January 31, 2010

கூச்சமில்லாமல் ஒரு பேனா


ஜீவாவை தற்செயலாகத்தான் மறுபடி சந்திக்க நேர்ந்தது.
எனது மீசை மழித்த முகமும் வாழ்வின் போராட்டங்களில் பின்வாங்கிய தலைமுடியும் மீறி சின்ன வயசு அடையாளமான சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடி ஜீவாவுக்கு என்னை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். "என்னடா சங்கர்.. எப்படி இருக்கே"
கல்யாண மண்டபத்தில் முதல் நாள் விழா. பெண்ணின் தகப்பனார் இலக்கிய ஆர்வலர். கவிதைத் தொகுப்பு வெளியிட்டு பிரபலங்களை வரவழைத்து இலக்கியக் கூட்டமாய் நடத்திக் கொண்டிருந்தார். உள்ளூர்க்காரன் என்கிற முறையிலும் குடும்ப பரிச்சயம் உள்ளவன் என்பதாலும் நானும் வந்திருந்தேன்.
உண்மையில் என் அப்பாவுக்குத்தான் பழக்கம். வலது கை, வலது கால் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதால் அப்பாவால் வரமுடியவில்லை. என்னை வற்புறுத்தி அனுப்பியிருந்தார். சுந்தரேசய்யரின் ஆசிகள் என்று எழுதப்பட்ட பதினொரு ரூபாய் கவர் என் சட்டைப் பையில் இருந்தது.
ஜீவா என்னுடன்தான் படித்தான். கதை கவிதைகளில் அப்போதே நாட்டமுண்டு. அதை விடவும் என்னைக் கேலி செய்வதில். பள்ளி இறுதி வகுப்புடன் என் படிப்பு முடிந்து போக அவன் எல்லை விரிந்து போனது.
ஒரு வார இதழில் அவன் கதை - பாத யாத்திரை - நகைச்சுவையுடன் யதார்த்த அரசியலைப் படம் பிடித்துக் காட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. அதன் ஆசிரியருக்கு நான் எழுதிய வாசகர் கடிதத்தைப் பார்த்து விட்டு பதில் போட்டிருந்தான்.
'சங்கரா.. எப்படி இருக்கே.'
உள்ளூர் பிள்ளையார் கோவில் என்னை வாழ வைத்துக் கொண்டிருந்ததை அவனுக்கு எழுத எனக்கு விருப்பமில்லை. பதில் போடாமல் விட்டு விட்டேன். ஜீவா இப்போது மிகப் பிரபலம். சட்டென்று அவனைச் சுற்றி ஒரு கூட்டம். என்னைப் புறந்தள்ளி விட்டு நகர்த்திப் போனது. முன்வரிசையில் அவனை அமர வைத்தனர்.
விழா ஆரம்பித்து விட்டது.
பெண்ணின் தகப்பனார் மேடையேறினார்.
"வழக்கமான மாப்பிள்ளை அழைப்பை விட இலக்கிய அழைப்பாக வைத்துக் கொள்ள விரும்பினேன். ஒத்துழைத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி."
ஒவ்வொருவராகப் பேச அழைத்தார்.
ஜீவாவின் அருகில் அமர்வதைப் பெருமையாக நினைத்து ஒரு கூட்டம் சூழ்ந்திருந்தது. புன்னகை மாறாமல் தணிந்த குரலில் அவன் பேசுவதை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நல்ல வேளை அப்பா இங்கு வரவில்லை. அப்பாவை அவன் என்னமாய் விரட்டியிருக்கிறான்.
'அது என்ன.. செத்துப் போனவங்களுக்கு நீங்க செய்யற சடங்கு தெரியப் போவுதா.. இப்ப சொன்னீங்களே.. அந்த மந்திரம்.. அதுக்கு அர்த்தம் என்ன.. நீங்க சொன்னது இதோ இவருக்கே புரியலையே.. இவரோட அப்பா.. அதுவும் ஆவி.. எப்படி புரிஞ்சுகிட்டு வருவாரு'
கூட நின்றவர்கள் கேலியாகச் சிரிக்கவும் அப்பாவால் பதற்றத்தை அடக்க முடியவில்லை. எதிரே வெற்றிலை பாக்கு பழத்துடன் பத்து ரூபாய் நோட்டு காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
'இதுக்குத்தானே.. இந்த பொய்.. இல்லியா'
ஜீவா நிதானமாகக் கேட்டதும் அப்பா சட்டென்று எழுந்து விட்டார். எதுவும் பேசாமல் தமது கைப்பையுடன் வந்து விட்டார். அன்று மாலை அவரை அழைத்திருந்தவன் வந்து மன்னிப்பு கேட்டு தட்சணையை நீட்டினான்.
"வேணாம்பா.. "
பிடிவாதமாய் மறுத்து விட்டார்.
அப்பாவின் வெளிப்படாத சோகம் என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். ஜீவாவுடனான என் நட்பு அதன் பிறகு ஒரு வரையறைக்கு உட்பட்டே இருந்தது. முழுவதுமாய் அவனை என்னால் விலக்கவும் முடியவில்லை. அவனை கருத்து ரீதியாக என்னால் ஏற்க முடியாவிட்டாலும் அவனின் தர்க்க ரீதியான பேச்சு என் ரசனையைக் கவர்ந்திருந்தது.
கூடவே அவனது இலக்கிய முயற்சிகளும். அருமையாக எழுதுவான். நண்பர்கள் மத்தியில் அவன் எழுதியதை ஒருவர் படிக்க பிறர் கேட்டு கைதட்ட என்று அமர்க்களமாய்ப் பொழுது போகும்.
'ஏண்டா.. அப்பாவை அவா எவ்வளவு அவமானப்படுத்தினா. அப்புறமும் அவாளோட என்ன சகவாசம்?'
அம்மாவிடம் தைரியமாகப் பேச முடியும்.
'இல்லம்மா. அவன் ரொம்ப புத்திசாலி.
என்னைச் சுற்றி ஆயிரம் மூகமூடிகள்.
நான் மட்டும் முகமற்று.
எப்படி இருக்கு பார்த்தியா..'
'புரியலைடா'
'அப்பாவின் பிரியம் கூட
அம்மாவின் மேல்
வன்முறையாய்..
இது புரியறதாம்மா.'
அம்மாவுக்குப் புரிந்தது. இந்தக் கவிதையும், என் சிநேகமும்.
கூட்டம் ஒரு வழியாய் முடிந்து விட்டது.
ஜீவாவைச் சாப்பிட அனுமதிக்காமல் அவனைச் சுற்றி சிலர்.
திடீரென ஒரு உரத்த குரல்.
வந்த திசை நோக்கித் திரும்பினால் அவரும் கவிஞர்தான்.
'மடக்குதிரை' என்கிற பெயரில் ஒரு சிற்றிதழும் நடத்துகிறார்.
"சீரியலுக்கு கதை வசனம் நீதானா.. "
வேகப்பட்டவர்களை அடக்கிவிட்டு புன்னகைத்தான்.
"ஆமாம்"
"ஏண்டா இப்படி ஊரை ஏமாத்தறே.. பணம் கிடைக்கிற காரணத்தால.. டிவிக்கு முன்னால முடங்கிப் போகிற ஒரு கூட்டத்தை உருவாக்கி வச்சிருக்கியே.. எந்த லாஜிக்கும் இல்லாம.. எந்த கதாபாத்திரத்தையும் கேவலப் படுத்தி எழுதற உன் பேனாவுக்கு கூச்சமே இல்லியா.."
"ரேட்டிங்ல அவர் எழுதற சீரியல்தான் நெம்பர் ஒன். தெரியுமா"
யாரோ கத்தினார் ஜீவாவுக்கு ஆதரவாக.
"ஆமா.. ஜனங்களை ஏமாத்தறதுல நெம்பர் ஒன். அடப் போடா. உனக்காக.. உன் வீட்டு ஜனங்களுக்காகத்தான் நான் இப்ப கத்தறேன், பாத யாத்திரை எழுதின ஒரு அற்புத பேனா இன்னிக்கு சோரம் போயிட்டிருக்கு. ரெண்டு பொண்டாட்டி.. பணத்துக்காக எதையும் செய்யற கதாபாத்திரங்கள்.. மெகா சீரியலா வளர்க்க.. நம்பவே முடியாத.. வாழ்க்கையின் நம்பிக்கைகளையே தொலைத்துவிடுகிற காட்சிகள்.. ச்சே."
சட்டைப்பையிலிருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து காற்றில் வீசினார்.
"இதுக்குத்தானே.. இந்தப் பொய் வாழ்க்கை"
அதே கோபத்தோடு வெளியே போய் விட்டார்.
"குடிச்சுட்டு வந்து இலக்கியக் கூட்டத்துல கலாட்டா பண்றதே பொழப்பாப் போச்சு.. நீங்க விடுங்க"
ஜீவாவைச் சாப்பிட அழைத்துப் போனார்கள்.
சாப்பிடாமல் வெளியே வந்தாலும் மனசு என்னவோ நிறைந்திருந்தது.


January 30, 2010

ஒவ்வொரு மழை நாளிலும்

ஒவ்வொரு மழை நாளிலும்
தவறாமல் உன் நினைப்பு.
ஒவ்வொரு சொட்டாய் உதிர்க்கும்
என் வீட்டு முற்றம்
மழை விட்ட பின்னும்.
ஜன்னல்களை மூடிவைக்கிற
நகர வாழ்வில்
வீட்டுக்குள் முற்றமும்
வேடிக்கை இழக்காத மனசும்
விடுமுறை நாளுக்காய்த்தவமிருக்கும்.
உன்னைக் காதலித்து இழந்த பின்னும்
தேற்றும் முற்றம்!
எங்கோ ஒரு நகரின்
இயந்திரப் பரபரப்பில்
நீ
என்றேனும் ஜன்னலைத் திற!
என்னைப் போலவே
மழை நாளில் உனக்கும் வரும்
என் நினைப்பு!.

January 29, 2010

காதலின் வர்ணஜாலம்


காதலின் வர்ணஜாலம்
எங்களையும் தீண்டி விட்டது..
அறியாமல் இருந்த
எங்கள் முகவரிகள் இப்போது
தலைகீழ் மனப்பாடம்!
பத்திலக்க எண்களில்
புத்தி பதிந்து போனது..
அலுவலகத்திலுங்கூட
டாலி ஆகாத கணக்கில்
உன் மொபைல் நம்பரைத்தான்
எழுதத் தோன்றுகிறது இப்போது..
'ஆன்' செய்யப்படாத மானிட்டரில்
உன் முகம் பிரதிபலிக்கிறது..
என் இரண்டு ஸ்பீக்கர்களும்'அவுட்' என்று
அழைத்தும் திரும்பாத எனக்கு
அடைமொழி கொடுத்துவிட்டார்கள் நட்பில்..
கீபோர்டில் டயல் செய்வதும்..
மௌஸைக் காதில் வைத்துக் கொள்வதுமாய்
என் எண்ணச் சிதறல்களில்
மீண்டும் மீண்டும் தெரிகிறது
நம் காதலின் வர்ணஜாலம்..




January 28, 2010

ஏனென்று சொல்லத் தெரியவில்லை


ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சில முகங்களை
முதன் முறையாய் பார்க்கும்போது
ஏற்கெனவே பார்த்த உணர்வை.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
கைவிட்டதைப் போல்
உணரும் நேரங்களில்
ஒலிக்கும் தொலை பேசியில்
நட்பின் கரம் நீளுமென்று
மனம் கணித்ததை.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!

January 26, 2010

காற்று கவிதைகள்


பூட்டியிருக்கிறது கதவு
ஓயாமல் தட்டுகிற
காற்றுக்குத் தெரிய வில்லை
வீட்டார்ஊர் திரும்பும் தேதி.

சின்னப் பிள்ளையின்
பள்ளிப் பையில் ஒளிந்திருக்கிறது
படிக்கவே அவசியமில்லாதகாற்று.

வாகனங்களுக்கு அடியில்
நசுங்குகிற காற்றைப் பற்றி
என்றேனும் யோசித்ததுண்டா?
தீர்வு தெரியாமல் நான்
முகங்கவிழ்த்துத் திரும்பிப் போகிறேன்
அப்போதெல்லாம்.

கலவரப் பகுதிகள் நடுவே
காற்று மட்டும்பயமற்று.
பூமிக்குள் ஒரு போதும்
புதைவதில்லை காற்று...
உள்ளங்கைக்குள் மட்டும்
அடங்குகிறது அன்பில் !
நேசிக்கத் தெரியாத
மனிதரைக் கண்டால்
காற்றுக்குக் கூட என்னமாய்
கோபம் வருகிறது
புழுதி வாரித் தூற்றுகிறது.



நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய் !

அத்தனை மொழிகளையும்
தன்னில் சுமக்கிற காற்றுக்குத்
தாய் பாஷை
மௌனம்

வாயேன்..
ஒரு தரமாவது
ஆற்றங்கரை மணலில் நின்று
காற்றை விசாரிப்போம்.
என்னைப் போல
உன்னைப் போல
அதற்கும் வேண்டியிருக்கிறதுசிநேகம்!


January 25, 2010

யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்

எதிர்ப்படும் எந்தக் குழந்தையையும்
தொட்டு கொஞ்சி நகரும் பெண்ணுக்கு மட்டும்..
மணமாகிய பின் ஏன்
குழந்தை இல்லை?
பிறந்த வீடு வந்துதிரும்பும்போது எல்லாம்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று
ஒரு பை நிறைய விளையாட்டு சாமான்கள்..
தின்பண்டங்கள்..
'யாருக்குடி' அம்மா கேட்பாள்.
'பக்கத்து வீட்டு வாலு'
எப்போது மடி கனக்கும் என்று
மனம் கனத்துப் போகும் அம்மா.
'அசடு' என்று பெயர் வாங்கியசிநேகிதன் கூட
இரு குழந்தைகளுடன் போகிறான்.
திறக்காத சொர்க்க வாசல்
மழலைக்கு ஏங்கும் மனம்
கனவில் வருடி விட்டுப் போன
பிஞ்சு விரல்..
யார் குழந்தையோ
'அம்மா' என்று அழைக்கும்போது..
வீதியில் கவனிப்பாரற்று
ஓடி வரும் மழலையை
வாரி எடுத்து ஒப்படைக்கும்போது..
எலுமிச்சை மூடியில்விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை என்கிற
நம்பிக்கையில்சுதந்திரமாய் அழும்போது..
நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!

January 23, 2010

விலகாதே ப்ளீஸ் !


அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.

வழக்கமாய் அவன் வந்தாலே எங்கள் குழுவே புத்துணர்ச்சியாகி விடும். கடி ஜோக்ஸ்..முதல் சீரியஸ் ஜோக்ஸ் வரை எடுத்து விட்டால் நேரம் போவதே தெரியாது. நகைச்சுவை சம்பவங்களை அவன் விவரித்தால் சிரித்து சிரித்து கண்ணில் நீர் வரும்.

சமீப காலமாய் அவனைப் பார்க்கவே சகிக்கவில்லை.

'அவளுக்கு என்னைப் பிடிக்கலைடா' என்றான் முனகலாக.

யாருக்கு.. மண்டையைக் காய்ச்சியதில் அவன் காதலிப்பதாகச் சொன்ன பெண் ஞாபகத்துக்கு வந்தாள்.

'அவளை தொலைவுல பார்த்தாலே கண்ணு பளிச்சிடும்.. பேசினா உற்சாகம்.. நினைச்சா சும்மா ஜில்லுனு ஒரு பீலிங் .. இதெல்லாம் எனக்குத்தான் வருது.. ஆனா அவ நானாப் போய் பேசினாத்தான் பேசறா.. அதுவும் விளக்கெண்ணை குடிச்ச மாதிரி முகம்.. இதுவே வேற ஆள்கிட்ட பேசும்போது.. நான் முதல் முதல்ல அவகிட்ட எதைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆனேனோ.. அந்த கண் சிமிட்டல்.. பேசும்போதே ஒரு சுவாதீனம்.. இப்ப அது மிஸ்ஸிங்.. டோடலா..'

'நீயா கற்பனை பண்ணிக்கறே' என்றேன்.

'ப்ச்.. நான் பொய் சொல்லல..'

'ஒரு வேளை உன்கிட்ட அவ இயல்பா இருக்காளோ என்னவோ.. மத்தவங்க கிட்ட தன்னோட ரியல் பீலிங்ஸ் காட்டாம.. உரிமையா உன்கிட்ட மட்டும் காட்டிகிட்டு.. நம்மால எப்பவுமே சிரிச்சுகிட்டு இருக்க முடியாதுப்பா.. ஹியூமன்லி இம்பாசிபிள்'

'நாட் ஆல் 24 ஹவர்ஸ்..'

'சரி.. அவகிட்ட பேசவேண்டியதுதானே'

'டைம் கொடுத்தாத்தானே'

'நான் ஒண்ணு சொல்லவா.. நீ சொல்றது நிஜம்னு வச்சுகிட்டா.. அவளுக்கு இப்ப உன்னைப் பிடிக்கலைன்னா.. விலகிடேன்..ஏன் மனசைக் குழப்பிக்கணும்'

அவன் கண்கள் கலங்கிப் போய் விட்டன.

'நான் அவளை மனப்பூர்வமா நேசிக்கறேண்டா'

வேலையில் புலி இந்த நிமிஷம் பூனைக்குட்டி போல பம்மியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிராஜக்ட் முடிப்பதில் சமர்த்தன். நட்பு வட்டத்தில் யாருக்கு எந்த மனஸ்தாபம் வந்தாலும் முன்னே நின்று கை குலுக்க வைத்து விடுவான். பிரச்னை என்று சொல்ல ஆரம்பிக்குமுன்னே தீர்வு சொல்வதில் கில்லாடி. சூழலைக் கலகலப்பாக்குவதில் அவனுக்கு நிகர் அவனே.

ஒருமுறை எனக்கு உடம்பு முடியாமல் ஹாஸ்பிடலில் சேர்த்தபோது இரவு முழுக்க கண் விழித்து, ட்ரிப்ஸ் கண்காணித்து, நர்சை அழைத்து வந்து.. உடம்பு சற்று தேறியதும் முதல் இட்லி அவன் தான் ஊட்டி விட்டான்.

'நான் பேசிப் பார்க்கட்டுமாடா'

'வேணாம்டா'

எனக்கு ஒரு குழப்பம்.. ஒரு ஆணாய்த்தான் இந்தக் கேள்வி. (பெண்கள் தரப்பில் இதைப் போலவே எதிர் வினைகள் இருக்கக்கூடும்.)

'அது ஏன் ஒருத்தியை லவ் பண்றேன்னு ஒரு ஆண் கமிட் பண்ணதும் உடனே நோகடிக்கறாங்க..'

லவரை மட்டுமல்ல.. மனைவியா வந்தாலும்.. மறு மாசமே 'இந்த ஆளை எப்படி இத்தனை வயசு வளர்த்தாங்களோ தத்தியான்னு' கமெண்ட்!

என் பக்கத்து இருக்கை அம்மணி காலையில் ஆபிஸ் வந்ததும் (மணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை) 'பாவா'வைத் திட்ட ஆரம்பிச்சா.. சாயங்காலம் ஆபீஸ் முடியறவரை வசைமாரிதான்.

'எதுக்கும் துப்பில்லை'

தனக்குத்தான் அறிவில்லை.. சுயபுத்திதான் இல்லை.. சொல்பேச்சு கேட்கலாமில்ல.. மாடியிலேர்ந்து குதின்னா சொல்றோம்..'

இதே ரீதியில் வசனங்கள்.எல்லாப் பெண்கள் பற்றிய விமர்சனம் இல்லை இது.. இதே போல ஆண்களிலும் கொடுமைக்காரர்கள் உண்டு.

என் குழப்பம் எல்லாம்.. நான் கேள்விப்பட்ட / பார்த்த மனிதர்கள் பற்றி..

நேசிப்பை சொன்னதும் ஆணோ.. பெண்ணோ.. சற்று விட்டேத்தியாய் மாறிப் போவதேன்?

இந்தப் பதிவில் நான் என் நண்பன் சார்பாகப் 'பெண்ணைப் பற்றி' மட்டும் கேட்க நினைத்தேன். இரு தரப்பு பதில்களும் மன வெளிச்சம் கொடுத்தால் சந்தோஷம்தான்.

காதல் என்பது கடைசி வரை அல்லவா ஜீவராசிக்கு.. முதுமையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால்.. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாய்.

ஏன் ஆரம்பிக்கிறது 'விலகல்' - நேசிப்பு பகிர்ந்த மனிதரிடையே..

பதில் சொல்லுங்களேன்.. பிளீஸ்.

January 22, 2010

சந்தேகப் பிராணிகள்

'வளர்ப்புப் பிராணிகள்' பற்றி என் அபிப்பிராயம் கேட்டார்கள்.என்னவென்று சொல்ல..

டிவியில் ஓடி வரும் குட்டி நாய் பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தெருவில் செயின் கட்டி நடந்து வரும் நாய் சகித நண்பர்களைப் பார்த்தால்.. 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று ஒதுங்கிப் போகத் தோன்றுகிறது.

அது போகட்டும்.. எனக்குத் தெரிந்ததெல்லாம் "சந்தேகப் பிராணிகள்தான்" என்றேன்.

நண்பர் முறைத்தார்.என் அலுவலகத்தில் தனது மேஜையை பூட்டி விட்டு இழுத்து.. இழுத்து.. இழுத்து.. பார்க்கும் ஒரு நண்பரைப் பற்றி சொன்னேன். "அவர் இழுக்கிற வேகத்துல பூட்டியிருந்தாக் கூட டிராயரே வெளியே வந்திரும்போல.."

இதில் அவருக்கு நம்பிக்கை குறைந்து.. பூட்டியபின் அதன் சாவித் துவாரத்தை திருப்பி அமைப்பது.. ஒரு நூல் எடுத்து சுற்றி வைப்பது.. என்றெல்லாம் ஆரம்பித்தார்.

இன்னொரு நண்பர் ரொம்ப மும்முரமாய் எதையோ சந்தேகத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.பாவமாய் இருந்ததால் அருகில் போய் "என்ன காணோம்" என்றேன்.

"அதான் மறந்து போச்சு.. இருந்தாலும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தால் ஞாபகம் வந்துரும்னு.."

இன்னொரு தம்பதிகள். இரண்டு பேருமே எங்கள் அலுவலகம்தான். வெவ்வேறு பகுதிகளில் பணி. மனைவி சற்று லேட்டாக வீடு திரும்பி விட்டால் போச்சு. வீட்டு வாசல் கதவைப் பூட்டி விடுவார். என்ன கெஞ்சினாலும் திறக்க மாட்டார்.

சக (பெண்) அலுவலகருக்குக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சூட்டு விழாவிற்கு வற்புறுத்தி அழைத்துப் போனோம். வரும் வழியெல்லாம் அவர் புலம்பல். 'இன்னிக்கு என்ன ஆகுமோ'

அதே போலத்தான் நடந்தது.. கதவைப் பூட்டி கணவர் உள்ளே. பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்க்க இவர் அவமானத்தில் நெளிய.. ஒருவழியாய் இவர் மன்னிப்பு கேட்டு 'இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்' என்று வாக்குறுதி கொடுத்தபின் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கப்பட்டார். மறு நாள் நாங்கள் மன்னிப்பு கேட்டோம் அவரிடம். வற்புறுத்தி அழைத்துப் போனதற்காக.

கிளைமாக்ஸ் என்னவென்றால்.. இருவரும் ஓய்வு பெற்று விட்டார்கள் இப்போது. கணவர் நடக்க முடியாமல் படுக்கை. மனைவி சிச்ரூஷை! எதற்கும் அவர் தயவில்!

இயற்கை தன் விதியை சுலபமாய் எழுதி வைத்திருக்கிறது.

எனக்கு ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாற்றல் கிடைத்ததே ஒரு சந்தேகப் பிராணியால்தான்.

நானும் என் இம்மீடியட் பாஸும் ஏதோ ஒரு சம்பவத்தை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் பகுதி மேலாளர் உடனே என்னை மட்டும் அழைத்தார்.

"இப்ப என்னைப் பார்த்துத் தானே சிரிச்சே"

என்ன மறுத்தும் நம்பவில்லை. வேறு நபர்களும் எனக்கு ஒத்தாசைக்கு வரவில்லை. என் பாஸ் உள்பட.

திகைத்துப் போயிருந்தார்கள்.

எனக்கு அழுகையே வந்து விட்டது.

வடிவேலு காமெடி போல சரமாரியாக அவர் ஆங்கிலத்தில் திட்ட அதற்கு அர்த்தம் வேறு பாதி புரியாமல்.. 'யெஸ்.. யெஸ்.. நோ.. நோ..' என்று சமாளித்து முடிவில் சொல்லிவிட்டேன்.

"ஸார்.. இஃப் யூ டோண்ட் பிலீவ் மீ.. ஐ காண்ட் ஹெல்ப்.. யூ டு வாட் யூ விஷ்"

எனக்குக் கோபத்தில் சுமாராய் இங்க்லீஷ் வரும்!

உடனே என்னை மாற்றி விட்டார்கள், இவர் சொன்னதால்.

அதுவும் அடுத்த பகுதி மேலாளர் இதைக் கேள்விப்பட்டு.. ' நான் அவரை எடுத்துக்கறேன் ' என்று சொன்னாராம்.

அப்புறம் என்ன.. ஒரு சந்தேகப் பிராணியிடமிருந்து தப்பிய எனக்கு சகாக்கள் வந்து வாழ்த்தி விட்டு போனார்கள்.

ஆமா .. ஒரு சந்தேகம் ..

சந்தேகப் பிராணிகள் எல்லாம் எந்த காட்டைச் சேர்ந்தவை?!


January 21, 2010

கவிதை பிடிச்சிருக்கு


1. ஏதேனும் ஒரு மூலையில் நின்று
எதிர்க்கப் போகிறேன் என்றாலும்
ஓடுவது எனக்கும்
துரத்துவது அவர்களுக்கும்
பிடித்துதானிருக்கிறது இப்போது!


2. பூக்களோடு நிற்கிறது
செடி..
கிளைகளைமுறித்துப்
போகிறார்கள்
வழிப் போக்கர்கள் !


3. மின் கம்பத்தில்தொங்கும்
ஒவ்வொரு பட்டமும்
சொல்கிறது
ஏதோ ஒரு சிறுவனின்
விண்ணைத் தொடும்
முயற்சியை !


4. என்ன பெயரிட்டு அழைப்பது
என்று யோசித்து முடிப்பதற்குள்
பறந்து போய்விட்டது
அந்தக் குருவி.

January 20, 2010

பேசு..

'உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ' என்றது போர்டு. பெரிய கை ரேகைப் படம். பக்கத்தில் அவன். ஒரு லென்சுடன். எதிரில் கையை நீட்டிக் கொண்டு ஒருவர்.

".. குரு மேடு நன்கு உச்சம் பெற்று அமைந்து இருக்கிறது.. . வியாபாரத் துறையில் நல்ல முன்னேற்றம்.. அதிக லாபம்.." என்று சொல்லிக் கொண்டே போனான்.

லக்ஷ்மி கைக்குழந்தையுடன் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள்

விழித்துக் கொண்டு சிணுங்கிய குழந்தைக்கு 'ஊம்..ஊம்..' என்று அவள் வாய் ராகம் பாடியது.

உடல் கசகசத்தது. மனப் புழுக்கம் அதற்கு மேல். ஜோசியன் இதற்குப் பதில் சொல்வானா?

தாலி கட்டியவன் ஒரு மாதமாய் அவளுடன் பேசவில்லை. சின்ன விஷயம். சொல்லி விட்டு போன வேலையை செய்து வைக்கவில்லை. மாலையில் வந்தவன் கேட்டான். பேசாமல் மனசாட்சி உதைக்க தலை குனிந்து நின்றாள்.

அவனுக்கு முணுக்கென்றால் கோபம் வரும். வார்த்தைகள் இரையும்...ஒருமுறை.. மறுமுறை பட்டினி கிடப்பான். அன்று பேசாமல் போய் விட்டான்.

பிறகுதான் அன்று அவன் விதித்த தண்டனை புரிந்தது. ஒரு மாதமாகிறது அவளுடன் பேசி.

'கோபமா .. எதிரே கூப்பிடு .. நன்றாகத் திட்டு. ரெண்டு அடி வை. பேசாமல் என்னைப் பலவீனப் படுத்தாதே.' என்று கண்களால் கெஞ்சினாள்.

அவன் குறிப்பறிந்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள் அந்த ஒரு மாத காலத்திலேயே உருக் குலைந்து போனாள்.

கடவுளே இந்தக் கஷ்டம் .. இந்த தண்டனை எப்போது தீரும்.. மறுபடியும் எப்போது மனம் மாறிப் பேசுவான்.. கசகசத்துப் போன ரூபாய் நோட்டுகளைப் பிரித்து நீவி விட்டாள்.

பத்தே நிமிடத்தில் எதிர்காலம் தெரிந்து கொணடவன் விலகிப் போக லக்ஷ்மி அவனெதிரே போய் நின்றாள்.

நிமிர்ந்தவன் அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டு போனான்.

கையை நீட்டினாள்.

"பலன் சொல்லுங்க.. புருசன் அன்பா நடந்துக்குவாரா.. வாழ்க்கை நல்லபடியா இருக்குமா.. உங்க மனைவியா வரல.. பலன் கேட்கிறவளா வந்திருக்கேன்.. பேசுங்க.. ஏதாவது பேசுங்க.. என்று குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

மீண்டும் விழித்துக் கொண்ட கைக் குழந்தை இருவரையும் பார்த்து சிரித்தது.

January 18, 2010

பெயர்க் காரணங்கள்



பெயரியல் நிபுணர்

என் பெயரை

மாற்றச் சொன்னார்

மறுத்தேன் ..

'புஜ்ஜி' என்றாய் ..

மகிழ்கிறேன் !

*******************

ஆயிரம் முறை யோசித்து

அத்தனை பேரும்

கலந்து பேசி

வைத்த பெயர் சொல்லி

அழைப்பதில்லை வீட்டில்..

யாரும் கேட்டால் ..

'தம்பி வெளியே போயிருக்குப்பா' !

January 16, 2010

ஒரு மழை நாளில்


ஒரு மழை நாளில்
உனக்கான என் நினைவுகளைப் பத்திரப்படுத்தி
வீட்டுத் திண்ணையில் இருந்தேன்..
எங்கிருந்தோ ஒரு வாசனை
வந்து என் நாசியை நிறைத்தது..
'டேய்.. மழை வரப் போவுதுடா' என்று
வாசலுக்கு சிறுவர்களும்..
துணிகளை எடுக்க ஓடும் பெண்மணிகளும்..
'நனைஞ்சா சளி பிடிக்கும்' என்று
அதட்டும் பெற்றோரும்..
காலையில் எழுதிய கோலம்
அழிந்து போகுமுன்
அழகு பார்த்த பெணகளும்..
பிரித்த குடை நான்கு திசைகளிலும்
நீட்டிக் கொண்டு நிற்கும் எரிச்சலில்
'குடை ரிப்பேர் வரும்போது பார்க்கிறதில்லையா' அதட்டலும்..
'கோவில் புஷ்கரணியில் ஜலம் வந்திருமில்ல' என்று
எதிர் வீட்டு பாட்டியும்..
தெரியாமல் விரல் நீட்டி
மழை நீர் பிடித்து
முகத்தில் அடித்து விளையாடும்
புது மணப் பெண்ணும்..
'வாடகை வாங்க வரப்ப ஒழுகுதுன்னு சொல்லணும்'
என்று கவலையுறும் குடும்பத்தலைவியும்..
'எங்கே மழையில மாட்டிக்கப் போறாரோ' என்று
ஏங்கும் மனைவியும்..
சற்றே என்னை உன்னிலிருந்து பிரித்து
கொட்டும் மழையை சில நிமிடங்கள் ரசிக்க வைத்தன..
ஆனாலும் பெண்ணே..
இந்த மழையில் என்னுடன் நீ
ஒரே குடையின் கீழ் வந்தால்..
எப்படியிருக்கும்.. என்ற ஏக்கம்தான்
இன்னும் அதிகமாய்
உன் நினைவுகளை உயிர்த்தெழுப்பி
மழை நீராய் ஓட வைக்கிறது இப்போதும் !

January 15, 2010

கோபம் வராமல் இருக்க என்ன வழி ?

கோபம் வராமல் இருக்க..

நான் எதுவும் வழி சொல்லப் போவதில்லை.. ஏன்னா.. எனக்கே பயங்கரமா கோபம் வரும். அதனால என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே.. உங்களுக்கு ஏதாச்சும் வழி தெரிஞ்சா சொல்லுங்க..

அதுக்கு முன்னால.. சமீபத்துல பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன்.. 'ரொம்ப கோவம் வருமா'

எனக்கு ஆச்சர்யம்.

"எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க?"

"பல்லை இந்த அளவு கடிச்சு தேய்ச்சு வச்சிருக்கீங்க"

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாப் பல்லுக்கும் கேப் போட்டு விடறேன்னார்.

"அப்புறம் பிரச்னை இருக்காதே"

"இனிமே கோபம் வந்தா பல்லை மட்டும் கடிக்காம இருங்க"

என்னால் அது மட்டும் முடியாதுன்னு பத்தாயிரத்தை பத்திரமா எடுத்துகிட்டு வந்தாச்சு.

ஒரு எம்டிகிட்ட போனேன்.

"ஏன் கோபம் வருது"

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"

"புரியல.. என்ன சொல்றீங்க"

"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா.."

கத்திட்டேன். டாக்டர் அவர் பக்கத்தில் இருந்த நர்ஸ் ஓடப் போவதை குறிப்பால் உணர்ந்து ஜாடை காட்டி ஊசி எடுக்கச் சொன்னார்.

"டேபிள் மேல ஏறி குப்புற படுங்க"

"இப்ப எனக்கு எதுக்கு டாக்டர் ஊசி எல்லாம்"

"உங்களை அமைதிப்படுத்தத்தான்"

"டாக்டர்.. எனக்கு எந்த வியாதியும் இல்ல..உங்களுக்கு இப்ப பேஷண்ட்டும் இல்ல.. நாம கொஞ்சம் பேசலாமா.. அப்புறம் முடிவு பண்ணுங்க.. ஊசி போடலாமா வேண்டாமான்னு"

"சொல்லுங்க"

"நாட்டுல கஷ்டப்படறவன் கஷ்டப் பட்டுகிட்டுதான் இருக்காங்க.. கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கறவங்க பத்தி யாரும் கவலைப்படல.. எந்த நாட்டுல யார் அடிச்சுகிட்டு செத்தாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிட்டு அப்புறம் வேற வேலைய பார்க்கப் போயிருது.. அரசியல் 'வியாதிக்கு' உங்ககிட்ட மருந்தே இல்லியா"

டாக்டர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

"உங்க கோபம் நியாயமானதுதான்" என்றார் அப்புறம்.

நீங்களே சொல்லுங்க.. கண் எதிரே நடக்கிற எந்த அநியாயத்தையும் தடுக்க முடியல.. மேகசினை / பேப்பரைப் பிரிச்சு படிச்சாலே ஒரு தப்பை எப்படி விலாவரியா செய்ய முடியும்னு வகுப்பு எடுக்கற மாதிரி நியூஸ்.. அப்புறம் கடைசில சாமி கண்ண குத்தும்னு முடிச்சிடறது.. சினிமால எல்லாமே டூ மச்.. இந்த அநியாயங்களை எதிர்க்கற ஹீரோ நிஜத்துல பொலிடிஷியன் கிட்ட சரண்டர்!..

நற,,நற..

ப்ளீஸ்.. என் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க.. என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே..

January 14, 2010

அம்மா

உலர்ந்த துணிகளை
மடிக்கும் போதெல்லாம்
நினைவில் வந்து
உறுத்துகிறது
இல்லாத ஆடைகள்..
அம்மாவின் மறைவு!
எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மாவிடம் விடை இருந்தது..
அம்மா இல்லாமல் போனதும்..
இருப்பதெல்லாம்
ஒரே கேள்விதான்..
எங்களை விட்டு
எங்கே போனாய்..?
இப்போதெல்லாம் சுலபமாய்
மற்ற பெண்களை
'அம்மா' என்றழைக்க முடிகிறது..
இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு!

( 50 வது பதிவு.. உற்சாகப்படுத்தும் அன்பு நண்பர்களுக்கு நன்றி கலந்த கண்ணீர்த் துளிகள் சமர்ப்பணம் ! )

January 13, 2010

காதல் வெல்லட்டும்


தன் கண்ணீரைக் காணக்கூடாது என்று
மழையில் அழுவதாய்
ஒரு சிரிப்புக் கலைஞன் சொன்னான் ..
என் அழுகையை நீ பார்க்கக் கூடாது என்று
இப்போதெல்லாம் வானம் பார்க்கிறேன்..
பன்னிரண்டு மாதங்களும்
மழை பொழிந்தால்தான்
அது சாத்தியம் என்று
புத்தி சொல்கிறது..
காதலில் அழாதவர் யார் என்றும்
அதுவே கேட்கிறது..
கடற்கரை மணலில்
சிரித்துக் கொண்டிருக்கும் ஜோடிகளைப்
பார்க்கும் போதெல்லாம் ஏன்
என் மனம்துவள்கிறது..
உன் சிரிப்பைப் பார்த்துத்தான்
உன் மீதான
என் காதல் உதயமானது..
இன்றோ முகந்திருப்பிப் போகும் உன்னால்
என் சிரிப்பே தொலைந்து போனது..
பரிவுக்கும் பிரிவுக்கும்
ஒரு எழுத்துதான் பெண்ணேவித்தியாசம்..
கனவுகளைக் கொடுத்தாய் அப்போது
காதலின் ஜாடை காட்டி..
நினைவுகளைக் கலைக்கிறாய் இன்று
நேரில் வராமல்..
நேசிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த என்
மனசுக்கு சோகத்தைக் கற்றுக் கொடுத்தது போதும்..
நம் காதலும் காலத்தை வெல்லட்டும்..
அன்பை அங்கீகரிக்க வா...

January 12, 2010

மறதிக்கு மருந்து இருக்கா?

'உங்களை எங்கேயோபார்த்த மாதிரி இருக்கு'

எப்படியும் மாசத்துல ரெண்டு பேர் இந்த டயலாகை சொல்லிடறாங்க என்கிட்டே..

எனக்கோ அவங்களை பார்த்த ஞாபகமே இல்லை.

'இருக்காதே' என்றால் விடமாட்டார்கள்.என் பூர்வீகம்.. நான் படித்த ஸ்கூல்.. கல்லூரி.. வசித்த தெரு.. எல்லாம் விசாரிப்பார்கள்.

கடைசியா 'இல்ல.. உங்கள நான் எங்கேயோ பார்த்திருக்கேன்..' என்று சொல்லி விட்டு போவார்கள்.

'எப்படி சமாளிக்கிறான் பாரு..' என்று நான் பெருமூச்சு விட்டாலும் ஒரு தடவை என் மனைவியிடம் மாட்டிக் கொண்டேன்.

'அது எப்படிங்க.. அவ்வளவு உறுதியா சொல்றாங்க.. ஆனா நீங்க இல்லேங்கிறீங்க'

"நீயே பார்த்தீல்ல.. அவரால எதுவும் பேச முடியல"

"நீங்கதான் அவரைக் குழப்பிட்டீங்களே"

"அய்யோ.. அவரே தேவல போல இருக்கே.."

"எனக்கு என்ன டவுட்டுன்னா.. "

"வேணாம்.. சொல்லாத"

சந்தேகப் பார்வையுடன் அவள்.

ஏதோ ஒரு சினிமாவில் இப்படித்தான் பஸ்ஸில் போகிறவரிடம் "எலே.. நல்லா இருக்கியா" என்று வரிசையாய் கேட்டுவிட்டு பஸ் போனதும் சொல்வார். 'பாரேன்.. பஸ்ஸுல உட்கார்ந்ததும் தூங்கறத.. இப்ப நான் யாருன்னு மண்டை காஞ்சிகிட்டு போவான்ல"

எனக்கு இப்பவும் அவ்வளவாய் ஞாபகசக்தி இல்லை.. அதுவும் குறிப்பாய் என் உறவுக்காரர்கள் பற்றி.

'என்னை யாருன்னு சொல்லு'

"வந்து.."

'பார்த்தியா.. அதுக்குள்ளே மறந்துட்டே.. போன மாசம் நெய்வேலில ஒரு கல்யாணத்துல பார்த்தோமே'

"நான் போன மாசம் எங்கேயும் போகலியே"

'என்னைதான் ஞாபகம் இல்ல.. கல்யாணம் அட்டெண்ட் பண்ணதும் மறந்துருச்சா..'

என் மனைவி பக்கம் திரும்பி 'நல்ல டாக்டரா பார்த்து காட்டும்மா'

'நீங்க வேற.. அவருக்கு என்னையே ஞாபகத்துல இருக்கிறதில்ல''

ஆபீஸ் முடிஞ்சு கரெக்டா வீட்டுக்கு வந்திடறார்தானே'

ஒருத்தன் மாட்டினா அவனை வச்சு காமெடி பண்ணி சிரிக்க ஒரு கூட்டமே இப்ப கிளம்பி இருக்கு.

சோதனை என்னவென்றால் என்னை விசாரிக்கிற அத்தனை பேரும் துல்லியமாய் என் பனியன் சைஸ் முதல் சொல்லிவிடுகிறார்கள்.

எனக்கு அவர்களின் பிள்ளைகள் பெயர் ஞாபகம் வருவதில்லை.

என் நண்பனின் மனைவி பெயர் ராஜி .. பெண் அகிலா.. ஆனால் எனக்கு அதில் எப்போதும் குழப்பம்.. பெண் அகிலா.. வொய்ப் ராஜி.. என்று மாற்றி அழைத்து.. ஒரு முறை பெண்ணை ' ஹாய்.. ராஜி செல்லம்.. நல்லா இருக்கியாம்மா' என்று கேட்கப் போக, ஏன் அத்தனை பேரும் என்னை முறைக்கிறார்கள் என்று முதலில் புரியவில்லை.

சரி.. இந்தத் தொல்லைக்கு பார்க்காத மாதிரி போகலாம் என்றால்.. 'என்ன ஆச்சு.. அவருக்கு.. மூஞ்சிய திருப்பிகிட்டு உர்ருன்னு போறாரு' என்று கமெண்ட்!

வல்லாரை.. மெமரி பில்ஸ் எதுவும் வொர்க் அவுட் ஆகல. சிரசாசனம் பண்ணுன்னு சொல்ல.. தலைகீழா நின்னு கழுத்து சுளுக்கினதுதான் மிச்சம். மனசுக்குள்ள திருப்பி திருப்பி சொல்லி பாருன்னு சொல்ல.. அதை ட்ரை பண்ணப் போக.. 'இவன் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கான்னு' விமர்சனம் வந்தாச்சு.

உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க.. ஞாபகசக்தியை வளர்த்துக்க என்ன வழி?

"எனக்கு கடன் கொடு .. தன்னால இன்க்ரிஸ் ஆகும்னு ' கடிக்கக் ' கூடாது !

(இந்தப் பதிவை எழுதி வைத்து ரொம்ப நாளாச்சு.. பிளாகில் போட இப்பதான் நினைப்பு வந்தது..)

January 10, 2010

சங்கீத சாம்ராஜ்யம்


சங்கீத சாம்ராஜ்யம்..
தப்பா புரிஞ்சுக்காதீங்க..
எனக்கு சங்கீதத்துல ஸ ரி க ம ப த னி கூடத் தெரியாது..
ஆனா எனக்கு வாய்ச்ச நண்பர்கள்.. உறவு எல்லாம் தொடையைத் தட்டி விதம் விதமா தாளம் போட்டு முகத்தை எப்படி எல்லாமோ வச்சுக்கும்போது.. ஆஹா.. ஒரு அபூர்வ விஷயத்தை நாம மிஸ் பண்ணிட்டோமேன்னு 'காலங் கடந்து' ஞானோதயம் வந்தது.
சங்கீதம் தெரிஞ்சவங்க கிட்ட ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. எந்த சத்தம் கேட்டாலும்.. அது என்ன ராகம்னு தொளைச்சு எடுத்துருவாங்க.. பூபாளம்னா காலைல.. முகாரின்னா அழுகை.. அல்லது எமொஷன்.. கல்யாணின்னா சந்தோஷம்.. அம்ருதவர்ஷினின்னா மழை.. இப்படி கொஞ்சூண்டு ராக அடையாளம் வச்சுகிட்டு குப்பை கொட்ட முடியல என்னால.
என் நணபர் ஒருத்தர் எங்கிட்டே வந்து அஞ்சு நிமிஷம் பேசிட்டு “இது என்ன ராகம்”னதும் ஆடிப் போயிட்டேன். அவர்கிட்டே தப்பிச்சு ராகம் தெரிஞ்ச இன்னொரு நண்பரைப் பார்த்து ஆறுதல் அடையப் போனா.. அவரும் இதே கஷ்டம்தான் பட்டாராம்.
'பாடினா ராகம் சொல்லலாம்.. பேசினா எப்படிங்க சொல்றது?' என்று புலம்பினார்.
அவ்வளவுதான். இனி பொறுப்பதில்லை.. சங்கீதம் கத்துகிட்டே ஆகணும்னு ஒரு வெறி வந்திச்சு.ஆலோசனை கேட்டப்ப..வீட்டுலயும், நண்பர் வட்டத்துலயும் சொன்னாங்க..
'உனக்கு வாய்ஸ் இருக்கு (!) அது கொஞ்சம் பெருசாவே இருக்கு.. மைக் தேவைப்படாம கூட்டத்தை விரட்டற அளவுக்கு.. பெஸ்ட் இன்ஸ் ட்ருமென்டல் (மென்டல அழுத்தி )மியுசிக் தான் உனக்கு நல்லது.. அதுவும் ப்ளூட் மாதிரி கத்துக்க.. யாராச்சும் அடிக்க வந்தா தூக்கிகிட்டு ஓட ப்ளூட் தான் வசதி '
''அப்படிங்கிறே''
'ஆமா'
'எங்கள் தெருவுலயே ஒருத்தர்.. நாப்பத்தஞ்சு வயசு.. கல்யாணம் பண்ணிக்காம.. எப்பவும் விரக்தியா ப்ளூட் வாசிச்சிகிட்டு இருப்பார். அவர்கிட்ட போனேன்.
'ப்ளூட் இருக்கா.. எத்தனை கட்டை'
என்னைப் போல ஒரு அதிர்ஷ்டக்கட்டையிடம் அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்.
ஆல் இந்தியா ரேடியோல அவருக்குத் தெரிஞ்ச ப்ளூட் வித்வான் கிட்ட வாங்கித் தந்தார். அவர் அளவுக்கு என்னால தம் கட்ட முடியல. என்னால முடியாம திணர்றப்ப.. 'ஊ ஊன்னு' ஏதோ ஒரு ராகத்தை வாசிச்சு 'இந்த மாதிரி எப்ப வாசிக்கறதுன்னு' பீதி கிளப்பினார்.
ஒரு மாசங்கூட போயிருக்க மாட்டேன். திடீர்னு ஆளைக் காணோம். விசாரிச்சா.. மனுஷன் இமயமலைக்குக் கிளம்பி போயிட்டாராம். ரொம்ப நாளா அவருக்கு இந்த லைப் போரடிச்சுதாம். அவருக்கு அம்மா மட்டும். அப்பா தவறிட்டார். அவங்களுக்காக இத்தனை நாள் இருந்தவர் திடீர்னு ஏன் கிளம்பிட்டார்னு அவங்க வீட்டுல யாருக்கு புரியல. (இதப் படிக்கற உங்களுக்கு புரிஞ்சாலும் சொல்லிடாதீங்க)
அவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான். ஒரு நல்ல சிஷ்யனை இழந்துட்டார்னு தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனா.. இந்த முறை வீணைக்குப் போனேன்.
குரு கேட்டார். 'வீணை இருக்கா.. எதிர் வீணையும் இருந்தா நல்லது'
'எதிர் வீட்டுல கேட்கட்டுமா மாஸ்டர்'
தலையில் அடித்துக் கொண்டார். வாரம் ரெண்டு கிளாஸ்தான். அதுவரை ஒழுங்கா வந்து கிட்டிருந்தவர் நான் சேர்ந்தப்புறம் பாதி நாள் காணாமப் போயிட்டார். அப்புறம் வாசல்ல 'இன்னிக்கு கிளாஸ் கிடையாதுன்னு' போர்ட் வைக்க ஆரம்பிச்சாங்க.
சரி .. வீணைக்கும் நமக்கும் ராசி இல்லைன்னு விட்டுட்டேன்.
என்னோட சங்கீத அவஸ்தைகளைத் தப்பா புரிஞ்சுகிட்டு இதே போல ஆர்வத்துல இருந்த இன்னொரு நண்பரும் எங்கிட்டே வந்தார். அவர் மிருதங்கம் கத்துக்க போயி அந்த வித்வான் மாரடைப்புல காலமான செய்தியை வருத்தத்தோட சொல்லிட்டு.. 'நமக்கு ப்ளூட் தாங்க பெஸ்ட்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு மாமி நல்லா சொல்லித் தராங்கன்னு ' என்னையும் அழைச்சார்.
'உன் கிட்ட ப்ளூட் இருக்கா. எங்கிட்ட இருக்குன்னு' பெருமை அடிச்சுகிட்டேன்.
மாசம் நூறு ரூபா. பீஸ் கொடுக்கற அன்னிக்கு மாமி ஹார்லிக்ஸ் தருவாங்க. ஏன்னா.. மூணு மாசமா எங்களோட போராடி.. 'காத்துதான் வருது' லெவல்ல இருந்ததால.
அவங்க சொன்னதுதான் பஞ்ச் டயலாக். 'எங்க வாசிப்பு எப்படின்னு' வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம கேட்டுட்டேன்.
'செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரின்னு என் குரு சொல்வார்.. நல்லா வாசிக்கலன்னா.. நீங்க இப்பதானே கத்துக்க ஆரம்பிச்சுருக்கீங்க.. போகப் போக வந்திரும்'
மாமிக்கு எங்க டியூஷன் ஆரம்பிச்ச ஆறாம் மாசம் ஸ்லிப் ஆகி கால் பிராக்சர்.
'உடம்பு நல்லாகட்டும்னு.. அப்புறம் கண்டின்யூ பண்ணலாம்னு' சிரிச்சுகிட்டே சொன்னாங்க.
'வேதனையிலும் எப்படி சிரிக்கறாங்கன்னு' நாங்க வீட்டுக்கு திரும்பும்போது பெருமையா பேசிகிட்டு போனோம்.
மறு நாள் ரெண்டு பேருமே சந்திச்சு ஒரே முடிவை சொல்லிகிட்டோம். 'சங்கீதம் புழைச்சுப் போகட்டும்.. விட்டுரலாம்'
இன்னமும் என் வீட்டில் அந்த இரண்டு புல்லாங்குழல்களும் என் அலமாரியில் பழங்கதைகள் பேசிக் கொண்டு இருக்கின்றன.. யாராவது வராமலா போய் விடுவார்கள்.. என் சங்கீத தாகத்தைத் தணிக்கும் குரு!

January 09, 2010

மனப் பறவை

என்னைப் பார்த்திராதவர்களுக்கு
என் பெயர்
ஒரு அடையாளம் மட்டுமே..
என்னை அறிந்தவர்களுக்கு
அப்படித்தான்
என் மனசு!
எதற்கும் கலங்க வேண்டாம் என்று
சொல்லி வைத்திருக்கிறேன்
ஆனாலும் அவ்வப்போது
தவித்துக் கொண்டுதானிருக்கிறேன்..
பழகியவர்கள்
முகந்திருப்பிப் போகும் போதெல்லாம்..
ஒவ்வொரு கனவிற்குப் பின்னும்
நிஜம் தேடும் புத்தியை போல்
பார்க்கும் மனிதரிடம்
சிநேகம் தேடும்
என் மனப் பறவை ..
அதன் இரு சிறகுகளாய்
எல்லையற்ற நேசமும்..
பழகுபவரிடம் சமத்துவமும்..
பூமிக்கு வந்ததின் பலன்
நேசிக்க கற்றுக் கொள்வதும்
இறுதி வரை
நேசிப்பதுமே ..

January 07, 2010

மண்ணில் சொர்க்கம்..

தெருவுல போகும்போது தனக்குத் தானே பேசிகிட்டு போகற ஆட்களை நீங்க பார்த்து இருக்கீங்களா..

ஆண் .. பெண் இரு பாலருமே..

என்ன கஷ்டமோ என்று மனசு முதலில் சங்கடப்பட்டது.

மனசு விட்டு பேச சரியான நண்பர் வட்டம் இல்லாத குறை.. உணர்வுகளைப் பகிர ஆட்கள் இல்லாத தனிமை..

ரொம்ப பேர் பாருங்க.. நாம என்ன சொல்ல வரோம்னே கேட்காம தீர்வு சொல்ல ஆரம்பிச்சுருவாங்க.. அப்பவும் இதே சிரமம் தான்..

தவறிப் போய் யாராச்சும் நாம சொல்றத முழுசா கேட்டாங்கன்னா.. ஏதோ ஒரு உள் குத்து இருக்குன்னு அர்த்தம்..

அரைமணி நம்ம பேச்சை கேட்டப்புறம் "கை மாத்தா ரூபா தரியா.. புழைச்சுக் கிடந்தா இந்த ஜன்மத்துல வசூல் பண்ணிக்க.." என்று கை நீட்டி விடுவார்கள். தர இயலாமையைச் சொன்னால்.. நாம பேசாததை எல்லாம் பேசினதா போட்டு விட்டுருவாங்க.

இந்த பிரச்னைகளைத் தவிர்க்க இப்படி தனியா பேசிகிட்டு போகற மெதட் கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு கூட தோணிச்சு.

'அரை மணி தியானம் பண்ணு தெனம்.. மனசு அமைதியாயிரும்..'

உட்கார்ந்து பார்த்தா.. அப்பதான் ஊர் விவகாரம் முழுக்க மனசுல சீரியல் ரேஞ்சுல ஓடுது.

'அட.. ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப் போக செட்டிலாயிரும்' இப்படி சொல்லி உசுப்பேத்தி விட்டாங்க.

'உட்கார்ந்து தூங்க நல்ல வழி கண்டு பிடிச்சுட்டான்னு' கெட்ட பேர் வந்திச்சு. (தூங்கினதும் உண்மைதான்!)

இன்னொருத்தர் என்னை கூப்பிட்டு நானும் அவருமா பிராக்டிஸ் பண்ணலாம்னு எதிரும் புதிருமா உட்கார்ந்தோம்.அரை மணி ஓடிச்சு. (அவங்க வீட்டு டிபன் நல்லா இருக்கும்)

என்னவோ தெரியல.. முடிச்சுக்கிற நேரத்துல நீல கலர்ல ஒரு பெரிய உருண்டை சைஸ்ல.. பலூன் மாதிரி கண்ணுக்கு முன்னாடி வந்து வெடிச்ச மாதிரி ஒரு பீலிங் ..

கண்ணத் தொறந்தா அவரும் அதே தான் சொன்னாரு.. என்ன ஒத்துமை.. தியானம் பண்ணறச்ச இப்படி நீலக் கலர் வந்தா அதுல முன்னேற்றம்னு ஒரு நண்பர் சொன்னாரு..

கூடவே இதுவும் சொன்னாரு.. இப்படி ஆராய்ச்சி பண்ணாம எதுவும் எதிர்பார்க்காம தியானம் பண்ணுங்க.. எது கிடைக்குதோ இல்லியோ மனசு அமைதி ஆகும்.. அனாவசியமா யாரையும் காயப் படுத்த மாட்டீங்க.. மத்தவங்க உங்களைக் குறை சொன்னாலும் பெருசா பாதிப்பு இருக்காது மனசுலன்னாரு. அந்த வார்த்தைகள் புடிச்சிருந்தது..

இப்பல்லாம் தினசரி தியானம் பண்ணமுடியல..

ஆனா.. மனசுல அந்த வார்த்தைகள் ஒரு மாயாஜாலம் பண்ணிருச்சு. மத்தவங்களை எப்பவும் நேசிக்கணும்னு ஒரு உறுதி வந்திச்சு.

அதனாலதான் இந்தப் பதிவின் முன்வரியில தனக்குத்தானே பேசிகிட்டு போன ரெண்டு மூணு பேரை புன்னகையோட நிறுத்தி பார் சாக்லேட் கொடுத்து 'எனக்கு இன்னிக்கு பர்த் டே.. பிளீஸ் வாழ்த்துங்கன்னேன்' நம்பமாட்டீங்க..

அவங்க என் மேல கோபப்படல. அவங்க சிரிப்பு .. கொஞ்சம் வெட்கம் கலந்து.. இப்பவும் கண்ணுல நிக்குது..

இதுவரை பழகாத நபர்களை சினேகம் பண்ணிக்கற மனசிருந்தா போதும்.. சொர்க்கம் வேற எங்கேயும் இல்லை..

January 06, 2010

சிநேகிதியே

"இருபத்து நாலு மணி நேரமும் டிவி பார்க்கிறேன்.. ஆடியோ .. வீடியோ .. இல்லாம .."
என் சிநேகிதியைப் பார்க்க அவள் வீட்டுக்கு போனபோது சிரிக்காமல் சொன்னதுதான் மேலே கொடுத்த கமெண்ட்!வேலைக்கு போய்க் கொண்டிருந்தவள் வேலையை விட்டாள்.
விருப்ப ஓய்வு.. மகள்.. மகனுக்கு திருமணம் செய்தாள் ..
எதையுமே இயல்பாக எடுத்துக் கொள்ளும் அவளுக்கு கவிதை.. கதைகளில் ஆர்வம்.
'நீ எழுதலாம்பா ' என்றால் சிரிப்பாள் .
"லெட்டர் எழுதவே சோம்பேறித்தனம் .. கதை எல்லாம் உனக்குத்தான்.."
ஆனால் பேச்சில் சரளமாய் வார்த்தைகள் வந்து விழும்..
என்னைவிட வயதில் மூத்தவள் என்கிற உணர்வே எனக்கு வராது.. அத்தனை சௌஜன்யம் ..
இயற்கை அதன் போக்கில் விளையாட்டு விதிகளை எழுதி வைத்திருக்கிறது ..
என் சினேகிதிக்கும் ..
அவள் மாமியார் !
பத்து வருடங்களாய் படுத்த படுக்கை..
அதற்காகத்தான் இவள் தன் பேங்க் வேலையை விட்டதும்.
பக்கத்திலேயே இருந்து ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல பார்த்துக் கொண்டாலும்.. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவள் மாமியார் மனநலமும் பாதிக்கப்பட்டதில் ..
'டிவி போடாதே ..'
'பக்கத்திலேயே ஒக்காரு ..'
சமைக்க.. அல்லது தன் வேலைகளுக்கு எழுந்து போனால் ..
'அதுக்குள்ளே எங்கே போயிட்ட'
'ஏண்டி.. நான் படுத்துட்டா வாய்க்கு ருசியா எதுவும் தரக் கூடாதா..'
'என்னம்மா வேணும் '
'கை முறுக்கு '
அடுப்படி போனால் 'எங்கேடி போயிட்ட .. வா.. எம்பக்கத்துல உக்காரு..'
சிநேகிதியின் கணவன் வெளியூர் மாற்றல்.. மாதம் ஒரு முறை வந்தவர்.. இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வருகிறார்.. ' தன் அம்மாவையே அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை..
'கோவிலுக்கு போவியா ' என்று நான் கேட்டேன் ஒரு முறை.
புன்னகையுடன் சுவர் படத்தைக் காட்டி கை கூப்பினாள்.
இது எல்லாம் 'அவள் தலைவிதி ' என்று உறவினர் சிலர் தீர்ப்பு வழங்கி விட்டார்கள் ..
'உனக்கு கஷ்டமா இல்லியா.. '
கேட்டிருக்கக் கூடாதுதான் .. கேட்டு விட்டேன்.. பொறுக்க மாட்டாமல் ..
'நீ என் பிள்ளையா இருந்தா எனக்கு செய்வாய் தானே ..'
என் கண்களில் நீர். தலையாட்டினேன் பேசாமல்..
'அதைத் தானே இப்ப நான் செய்யறேன்.. '
இப்போது அவள் புன்னகை சற்று கூடுதலாகவே ஜொலித்தது.

January 03, 2010

மீட்டெடுப்போம்

உங்கள் விமர்சனங்களை
நிச்சயம்
வரவேற்கிறேன் ..
எதிரில் நின்று
என்னோடு பேசி
கை குலுக்கி பின்
விடை பெற்றுப் போகும்
ஆரோக்கியமான
எதிர் வினைகளை..
என் முகத்தில்
உங்கள் குத்து
என் சம்மதத்துடன்
நிகழட்டும்..
ஆனால்
என் முதுகின் பின்
கேலி செய்யும்
உங்கள் சுபாவம்
உண்மையாய்
உங்களுக்கே பிடித்திருக்கிறதா ?
எல்லா விமர்சனங்களையும் மீறி
நம்முள் நிலவும்
நமக்கான நம் நேசம்
காயப்பட்டு போவதில்
யாருக்கென்ன லாபம் ?
எதையும் கடந்து
ஜீவிக்கப் போவது
நான் உங்கள் மீதும்
நீங்கள் என் மீதும்
வைத்திருக்கும்...
நமது முதல் சந்திப்பில்
கண்டுபிடித்த
அந்த பிரியம் மட்டுமே அல்லவா?!
ஒரு குத்தில் தொலைந்து போன
அந்த பிரியத்தை
மீட்டெடுப்போம் வாருங்கள்..!





January 02, 2010

உன் வருகைக்காக

எப்போதும் போல
உன் வருகைக்காக காத்திருக்கிறது
என் மன பிரபஞ்சம்..
நீ வந்து விட்டுப் போன பிறகே
நான் வர நேர்கிறது
ஒவ்வொரு முறையும்..
ஆனாலும்
உன் அன்பின் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதில்
என்றும் பின் வாங்கியதில்லை
என் மன நிலா!
எட்டிப் பிடிக்கும் என் உயரங்கள்
எல்லாமே உனக்காக ..
உன்னைச் சுமந்துதான்..
காதலின் பிடியில் வீழ்ந்த பிறகே
சிகரமாய் எழுந்தேன்..
என் தடம் பதித்த வெற்றி சுவடுகளுடன்..
ஆனாலும் இப்போதும் இனிக்கிறது முதன்மையாய்
என் சாதனைகளுக்கான
எத்தனையோ பரிசுகளில்
நீ கொடுத்த
அந்த
முதல் முத்தம் . . .