் போடலாமா? ஐந்து மணிக்கே கண் விழித்து… உங்களுக்காக டிபன் செய்கிறேன். ஒரு வினாடியாவது அதை நினைத்துப் பார்த்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டீர்கள். போகட்டும்! மாலையில் சீக்கிரம் வீடு திரும்பி விடுங்கள். புதிதாய் டிபன் செய்து வைத்திருக்கிறேன்".

கண்களில் நீர் கட்டிக் கொண்டு வந்தது. எத்தனை அபத்தம்! எழுந்ததும் குளித்து அரக்க பரக்க அலுவலகம் ஓடி வந்து விடுகிறேன். நின்று பேசக் கூட நேரம் இல்லாமல். எனக்கு முன்னே எழுந்து டிபன் செய்து தயாராக வைத்திருக்கிறாள்… பாவம்!

தன்னுடைய தவறு மனதில் உறைக்க, மௌனமாய்க் கடிதத்தைப் பையில் வைத்துக் கொண்டான்.

"சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும்!"

April 03, 2013

ஜ்வல்யா

கண்டு பிடிப்பதற்காகவே 
ஒளிகிறாள் ஜ்வல்யா.

கண்டுபிடிக்கக் கூடாது என்றே
என் தேடல்கள்.

கண்டுபிடித்து விடுகிறோம்
ஒவ்வொரு முறையும்
எங்களை !



தன் கனவுகளில்
வருவதை எல்லாம்
பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள்
ஜ்வல்யா.
எதிர் வீட்டு குட்டி நாய்..
அடுத்த தெரு தாத்தா.. பாட்டி..
எப்போதோ பெய்த மழை..
ஜானு பொம்மை..

‘அப்பா வரலியா ஒரு தடவை கூட’
என்றேன் குரல் பிசிர.

என் கன்னம் தாங்கி
சொல்கிறாள்..
‘நீ நிஜம் பா”