March 05, 2016

அம்மு 20

“கொசு கடிக்கும்” என்றேன் உடனே.
அம்முவின் முகம் சிணுங்கியது. ‘மொட்டை மாடிக்குப் போகலாமா ‘ என்று ஆசையாய் கேட்டது அவள்தான்.
அமைதியான நதியில் ஓடம் விட்டு சிவாஜி அமைதியானதும் அம்முவிடம் சொன்னேன்.
“வா. போலாம்”
தூரத்தில் கோபுரங்கள். அதன் உச்சி விளக்கொளி. கூடு திரும்பும் பறவைகள். 
அம்மு கால் நீட்டி அமர்ந்தாள். அவள் மேல் படக் கூடாது என்று என் கால்களை வேறு பக்கம் நீட்ட முயன்றேன். தடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டாள். 
“எப்போ எழுத ஆரம்பிச்சிங்க “
“ஸ்கூல் சேர்த்த உடனே “
அம்முவின் பொய்க் கோபம் மிக அழகு. 
“ஆறாவதா.. ஏழாவதா .. ஞாபகம் இல்ல”
“ம்‌ம்”
“அம்மு .. நீ சின்ன வயசுல எப்படி இருந்த.. சொல்லேன் “
“அது எதுக்கு இப்போ “
“சொல்லேன் “
“எல்லாரையும் போலத்தான் “
“அம்மாளுன்னு உங்க வீட்டுல வேலை செய்யறவங்க இருந்தாங்க தானே “
“ஆமா”
அம்முவின் கண்களில் பழைய நினைவுகள். 
“வெள்ளிக் கிழமை தப்பாது .. எண்ணை தேய்ச்சு விடுவா .. “
“ஹ்ம்.. கொடுத்து வச்சவ அம்மாளு “ என்றேன் கண் சிமிட்டி.
“எப்பவும் அதே நினைப்புத்தானா .. அது சின்ன வயசுல. நாங்க பெரியவங்க ஆனதும் நாங்களே குளிச்சோம் .. புரிஞ்சுதா “
“ஓ”
“காயத்ரி ஏழு மணிக்கே படுத்துருவா சாப்பிடாம .. எழுப்பி கூட்டிண்டு வந்தா வாயில கடைசி உருண்டையோட தூங்கிருவா “
அம்முவின் தங்கை காயத்ரிக்கு இப்போது கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளாச்சு.
“ உன்னை யாரும் சைட் அடிச்சதில்லையா “
“என்ன “
“இல்லப்பா .. இவ்ளோ அழகா இருக்க.. அதான் கேட்டேன் “
“அது எனக்கு எப்படித் தெரியும் “
“நாங்க பார்க்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும் “
“பிளாக் அண்ட் வொயிட் காம்பினேஷன்ல பாவாடை தாவணில போனப்ப ஒருத்தன் விசிலடிச்சான் .. நான் திரும்பிப் பார்க்கல “
“ஓ”
“அப்பாக்கு நாங்க செல்லம் .. எங்களை எதுவும் சொல்லிரக் கூடாது .. நாள் கிழமைன்னா புது டிரெஸ் நிச்சயம் “
“அப்புறம் “
“ஒரு தடவை கூட திட்டினதுல்ல “
“நானும் தான் “
“பேசாதீங்க .. நேத்து கூட வார்த்தை விட்டீங்க “
“அதெல்லாம் ஒரு கோபமா “
“அப்பா மாதிரி ஒரு கணவன் இருக்கணும் ஒரு பொண்ணுக்கு “
“சரிதான் .. அம்மா மாதிரின்னு நாங்க கூடத்தான் எதிர்பார்க்கிறோம் “
“அப்பா நீட்டா டிரெஸ் பண்ணிப்பார் .. “
“அது அப்படியே உனக்கும் வந்திருக்கு “
“அம்மா சமையல் ..”
“அதுவும் “
“சும்மா ஐஸ் வைக்க வேணாம் “
ஜ்வல்யாவின் குரல் கேட்டது . 
“வா.. இங்கே தான் இருக்கோம் “
காலை எடுத்து விட்டேன் . ஜ்வல்யா என் மடியில் வந்து படுத்துக் கொண்டாள் .
அம்மு தன் பிள்ளை உலகத்திலிருந்து இன்னும் தரை இறங்கவில்லை . ஜ்வல்யா அம்மா என்று அழைத்ததை அனிச்சையாய் ஸ்வீகரித்தாள்.
“ காயத்ரி சொல்லுவா.. நாம இப்படியே இருந்திரலாம்னு “
“ அதெப்படி முடியும் .. மேஜிக் இல்லியே .. குழந்தைன்னா பெரியவங்களா ஆயிருவாங்க “
“ப்ச.. கல்யாணம் பண்ணிக்காம “
“ஓ “
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் .. நாங்க கேட்டு அப்பா செய்யாதது இது ஒண்ணுதான் “
“ விதி யாரை விட்டுது”
“உங்களுக்கு நான் கிடைக்கணும்னு இருக்கு “
“நானும்தானேப்பா “
“ஆமாடா செல்லம் “
“அதென்னவோ வாஸ்தவம் .. ஜ்வல்யா குட்டிக்காக உன்னை எல்லா ஜென்மத்திலயும் கல்யாணம் பண்ணிக்கலாம் “
விருட்டென்று எழுந்திருக்க முனைந்தாள் அம்மு.
“ப்ளீஸ் .. கோவிச்சுக்காத “
“ மொட்டை மாடில கொஞ்ச நேரம் ஜாலியா பேசலாம்னு வரச் சொன்னா ..”
“அம்மு .. உனக்கு உங்க வீடுதான் ரொம்ப பிடிச்சிருக்கா “
“ அது ஒரு சுதந்திரம் “
“இங்கே அது இல்லியா “
“இங்கே வேற மாதிரி .. அது நிஜமாவே சுதந்திரம் “
“அப்போ .. நானு.. ஜ்வல்யா .. இதெல்லாம் “
அம்மு பாதி எழுந்து என்னருகில் நகர்ந்து வந்தாள் . என்னையும் ஜ்வல்யாவையும் இறுக்கிக் கொண்டாள் .
“ரொம்ப பிடிச்சிருக்கு “


அந்த நிமிட பொய்யை ஸ்வீகரிக்க நானும் ஜ்வல்யாவாய் மாற முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று தோன்றியது அம்முவின் பொய் பேசாத கண்களைத் தற்செயலாய்ப் பார்த்தபோது .