December 31, 2009

வண்ணத்து பூச்சியாய் மாறலாம்


ஒரு முறைதான்
என் மீது
அமர்ந்து விட்டு போனாய் ...
என் நிறம்
மாறிப் போனது ..
இப்போதெல்லாம்
கவலைகள்
சூழும்போது
எனக்கு
வண்ண வண்ண
இறக்கைகள்
முளைத்து விடுகின்றன
எத்தனை தூரம்
வேண்டுமானாலும்
சிறகடித்து
பறக்க முடிகிறது..
விண்ணில் என் பயணத்தில்
வண்ணங்கள்
வாரி இறைத்து
திரும்புகிறேன் ..
தரைக்கு வந்ததும்
பதிவு செய்கிறேன்
புது புதுக்
கவிதைகளை..
உன்னால் தான்
அது சாத்தியமானது..
அந்த ஒரு முறை
நீ
என் மீது வந்து
அமர்ந்து விட்டுப் போனதிலிருந்து..!

December 27, 2009

கொஞ்சம் கவிதையாய் மனசு

நிறையப் பேச வேண்டும் போல்
இருக்கும்
அருகில் நீ
இல்லாத போது
எதிரில் நீ வந்தால்
நீ பேசி
நான் கேட்கத் தோன்றும்
ஒவ்வொரு சந்திப்பிலும்.


குழந்தைக்குத்
தெரிவதில்லை
வேற்று முகம்..
பெரியவர்களுக்குத்தான்
இந்த அவஸ்தை எல்லாம்.
புது முகம் பார்த்ததும்
மனத் தராசு
ஏதேனும் ஒரு பக்கம்
சரிந்து விடுகிறது தானாக.

சொட்டிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்..
மனப் பாத்திரம்
நிரம்பி வழியப் போகிறது
என்று பதறினால்..
காலியாகவே இருக்கிறது
அதன் மேல் பகுதி..
வீழ்கின்ற துளிகள் எல்லாம்
என் ஜீவனாகி
விடுவதைப் பின்பே உணர்ந்தேன்..

உன் கால்களைக்
கட்டிக் கொண்டிருக்கும்
என் மனக் குழந்தை..
உதறிச் செல்லும்
நீ உணர்வதில்லை..
விரல்கள் விலகினாலும்
விலகாத
ஈரம் படிந்த
உன் பாதங்கள்.

தலை துவட்டி விடத்
தோன்றுகிறது
ஒவ்வொரு மழைக்குப் பிறகும்
ஈரம் சொட்டச் சொட்ட
நிற்கும் மரங்களைக் கண்டால் !

உன் வீட்டைத் தாண்டி
வெளியே
எட்டிப்பார்த்த
கிளைகளை
வெட்டியபோது
நீ அறியமாட்டாய் ..
நீ கழித்து விட்டதில்
என் மனசும்
ஒட்டி இருந்ததை !

வானம் மின்னலாய் வந்து
பூமியை
முத்தமிட்டு
செல்கின்றது
பொறாமையில்
கருகிப் போகின்றன
மரங்கள் !

December 24, 2009

மீண்டும் ஒரு குழந்தையாய்..

குழந்தைகள் பற்றி பேச்சு வந்தது.

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அனுபவம் சொன்னார். பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் 'நீ என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டிருக்கிறார்.

"ரெயில் ஓட்டுவேன்'

"ஏம்மா.."

"எல்லா ஊருக்கும் போலாம்ல"

"அப்படியா"

"எஞ்சின் ரெண்டு பக்கமும் கல்லு போட்டுகிட்டே போகும்.. ஜாலியா இருக்கும் "

"எஞ்சின் கல் போடுமா?"

"அய்ய.. நீங்க பார்க்கலியா.. தண்டவாளத்துல ரெண்டு பக்கமும் கல்லு கொட்டிக் கிடக்குமே.. அது எஞ்சின் போட்டதுதான்"

"ஆமா.. எதுக்கு கல்லு போடுது.."

"அப்பதான் திரும்பி வரப்ப வழி தெரியும்"

தாத்தா பாட்டியிடம் கதைகள் கேட்டு வளர்கிற குழந்தை!

அதன் கற்பனையில் ரெயில் எஞ்சின் கல் போடும்.

இன்னொரு நண்பனின் மகன் காவிரிப் பாலத்தைக் காரில் கடக்கையில் சொன்னது. நீர் ஓடாத காலம். பாலத்தின் கீழே எட்டிப் பார்த்து கேட்டானாம். 'ஏம்பா.. இங்கே இவ்வளவு மண்ணு கொட்டி வச்சிருக்காங்க'

குழந்தைகளின் உலகத்தில் நாம் பிரவேசிக்கும்போது அங்கே நம்முடன் தேவதைகள் ரொம்ப சுலபமாய் கை கோர்த்து விடுகின்றன. பிசாசுகளைத் துணிச்சலாய் விரட்ட முடியும். நிலவில் கால் பதித்து அதே வேகத்தில் உடனேயே பூமிக்கும் திரும்பிவிடலாம்.அவர்களின் உலகில் விரோதங்களுக்கு இடம் இல்லை. மனஸ்தாபங்களும் அரை நிமிடம் தான்.

விசும்பி அழுத குழந்தை சுட்டிக் காட்டிய எதிரியுடன் அரை மணிக்குப் பின் கை கோர்த்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்!

என் பால்ய கால நண்பர்கள் பலரை மறுபடி என்னால் சந்திக்க முடியவில்லை. எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

கண்ணில் படுகிற ஒரு சிலரில் ஒருவர் இளநீர் வியாபாரம். பள்ளி நண்பன். படிப்பு வரவில்லை. . கடை என்று கூட சொல்ல முடியாது. தெரு முக்கில் 10, 12 இளநீர்களைக் குவித்து தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதவன் போல ஒதுங்கி நிற்பான். என்னைப் பார்த்தால் உதட்டோரமாய் ஒரு சிரிப்பு. இப்போது அந்த இளநீர்க் கடையும் காணோம். என்ன ஆனானோ?

இன்னொருத்தன் சாம்பார் வாளியுடன் கல்யாண மண்டபத்தில் வந்தான். 'டேய்.. நீ சிவாதானே'

சிவராமகிருஷ்ணன்!

அடுத்த நிமிஷம் வாளியை வைத்து விட்டு ஓடிப் போய் விட்டான். வேறு ஒருவர் வந்து சாம்பார் ஊற்றினார். தேடியதில் அவன் கண்ணில் படவில்லை. அடுத்த முறை அந்த பக்கம் கிராஸ் செய்தபோது மண்டப வாசலில் அழுக்கு வேட்டியுடன் உட்கார்ந்திருந்தான்.

நல்ல நல்ல பதவிகளில்.. வசதியுடன் இருக்கிற நண்பர்களும் உண்டு. கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குப் போனதில்லை.

மூன்று பேர் இன்று என்னோடு வேலை பார்க்கிறார்கள். என்னோடு கல்லூரியில் படித்தவர்கள்.

என் பள்ளிப் பருவ நண்பர்களைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்.

என்னை ஒரு கல்யாண மண்டபத்தில் பார்த்த பெண்மணி 'நீ..' என்று என் பெயரை சொல்லி கேட்டதும் அவரை எனக்கு அடையாளம் புரியவில்லை.

"நீங்க?"

என்னுடன் முதல் வகுப்பு படித்தவராம். என் அப்பா தபால் துறையில் பணி. போஸ்ட்மாஸ்டராய் ஊர் ஊராய் மாற்றல் வருடத்திற்கு ஒரு முறை. ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊரில் என்று ஆறு வகுப்புகளை ஏழு ஊரில் (அந்த வருடம் இடையிலேயே மாற்றல்) படித்தவன்!

சுத்தமாய் அவர் முகம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அவர் துல்லியமாய் எங்கள் இளமைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொன்னார்.

நான் அப்பாவிடம் அடி வாங்கியதைச் சொல்லும்போது அவர் முகத்தில் லேசான வெட்கமும், சிரிப்பும்.

என் சகோதரிகள் அருகில் நின்று என்னை அவதானித்தார்கள். நான் ஒரு வேடிக்கை பொருள் போல நின்றேன் அப்போது.

எதிரே நின்ற பெண்மணிக்குக் கண்களில் குழந்தைப் பருவம் தெரிந்தது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவும், ஒரு மகனுக்குத் தந்தையும் அந்த நிமிடம் முதல் வகுப்பிற்கு போனோம்.

அன்றிரவு தூங்குமுன் யோசித்தேன்..

பெரியவன் ஆனதில் எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறேன் என்று !

December 22, 2009

காதல் ஒரு வழிப் பாதை



"இங்கே பாரேன்"

"பேச மாட்டியா"

"தப்புத்தான். ஆனா வேணும்னு செய்யலை"

"எம்பக்க நியாயம் கேட்க மாட்டியா"

"கடவுளே.. இப்ப நான் என்னதான் செய்யணும்"

"சரி. நீ பேச மாட்டே.. அவ்வளவுதானே. இன்னிக்கு விதிச்சது இதுதான்னு நினைச்சுக்கிறேன்"

"ஸாரி அங்கிள்.."

"பரவாயில்லம்மா.. நீ வேணும்னு பந்தை எம்மேல போடலியே.. ஹை.. காட்ச் பிடி"

"அங்கிள்.. ஏன் ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசாம ஒக்கார்ந்திருக்கீங்க"

"போச்சுரா. நீ கூட கவனிச்சுட்டியா.. விளையாட்டு ஜோர்லயும்"

"சில சமயம் எங்க அப்பா, அம்மாவும் இப்படித்தான் மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு ஒக்காந்திருப்பாங்க"

"அப்புறம் எப்படி சமாதானம் ஆவாங்க.."

"தெரியலியே அங்கிள்.. நாதான் தூங்கிப் போயிடுவேனே."

"அதோ உங்கம்மா உன்னைக் கூப்பிடறாங்க"

"ஸார்.. கடலை வேணுமா"

"ஏற்கெனவே வறுத்து வச்சிருக்கு"

"இது வெவிச்ச கடலை ஸார்"

"அடப் போய்யா"

"ஏதோ சண்டை போல இருக்கு.. நம்ம மேல காட்டறாரு.. கடல.. கடலேய்"

"உனக்கு நிஜம்மா இவ்வளவு அழுத்தம் கூடாது.."

"எத்தனை தடவை ட்ரை பண்ணேன் தெரியுமா.. நெட் வொர்க் பிஸி.."

"மெசேஜ் கொடுத்தேனே.. பார்த்தியா"

"என்னப்பா இது.. பேசவே மாட்டியா"

"ஏய்.. உம்மேல எறும்பு.. சுள்ளெறும்பு.. பொய் சொல்லலே.. நெஜம்"

"அடிப்பாவி.. எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது"

"ஸார்.. பசிக்குது.. ஏதாச்சும் தர்மம்"

"ப்ச்"

"ஸா..ர்.."

"வேற ஆளைப் பாரு"

"நான் கூட பிச்சைக்காரன் மாதிரி இருக்கேன் இப்ப..காதல் பிச்சை!"

"சிரிக்க மாட்டியா.. "

"உன்னைப் பார்த்தபின்பு என் எல்லாக் கவிதைகளும் பொய்யென்று தெரிந்ததுன்னு அப்ப எழுதினேன்.. உன் கோபம் எதையும் விட உயரம்.. எதையும் விட ஆழம்னு இப்ப எழுதத் தோணுது"

"அங்கிள்.. பை.."

"கிளம்பிட்டியா"

"ம்.. அவங்க பேசிட்டாங்களா"

"எங்கே.. உச்சில இல்ல இருக்கு.."

"ஆல் தி பெஸ்ட் அங்கிள்"

"பாரு.. வருங்காலப் பெண்ணரசி எப்படி வாழ்த்திட்டு போறா.. அட்லீஸ்ட் அவ நிச்சயமா ரூட்ல விடமாட்டா.."

"நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு. நாய் மாதிரி கெஞ்சறேன்.. நீ அலட்டிக்கவே இல்லை"

"ஏய்.. அப்புறம் நேரமாச்சுன்னு கிளம்பிப் போயிருவே.. பிளீஸ்ரா"

"எல்லாம் அவுட்.. என்னவெல்லாம் நினைச்சேன்.. எல்லாம் போச்சு"

"சுண்டல் வேணுமா அண்ணே."

"கூட வேணா வரட்டுமா"

"என்ன சொல்றீங்க"

"உனக்கு உதவியா டப்பாவைத் தூக்கிகிட்டு வரட்டுமா"

"என்ன அண்ணே கிண்டலா"

"இல்லப்பா.. சாமி சத்தியமா.. "

"அடப் போங்கண்ணே.. சும்மா வெளையாடிகிட்டு.. சுண்டல்.. சுண்டல்"

"அட.. இவங்கூட என்னை சேர்த்துக்க மாட்டேங்கிறான்"

"உனக்கு மட்டும்தான் அழுத்தமா.. நான் எழுந்திருச்சு போகவா"

"முடியலைடா.. என்ன யோசிச்சாலும் நிஜம்மா உன்மேல கோபம் வரலே.. ஆனா உன்னை சமாதானம் பண்ண இதுக்கு மேல என்ன செய்யிறதுன்னும் புரியலே.."

"ஓக்கே.. நான் பண்ணது தப்பு.. என்ன தண்டனை வேணா கொடு. ஆனா பேசாம மட்டும் இருக்காதே."

"ஸாரி.. ஸாரி.. "

"ஐ லவ் யூடா"

( இந்தக் கடைசி வரி மட்டும் அவள்! )

December 19, 2009

நீடூர் வாழி

(படத்தில் இருக்கும் மூதாட்டிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை)

கல்லூரி நாட்களில் அம்மாவுக்குத் தெரியாமல்.. அப்பாவுக்குத் தெரியாமல்.. தாத்தாவுக்குத் தெரியாமல்.. சித்தப்பா, அத்தை, ,மாமா இன்ன பிற உறவுகளுக்குத் தெரியாமல்.. என்று கைவசம் சில்லறை கணிசமாய்ப் புரண்ட பொற்காலம்.

அப்புறம் வேலைக்கு சேர்ந்தப்ப, பிசாத்து பணம் ஸ்டைபண்டா கொடுத்தாங்க. அதாவது இப்ப வாங்கற துட்டை கம்பேர் பண்ணா.. ஆனா அப்ப செலவழிச்சது போக மிச்சம் நிக்கும்.

கையில நாலு காசு இருந்தா நம்மளுக்கு உடனே 'கர்ணன்' வேஷந்தான் ரொம்பப் பிடிக்கும்!

அப்படி ஒருநாள் அறிமுகம் தான் அந்தப் பாட்டி.

தெருவுல எதிர்ல பார்த்து 'நீடூர் வாழி' என்று எனக்குப் புரியாத ஒரு வார்த்தைய போட்டு நின்னாங்க.

பியூட்டி என்னன்னா அவங்க எங்கிட்ட எதுவுமே வாயத் திறந்து கேட்கல. அழுக்குப் புடவை. அதிலயும் கிழிசல். கக்கத்துல ஒரு துணிப் பை மூட்டையாட்டம்.

சட்டைப் பையில கை விட்டு அஞ்சு ரூபா வந்தத எடுத்து கொடுத்துட்டு போயிட்டேன். அப்ப என்னை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. (இப்ப வரை அதே நிலைமைதான்.. பாட்டிங்கதான் என் பேவரைட்)

இந்த டீல் நல்லா இருக்கேன்னு மறுநாளும் எங்கிருந்தோ கரெக்டா என் எதிர்ல வந்தாங்க.

'நீடூர் வாழி'

இப்ப உஷாரா ரெண்டு ரூபா போட்டேன். அடடா.. அப்பவும் அதே திருப்திதாங்க.. அவங்க முகத்துல.

இப்படி ரெண்டு வருசம்.. ஞாயித்துக் கிழமை, அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர மத்த நாள்ல.. நான் கொடை வள்ளல்.

இப்படி ஒரு அந்நிய செலாவணி வரும்னு தெரியாம வீட்டுல கொஞ்சமா ஏமாத்திகிட்டிருந்த நான், ஓவர்டைம் பண்ண வேண்டிய கட்டாயம்.

ஏண்டா.. அப்படி என்னதான் உனக்கு செலவுன்னு கணக்கு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம மூஞ்சி மாதிரி கூட இருந்தே குழி பறிக்கற மேட்டர வச்சுகிட்டு சரளமா பொய் சொல்ல முடியல.

பக்கத்து வீட்டு மாமி வந்து டைமிங்கோட பஞ்ச் டயலாக் விட்டாங்க.

"அந்தப் பாட்டிகிட்ட உனக்கு என்னடா சகவாசம்"

உடனடியா கமிஷன் வச்சு விசாரணை நடத்தி என் குற்றப் பின்னணியைக் கண்டு பிடிச்சுட்டாங்க.

"தர்மம் பண்றது நல்லதுதான்.. அதை ஏன் மறைச்ச.. போடா அசட்டுப் புள்ள" சரித்திரத்தில் இடம் பெறும் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பக்கத்து வீட்டு மாமி 'எனக்கேன் பொல்லாப்பு' என்று இடத்தைக் காலி செய்தார்.

கிளைமாக்ஸ் இதுதான்..

அந்த மூதாட்டி என்னை ஒருநாள் வழிமறித்தார்.

பைக்குள் கைவிட்டபோது "அது இருக்கட்டும் தம்பி.. நாளைக்கு எங்கூட வருவியா " என்றார்.

பாட்டியை எப்படி கூட்டிகிட்டு ஓடறது என்று குழம்பிப் போய் ஆட்டோ செலவுல்லாம் யோசிச்சப்ப.. அவர் சொன்னது.

போஸ்ட் ஆபீஸ்ல எஃப்.டி போட்டு வச்சது- ரூ 20000- மெச்சூர் ஆவுதாம். அதை எடுத்து பேங்க்ல போடணுமாம். கூட வர முடியுமா..

போனேன். என்னைத்தான் எண்ணி வாங்கச் சொன்னார்.

"நீயே வச்சுக்கப்பா பத்திரமா.. பேங்க் வரைக்கும்"

பேங்க்கில் அதை பாட்டி பேரில் எஃப்.டி போட்டோம்.

"நாமினி பேரு"

பாட்டி சொன்னார். "அழகேசன்"

வெளியே வந்தபோது எனக்குள் குறுகுறுப்பு. 'யார் அந்த அழகேசன்?'

"வீட்ட வுட்டு தொறத்திட்டாங்கப்பா.. தெருவுல நிக்கறேன்.. நான் போனா கொள்ளி போடுவான்ல.. அதான் அவம்பேர்ல போட்டேன்"

எனக்கு ஏன் பார்வை மறைத்தது..

சற்றே கூன் விழுந்த அந்த மூதாட்டி சிரமப்பட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்

"நீடூர் வாழி"

என் வாழ்க்கையில் இருந்தே போய் விட்டார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. அவன் கொள்ளி போட்டிருப்பானா.. பத்து வருடங்களாய் என் மனதைக் குடைந்து கொண்டிருக்கிற கேள்வியை.. இதோ.. உங்கள் முன் இறக்கி வைத்து விட்டேன்.

ம்

ஒரு எழுத்தை
கவிதையாக்க
உன்னால்தான்
முடிகிறது..
"ம்"
நீ ஒவ்வொரு முறை
"ம்" கொட்டும்போதும்
எனக்குள் அடிக்கிறது
என் சின்ன இதயம்
சந்தோஷத்தால் ..
உன் ஒரு பார்வை
என்னைக்
புரட்டி போட்டது ..
உன் ஒரு "ம்"
என்னை
இறுக்கிக் கட்டியது..
நீ இனி எப்போது
"ம்" சொல்வாய் என்று
உன் உதடுகளைப்
பார்த்தேன்
நீ சொன்ன "ம்" கேட்காமல்
எனக்குள் நானே
தொலைந்து போனேன் ..

December 16, 2009

தெருவுக்கு வாங்க

என் மீது எந்தத் தவறும் இல்லை..
ஜனித்தபோது..
'அம்மா' என்கிற உறவை மட்டுமே உணர்ந்து
உலகை எட்டிப் பார்த்தேன்..
நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று ..
சொல்லித் தரப்பட்டதை விட
எப்படி எல்லாம் இருந்து விடக் கூடாது என்று
இடை விடாமல் என் காதுகளுக்குள் கத்தினார்கள்..
பெற்றோர்.. உறவு.. மதம்..அரசியல்வாதிகள்..
எவரும் விடவில்லை என்னை..
தப்பித்துப் போக நூல்களைப் ப(பி)டித்தேன்..
கிடைத்த எழுத்துக்களை எல்லாம்
ஆர்வமாய் உள்வாங்க முயன்றேன்..
எத்தனை முரண்கள்..
அங்கும் திணித்தல்கள்..
எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு
தெருவுக்கு வந்தேன்..
என்னைப் போலவே சங்கடப்படும் வேறு சிலரும்..
நாங்கள் இப்போது அடையாளமற்றவர்கள்..
உலகின் பார்வையில்..
எங்களுக்கான அன்பின் பார்வையில்
ஒரே இனம் மனிதனாய்..
இப்போதுதான் நன்றாகச் சிரிக்கிறோம் வாய் விட்டு ..
ரசனையாய்.. தெளிவாய்..
விரல்களை நீட்டுங்கள்
சுட்டுவதற்கு அல்ல..
அன்பால் கட்டுவதற்கு..
போன தலைமுறையை..
நேற்றைய மனிதர்களை
நையாண்டி செய்வதில்
நேரம் கழித்து விட்டு
நேசம் தொலைத்து விட்டு
நாளைய மனிதர்களுக்கு 'அவலாகி' விடாதீர்கள்..
தெரு இன்னும் காத்திருக்கிறது..
அன்பின் வருகைக்காக.

December 15, 2009

புறநகர் கடவுளர்கள்










ஆயிரம் வருடப் பழமையில் ஊர்க் கோவில்
வவ்வால் நாற்றம்
புறாக்களின் 'க்கும்'
புஷ்கரணியில் பொரி விழும் நேரம்
துள்ளும் மீன்கள்
பாசி வழுக்கும் எச்சரிக்கையில்
மனிதர் புழங்காக் குளம்
ரேஷன் அரிசியில் பிரசாதம்
முகஞ் சுளித்த பக்தர்
நிராகரித்து வைத்ததை
கோவில் பூனை கூட
முகர்ந்து முகம் சுளிக்கும்.
எத்தனை மனிதர்களின்
குணம் பார்த்த கடவுள்..
இன்று சீந்துவாரற்று.
புறநகர்ப் பகுதியில் புதிதாய்
முளைத்த கோவிலில்

கொட்டும் மின்சாரமுரசு..
வாசலில் கரும்பலகையில்
இந்த மாதம் முழுக்க உபயதாரர்கள்.
நிரம்பும் உண்டியல்..
'டூ வீலர்' அர்ச்சகர் கையில் செல்பேசி..
வெள்ளிக் கவசம் அலுத்து
தங்கக் கவசம் வருகைக்கு காத்திருக்கும்
புறநகர்க் கடவுள் அறிவாரா ..
மனிதன் தேவதைகளிடமும் பேதம் பார்ப்பவனென்று!

December 13, 2009

உனக்கு மட்டுமே சாத்தியம்

நீ இல்லாத நேரங்களில்
.உன் நினைவுகளைவிட்டுச் செல்கிறாய்..
அவை உன்னைப் போலவேமோசமடி..
என்னை ஏய்ப்பதில்.
கனவுகளில் நீ வராததால்
என் தூக்கத்திற்குவிடுமுறை
அளித்திருக்கிறேன்..
அதெப்படி சாத்தியமாகிறது
பூக்களே இல்லாமல்அதன்
வாசனை மட்டும்
என்னை சுற்றிஎப்போதும் சுழல்கிறது..
உன்னைத்தான் 'பூ' என்றேன்..
இத்தனை மெல்லிய விரல்களாஉனக்கு..
செல்லமாய் என்னை அடிக்கும்போதுதான்
அதை உணர்ந்தேன்..
அதுவே கோபத்தில் ஒற்றை விரலால்
நீ என்னைச் சுட்டுகையில்
விழாத அடி என்னமாய் வலிக்கிறது..
உன் பெயர் உச்சரிக்கும்போது
என் இதயம் எத்தனை விசாலமாகிறது..
காணாத நேரங்களில்
எனக்கான உலகம் சுருங்கிப் போகிறது..
நேரில் வாயடைத்து
நினைவுகளில் ஏங்க வைத்து
காத்திருக்கும் என்னை
கைப் பிடிக்க வா.. பெண்ணே!

December 11, 2009

காற்றோடு பேசலாம்

இன்றைய தினம் எல்லா வேலைகளையும்
ஒத்திப் போடுங்கள்.
ஆற்றங்கரைக்குப் போகலாம்.
நீர் ஓடிய மண்தான்.
மனிதக் கழிவற்ற
நடு ஆற்று மண்ணில் அமரலாம் .
வேறு கவனம் இல்லையே
அப்படியே கண் மூடி
காற்றை உணருங்கள்.
காது மடல்களினூடே
அது உரசிப் போகிறதா..
இந்த இடத்தில்
காற்றைத் தடை செய்ய ஏதுமில்லை.
அதன் சுதந்திர பூமி..வெட்ட வெளி..
காற்றின் வாசனையை நுகருங்கள்..
நகருக்குள் பிற வாசனைகளால்
கலப்படமான காற்றுதான் கிட்டும்.
கூச்சமே வேண்டாம்.
மனம் விட்டுப் பேசலாம்.
கூவும். கிள்ளும்.
முகத்தில் அடிக்கும் .
சீண்டும். தழுவும். முத்தமிடும்.
அணைத்துக் கொள்ளும்போது
இதுவரை அறியாத சுகம்..
என்ன.. நேரம் பார்த்து ஆச்சர்யமா ..
போனதே தெரியவில்லையா..
நேரம் கிட்டும்போதெல்லாம்வரலாம். பேசலாம்.
மனசுக்குள்.. அல்லது வாய் விட்டு..
எல்லாப் பிரச்னைகளுக்கும்காற்றிடம் தீர்வு உண்டு..
நிச்சயம் திரும்பிப் போவீர்கள்..
தீர்வுகளுடன்.. அல்லது
சமாதானத்துடன் ..!

December 09, 2009

குழந்தைகளைக் கவனிக்காதீர்கள்!







குழந்தைகளைக் கவனிக்காதீர்கள்!
பயணத்தில்..பக்கத்து வீட்டில்..
ஏதேனும் ஒரு குழந்தைகவனம் ஈர்க்கிறது.
சின்னச் சிரிப்பால்..மழலையால்..
எதிர்பாராத ஸ்பரிசத்தால்..
தொலைத்துவிட்ட குழந்தைப் பருவம்
உள் மனசுள் உறுத்த கை நீள்கிறது
குழந்தையைப் பற்ற..
அடிமனதில் ஒரு எச்சரிக்கையும்..
'வேண்டாம்.. விட்டு விடு'
இத்தனை காலம் சேகரித்த
விஷம் பரவிய உடம்புடன்
'தொடாதே குழந்தையை'
அது அதன் போக்கில் இருக்கட்டும்.
'அழிப்பான்' போல
நாக்கும்கைகளும் இருக்கும்வரை..
எந்தக் குழந்தையையும்கவனிக்கக் கூடாது..
இப்படிக்கு -
தொலைத்துவிட்டகுழந்தைமையின் சார்பில்.

December 07, 2009

சித்தப்பா

அப்பா, அம்மா பற்றிஎல்லோரும்
கவிதைஎழுதி விட்டார்கள்.
அப்பாவின் பிரியம் கண்டிப்புடன்..
சித்தப்பாவோ எவ்விதநிபந்தனைகளுமற்ற
பிரியம் காட்டினார்..
அப்பா நிராகரித்த சினிமாக்களை
சித்தப்பாதான் அழைத்துப் போனார்.
பிடித்த பெல்பாட்டம் பேண்ட்டும்
அவர் வாங்கித் தந்ததுதான்.
சங்கரவிலாஸ் ஸ்பெஷல் ரவா
அவரால்தான் அறிமுகம்.
பைக் ஓட்டியதும் முதல் சிகரெட்டும்
அவர் கொடுத்ததுதான்.
திருடக் கற்றுக் கொண்டதும்
அவர் பர்ஸில்தான்.
காதலை அவரிடம்தான்
முதலில்சொல்ல முடிந்தது.
பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
இன்றுநானும் ஒரு தகப்பனாய் நிற்கையில்
தன் சித்தப்பனோடு நிற்கும்
என் மகனைப் பார்க்கையில்
அடி வயிற்றில் கலவரம்.
'எந்த அளவு எல்லை மீறியிருக்கிறான்?'

December 05, 2009

வாழ்வின் அர்த்தங்கள்

சந்திப்புகளைத் தவிர்க்காதீர்கள்.

பிறிதொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று.

செடியில் பூத்த மலர்மறு நாளே வீழ்கிறது..

கரைக்கு வந்த அலை அடுத்த நிமிடம் இல்லை..

மேலே உங்களைக் கடந்து போன மேகம் கூட

மறுபடி வரப் போவதில்லை..

'ஹாய்' சொன்ன எதிர் வீட்டு

குழந்தைஇன்றும் உங்கள்

புன்னகையைவரவேற்கிறது ஆர்வமாய்..

முகந்திருப்பிப் போய்விட்டால்

அதன் முகம் வாடிப் போகும்..

பசித்த முகம் எதிர்ப்பட்டால்

உணவுப் பொட்டலம் தந்து

கண்ணின் ஒளியைப் பாருங்கள்..

நாட்காட்டியைநன்றாகப் பார்த்திருக்கிறீர்களா..

நமக்காகவே வருட முழுவதும்

காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது..

எத்தனை விவரங்கள் அதன் மேல்..

எல்லாவற்றையும் நாம் கவனிப்பதில்லை என்றாலும்.

'விருட்டென்று' தேதி கிழித்துநகராதீர்கள்..

ஒரு கையால் நாட்காட்டி அட்டையைப் பற்றி

வாத்சல்யமாய் பிரியுங்கள்..

கசக்காமல் போடுங்கள்..

இவ்வளவும்,

இதற்கு மேலும் செய்தபின்

மனசார சொல்லுங்கள்..

'என்ன அழகான வாழ்க்கை' என்று..

ஏனென்றால் பிறந்ததுபுலம்பலுக்காக அல்ல !

December 04, 2009

முறை வாசல்

முறைவாசல்..
அப்படின்னா ரொம்ப நாள் வாசல்ல நின்னு முறைக்கறதுன்னு தப்பு தப்பா நினைச்சுகிட்டு இருந்தேன்.
ஒண்டு குடித்தன வீட்டுல இருந்தா, ஒவ்வொரு குடித்தனக்காரரும் டர்ன் போட்டு வாசல் தெளிச்சு கோலம் போடணும்.
பிரச்னை என்னன்னா.. முதல் நாளே சாணியைக் கொண்டு வந்து வச்சிரணும். காலங்கார்த்தால இருட்டுல சாணி தேடறது பெரிய கொடுமை. எங்க தெருவுல வாசல் தெளிக்க வேலைக்கு வச்சிருந்த அம்மா இருட்டுல 'எதையோ' கொண்டு வந்து அவங்க வாசல் தெளிக்கற பத்து வீட்டையும் 'மணக்க' வச்சுட்டு போன கதையை இப்ப நினச்சாலும் நான் ஸ்டாப் சிரிப்பு! நாங்க இதுக்கு முன்னால குடியிருந்த சித்திரை வீதில எதிர் வீட்டு ஆம்பளை, அவரே வாசல் தெளிச்சு அழகா கோலம் போடுவார்.
தெருவுல அவர் இத்தனைக்கும் பெரும்புள்ளி. கோலம் போடறதுல அப்படி ஒரு லயிப்பு. 'எட்டு புள்ளி.. பதினாறு புள்ளி.. முப்பத்திரண்டு புள்ளி' னு என்னென்னவோ கணக்கு வேற. தெருவுல ரெங்கநாதர் வலம் வரும்போது பெரிய கோலமா அவர் போடற அழகைப் பார்க்கவே லேடிஸ் நிப்பாங்க. அவருக்குக் கொஞ்சம் கூட லஜ்ஜையே கிடையாது. கோவில்ல விழா நாட்கள்ல கூட அங்கேயும் போய் கோலம் போடுவார். பளிச்சுனு ஈவ்னிங் வரை அழியாம அப்படியே இருக்கும்.
எங்க தெருவுல காலைல.. மாலைல ரெண்டு வேளையும் ரெண்டு பக்கத்து வீடுகளிலும் தண்ணி தெளிச்சு கோலம் போடுவாங்க.. அதான் எல்லா ஊர்லயும் செய்யறாங்களேங்கிறீங்களா..இப்ப குடியிருக்கற தெருவுல நான் ஆபீஸ் கிளம்பறப்ப எந்த வீட்டு வாசல்லேர்ந்து தண்ணி கொட்டுவாங்கன்னு தெரியாது.
வீட்டுக்குள்ள இருந்துகிட்டு பக்கிட் தண்ணிய வாசல்ல வீசுவாங்க. உஷாரா இந்த பக்கம் ஒதுங்கலாம்னா உடனே இவங்களுக்கு ரோஷம் வந்து 'நான் மட்டும் சளைச்சவளான்னு' அவங்க பங்குக்கு ஒரு பக்கெட் தண்ணி.. ரெண்டு பக்கமும் சதிராடி ஒரு வழியா ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் திரும்பி வரப்ப மறுபடி அதே 'வீசல்”. கையில டவல், சோப்பு எடுத்துகிட்டு கிளம்பினா குளிச்சுட்டே போயிரலாம்.
இத்தனை சுத்தமா வச்சிருக்காங்கன்னு உடனே முடிவு பண்ணிராதீங்க. தண்ணி தெளிக்கறதுக்கு முன்னால குப்பையை கூட்டி குமிப்பாங்க பாருங்க.. முட்டு முட்டா.. ரெண்டு பக்கத்து வீட்டு சமாச்சாமும் நடுத்தெருவுல.. நம்மால தைரியமா டூ வீலர் ஓட்ட முடியாது.. அதுவும் சூப்பரா ரோடு போட்ட தெருவுல பற்பல முட்டுகளைக் கடந்து போகற த்ரில் இருக்கே.. லைட் இல்லாத நேரம் இருட்டுல முட்டா தெரியறது இவங்க சேர்த்து வச்சதா.. இல்ல சோம்பலா படுத்துருக்கிற நாயான்னு தெரியாது.. நடுங்கிகிட்டே கிராஸ் பண்ணனும். 100 அடி தூரத்துக்குள்ள நாலு நாயி.. ஏழு குப்பை முட்டு.. போதும்டா சாமின்னு ஆயிரும்.
எதிர் வீட்டுல ஒரு தரம் முறை வாசல் விஷயமா சண்டை வந்து அது முடியவே எட்டு மணி ஆச்சு. அப்புறம் வாசல் தெளிச்சு கோலம் போட்டாங்க. அதுல ஒருத்தர் மறுமாசமே வீட்டைக் காலி பண்ணிட்டு போயிட்டார்.
நாங்க இருக்கற அபார்ட்மெண்ட்ல (நவீன ஒண்டு குடித்தனம்) இந்த பிரச்னையே இல்ல. எதிர் வீட்டுலகோலம் ஸ்டிக்கர் ஒட்டிட்டாங்க. தெருவுக்குக் குடி வந்த புதுசுல கொஞ்சம் ஆர்வத்தோட எதிர் வீடு, பக்கத்து வீடுகள்ல 'சுகாதாரம்.. சுத்தம்னு' டயலாக் விட்டு பார்த்ததுல மூஞ்சிக்கு நேராவே சிரிச்சு வழியனுப்பினாங்க.. 'அண்ணே.. எங்கன்னே வேலை பாக்கறீங்க.. உதவி பண்ணனும்னா கைமாத்து தரலாமே' ன்னாங்க.
வீட்டு புள்ளைய (ஏழு வயசு) வாசல்ல ஒக்கார வச்சு 'சுச்சு.. கக்கா' போக வச்சப்பதான் கொதிச்சுப் போச்சு.. 'நல்லா இல்லீங்களே' ன்னு சொல்லப் போனா.. 'ஹி..ஹி.. அது எப்படி நல்லா இருக்கும்..' னு கிண்டல்!
வச்ச பூச்செடியை ஆடு மாடு மேஞ்சுட்டு போச்சு. வருஷத்துல மூணு நாள் மட்டும் முனீஸ்வரன் கோவில் திருவிழா நேரம் தெருவே பளிச்சுனு ஆயிரும். நாங்களும் அந்த மூணு, நாலு நாள் 'அழகுக்காக' வருஷம் பூராக் காத்திருப்போம். அப்புறம் மறு நாள்லேர்ந்து 'முட்டு'.. !
நல்லாத்தான் இருக்கு.. எங்க தெருவும்..தெனம் ஒரு கதைக்கு அடித்தளமா!

December 03, 2009

மனசுக்குள் ஒரு பாடல்



மனசுக்குள் ஒரு இசை
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
கேட்டிருக்கிறீர்களா..
அதன் வரி வடிவம் தான்
சில நேரங்களில்
கவிதையாய் .. கதையாய்
படைப்புகளாய் ..
இசை நம்முள் ஒலிக்காத
தருணங்களில்
மனிதத் தன்மை
தொலைந்து போகிறது..
"கீப் மியுசிக் ஆல்வேஸ் "
அடுத்தவர் மீது நம் நேசம்
ஒரு பெருமழையாய் வர்ஷிக்க
இடைவிடாமல் இசை
ஒலிக்கட்டும் நம் இதயத்துள்..
மனதின் பாடலை விட
இனிமை வேறெதில் உண்டு..?!
பதிவாகாத பல பாடல்களை
தன்னுள் சுமந்து என் மனம்
இசைத்துக் கொண்டிருக்கும்
காலம் வரை
என் உதடுகளில் புன்னகை மின்னும்
பிறருக்காக..
பிறரின் கைகள் நீளும்
என் கரம் பற்றிக் கொள்ள..
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள
அனைவருக்கும் தேவை
அவரவருக்கான
மனதின் இசை !

November 28, 2009

ஸ்பரிசம்

விளக்குகளை அணைத்த பின்னும்
ஒரு வெளிச்சம் போல
அவள் பார்வைமின்னிக் கொண்டிருந்தது.
உதடுகள் அசைவின்றி
மௌன மொழியில் எங்கள் உரையாடல்.
அவ்வப்போது தொட்டுக் கொண்டதில்
மனசுக்குள் சின்ன அதிர்வு.
'ஓடாதே.. விழுந்துருவே..'
குழந்தையைத் துரத்திக் கொண்டு வந்தவள்
விளக்கொளிர விட்டு சொன்னாள்..
'இருட்டுல யாரு.. நடு வழில'
குழந்தை வந்துசுவாதீனமாய் மடியில் அமர்ந்தது..
'ஹை.. ஆண்ட்டி'
அம்மாக்காரி நகர்ந்து போனாள் பெருமூச்சுடன்..
'கொஞ்ச நேரமாச்சும்நான் நிம்மதியா இருக்கேன்'
பிஞ்சு விரல்களின்மெத்தென்ற ஸ்பரிசத்தில்
எங்கள் மௌனம் இனிமையாய்
மொட்டவிழ்த்துக் கொண்டது அப்போது..
ஒரே நேரத்தில் சொன்னோம்..
'ஹாய்.. செல்லம்..'
எட்டு வருஷ ஏக்கம் அந்த நிமிஷம்
எங்களை விட்டுசற்றே ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தது அப்போது.

November 26, 2009

பிரியத்தின் காற்று

கூட்டம் நெருக்கித் தள்ளியது. இடிபடாமல தேர் பார்க்க செய்த முயற்சிகள் வீணாகிப் போனது. எவ்வளவு தூரம்தான் பின்னால் நகர்வது?
"இந்த வருசம் கூட்டம் அதிகந்தான்" என்றார் சண்முகம்.
என் ஆமோதிப்பை அவர் கவனிக்குமுன் இன்னொரு தரம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.தெருமுனை திரும்பிய தேர் ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது. பாதித் தெரு வரை ஜனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள்.கடை வீதிப் பக்கம் நின்றிருந்தோம். தேர் பார்த்து விட்டு அப்படியே கூட்டத்தில் நெருக்கப்படாமல் பக்கத்துத் தெருவிற்கு நகரும் உத்தேசத்துடன்.
"சித்திரைத் தேர்க்குத்தானே சுத்துப்புற கிராமத்திலேர்ந்து பேயாக் கூட்டம் வருது" என்றேன்.
நேர்த்திக் கடன் செலுத்த கால் நடை வரிசை வேறு. நெரிசலில் அதற்கும் அவதி.
"என்ன ஒத்துமையா நிக்கிறாங்க" என்றார் சிலாகிப்புடன்.
என் பதில் வேறாக இருக்கும்போது 'ம்' கொட்டிப் பழகியவன்.சண்முகம் என்னை நெருங்கி நின்றார். அலங்கரிக்கப்பட்ட தேர் தடதடவென வருகிற அழகை கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தோம்.
"சாமி தெரியல.. படுதா இறங்கி மறைக்குது" என்றார்.
"ஆமா.. நல்லா இழுத்துக் கட்டலை போல"
தேர் நெருங்கி வரவர தள்ளுமுள்ளு அதிக்மானது. கடை ஓரம் ஒதுங்கி நின்றதால் எங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டோம்.
"ஆச்சு.. இந்தக் கூட்டத்துக்கு.. ஒம்பது மணிக்கே நிலைக்குப் போயிரும்"
"ஒரு நாக் கூத்து"
தேர் ஓடிவரும்போது இனம் புரியாத கவர்ச்சி இருக்கிறது. யாரோ நம்மைத் தேடி வருகிற மாதிரி.. அத்தனை பெருசாய் அணைத்துக் கொள்ள வருகிற மாதிரி.. மனச்சுமை களைந்து.. மயிலிறகாய் மாற்றி.. ஆலிங்கனத்தில் சுகம் தரப்போவது போல..சண்முகத்திடம் சொன்னேன்.
"என்னமோ ஒரு நிலை கொள்ளாத பரவசம்.."
"நாம சின்னப் புள்ளைங்களா மாறிடறோம்ல.."
தேர் கிட்டே வந்ததில் தேர்த்தட்டு புலனானது. குருக்கள் நின்று துண்டை வீசிக் கொண்டிருந்தார். துண்டின் அசைவில் தேரின் இயக்கம் நிர்ணயிக்கப் படுகிறமாதிரி அவரிடம் ஒரு அலட்டல் பெருமை.சண்முகம் 'ஹர.. ஹர' என்றார்.நான் மெளனமாய் மேலே பார்த்தேன். பிரார்த்தனை அற்ற மனசு என்னவென்று வேண்டிக் கொள்ள?சட்டென்று கலகலப்பு தொலைந்து மனசுக்குள் கனம் அப்பியது.
"அம்மையப்பா" என்ற அலறல் கேட்டது.கன்னத்தில் படபடவென போட்டுக் கொண்ட கிழவி கைகளை உயரே தூக்கி இன்னொரு தரம் கூவினாள்."அம்மையப்பா.."பேரன், பேத்தி பார்த்த கிழவிக்கு இன்னமும் அம்மையப்பன் ஆசை போகவில்லை.
அம்மா.. அப்பா.. மனசு கேவியது. என் கண்களை சண்முகம் படித்திருக்க வேண்டும். என் கையைப் பற்றி அழுத்தினார். சிரித்தேன். ஒட்டாத சிரிப்பு.தேர் விடுவிடுவென நகர பின்னால் தேர்க் கட்டைகளுடன் ஆட்கள் ஓடினார்கள்.
"கூட்டம் குறையறாப்ல தெரியலே" என்றார் பாதி அலுப்பாக.
"கொஞ்சம் பொறுத்துப் போவோம்"
"ராஜகோபுரம் பக்கம் போயிட்டா.. இவ்வளவு நெரிசல் இருக்காது"
தேர் வேகமாய் தெருவின் இன்னொரு மூலைக்கு ஓடித் திரும்ப இயலாமல் தயங்கியது.கூட்டம் சற்று கலைந்து இடைவெளி கிடைத்ததில் நானும் அவரும் நகர்ந்தோம்.
"நல்ல கூட்டம்" என்றார் மீண்டும்.
"வெக்கை தாங்க முடியலே" என்றேன் நனைந்த சட்டையுடன்.
அந்த நிமிஷம் மேலே ஜிவ்வென்று காற்று பட்டு நகர்ந்தது. மறுபடி விட்டு விட்டு வீசியது.
"என்ன இது யாரோ வீசறாப்ல" என்றார் சண்முகம்.
இருவருமே நிமிர்ந்து பார்த்தோம்.பத்தடி முன்னால் அந்தப் பெரியவர். சவுக்குக் கட்டையில் பெரிய மயில் விசிறி கட்டி மேலே உயர்த்தி விசிறிக் கொண்டிருந்தார்.அடர்த்தியாய் மயிற்தோகைகளால் ஆன விசிறி. பெரியவர் வாகாக கடை வீதியின் மையத்தில் நின்று இரு கைகளாலும் இறுகப் பிடித்து முக மலர்ச்சியாய் விசிறிக் கொண்டிருந்தார்.
"என்ன மனசு" என்றார் சண்முகம்.
அதே போல நானும் உணர்ந்தேன். நியாயம்தான். தண்ணீர்ப்பந்தல் ஒருவித சேவை என்றால் விசிறியது இன்னொரு விதத்தில்.எப்படித் தோன்றியது.. கை விசிறி நன்கொடை தருவது வழக்கம். தானே பெரியதாய் விசிறி செய்து சலிக்காமல் வீச யார் சொல்லித் தந்தது?பெரியவர் வேட்டியை இழுத்து இடைஞ்சலின்றி சொருகிக் கொண்டு வீசியதில் ஒரு அழகு இருந்தது.பத்து வினாடியாவது அவர் வீசும் காற்று பட்டுத்தான் ஜனக்கூட்டம் அந்த இடத்தைக் கடக்க முடியும்.திறந்த மார்பு.. வியர்த்துக் கொட்டியது வீசியவருக்கு. கண்களில் கருணை வரம் வாங்கிக் கொண்டு வந்த மாதிரி மயில் விசிறியைச் சுழற்றினார்.சண்முகம் என் கையைப் பற்றினார்.
"கொஞ்சம் இரு"
சட்டைப் பையைத் துழாவி ஐந்து ரூபாய்த் தாளை எடுத்தார்.
"இதை அவருக்குக் கொடுப்பமா?"
"ம்"
அருகில் போய் பணத்தை நீட்டவும் பெரியவர் விசிறுவதை நிறுத்தியது தெரிந்தது. நோட்டை வாங்கவில்லை. என்ன சொன்னாரென்றும் புரியவில்லை.தலையைச் சரித்துக் கொண்டு சண்முகம் தளர்ந்து திரும்பினார்.
"என்ன சொன்னார்"
"பணம் வேணாமாம்"
"ஓ.."
"உதவணும்னு நினைச்சேன்" என்றார் பெருமூச்சுடன்.
நான் எதுவும் சொல்லவில்லை.விசிறியவர் யாரோ பணம் தரப் போகிறார்கள் என்பதற்காகச் செய்யவில்லை. தனி ரகம். மனசைத் திருப்திப்படுத்த செய்கிற ரகம் ஜனம் வேறு, தான் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், 'தன் கடமை' என்கிற மாதிரி, தன்னால் முடிந்ததைச் செய்கிற தோரணையில் வந்து நின்று வீசுகிறார்.
'நல்ல மனுசங்க கொஞ்சம் பிடிவாதமாத்தான் இருப்பாங்க போல'
மனசுக்குள் வந்த விமர்சனம் உடனே அம்மா, அப்பா ஞாபகத்தை மீண்டும் கொணர்ந்தது.
"உன்னோட இருக்கக்கூடாதுன்னு இல்ல.. இங்கே என்ன வசதிக் குறைவு சொல்லு"
"இல்லம்மா.. எனக்கு சங்கடமா இருக்கு. நீங்க கிராமத்திலேயும் நான் டவுன்லயும் பிரிஞ்சு.."
"இதுல என்னடா.. உன் வேலை.. நீ அங்கே இருக்கே.. இங்கேர்ந்து போவலாம்னா.. தெனம் ரெண்டு மணி நேரம் பிரயாணம் பண்ணனும்.. உனக்கு சிரமம்"
அம்மாவின் குரலில் யதார்த்தம்.
"உங்க கூட சேர்ந்து இருக்க.."
"அட அசட்டுப் புள்ளை.. லீவுல வா.. பண்டிகைக்கு வா.. உடம்புதாண்டா பிரிஞ்சு இருக்கு. எங்க மனசுல எப்பவும் நீதான். உங்குடும்பந்தான்"
வார்த்தைகள். தப்பு கண்டு பிடிக்காத அம்மா. குற்ற உணர்வில் கரைந்து போக விடாத பாசம்.போக முடியவில்லை. நினைத்தபடி செய்ய முடியாதவந்தான் மனுசன். லீவில் வீட்டோடு கிடக்க நேரிட்டது. பண்டிகைக்கு வீட்டைப் பூட்ட வேண்டாம் என்று தடுக்கப் பட்டது. மாசம் ஒரு தடவையாவது என்று தீர்மானித்து, கடைசியில் வருசம் ஒருதடவை நிறைவேற்றுவதே சிரமமானது.மனிதன் சுயநலமானவன். தன் தீர்மானங்களை நியாயாப்படுத்திக் கொள்வதில் சமர்த்தன். அம்மாவின் பாஷையில் நானும் சமர்த்து.அழுதிருக்க வேண்டும் நான். சண்முகம் திகைப்புடன் என்னை உலுக்கினார்
என்ன ஆச்சு"
"ஒண்ணுமில்லே"
"போவோமா.. அப்படியே திகைச்சாப்ல நிக்கவும் தடுமாறிட்டேன். திடீர்னு நினைவு தப்பிப் போனவன் மாதிரி"
அவர் பேச்சு பாதி கேட்டது. என் கவனம் முழுக்க மயில் விசிறிப் பெரியவரிடம். எதுவும் எதிர்பாராத மனிதர். என் அம்மா, அப்பாவைப் போல.'செய்யிறதுக்குத்தானே பொறவி..திருப்பி எதிர்பார்க்கறதுக்கு இல்லே.. செய்யறதுல வர்ற சந்தோஷம்.. நெறைவு.. அது போதும் என்று சொல்லாமல் சொல்கிற ஜீவன்கள்.அவருக்கு ஏதாச்சும் பண்ணனும் அவர் குளிர்ந்து போகிற மாதிரி.. என் மனசு நிறைகிற மாதிரி.படபடப்பு அப்பிக் கொண்டது.கோபுர வாசலைத் தாண்டும்போது இடப்புறம் பார்வை தற்செயலாகத் திரும்பியது. சட்டென்று நின்றேன்.
"கொஞ்சம் பொறுங்க"
கூட்டத்தைப் பிளந்து ஓடினேன்.
"தண்ணியா சீவுங்க"
இளநீர்க் காய்களில் தேடியெடுத்து பதமாய்ச் சீவி ஸ்ட்ரா சொருகிக் கொடுத்தான். அவனிடம் பேரம் பேசக்கூடத் தோன்றாமல் கேட்ட தொகையைக் கொடுத்தேன்.சண்முகம் அப்படியே நின்றார்.சீவிய இளநீருடன் திரும்பி ஓடினேன்.பெரியவரை நெருங்க நெருங்க மீண்டும் காற்று உடம்பில் பட்டது.
"இந்தாங்க" என்றேன் மூச்சிரைப்பாய்.
விசிறுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். என்ன செய்யப் போகிறார்..தவித்துப் போனேன் அந்த நிமிடத்தில்.
"அட.. எளநியா.. எனக்கா"
குரலில் குதூகலம்.விசிறிக் கட்டையை தோளில் சார்த்திக் கொண்டு இரு கைகளாலும் இளநீர்க் காயைப் பற்றி உறிஞ்சினார்.காலியானதும் திருப்பி வாங்கிக் கொண்டேன்.மறுபடி விசிறல். திரும்பி நடந்தவன் முதுகில் பட்டு நகர்ந்த குளிர்ச்சிக் காற்று!
ஏனோ தெரியவில்லை.. அந்த நிமிஷம் மனசும் குளிர்ந்து போனது எனக்கு.
(தேவி வார இதழில் பிரசுரமான கதை )

November 18, 2009

மழையில் நடக்கப் பிடிக்கும் எனக்கும்

மழையை எனக்கும் மிகவும் பிடிக்கும்.
சும்மா தூறிவிட்டுப் போகிற
சின்ன மழையிலிருந்து
வானம் பொத்துக் கொண்டு
ஊற்றும் பெரிய மழை வரை..
வரப் போவதை
வாசனையால் அறிவிக்கும்
சாமர்த்தியம் ..
மழை பெய்யும்போது
குடைக்குள் மறைந்து
நடக்கப் பிடிக்காது ..
சடசடவென தூறல் விழுந்ததும்
ஓடி ஒளிந்து கொள்ளாமல்
ஒரு சிங்கம் போல
வானத்திற்கு முகம் காட்டி
நடப்பது பரம சுகம்.
கால்கள் நனைய
மழை நீர் ஓட வேண்டும்.
எல்லா மழைகளுமே
வானத்தில் இருந்துதான்
என்கிற நினைப்பை
படிப்பு மாற்றியது..
பூமி நீர்
ஆவியாகிப் போனால்தான்
மழையாம் ..
நாம கொடுத்தாதான்
எதுவும் திரும்பக் கிடைக்கும்னு
வானம் சொல்லுது..
பூமி சொல்லுது ..
மழை சொல்லுது..
இப்ப உங்க மனசும் சொல்லுதா?!

November 16, 2009

என் உடல் மீது உன் தேடல்கள்


முகம் மட்டுமே என்
அடையாளம்உன்னிடம் என்று
பல நாட்களாய் நினைத்திருந்தேன்.
என் கண்களை மட்டுமே
நீ பார்க்கிறாய் பேசும்போது
என்று நம்பினேன்.
உன்னருகில் நான் இருக்கையில்
இரு கை குவிப்பில்
பாதுகாப்பு கவசம்
எப்போதும் இருப்பதாய் உணர்ந்தேன்.
புலனாகாத எதிரிகள்
உன் அருகாமையில் நான் என்பதால்
விலகி ஓடிப் போவதாய்
என்னுள் கர்வம்.
என்னை ஏசிய அண்ணன்,
தம்பிகளிடம் குரல் உயர்த்திச் சொன்னேன்.
'ஒரு உண்மையானஆண்மகனைஎன்னுலகம் கண்டு விட்டது'
அப்பாவின் கோபம் பாதித்த அம்மா கூட
என்னை அதிசயமாய்ப் பார்த்தாள்.
தனக்குக் கிட்டாத ஒன்று
எனக்கு வாய்த்து விட்டதான பொறாமையுடன்.
ஆனால் என் நண்பா..
எப்போதிலிருந்து உன் முகமூடியைக் கழற்றி வைத்தாய்..
இப்போதெல்லாம் தெரிகிறதே, உன் பார்வையில்..
என் உடல் மீது உன் தேடல்கள்!

November 14, 2009

சிநேகிதன்

எனக்கு இந்த சவாரி
மிகவும் பிடித்திருக்கிறது
பின்னால் ஒரு மனிதனை
நம்பி
ஏற்றிக் கொள்ளும் நாள் வரும் வரை
பெயரில் மிருகமாய்
நிஜத்தில் நேசமாய்
இத்தனை உரிமையுடன்
என்னோடு ஒட்டிக் கொள்ளும்
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..

November 12, 2009

உள்ளேன் அம்மா



அம்மா ..

நான் வெளியே வராமல்

இருக்க இயலாதா ?

எதையும் பார்க்கும் / ஏற்கும் மனசு

எனக்கில்லை அம்மா..

உன்னுடன் கர்ப்பவாசம்

உகப்பாய் இருக்கிறது எனக்கு ..

மனிதர்கள் எத்தனையோ

கண்டு பிடிக்கிறார்களாமே..

நான் வெளியே வராமல்

உள்ளிருக்க உபாயம்

சொல்லக்கூடுமோ அவர்களால்..

இல்லாவிட்டால்

ஓர் உறுதிமொழியாவது

தரட்டும் எனக்கு..

என்னைப் போல ஜனனம்

எத்தனை சிரமம் என்று அறிந்தும்

உயிர்களை வெட்டிச் சாய்ப்பதில்

சூரர்களாய்

பவனி வருவதை

நிறுத்தி விடுவோம் என்று!

November 10, 2009

சலனம்

எனக்குள் ஒரு அமைதியை
எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன் ..
சலசலத்தோடும் ஆற்றின் கரையில்
மரங்கள் வீசும் பலத்த காற்றில்
உள் மனம் ஆடிக் கொண்டிருக்கிறது ..
ஒரு குழந்தையின் புன்னகை கூட
என்னை ஈர்ப்பதில்லை அப்போது ..
எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்
எனக்கான நிச்சலனத்தை ..
கற்றுக் கொண்ட ஆசனங்கள் வழியே
உடல் மடங்கிக் கிடந்தாலும்
பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக்
கொண்ட போதும்
மனசின் சாளரம் திறந்து கிடக்கிறது ..
ஒரு பூகம்பம் வருமென
எதிர்பார்த்து
அனலடிக்கும் புத்திக்குத் தெரியாது ..
கைக்கெட்டும் தூரத்தில் தான்
இருந்து கொண்டே இருக்கிறது
எனக்கான அமைதி என்று !

November 08, 2009

பயணங்கள்

ஏதேனும் ஒரு அவசியம்
எப்போதும் நேர்ந்து விடுகிறது..
அல்லது..
வயிற்றுப்

பிழைப்பிற்க்காகவாவது..
மனசுக்குள் இடம்
கிட்டாதபோது தான்
வெளியேறுதல்கள்
நடக்கின்றன ..
வண்டிக்குள்ளும் இடம் மறுக்கப்பட்டால்
என்ன..
ஒண்டிக்கொள்ள
இந்த இடம் போதாதா ?
உயிர் பணயம் வைத்து
ஒரு உயிர் பயணம் !
யார் காலடியிலாவது
எப்போதும் இருக்க
தலையெழுத்தா என்ன ?
இவள் சாதிப்பாள் என்று
சரித்திரம் பின்பு சொல்லுமோ என்னவோ ..
இவள் தரித்திரம் ஒழிந்து
வாழ்க்கையில் நல்ல இடம் கிடைத்து
அமர்ந்தால் போதும்!
இதைப் பார்த்து அதிர்ந்த இதயம்
இன்பமாகி வாழ்த்தும் அப்போது !
போய் வா பெண்ணே பத்திரமாய் !

November 03, 2009

ஒரு 'தலை' ராகம்


"இந்த வீட்டுல எதை வச்சாலும் மறுபடி அதைத் தேடணும். வச்ச இடத்துல இருக்காது" என்று அலறினேன்.

சுந்தரி கொஞ்சங்கூட அசையவில்லை.

"மனுஷன் கத்தறது காதுல விழுதா?"

"என்ன வேணும் இப்ப" என்றாள் நிதானமாக.

"என்னோட ஃபோட்டோ"

"எதுக்குப்பா" என்றாள் அமுதா. என் புத்திரி சிகாமணி.

"என்னோட சிறுகதையோட என்னோட புகைப்படமும் வெளியாகப் போவுதாம்" என்றேன் அவ்வளவு டென்ஷனிலும் பிரகாசமாய்.

"அது ரொம்ப பழைய புகைப்படமாச்சே"

"உங்கப்பா எப்பவும் அதே ஃபோட்டோவைத்தான் அனுப்புவாரு. இளமை மாறாத அதே தோற்றம்" என்றாள் சுந்தரி கிண்டலாய்.

எனக்கு சுரீரென்றது. சனியன் பிடித்த எதிர்க் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. முன்புறம் ரோடு போட்ட தலை. ரோம சாம்ராஜ்யம் பாதி தகர்ந்து செட்டப்பாய் பின்னால் இருக்கிற முடியை முன்னுக்கு கொண்டு வந்து சீவியதில் சுமாராய் இருக்கிற மாதிரி ஒரு நினைப்பு. இவள் கேலி செய்ததில் ரோஷம் பொங்கியது.

"உன்னைக் கட்டிக்கிடறதுக்கு முன்னால மாசத்துக்கு ரெண்டு போகம்.. சலூன்ல அறுவடை.. உன்னைக் கட்டிகிட்ட நாள்லேர்ந்துதான் இப்படி பாலைவனம். நீ புடுங்கிற புடுங்கல் தாங்காம" என்றேன் அரை முனகலாக.

"ஆமாமா. அப்படியே தங்கமும் வைரமுமா செஞ்சு களைச்சிட்டீங்க. தீபாவளிக்கே காட்டன் புடவை எடுத்த மகராசனாச்சே"

"பாவம்மா அப்பா" என்றாள் அமுதா.

"இப்ப என்னோட ஃபோட்டோ எங்கே. அதுக்கு வழியைச் சொல்லுங்க"

"பேசாம கடைக்குப் போய் புதுசா ஒரு ஃபோட்டோ எடுத்துருங்க"

திடுக்கிட்டேன். இந்த தோற்றத்திலா. என் இமேஜ் என்னாவது?

"அப்பா.. கவலைப்படாம போங்க. ஃபோட்டோவை டச்சப் பண்ணி இளமையாக் காட்டிருவாங்க"

ஓ. அப்படி ஒரு வழி இருக்கா.

தைரியமாகக் கிளம்பிப் போனேன்.

சந்துருவை அப்போதுதான் வழியில் சந்தித்தேன்.

"என்னடா நீயா.. இப்படி ஆளே மாறிப் போயிட்டே. " என்றான் அனாவசியத் திடுக்கிடலுடன்.

அவன் தலை மட்டும் எப்படி அன்று கண்ட கருப்பு மாறாமல்.. மனசுக்குள் பொறாமை பொங்கிற்று.

"ஹி.. ஹி.. ஏதோ அலர்ஜி. முடி கொட்டிருச்சு"

"கவலைப்படாதே. உன் பிரச்னை தீர்ந்துருச்சுன்னே வச்சுக்க"

"எ..ன்னடா சொல்றே"

"இந்த மாதிரி இள வயசுல முடி கொட்டற பிரச்னையை தீர்க்கத்தான் இப்ப புதுசா ஒரு ஹேர் டானிக் கண்டு பிடிச்சிருக்கோம். இந்த ஏரியாவுக்கே நான்தான் சேல்ஸ் ரெப்"

"நெஜம்மாவா. மறுபடி முடி வளருமா"

"என் தலையைப் பாரு. அவ்வளவும் எங்க பிராடக்டோட மகிமை. முழுசா கொட்டி மறுபடி வளர்ந்திருச்சு"

என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"டேய். அந்த இலை இந்த இலைன்னு அரைச்சு.. எண்ணையில காய்ச்சி.. தலைக்குத் தடவிப் பாருன்னு ஒரு பத்திரிகையில படிச்சுட்டு.. அதே மாதிரி செஞ்சேன். கருமம், அந்த நாத்தமே சகிக்கலை. இன்னொரு பக்க முடியும் கொட்டிருச்சு. இப்ப நீ வேற" என்று இழுத்தேன்.

பளாரென்று வெறுந்தலையில் ஒரு அறை வைத்தான். சத்தியம் செய்கிறானாம். மூளைக்குள் ஏதோ பளிச் பளிச்சென்று மின்னியது, வாங்கிய அடி தாங்காமல்.

"இந்த பாட்டிலை எடுத்துகிட்டு போடா. ஒரு மாசம் யூஸ் பண்ணு. நீ பணமே தர வேண்டாம். என் கமிஷன்ல கழிச்சுக்கிறேன். 150 ரூபா. நண்பனுக்காக தியாகம் பண்றேன்" என்றான் ஆவேசமாய்.

பழுப்பா.. இன்ன கலரென்று சொல்ல முடியாத அசட்டுக் கலரில் ஒரு திரவம் பாட்டிலுக்குள் ஆடியது.

பயபக்தியாய் கையில் வாங்கினேன்.

"டேய். அப்புறம் என் மேல வருத்தப்படாதே. இந்த டானிக் முழுப்பலனும் தரணும்னா ஒரே வழி.. மொட்டை அடிச்சுக்கணும். அப்புறம் தினசரி தலையில அழுத்தி தேய்ச்சுகிட்டு வரணும். அப்புறம் பாரு என்னைத் தேடிகிட்டு வருவே.. இன்னொரு பாட்டிலுக்கு"

முழங்கால் வரை வளர்ந்த கூந்தலுடன் ஒரு பெண்ணின் படம். பொடிப் பொடி எழுத்துக்களில் அதன் பெருமை எழுதப்பட்டிருந்தது.

"நம்பிக்கையா போ. நீயே புரிஞ்சுப்பே"

நான் மெய் மறந்து நின்றதைப் பயன்படுத்திக் கொண்டு என் பர்சை வெளியில் எடுத்தான். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை உருவிக் கொண்டான்.

"உன்கிட்டேர்ந்து கடனா இருநூறு ரூபாய் எடுத்துக்கிறேன். தப்பா புரிஞ்சுக்காதே. அந்த பாட்டிலுக்கு எனக்கு பைசா வேணாம்"

போய் விட்டான்.ச்சே.. எவ்வளவு உத்தமமான நண்பன்!

இப்போதே போய் மொட்டை அடித்துக் கொண்டு இன்றே ஆவி பறக்க தலையில் தைலத்தைத் தடவிக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரே மாதத்தில் அடர்த்தியான முடியுடன்.. ஹா.. எல்லோரும் ஆச்சர்யப்பட வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும்போதே சுந்தரியின் குரல் விரட்டியது.

"யாருப்பா.. அது. தொறந்த வீட்டுல சட்டுனு நுழைஞ்சுகிட்டு"

"ஹி..ஹி.. நாதான்." என்றேன் மொட்டைத் தலையும் பேய் முழியுமாய்.

"என்ன ஆச்சுங்க உங்களுக்கு"

"அப்பா.. நீங்களா" என்றாள் அமுதா பயங்கர அதிர்ச்சியுடன்.

"எல்லாம் ஒரு காரணத்தோடதான். விலகுங்க" என்றேன் கிணற்றடி நோக்கி நடந்தவனாய்.

பிறகு விளக்கமாய் நடந்ததைச் சொன்னேன்.

"பிளீஸ்மா. உன்னோட ராசியான கையால இந்த தைலத்தை தேய்ச்சு விடேன்"

அரைமனதாய் ஒப்புக் கொண்டாள். தேய்த்து விட்டதில் பொறி கலங்கி போன ஜன்ம நினைவுகளே வந்து விட்டது. அந்த ஜென்மத்திலும் சுந்தரிதான் என் மனைவி என்று ஏதோ அசட்டு பிசட்டென்று தோன்றியது.

"நாளைக்கெல்லாம் என்னால முடியாது. கை அசந்து போவுது."

எப்படியோ தினசரி ஒருவர் மூலமாக தலையைக் கவனித்துக் கொண்டேன்.

விளைவுதான் எதிர்பாராதது.

அடப்பாவி. சந்துரு என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே. வெளியிலே தலை காட்ட முடியாமல் 'சிக்' லீவு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியதாயிற்று.

நண்பர்கள் வந்தால் கூட தலையைச் சுற்றி பெரிய போர்வையை போர்த்திக் கொண்டு கட்டிலிலேயே கிடந்தேன்.

ஒரு வழியாய் சந்துரு வீட்டைத் தேடிக் கொண்டு வந்து விட்டான்.

"ஏண்டா ராஸ்கல். என்னை இப்படி பண்ணிட்டியே"

"ஏன் என்ன ஆச்சு. முடி வளரலையா" என்றான் குழப்பத்துடன்.

விருட்டென்று எழுந்ததில் போர்வை விலகிக் கீழே விழ.. சந்துரு திகைப்புடன் அதிர்ந்து நின்றான். அமுதா கிரீச்சிட்டாள். சுந்தரி அவசரமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

ஆறடிக் கூந்தலுடன் விசித்திரப் பிறவி போல நின்றேன்.

"ஏ..ஏதோ தப்பு நடந்து போச்சு.தைலத்துல கலவை மிஸ்டேக்.. எ..எப்படி ஆச்சு.."

ஒரேயடியாய் திக்கினான்.கால் மடங்கி ஓவென அலறினேன்.

"டேய்.. என்னைக் காப்பாத்துரா. என்ன வெட்டினாலும் உடனே வளர்ந்துருதுடா. எனக்கு மொட்டைத் தலையே போதும். முடி வேணாம்.. என்னைக் காப்பாத்துரா"

November 01, 2009

கவிதைகள்




நான் இப்போது

புன்னகைகளை சேகரிக்கிறேன்

எத்தனை விதமாய் புன்னகைகள் !

சில கனிவாய் ..

சில எள்ளலாய் ..

சில ஆராய்ச்சியுடன் ..

சில பிரத்தியேகமாய் எனக்கே எனக்காக ..

இதுவரை கணக்கிலடங்கா

புன்னகைகள் பார்த்தும்

அமையவில்லை

எனக்கே எனக்கான

ஒரு ஸ்பெஷல் புன்னகை

என் உதட்டின் மீது !

*****************************************

பல வருடங்களாய்

பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆனாலும் முடியவில்லை

எத்தனையோ பேர்

முட்டி மோதி முயற்சித்தும்

அசல் போல வரவில்லை

ஒப்பிடுதலில் பிழை

கண்டு பிடிக்கப்பட்டு விடுகிறது.

சலிக்காமல் இன்னும் முயற்சிகள்

என்றாவது ஒரு நாள்

கிடைத்து விடக் கூடும்

அசலாய் ஒரு நகல்
நிஜமாய் ஒரு பிரியம் !



October 28, 2009

அந்தர சுந்தரன்

அந்த வினோதக் காட்சியை முதலில் என் மகள் தீபாதான் கவனித்தாள். "அய்யோ.. அப்பா கீழே இறங்கு"
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைகளில் சற்றே நிதானம். அதாவது காலை கண் விழிப்பில் தொடங்கி. எட்டு மணி கண் விழித்தபோது. சூரிய வெளிச்சம் கட்டிலுக்கே வந்து விட்டது. இன்னமும் தொக்கி நிற்கிற சோம்பல். "அப்புறம் மத்தியானம் தூங்கமுடியாது. எழுந்துக்கிறீங்களா"
புவனாவின் கிண்டல் வேறு.
'இனியும் படுப்பதில்லை, எழு, தம்பி ' என்று எழுந்தேன். நின்றேன். இந்த நிமிடம்தான் தீபாவின் அலறல்.
"அய்யோ.. அப்பா.. கீழே இறங்கு"
"என்னடி உளர்றே"
"கீழே வாப்பா"
கட்டிலை விட்டு எழுந்து நிற்பவனிடம் என்ன பேச்சு இது. நடந்து அவள் அருகில் போனேன்.
"என்ன.. தீபு"
"அம்மா"
தீபா அலறிக் கொண்டு சமையலறைக்குள் ஓடியது. புவனாவும் அவளுமாக அடுத்த நிமிடம் வெளியே வந்தார்கள்.
"என்னங்க.. உங்களுக்கு என்ன ஆச்சு"
எனக்குத் தலை சுற்றியது. ஞாயிறும் அதுவுமாய் அரைத் தூக்கத்தில் எழுந்த பிரமையில் இருப்பவனிடம் மேலும் என்ன சோதனை?
"கீழே பாருங்க"
புவனாதான் சொன்னது. கைலி கட்ட மறந்து விட்டேனா. அவசரமாய்க் குனிந்தால்.. கைலி.
"நல்லாக் குனிஞ்சு பாருங்க.. கைலியைத் தூக்குங்க"
கைலியைத் தூக்குவதா. புரியாமல் லேசாக உயர்த்தி கீழே பார்த்தேன். ஹா! மூச்சு ஒரு கணம் நின்று விட்டது. பூமிக்கு - அதாவது தரையிலிருந்து அரை அடி உயரத்தில் நின்று கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான். இதயம் வேகமாய்ப் படபடக்க ஹாஜ்மூலா தாத்தா போலக் குதித்துக் கீழே இறங்க முயற்சித்தேன். ம்ஹூம். என்ன குதித்தாலும் அதே அரை அடி உயரத்தில்தான்.
"புவனா, என்னடி இது"
"என்னங்க எப்படியாவது கீழே வாங்க"
"எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா? வர முடியலைடி"
லேசாய்க் கண்ணீர் தளும்பி விட்டது.
தீபாவும் புவனாவும் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு பத்துப் பதினைந்து கட்டளைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, என்னால் முடிந்த அளவு - ஊஹூம், முடியவே முடியாத அளவு - முயற்சித்து அந்தரத்திலேயே நின்றேன்.
"ஏய், வயித்தைக் கலக்குது"
பரிதாபமாய்ப் புலம்பினேன்.
"நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க?"
"எல்லாம் நீ சமைச்சுப் போட்டதுதான்"
"என்மேல எரிஞ்சு விழத்தான் தெரியும்"
"அய்யோ அம்மா. இப்பவும் ஏன் அப்பா கூட சண்டை போடறே. பாவம் அப்பா. எப்படியாவது கீழே இறக்கி விடு."
புவனா பெருமூச்சு விட்டாள். தீபா அந்தரக் கால்களின் கீழ் தன் கை விரல்களை ஓட விட்டுப் பார்த்தாள். சுலபமாய் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் தடங்கலின்றிச் சஞ்சரித்தன.
"நெஜம்மாவே சப்போர்ட் இல்லாம நிக்கிறீங்க அப்பா"
"போதும், உன் சர்டிபிகேட். நாளைக்கு ஆபீஸ் எப்படி போவீங்க"
மீண்டும் கிலியை கிளப்பினாள்.
"நம்ம டாக்டரைப் பார்ப்போமா" என்றாள் தீனமாக.
"இதுக்கு அவர் என்ன பண்ண முடியும். ஜுரமா, தலைவலியா.. மாத்திரை தந்து குணப்படுத்த?"
"இப்படியே எடக்கு மடக்காப் பேசுங்க. இப்ப என்ன செஞ்சா நீங்க கீழே வருவீங்க?"
"அதே கேள்வியை எத்தனை விதமா நீ கேட்டாலும் எனக்குப் பதில் தெரியலையே"
சிவாஜி படக் காட்சி போலப் புலம்பினேன்.
"டேய்.. சிவா. என்னடா பண்றே"
நாணுவின் குரல் கேட்டது.
"அய்யோ.. நாணு வந்துட்டான். நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு கே.கே. நகர் வரை போகிறதா பிளான்"
பதறி எழுந்து அந்தரத்தில் நின்றவனைப் பிடித்து அமர்த்தினாள்.
"பேசாமப் படுங்க. உடம்பு சரியில்லைன்னு சொல்லிடலாம்"
நாணு உள்ளே வந்து விட்டான்.
"என்ன.. கிளம்பலியா இன்னும்?"
'சொல்லேண்டி.. நீயே' என்பது போல புவனாவைப் பார்த்தேன்.
"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" என்றாள் தீபா அவசரமாய்.
"என்ன உடம்பு.. ஜொரமா"
நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
"சுடலியே"
"இல்லே. ஸ்டமக் பிராப்ளம்"
"அப்படியா.. நேத்து நல்லாத்தானே இருந்தான்"
"இன்னிக்குக் காலையிலதான்"
நாணு என்னையே சந்தேகமாய் முறைத்துப் பார்த்தான்.
"சரி. அந்தக் கவரைக் கொண்டா. நானே கொண்டு போய்க் கொடுக்கறேன்" சட்டென்று எழுந்து கொள்ள முயன்றவனை தீபா அடக்கிப் படுக்க வைத்தாள். நாணு கவனித்து விட்டான்.
"என்ன.. தீபா"
"ஹி..ஹி.. ஒண்ணுமில்லே. சும்மா"
"எங்கே வச்சிருக்கீங்க" என்றாள் புவனா.
"மேஜை மேல பாரு"
அங்கே இல்லை. 'என் கைப்பையில் பார்' ஊஹூம். 'கிச்சன்ல வச்சேனா' இல்லை. அட. எங்கே போய்த் தொலைந்தது. ?
என்னையும் மீறி டென்ஷனில் எழுந்து அலமாரியின் உச்சியில் இருந்த கவரை எடுத்து விட்டேன்.
"இந்தா" என்று நாணுவிடம் நீட்டினேன்.
அதற்குள் புவனாவும் தீபாவும் கோவில் சன்னிதியில் திரை போடுகிற மாதிரி போர்வையின் இருபுறமும் பிடித்துக் கொண்டு ஓடி வந்து என் முன்புறம் மறைத்தார்கள்.
"என்னடா.. இது?"
"இது ஒரு மாதிரி.. தொத்திக்கிற பிராப்ளமாம். யாரும் கிட்டப் போகக் கூடாதாம்"
டீவி சீரியல் பார்க்கிற ஜோரில் தீபாவுக்குக் கற்பனை பிய்த்துக் கொண்டது. நாணு தலையைப் பிய்த்துக் கொண்டான்.
"எனக்கு ஒண்ணுமே புரியலே"
"எனக்கே புரியலே" என்றேன் அழாத குறையாய்.
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வெளியேறினான்.
"ஸ்ஸ்.. ஹப்பா.. தப்பிச்சேன்" என்றேன்.
போர்வையை எடுத்தார்கள்.
தீபா மீண்டும் என் கால்களைப் பார்த்தாள்.
"எப்படிப்பா முடிஞ்சுது? கால் வலிக்கலே?"
"கேள்வியைப் பாரு. ஏன் வலிக்கப் போவுது? உங்கப்பா இனிமேல் செருப்பே வாங்கவேண்டாம். பேட்டாக்கு அழற பேட்டா மிச்சம்."
இப்போது என் 'பிரச்னை' எனக்கு ஒரு மாதிரி பழகிப் போய் விட்டது. குறுக்கும் நெடுக்குமாய் நடந்து பார்த்தேன்.
"ஹை. ஜாலியா இருக்கு. இப்படியே உட்கார்ந்தால் என்ன ஆகும்?"
"ஆமா.. பெரிய ஆராய்ச்சி" உட்கார்ந்தேன்.
புவனா கிடக்கிறாள். அபூர்வமாய் வாய்த்த திறனை ஏன் வீண் அடிப்பானேன். அந்தரத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்த கோலம் !
"புவனா.. புவனா"
என் அத்தையின் குரல். கூடவே அப்பாவும். ஊருக்குப் போனவர்கள் திரும்பி விட்டார்களா?
"ஓடுங்க.. கட்டிலுக்கு"
"எதுக்கு? நம்ம அப்பாதானே"
வந்து விட்டார்கள். அப்பா கேஷுவலாய் அறைக்குள் பையை வைக்கப் போக, அத்தை பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள்.
"என்ன பஸ்ஸோ. ஓவர்டேக் பண்ணணும்னு அந்தரத்துல பறக்கற மாதிரி ஓட்டறான். உயிரைக் கையில பிடிச்சுண்டு சீட்டுக்கு மேல வித்தைக்காரன் மாதிரி உட்கார்ந்திருந்தோம்."
அத்தை பேசிக் கொண்டே போனாள்.
"அத்தே.. இவரைப் பாருங்களேன்" புவனாதான் கேவியது.
"என்னடி.. என்னவோ போலப் பேசறே"
அப்பாவும் ஹாலுக்கு வந்து விட்டார்.
"அப்பா"
"தாத்தா"
இருவருமாய்ப் புலம்ப அப்பா பிளஸ் அத்தையின் பார்வைகள் என் பக்கம் திரும்பின.
"என்னடா?"
ஜோடி நாயனம் போலக் கத்தினார்கள்.
"தெரியலைப்பா. கார்த்தால எழுந்தா இந்த மாதிரி"
"நம்ம ஃபாமிலில இந்த மாதிரி முன்னால யாருக்காவது வந்திருக்கா?" என்றாள் அத்தை.
"இது என்ன ஆஸ்த்துமா, டி.பி மாதிரி வியாதியா"
"ஏண்டா எதையாவது மந்திரிச்சுப் போட்டதை ரோட்டுல மிதிச்சுட்டியா" "இனிமேல மிதிக்கவே முடியாதுப்பா" என்றேன் பலவீனமாக.
"இருங்கோ.. உங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வரேன்"
புவனா இந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று உள்ளே ஓடி விட்டாள்.
தீபாவுக்குப் பாடப் புத்தகத்தில் மனதே பதியவில்லை. என் மீது ஒரு பார்வை, பாடத்தின் மீது ஒரு பார்வை என்று அல்லாடினாள்.
"திருஷ்டி சுத்திப் போடட்டுமாடா?" என்றாள் அத்தை.
"அய்யோ அத்தை பேசாமல் இரு"
"ஏண்டா.. பாரதத்துல தர்மரோட தேர் அந்தரத்துல நிக்கும்னு படிச்சிருக்கேன். பொய்யே சொல்லாதவராம். அப்புறம் அஸ்வத்தாமன் செத்ததா பொய் சொல்லப் போக தேர் கீழே வந்துரும். அது மாதிரி.."
அப்பா தவறாமல் டீவி மஹாபாரதம் பார்த்தவர். கையிலே 'வியாசரை' வைத்து ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு புராணம் பேசினார்.
"அப்பா.."
சுரீலென்று உறைத்தது. பொய்யே சொல்லாதவர். நேற்றிரவு நடந்தது நினைவில் வந்தது.
"என்னங்க.. என்னை உங்களுக்கு ஏங்க ரொம்பப் பிடிக்குது?"
தீபாவுக்குப் போர்த்தி விட்டு விடிவிளக்கை ஒளிர வைத்த புவனா என்னருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டாள்.
"யார் சொன்னது?"
"குறும்பு.."
செல்லமாய்க் கன்னத்தில் இடிக்க கடைவாய்ப் பல் ஆடி விட்டு அமர்ந்தது. "அம்மா.. தாயே.. கொஞ்சம் மெதுவா"
"நெஜத்தைச் சொல்லுங்க. எம்மேல உசுருதானே?"
மேலே சரிந்ததும் என் 'உசுரு' ஒரு வினாடி நின்று இயங்கியது.
"சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லே"
"மனசைத் தொட்டுச் சொல்லுங்க"
தொட்டுச் சொன்னேன்.
"பிடிக்கும். அவ்வளவுதான்"
"எப்பவும் விளயாட்டு உங்களுக்கு"
"எனக்கு இப்ப தீபாவைத்தான் ரொம்பப் பிடிக்கிறது." என்றேன்.
"போங்க. ஆனாலும் மோசம்"
"இல்லம்மா. உன்மேல எனக்கு நிறைய விமர்சனம் இருக்கு. நிறைய கேள்விகள்.. பதில்கள். உன்னை உனக்காகவே பிடிக்கணும்னா இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும். நமக்குள்ளே இந்த சச்சரவுகளை மீறிய அழுத்தமான அடி மனசு நேசம் புலப்பட.. புரிஞ்சுக்க"
ஏன் இப்படி டீவி பேட்டியில் குறிப்பிட்ட நடிகர் பேசுகிற தொனியில் பேசினேன் என்று புரியவில்லை. ஆனால் சொன்னபோது எனக்கே நேர்மை என்று தொனிக்கிற பதிலைச் சொன்னேன். புவனா அதைக் கேலியாக எடுத்துக் கொண்டு தனக்கே இயல்பான இன்னொசன்ஸுடன் என் கையைப் பற்றிக் கொண்டு தூங்கிப் போனாள். கடவுளே என்னையும் மீறி மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன். முகமூடியற்று நான் !
அடக் கடவுளே !
பொய் சொன்னால் கீழிறங்கிய காலம் போய் நிஜம் சொன்னதால் மேலே ஏறி விட்டேனா. இப்படியும் நடக்குமா?
"புவனா"
மூளைக்குள் 'கிளிக்' கேட்டது.
சமையலறைக்குள் சஞ்சரித்தேன்.
"என்ன.. இது. ஹால்ல அப்பா, அத்தை இருக்காங்க"
"புவா.. புவிக்குட்டி. என் கண்ணே. என் செல்லமே"
"என்னங்க இது. ச்சே..அசிங்கம்"
"உம்மேல உசுரு. நீதான் இந்த உலகத்துலயே படு அழகு. உலக அழகிப் போட்டி எல்லாம் குப்பை. அவ உன் கால் தூசு பெற மாட்டா. எலிசபெத் டெய்லர்.. ரியாஸ் டெய்லர்.. ஜூஹி சாவ்லா.. எல்லாம் பாவ்லா"
ரிதமிக்காய்ப் பேசப் பேச.. அப்படியே கீழிறங்கித் தரையைத் தொட்டு நின்றேன் !.

October 24, 2009

இமயம் சரிந்தது

இமயம் சரிந்தது இந்த வரியை குறைந்த பட்சம் ஒரு வாரத்தில் ஒரு தடவையாவது எங்கள் ஊரில் பார்க்கலாம். அதாவது சுவரொட்டியில்! அவ்வளவாக பாபுலர் ஆகாத மனிதரின் இறப்பு என்றால் அல்லது கொஞ்சம் அடக்கி வாசிக்கிற பேர்வழிகள் என்றால் வெறும் 'கண்ணீர் அஞ்சலி' தான் சுவரொட்டியில் தலைப்பு.

மற்றபடி சகட்டு மேனிக்கு வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் இமயம் சரியும்! மாசத்தில் 15 தடவை இமயம் சரிந்தால் அதன் கதிதான் என்ன என்கிற பயம் வரும்.

பலான ஆளின் பாட்டி போனபோது 'இமயம் சரிந்தது'. இன்னொருத்தர் அப்பா காலமானதும் அதே இமயம் மறுபடி சரிந்தது. சொல்லப் போனால் நேரு, காந்தி போனால் 'இமயம் சரியலாம்'. இப்படி யார் போனாலும் அதே பாணியில் போஸ்டரா?

இன்னொரு சந்தேகமும். இது எங்கள் பகுதியில் மட்டும்தானா.. அல்லது தமிழகம் முழுவதும் இதே போஸ்டர் கலாச்சாரம்தானா?

அன்னாரின் ஏதோ ஒரு பழைய புகைப்படம் போட்டு செத்தவரின் பெயரை விட இருப்பவரின் பெயரை பெரிதாகப் போட்டு (அவரைக் காக்கா பிடிக்கும் உத்தேசத்துடன்) பஸ்ஸில் போகும்போது அவசரமாய்ப் படித்ததில் யார் செத்தது என்று பெயர்க் குழப்பத்துடன் மீண்டும் மாலை ஊர் திரும்பியதும் போஸ்டரைப் பார்த்து தெளிவு பெறும்வரை டென்ஷன் தான்.

இம்மாதிரி சுவரொட்டிகள் இப்போது அதிகமாகிப் போனதில் சுவரில் இட நெருக்கடி வேறு வந்து விட்டது. நேற்று ஒட்டியதைக் கிழித்துவிட்டு அடுத்த இமயத்தை ஒட்டும்போது முன்னாள் நபரின் உறவுகள் பார்த்து சண்டை வந்து விடக் கூடாதே என்கிற அச்சம் வருகிறது.

காலமானவர் பற்றிய இழப்பு..கவலை இதெல்லாம் விட எவ்வளவு தினுசாய் போஸ்டர் ஒட்டலாம் என்கிற போட்டா போட்டி..

தெருவெல்லாம் இறைந்து கிடக்கிற பூக்கள் கூட மரண வாசனையுடன்!

என் பள்ளி ஆசிரியர் காலமானபோது சுவரொட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். அவருக்கு ஒட்டியது பழைய மாணாக்கர்கள் மற்றும் சக ஆசிரியர்கள். எளிமையாய் மரணம் பற்றிய தகவல் மட்டுமாய் அந்த சுவரொட்டி.

இதைப் போல ஓரிரண்டு விதிவிலக்கானவை தவிர பெரும்பாலான போஸ்டர்கள் பயமுறுத்துகின்றன.

'இருந்தப்ப ஒரு வா(ய்) சோறு போடல.. வக்கத்த பய.. எப்படி காசக் கரியாக்குறான் பாரு' என்று பூம்பல்லக்கில் ஆயிரம் வாலா வெடி வெடித்து போஸ்டர் ஒட்டி பூ இறைத்துக் கொண்டு போனபோது பின்னால் சைக்கிள் தள்ளிக் கொண்டு போனவர் சொன்னது காதில் விழுந்தது.

மரணங்கள் அர்த்தமுள்ளவை. செத்துப் போனவர்களை விட பிணத்தின் பின்னால் போகிறவர்களுக்கும் வேடிக்கை பார்க்கிறவர்களுக்கும் அது சொல்லாமல் சொல்கிற சங்கதிகள் அநேகம்.

மரணம் தொடர்புடைய வேறொரு சம்பவம்..

இறப்பில் செய்யப்படுகிற செலவினங்கள் குறித்து கவலை தெரிவித்து பேசும்போது நண்பர் சொன்னது.. அவர் கேள்விப்பட்ட நிகழ்வு..

இறுதிச் சடங்கை வைதீக முறைப்படி செய்து வைக்க வைத்த டிமாண்ட் கட்டுப்படி ஆகாமல் 'போங்கப்பா..' என்று உதறி விட்டு உறவு பிளஸ் நட்பை வைத்து பிணத்தைத் தூக்கச் சொன்னாராம் வாரிசு.

'கோவிந்தா.. கோவிந்தா' என்று சுடுகாடு போகிறவரை நெருப்புச் சட்டி எடுத்துக் கொண்டு உரக்கக் கத்திக் கொண்டு போனாராம். வச்சுக் கொளுத்திவிட்டு திரும்பியவரிடம் 'என்னப்பா இப்படி பண்ணிட்டே' என்றதற்கு 'செத்தவருக்கு எதுவும் தெரியப் போவதில்லே.. எனக்கும் எதுவும் தெரியாது.. இப்ப என் மனசு பூர்வமா தெரிஞ்ச மந்திரத்தை சொல்லிட்டேன்.. போதாதா?' என்றாராம்.

முன்பு படித்த ஒரு சிறுகதை இன்னமும் பசுமையாய் நினைவில்.. அந்தச் சிறுவனுக்கு தேர்வு.. நன்றாகப் படித்து முன்னுக்கு வருவான் என்று ஆசைப்பட்ட அம்மா காலமாகிவிட்டாள். மாமா சொல்கிறார்.. 'போடா.. போய் பரிட்சை எழுதிட்டு வா.. அப்புறம் கொண்டு போவலாம்' அவனும் போய் தேர்வு எழுதிவிட்டு வருகிறான்..அதுவரை உறவுக்காரர்கள் காத்திருக்கிறார்கள். பிராக்டிகலாய் தீர்வு! அம்மா நிச்சயம் வாழ்த்தியிருப்பாள்.

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கத் தவறியவர்களால் போஸ்டரை கனப்படுத்தி விட முடியாது. ஆனாலும் நமக்கு எதற்கும் எல்லாவற்றிலும் விளம்பரம் தேவைப்படுகிறது. செத்துப் போகும்போதும்கூட!

வாழ்க சுவரொட்டி கலாச்சாரம்.

October 21, 2009

சார்.. தபால்

ப்ரியமான தபால்காரர்கள்
வழக்கொழிந்து போன சொல் போல தெரிகிறதா?
கூரியரில் நாம் இப்போது தபால்களை அனுப்ப ஆரம்பித்து விட்டோம். கூடுதல் செலவானாலும் நிம்மதி. நிச்சயம் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கை.
இதைத்தான் முன்பு தபால் நிலையங்கள் செய்தன. அதுவும் பர்சனல் டச்சுடன்! எங்கள் தெரு தபால்காரர் (முன்பெல்லாம் ஒரு நாளைக்கு இரு முறை டெலிவரி) தபால் அலுவலகம் விட்டு வெளியில் வந்ததும் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவர் போக வேண்டிய பீட்டில் வரிசைக் கிரமமாய் தபால்களை அடுக்கிக் கொள்வார்.
என்னைப் போல சற்று பரபரப்பான ஆசாமிகள் அவர் எங்கள் வீட்டுக்கு வரும்வரை காத்திருக்க பொறுமையின்றி தபால் அலுவலகம் வாசலுக்கே சென்றால் 'தம்பி.. எம் ஓ வந்திருக்கு' என்பார்.
அது எப்படி ஆளைப் பார்த்ததுமே அவரவருக்கான தபாலைப் பற்றி சொல்ல முடிகிறது என்கிற வியப்பு.
'இல்லை' என்றாலும் அதையும் சரியாகச் சொல்லுவார்!
'உனக்கு நாளைக்கு' என்று அவர் சொல்கிற அழகே தனி.இல்லையென்ற வார்த்தை அவர் வாயில் வராது.
என் கதைகள் பிரசுரமான இதழ்களைத் தரும்போது முதல் தடவை கேட்டார். "பணம் கட்டி வாங்கறீங்களா தம்பி"
கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு 'என் கதை வந்திருக்கு' என்றதும் அவர் முகத்தில் கூடுதலாய் ஒரு மகிழ்ச்சி.
என் அப்பாவை அவருக்குத் தெரியும். அப்பா சம்பாதிப்பதை வீண் செலவு செய்யவில்லை.. சொந்த முயற்சியில்தான் புத்தகங்கள் வருகின்றன என்று புரிந்ததால் வந்த மகிழ்ச்சி.
தீபாவளி மலரில் என் கதை வந்தபோது ரெஜிஸ்தர் தபாலில் மலர் வந்தது. "கையெழுத்து போடுங்க தம்பி" என்று என் கையெழுத்திற்கு ஒரு அந்தஸ்து உருவாக்கினார்.
என் விஷயம் என்றில்லை.. அவர் செல்கிற ஒவ்வொரு வீட்டு நிலவரமும் அவருக்குத் தெரிந்திருந்தது.
வம்பு பேசும் நோக்கமின்றி அக்கறையுடன் நின்று பேசிப் போகும் அவர் ஒரு ஹீரோ ரேஞ்சில் எங்கள் மனதில் பதிந்ததில் ஆச்சர்யமில்லைதான்.
இன்று கூரியர் வரும்போது அந்த பர்சனல் டச் இல்லை. விசாரிப்புகள் இல்லை. "மோர் சாப்பிடுங்க" என்கிற உபசரிப்பு இல்லை. தபால்கள் வந்து விடுகின்றன.
எல்லாமே இயந்திர மயமாகிப் போன உலகில் தபால்களும் அப்படியே ஆகிவிட்டன.
ஒரு தபால்கார்டு தந்த சந்தோஷம் இப்போது எஸ் எம் எஸ்ஸில் கிடைக்கவில்லை.
நானும் நண்பர்களும் தொடர்ச்சியாய் எழுதிக் கொண்ட தபால்களில் (சில சமயங்களில் ஒரே நாளில் 1,2,3 என்று எண்ணிக்கையிட்டு தொடர் கடிதங்கள்) அதிலும் வித்தியாசப்படுத்தி எழுதிய கடிதங்கள்..
இப்போதும் எனக்குக் கடிதம்தான் எழுதுவேன் என்றிருக்கிற சில உள்நாட்டு அயல்நாட்டு நண்பர்களின் பிடிவாதத்தால் என் மேஜை மீது விதவிதமான கையெழுத்துக்களைப் பார்க்க முடிகிறது.
ஓய்வு பெற்ற சில தெரிந்த தபால்காரர்களைப் பார்க்கும்போது 'தம்பி.. நல்லா இருக்கீங்களா.. இப்பவும் எழுதிகிட்டு இருக்கீங்களா' என்று ஞாபகப்படுத்தி கேட்கும்போது எனக்குள் லேசாக ஏதோ தளும்புகிறது.
தங்கள் சர்வீஸை ஒரு அழகியலாக செய்து விட்டுப் போன / செய்து கொண்டிருக்கிற அத்தனை தபால்காரர்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

October 13, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு

திருவரங்கம் ஒரு பார்வை

முன்னாடி மதில் காவிரி சோலைகள்.. இப்ப ப்ளாட்ஸ்.. அதெல்லாம் சரி. ஊருக்குள்ள வந்தாலே ஒரு நிம்மதி ஃபீல் பண்றீங்களான்னு கேட்டா நூத்துக்கு 99 பேர் யெஸ்னு சொல்வாங்க.

என்ன பியூட்டின்னா முன்னை விட இப்பல்லாம் நிறைய தொந்திரவுகள். பர்ஸ்ட் கொசு.. கொசுப்படைன்னே சொல்லலாம்.

மருந்து அடிக்க கார்ப்பரேஷனுக்கு மறதி. ஆனா மறக்காம இனவிருத்தி பண்ற கொசு!

கதவை எல்லாம் மூடி வச்சாக்கூட ஹேங்கர்ல தொங்கற சட்டையை ஆட்டினா 100 கொசு பறக்கும்.

அப்புறம் மழையே இல்லை!

காவிரிக்கு அந்தப் பக்கம் அடிக்கற மழை கூட இந்தப் பக்கம் சொட்டு சொட்டா தெளிச்சுட்டு போவுது. வருஷத்துல 6 மாசம் வெய்யில். மீதி 6 மாசம் கடுமையான வெய்யில்.

கந்தக பூமிடா இதுன்னு எதிர் வீட்டு பாட்டி சொல்றப்ப 'ஆன்னு' வாயைத் திறந்துகிட்டு கேட்டது ஞாபகம் வருது.

அதுக்காக பன்மாடிக் குடியிருப்புகள் விற்பனை குறையுதான்னா 'நோ'

பூமி பூஜை போடறப்பவே எல்லா வீடும் புக் ஆயிருது.

லிப்ட் இருக்கா.. கார் பார்க்கிங்க் இருக்கா.. ஹாஸ்பிடல் வசதி பக்கத்துல இருக்கானு வயசான கூட்டம் ஒண்ணு வந்து செட்டில் ஆயிருக்கு.

வருஷம் முழுக்க ரெங்கா (ஸ்ரீரெங்கநாதர் தான்) ஸ்ரீரங்கம் முழுக்க கவர் பண்ணிடறார். அத்தனை பேரும் அவர் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி தெருவுல போகறதைப் பார்த்தா ஸம்திங்க் இருக்குன்னு தோணுது.

கடவுள் இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட நாலு தெருவையும் விடியற்காலையில சுத்தி வரதைப் பார்க்கலாம்!

ஸோ கால்டு கழகக் கண்மணிகள்!

டாக்டர் அட்வைஸ். டிராபிக் ரோட்டுல போனா அடிபட்டுக்குவோம்னு பயமோ.. இல்ல.. பொல்யூஷன் பிரச்னையோ.. சித்திரை வீதி.. உத்திரை வீதில ஜாம் ஜாம்னு நடக்கலாம்.

வாக்கிங்க் ப்ளஸ் புண்ணியம்னு ஆத்திகக் கூட்டம் கணக்கு போடற மாதிரி நாத்திகக் கூட்டமும் நாசூக்கா நடக்குது.

மழையே வராதுன்னு கார்ப்பரேஷன் முடிவு கட்டிட்ட மாதிரி தெருவுல மண்ணே இல்லாம காங்கிரீட் ரோடு போட்டாச்சு.

மழை நீர் சேகரிப்புன்னு கண்டு பிடிச்ச நல்ல விஷயத்தையும் ஊத்தி மூடியாச்சு.

திடீர்னு ஏதோ ஒரு பேர்ல கூண்டு வச்சு செடி வளர்த்து மரமாக்கி அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வெட்டிப் போடற வித்தை மனுஷங்களுக்குத்தான் சாத்தியம்.

வீதிகள்ல இந்தக் கொடுமை அரங்கேறினதைப் பார்க்கறப்ப 'வளர்ப்பானேன்.. வெட்டுவானேன்னு' தோணும்.

இவ்வளவும் மீறி எப்பவோ தீர்மானிச்ச சட்ட திட்டங்கள் ஸ்ரீரங்கத்தைக் காப்பாத்துது இன்னமும்னு நினைக்கறப்ப (அதுக்கும் அப்பப்ப சவால் வருது) ஒரு பெருமூச்சு ரிலீஸ் ஆகறதைத் தடுக்க முடியல.

அப்படின்னா ஸ்ரீரங்கம் பத்தி நல்ல விஷயமே இல்லியான்னு நினைச்சிராதீங்க. நான் சொல்ற இந்த கம்ப்ளெயிண்ட்ஸ் எல்லா ஊருக்கும் பொதுதானே!

அப்பப்ப ஸ்ரீரங்கம் பத்தி பேசுவோம்...

October 10, 2009

நாய் வளர்ப்பவர்கள்

என்ன யோசிக்கிறீங்க? டைட்டில் பார்த்து குழப்பமா? உங்க வீட்டுல வளர்க்கறீங்களா.. அப்ப மேல படிக்காதீங்க.. என்னை மாதிரியே நாய் பத்தி கொஞ்சம் பயந்த சுபாவம் இருக்கறவங்க மட்டும் கண்டின்யூ பண்ணுங்க..

என் நண்பனைப் பார்க்க பல்லாவரம் போனப்ப (ரொம்ப நாள் முன்னாடி) நான் காலிங் பெல் அடிச்சதும் உள்ளேர்ந்து ஒரு குறைப்பு சத்தம்.. அவ்வளவுதான் ஜகா வாங்கிட்டேன்..

கதவைத் திறந்து வெளியே வந்தவன் 'பயப்படாம உள்ளே வான்னான்'.. 'ஒண்ணும் பண்ணாதே'- இது நான்.

'கிட்டக்க வந்து மோந்து பார்க்கும்.. பிடிக்கலேன்னாதான் கடிக்கும்'.

'நீ கட்டிப் போடு.. உள்ளே வரேன்.. இல்லே இப்படியே திரும்பிப் போறேன்' பத்தாண்டு கால நட்பை கடாசி விட்டு கிளம்ப எத்தனித்தபோது நணபன் மனசு மாறிவிட்டது.

பால்கனியில் கட்டிப் போட்டு விட்டு உள்ளே அழைத்தார்கள். நான் பேசி விட்டு கிளம்பும் வரை அதன் கத்தல் ஓயவில்லை.

நண்பனுக்கு மணமான புதுசில் இந்த என் அனுபவம். பிறகு அவனே ஒரு கதை சொன்னான்.

அவனுக்குக் குழந்தை பிறந்ததும் அவன் மாமனார் வீட்டில் நாயை கொண்டு எங்கோ விட்டுவர முடிவெடுத்தார்களாம். வேறு யார் மீதாவது பாசம் காட்டினால் அதற்குப் பொறுக்காதாம். அததனை பொஸசிவ்!

குழந்தையைக் கொஞ்சிய மாமனாரைக் கடித்து விட்டதாம்.

அவர் குரோம்பேட்டில் விட்டுவிட்டு எலக்ட் ரிக் ரெயிலில் வீடு திரும்புவதற்குள் அது கால் நடையாய் வீடு வந்து விட்டது!

அப்புறம் மடிப்பாக்கம் கொண்டு போய் விட்டாராம்.

'அது எங்க வீட்டுல ஒரு குழந்தை மாதிரி' என்று கண்ணீர் விட்டாராம் மாமனார்.

இதே போல இன்னொரு வீட்டிலும் சொன்னார்கள். சொன்னது வயசான மாமி. அவர் கல்யாணமாகி வந்த போது அவரிடம் சொல்லப்பட்டது. புகுந்த வீட்டில் நாயை அறிமுகம் செய்து 'இதுவும் உனக்கு ஒரு மச்சினன் மாதிரிதான்..' என்றார்களாம்.

மாமி சிரிக்காமல் சொன்னாள். எனக்கு நினைத்து நினைத்து புரையேறியது. தெருவில் நிறைய பேர் நாயுடன் வாக்கிங் போவதைப் பார்த்திருக்கிறேன். நாய் எந்த ஜாடையில் இருக்கிறதோ அதே ஜாடையில் கூட்டிப் போகிறவர் முகமும் இருக்கிற பிரமை எனக்குள் எழுவதைத் தடுக்கவே முடியவில்லை! அதன் விஸ்வாசம் பற்றி நிறைய கதைகள்.

இன்னொரு நண்பன் வீட்டில் என்னை முகர்ந்து பிறகு அனுமதித்த டோனி மறுபடி ஆறு மாசம் கழித்துப் போனபோது சின்ன அசைவு கூட இல்லாமல் லேசாய் கண் திறந்து பார்த்து அனுமதித்தபோது 'நல்ல நாய்களும் ஜகத்தில் உண்டு' என்று அறிந்தேன்.

வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பைக் கடித்து உயிர் விட்ட நாய்கள் பற்றி செய்திகளில் படித்திருக்கிறேன்.

இரண்டாவது மாடியில் பாம்பு வரும் வாய்ப்பு இல்லாததாலோ என்னவோ நாய் பற்றி என் விமர்சனம் துணிச்சலாய் வெளியாகிறது.

இதைப் படிக்கிற (நாய்) அபிமானிகள் 'வள்'என்று விழாமல் என் பயம் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு, நாய் மீது தனிப்பட்ட எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாத நான்!

October 05, 2009

திருமங்கை

திருமங்கை ஆழ்வார் பற்றிய குறிப்பு என்று நினைக்க வேண்டாம் அவர் பற்றியும் ஒரு தகவல் பின்னால் வரும்.


ஸ்ரீரங்கவாசியான என்னைப் போல பலர் தினமும் காவிரிக்கு செல்வார்களா என்கிற சந்தேகம் உண்டு. நான் போவதில்லை. அதற்குக் காரணம் ஒன்று நேரமில்லை அப்புறம் சோம்பேறித்தனம்.


ஸ்ரீரங்கம் பற்றி தெரியாதவர்களுக்கு சின்ன குறிப்பு. நகரின் இரு புறமும் மாலையாக காவிரி நதி ஓடுகிறது. தெற்கே அதன் பெயர் காவிரி. வடபுறம் கொள்ளிடம். அம்மாமண்டபம் பக்கம் காவிரி நீர் குளிக்க அத்தனை சுத்தமாய் இல்லை என்று என்னைப் போல சில பலர் கொள்ளிடம் பக்கம் (வடக்கே) போவோம். அதாவது எனக்கு மூட் வரும்போது.


அம்மா காலமானதும் வேறு வழியே இல்லாமல் கொள்ளிடம் குளியல் பத்து நாட்களில். அப்புறம் தொடர்ச்சியாய்.


இப்போது திருமங்கை ஆழ்வார் பற்றி. ஆழ்வார்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் அவர். ஹீரோ. கடவுளுடனே சண்டைக்குப் போனவர். 'நகையைக் கழற்று' என்று மிரட்டியவர். அவர் ஸ்ரீரங்க நகரை ஒரு காலத்தில் நிர்மானித்தவர். மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லாட்டி மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் சின்ன வயசில் ஒரு கதை எனக்கு சொல்லப் பட்டது. அது நிஜமா என்று தெரியாது. செய்திருக்கக் கூடியவர் என்கிற தடாலடி இமேஜ் எனக்கு அப்போது இருந்தது.


கொள்ளிடம் இப்போதும் ஸ்படிகமாய் நீர். குளிக்க பரம சுகம். நீரில் அமிழ்ந்தால் எழுந்து வர மனசே இராது. ஆனால் போகும் பாதை அத்தனை சுத்தம் இல்லை. மனிதக் கழிவுகள். செத்துப் போனவர்களின் வாரிசுகளுக்கு மொட்டை போட்டதில் குவியும் முடிக் கற்றை. (அந்த 10 நாட்களும் என் தலையிலிருந்து மழித்த முடியை தினசரி பார்த்துக் கொண்டிருந்தேன்.) எலும்புத் துகள்கள். உடைந்த சட்டிகள். சோற்று பிண்டங்கள். மனசுள் லேசாய் பீதி கிளப்பும். அல்லது அசூயை. இவை எல்லாம் தாண்டி தண்ணீருக்குள் இறங்கி விட்டால் அந்த நீர் தரும் சுகம்.


ஸ்ரீ ரெங்கனாதருக்கு திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) நீர் இங்கிருந்தும் கொண்டு போவார்கள்.


கொள்ளிடம் முழுக்க புதர் மண்டி வெள்ள காலங்களில் (!) நீர் சேகரிக்க அத்தனை ஆயத்தமாய் இல்லை. நாம் நதியைக் கெடுக்கிறோம் என்பதை மனசாட்சியுடன் ஒப்புக் கொள்ள வேண்டும்.


தெற்கே அம்மாமண்டபம் போகுமுன் திருமஞ்சனக் காவிரி என்று ஒன்று உண்டு. வாய்க்கால் போல. அங்கிருந்துதான் முன்பு அபிஷேக நீர் கொண்டு வரப்படுமாம். இப்போது அது சாக்கடை!


கொள்ளிடத்திற்கு உத்தமர்கோவில், சமயபுரம், அன்பில் கடவுளர்கள் எல்லாம் வருகிறார்கள். முழங்கால் நீரில் இறங்கி நடந்து போகும் போது பிள்ளைகள் போடும் சத்தம்.. ஆற்றின் நடுவில் மணல் திட்டில் கடைகள்.. பிரசாதங்கள்..கூடாரத்தில் உள்ளே உற்சவ மூர்த்திகள்.. விளக்கு வெளிச்சத்தில் பூலோக சொர்க்கம்!


ஒவ்வொரு வருடமும் ஏதாவது திருவிழா ஆற்றங்கரையில் நடக்கும்போது நீரின் ஸ்பரிசம் படும்போது ஸ்ரீரங்கத்தில் இருப்பதின் ஜென்ம சாபல்யம் புலனாகிறது.


என் குடியிருப்பின் பெயர் 'திருமங்கை பிளாட்ஸ்'! இதுவும் தற்செயல்தான்.


108 வைணவத் திருப்பதிகளில் அதிகம் விஸிட் செய்தவர் திருமங்கை ஆழ்வார். இரண்டு முறை போனதாகவும், இரண்டாம் முறை அவரால் முழுமையாய்ப் போக முடியவில்லை என்று ஒரு தகவல் எனக்கு சொல்லப் பட்டது.


ஸ்ரீரங்கம் பற்றி ஏதேனும் ஒரு பதிவு செய்ய ஆசை. ஸ்ரீரங்கனாதர் கிருபை இருந்தால் அது சாத்தியமாகலாம்!

October 01, 2009

தகவல் தொடர்பு

தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க..

என்னைப் பார்த்து என் நண்பர் கேட்ட கேள்வி இது. வேறு ஒன்றும் இல்லை. நகராட்சிப் பூங்காதான் கதி என்று ஆகிவிட்ட விஆரெஸ் ஆத்மா நான்.

ஓய்வு பெற்ற நாளில் எனக்கு மலர்க் கிரீடம் என்ன.. மாலைகள் என்ன.. 5000 வாலா வெடிச் சத்தம் என்ன.. பாண்டு வாத்தியம் முழங்க என்னை வழி நடத்தி அழைத்துப் போனபோது ஒரு அரசியல் கட்சியே ஆரம்பித்து விடலாம் என்கிற நப்பாசை வந்தது. (வந்த கூட்டம் பிரியாணியைத் தின்றதும் கலைந்து போய் விட்டது)

பூங்காவில் என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு (அதாவது ஜானகி-என் மருமகள்- நான் கேட்காமலே சுடச் சுட போண்டா-பொன்முறுவலாய், அல்லது பஜ்ஜி-அதற்குள் வெங்காயமா, உருளைக் கிழங்கா, கத்திரிக்காயா என்று சூடு பொறுக்காமல் கடித்துக் கண்டு பிடிக்கும் துப்பு.. ஆஹா.. அப்புறம் டிகிரி காப்பி தருவதாய்க் கற்பனை!) உட்கார்ந்திருந்தபோது இன்னொரு வயசான ஆத்மா எனக்கு அறிமுகமானார்.

அவர் 1946 நவம்பர் என்றும் நான் 1945 ஜனவரி என்றும் தெரிய வந்தபோது அவர் முகத்தில் தான் என்ன பிரகாசம். நான் அவரைவிட வயசாளியாம். பேச்சு நடுவே 'மாமா' என்றாரே பார்க்கலாம்.

திடீரென ஒரு மியூசிக் கேட்டது. 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..' பைக்குள் கைவிட்டு கைபேசியை (செல்போன் தான்) எடுத்தார். 'ஆங்.. அப்படியா.. சரி..' என்று பத்து நிமிடம் பேசிவிட்டு வைத்துக் கொண்டார். என்னைப் பார்த்தார்.

"கையில போன் இருந்தாலே வசதிதான்" தலையாட்டினேன். எத்தனை வருடப் பிராக்டிஸ்!

"நீங்க என்ன ஹச்சா.. டாடாவா"

என்னை ஏதோ டாடாவா பிர்லாவா என்று கேட்ட மாதிரி மிரண்டு போனேன். அப்புறம் என் பேத்தி சொன்னது ஞாபகம் வந்தது.

'தாத்தா.. ஏர்செல்..ஏர்டெல்..பிஎஸ்என்எல் எது வச்சிருந்தாலும் 'ஹச்'சுனு தான் தும்ம முடியும். தெரியுமா'

"ஹி..ஹி.. நான் செல் வச்சுக்கலே. லேண்ட்லைன் தான்"

என்னை தப்பாய் லேண்ட் ஆன பிளேன் போலப் பார்த்தார்.

"தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க"

"எங்க வீட்டு வேலைக்காரி இருக்காளே"

மனுஷருக்கு சிரிப்பே வரவில்லை.

"இங்கே பாருங்க.. வர வழியில.. எத்தனை பேரைப் பார்த்திருப்பீங்க. யாராச்சும் செல் இல்லாம இருக்காங்களா.. அடடா.. என்ன மனுஷன் நீங்க. கிராமத்துலயே இப்ப செல் எல்லார் கையிலயும் இருக்கு. முதல்ல ஒரு செல்லை வாங்குங்க.. நம்பரைக் கொடுங்க எனக்கு"

"நாமதான் டெய்லி நேர்லயே பார்த்துக்கிறோமே"என்றேன் அப்பாவியாய். "நடுராத்திரி எனக்கு உங்ககிட்டே பேசணும்னு தோணிச்சுன்னா.. அவ போனதுக்குப் பிறகு என் பக்கத்துல எப்பவும் செல் இருக்கும். படுத்துக்கும்போது கூட"

"சரி" என்று தலையாட்டினேன்.

வீடு திரும்பும் வரை அதே நினைப்புத்தான். என் மருமகளிடம் சொன்னேன். "நான் ஒரு செல் வாங்கிக்கவா"

"எவரெடியா.. டியூரோ செல்லா"

"ஃபோன்.. செல்போன்"

"எதுக்கு"

"சும்மா.. "

மகனுக்குத் தகவல் போய் விட்டது. என்னுடைய தகவல் தொடர்பு சாதனம் என் மருமகள்தான். ஆபிசிலிருந்தே பேசினான்.

"ஹலோ.. "

"என்னப்பா.. செல் வேணுமா"

"ம்"

"நான் வரப்ப கார்டு போட்டுக் கொண்டு வரேன். பிரீபெய்டா.. போஸ்ட்பெய்டா.. எது வேணும்"

ஹோட்டலில் சாதாவா, ஸ்பெஷலா என்று கேட்டாலே குழம்பிப் போவேன் எதைச் சொல்வதென்று.

"நீயே முடிவு பண்ணுடா. எது பெட்டர்னு"

சின்ன வயதிலிருந்து அவன் எதைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வேன். 'நீ முடிவெடு' அவனும் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வான். 'எங்கப்பா என்னைத் தானே முடிவெடுக்கிற மாதிரி வளர்த்தார்' அவனுக்குத் தெரியாது, என் பிரச்னை. என்ன முடிவெடுப்பது என்பதில் எனக்கு எப்போதும் குழப்பம். வந்து விட்டது என் கைபேசி.

கையில் வாங்கியபோதே லேசாய் பயம். தொட்டால் ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு பிரமை. அதன் உபயோகங்களை விவரித்தான். அட்சரம் புரியவில்லை. "இந்த நம்பரைக் கூப்பிடுடா"

"ஏய்.. பானு இந்தா.. தாத்தாக்கு ஹெல்ப் பண்ணு"

பேத்தி கையில் கொடுத்து விட்டுப் போய் விட்டான்.

"தாத்தா.. என்ன நம்பர்"

நான் டைரியைத் தேடி சொல்வதற்குள் அவள் மூன்று பேரிடம் பேசிவிட்டாள்.

"ஏய்.. சனியனே.. இந்த நம்பருக்கு பேசு. என்கிட்டேதான் இருக்கும்."

"போடி நாயே.. நேத்திக்கு திரும்பிப் பார்க்காம போனியே.. நீ பேசினாத்தான் நானும் பேசுவேன்.. நம்பரைக் குறிச்சுக்க"

"லூசு.. எங்கேடி உன்னை டியூஷன்ல காணோம்.. இப்பதான்
அவங்ககிட்டே நம்பரைக் கொடுத்தேன்.. உனக்கு செல் இருக்கே.. நம்பர் அதுலயே இப்ப வந்திருக்குமே.. பண்றியா"

"சொல்லுங்க தாத்தா.." என்றாள் பதவிசாய்.

சொன்னேன்.

"இந்தாங்க.. ரிங் போவுது"

"ஹலோ.. நாதான்.. செல் வாங்கிட்டேன்"

எதிர்முனையில் என் நண்பர் பேசியது சரியாகக் கேட்கவில்லை.

"ஹலோ.. ஹலோ.. "

"தாத்தா.. வாசலுக்குப் போங்க.. டவர் கிடைக்கலை போல இருக்கு"

அப்படியே நகர்ந்து நகர்ந்து ரோட்டிற்கே போய் விட்டேன். இன்னும் கொஞ்ச தூரம் போனால் பூங்கா!செல்லை அணைத்து விட்டு பூங்காவில் நுழைந்தேன். நண்பர் உட்கார்ந்திருந்தார். 234 தொகுதிகளையும் கூட்டணி இல்லாமலேயே ஜெயித்த தலைவர் மாதிரி அவரைப் பார்த்தேன்.

"ஏன் திடீர்னு கட் பண்ணிட்டீங்க" என்றார்.

"டவர் கிடைக்கலே"

"இப்ப பேசுங்க"

'நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்று கேட்டது.

அதை எங்கே வைத்துக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் நண்பர் வழங்கினார். 'ஷர்ட் பாக்கட் வேணாம். ஹார்ட் பக்கத்துல. அப்புறம் பேண்ட் பாக்கட்ல வேணாம். ஆண்மை பாதிக்குமாம்.(!) வைப்ரேஷன்ல வைச்சா பிரச்னை..' இத்யாதி. அப்புறம் எதுக்கு இதை வாங்கணும் என்கிற கேள்வி என் நாக்கு நுனி வரை வந்து விட்டது.

"எல்லார்கிட்டேயும் நம்பரைக் கொடுக்காதீங்க. வீண் தொந்திரவு" என்றார்.

ரிங் கேட்டது.

"எஸ் எம் எஸ் வருது" என்றார்.

எடுத்துப் பார்த்தேன். எப்படிப் பார்ப்பது என்று புரிபடாமல். கையில் வாங்கி படபடவென்று ஏதோ செய்தார்.

"இப்ப படிங்க"

'ஏண்டி லூசு.. நாளைக்கு ஸ்கூலுக்கு வரியா.. லீவா' பேத்திக்கு வந்த மெசேஜ்! "எப்படி பதில் தரணும்னு தெரியுமா"

"வேணாம்" என்றேன் அவசரமாய்.

"உங்க போனைக் காண்பிங்க" என்றேன்.

"ப்ச்.. சார்ஜ் பண்ண மறந்துட்டேன். " என்றாரே பார்க்கலாம்!

September 26, 2009

அரங்கன் திருமுற்றம்

"மாறா.."
பொன்னாச்சியின் குரல் மிக சன்னமாகத்தான் கேட்டது.
அம்மாவின் குரல் கேட்டு நப்பின்னை, மாறன் இருவருமே ஓடி வந்தார்கள்.
"அம்மா"
"நாம் தயாராக இருக்க வேண்டும். நம் ஸ்வாமி இன்று திருவரங்கம் திரும்புகிறார். அப்பா இப்போது வந்து விடுவார்."
குரல் இனிமை. மாறன் சொன்னான்.
"அம்மா நீங்களும் அழகு.. உங்கள் குரலும் அழகு"
நப்பின்னை சொன்னாள்.
"நானும் அம்மாவைப் போலவே அழகு"
"பேசாதே.. அம்மாவின் அழகுக்காகவே அப்பா அம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டார் தெரியுமா"
அந்தக் கதை இருவருக்குமே தெரியும். இருந்தாலும் கேட்க கேட்க அலுப்பதில்லை இருவருக்கும்.
"அம்மா.. சொல்லுங்கள்.. அப்பாவுக்கு உங்கள் மேல் எப்படி பிரியம் வந்தது.."
இரு குழந்தைகளுக்குப் பின்னும் பொன்னாச்சியின் முகத்தில் வெட்கம்.
"என் கண்கள் அழகு என்று அப்பா சொல்வார்.. என் பின்னேயே வருவார் எப்போதும்.. நான் கோவிலுக்குப் போனாலும் விடுவதில்லை. மணல்வெளியில் நான் நடக்கும்போது நடைபாவாடை விரித்து எனக்குக் குடை பிடித்து அழைத்துப் போவார்.. "
பொன்னாச்சியின் கண்களுக்குள் பழைய நினைவுகளின் ஊர்வலம்.
"அப்புறம் அம்மா.." நப்பின்னை அவசரப் படுத்தினாள்.
"நம் ஸ்வாமி ஒரு நாள் இதைப் பார்த்து விட்டார்.. யார் இவர்.. ஒரு பெண்ணின் பின்னே இப்படி லஜ்ஜை இல்லாமல் செல்கிறார்.. என்று விசாரித்து இருக்கிறார். அப்பாவைப் பற்றி கேள்விப்பட்டதும் தம்மிடம் அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.. அந்தப் பெண்ணிடம் எதைக் கண்டு இப்படி மையல் கொண்டீர் என்று கேட்டாராம்.. என் கண்ணழகைப் பற்றி சொன்னதும் அதை விட அழகான கண்களைக் காட்டிக் கொடுத்தால் உம் மனசு மாறுமா என்றாராம்.. அப்பா என்மீதான பிரியத்தில் அலட்சியமாய் சொன்னாராம்.. பொன்னாச்சியின் கண்களை விட அழகு இவ்வுலகில் இல்லவே இல்லை.. அப்படி நீர் காட்டினால் நான் உமக்கு அடிமை.."
மாறன் குறுக்கிட்டான்.
"அப்பா அப்போதுதானே அரங்கனை சேவித்தார்.."
"பாருங்களம்மா.. இவர் குறுக்கே பேசுவதை"
நப்பின்னைக்குக் கோபம்.
பொன்னாச்சி அவர்கள் சண்டையை ரசித்துக் கொண்டே சொன்னாள்.
"ஸ்வாமி அப்பாவை அரங்கன் மூலஸ்தானத்திற்கு அழைத்துப் போனார்.. பட்டர் ஸ்வாமியிடம் தீபம் காட்டச் சொன்னார்.. அதோ பாரும்.. உம் துணைவியின் கண்களை விட அழகான கண்களை.."
"அப்பா பார்த்தாராம்மா"
"ம்ம். நம் ஸ்வாமி சொல்லும்போது அந்த ஞானக் காட்சி கிடைக்காமலா இருந்திருக்கும்.. நம் அப்பா அரங்கனின் தாமரைக் கண்களைப் பார்த்து விட்டார்.. இந்தப் பொன்னாச்சியின் கண்களை விட அழகாய்.. இந்தப் பொன்னாச்சிக்கே அழகைக் கொடுத்த அமுதனின் கண்களை.."
"அப்புறம்தான் நீங்கள் ஸ்வாமிக்கே உரிமையாகி விட்டீர்களாம்மா"
"நாம் எல்லோருமே ஸ்வாமிக்கே உரிமைதான் மாறா.."
நப்பின்னை சொன்னாள்.
"அம்மா.. நம் ஸ்வாமியை நான் எப்படி கண்டு கொண்டேன் தெரியுமா"
மாறன் கேலியாகச் சிரித்தான்.
"ஸ்ஸ்.. மாறா கேலி செய்யக் கூடாது தெரியுமா.. "
"இல்லையம்மா.. இவர்கள் செய்த கூத்துதான் தெரியுமே.."
"சொல்லட்டுமே.. நம் ஸ்வாமியின் பெருமைதானே"
மாறன் பாதி விளையாட்டாய் வாய் பொத்தி நின்றான்.
"நாங்கள் தெருவில் மணலால் கோவில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம் அம்மா.. அரங்கனை எழுந்தருளப் பண்ணி, ஆலவட்டம் ஸமர்ப்பித்து, தூப தீபம் காட்டி, அமுது படைத்தோம்.."
"என்ன பிரசாதம் நப்பின்னை" மாறனின் கேலிக் குரல்.
"மணலில் தானே விளையாடுகிறோம்.. கொஞ்சம் மண்ணையே எடுத்து அமுதாகப் படைத்தோம் அம்மா.."
நப்பின்னையின் குரலில் ஆழ்ந்த நம்பிக்கை.
"அப்போது நம் ஸ்வாமி உஞ்சவிருத்தி வந்து கொண்டிருந்தார்.. அரங்கனின் முன் அழைக்கும் பாவனையில் ஜீயா என்றழைத்து விட்டேன் அம்மா.. "சொல்லும்போதே நப்பின்னையின் குரல் நடுங்கியது. மாறனிடமும் அமைதி. பொன்னாச்சி உணர்ச்சியில் கண் கலங்கி விட்டாள்.
"நம் ஸ்வாமி என் எதிரில் வந்து குனிந்து மண் பிரசாதம் ஏற்றுக் கொண்டார் அம்மா.. "
மூவரும் அழுதே விட்டார்கள். எதிரில் பிள்ளைஉறங்காவில்லிதாசன் வந்து நின்றது கூடத் தெரியாமல். மாறன் கவனித்து விட்டான்.
"அப்பா வந்து விட்டார் அம்மா"
"என்ன செல்லங்களா.. அம்மாவை ஏன் கலங்க வைத்து விட்டீர்கள்.."
"நம் ஸ்வாமி பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தோம்.. அப்பா.. அவர் உங்கள் கரம் பற்றித்தானே திருக் காவிரி ஸ்நானம் செய்து விட்டு வருவார்.." தகப்பன் பெருமை குரலில் வழிந்தோடியது இருவருக்கும்.
"ம்ஹும்.. அபச்சாரம்.." என்றான் உறங்கா வில்லிதாசன் பதட்டமாய்.
"அம்மா.. நாங்கள் சொன்னது சரிதானே.."
பொன்னாச்சி கணவனைப் பார்த்தாள். அவனிடம் இன்னும் பதட்டம் தணியவில்லை. கர்வம் அற்று இருந்தவனுக்குக் கிட்டிய பரிசு அது. எப்படி அதைப் பெருமையாய் சொல்லிக் கொள்வது. இராமானுஜர் காவிரிக்கு நீராடச் செல்லும்போது முதலியாண்டானையும், நீராடியபிறகு வில்லிதாசனையும் பற்றி நடப்பது வழக்கம். மற்றவர்கள் கேட்டபோது சொன்னார். 'என்ன இருந்தாலும் குலப் பெருமை முதலியாண்டானுக்கு உண்டு..அந்த தோஷமும் வில்லிதாசருக்கு இல்லையே..'
அப்பாவின் சங்கடம் தீர்க்க நப்பின்னை மாறனைக் கேலி செய்ய முனைந்தாள்.
"நம் மாறன் தானே பிரசாதத்தைத் துப்பியது.."
மாறனின் முகத்தில் கூச்சம் அப்பிக் கொண்டது. அரங்கனின் பிரசாதம் என்று அப்பா கொடுத்ததை வாயிலிட்டுக் கொண்ட மறு வினாடி தன்னையும் மீறி உமிழ்ந்து விட்டான். 'உவ்வே..' சிறு வயது. அப்பாவின் அடி விழுந்ததும் என்ன செய்கிறோம் என்று அறியாமல் உடையவர் திருமாளிகைக்குள் ஓடிப் போனான். பின்னாலேயே தனுர்தாசனும், பொன்னாச்சியும்.
"ஸ்வாமி.. அப்பா அடித்து விட்டார்.."
நமக்கெல்லாம் ஸ்வாமியே.. என்று அப்பாவும் அம்மாவும் சொல்லியிருப்பது பொய்யாகுமா. அவர் முன்னே செல்வதுதானே முறை என்று அந்த பிஞ்சு உள்ளம் நினைத்து விட்டது.
உடையவர் முன்னிருந்தவர்கள் பதறிப் போனார்கள். ஏற்கெனவே வில்லிதாசனுக்கு உடையவரிடம் இருக்கும் அபிமானம் பொறாமையைத் தூண்டியிருந்தது.
'என்ன வளர்த்திருக்கிறான்.. பிள்ளையை.. சீச்சீ..'
உடையவரிடம் நிதானம்.
"சொல்லப்பா.. யார் அடித்தார்கள் உன்னை"
"நான் மாறன்.."
திருவாய்மொழிக்கு அடிமையான உடையவரின் நெஞ்சுள் கசிவு. மாறன் சடகோபனுக்கு அடியா..த்ரிதண்டம் ஏந்தி எழுந்து நின்றே விட்டார்.
"யார்..அடித்தது இந்தப் பிள்ளையை"
வில்லிதாசனும் பொன்னாச்சியும் அப்படியே அவர்முன் நிலத்தில் வீழ்ந்தார்கள்.
"என்ன குற்றம் செய்தான்"
"அரங்கன் பிரசாதம்.. துப்பி விட்டார்"
வில்லிதாசன் குரலில் நடுக்கம். சொல்லவே கூசியது.
"ஏனப்பா அப்படிச் செய்தாய்.."
"நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. உங்களுக்கே தெரியும்.. பாவம் அரங்கன்.. எப்படித்தான் இப்படி அமுது செய்கிறாரோ.. எங்கள் அம்மா இதை விடவும் நன்றாக அமுது படைப்பார்"
பயமறிந்திருக்கவில்லை.உடையவர் ஏற்கெனவே கிலேசப்பட்டிருந்ததுதான். அரங்கனுக்கு திருமடப்பள்ளியிலிருந்து வரும் பிரசாதங்கள் சரியாக இல்லை.. பரிசாரகர்களிடம் நிலவிய அலட்சியம்.. சுத்தமின்மை.. ப்ரபோ.. ஒரு குழந்தைக்குக் கூட உன் சந்நிதி பற்றி தெரிந்திருக்கிறது.. நிர்வாகக் குறை புரிந்திருக்கிறது.. கோவிலொழுகு செய்ய வேண்டிய கடமை புரிகிறது.. அடியேன் ஏன் வாளாவிருந்து விட்டேன்..
பிறகு இராமானுஜர் திருமடப்பள்ளி சீர்திருத்தம் செய்ய முனைந்ததும், பிடிக்காதவர்கள் அவருக்கு விஷமிட்டு பிக்ஷை அளிக்க முயன்றதும், மனம் வருந்தி திருவெள்ளரைக்கு உடையவர் சென்றதும் பழைய நிகழ்ச்சிகள். இன்று மீண்டும் உடையவர் திரும்பி வருகிறார். அதுவும் அரங்கனின் கட்டளையால். அகளங்காழ்வானையும், திருவரங்கத்து அரையர் ஸ்வாமியையும் அனுப்பி மறுபடி இரண்டு வருட காலத்திற்குப் பிறகு உடையவரை திருப்பி அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். பட்டர் ஸ்வாமி அரங்கனின் கட்டளையை சொன்னபோது அரையருக்குத் தயக்கம்.
"வருவாரா நான் அழைத்தால்"
"திருவாய்மொழி சாதியும் (சொல்லும்) வருவார்.. என்று அரங்கன் சொன்னார்"
"திருவாய்மொழியா.. தெருவிலா"
வழக்கத்தை எப்படி மீறுவது என்கிற பதட்டம் இப்போது அரையருக்கு. நாலாயிரத்தில் திருவாய்மொழி மட்டும் வீதியில் சேவிப்பதில்லை (சொல்வதில்லை).
"உடையவருக்காக விதிகளை மீறலாம் என்றே அரங்கன் அருள்வாக்கு"
அப்புறம் என்ன. கிளம்பிப் போனார்கள். திருவெள்ளரையில் உடையவர் முன் அரங்கன் பிரசாதம் தந்து விட்டு சட்டென அரையர் திருவாய்மொழி சேவித்தபடி பின்னாலேயே நடந்து வர.. பாசுரத்தில் கட்டுண்டு இராமானுஜர் அப்படியே தொடர்ந்து வர.. முழு தூரமும் அரையர் பின்புறமாகவே நடந்து வந்தது வரலாற்று செய்தி.
அரங்கன் முன் பரிசனங்கள் கூடி விட்டார்கள். வில்லிதாசனும் பொன்னாச்சியும் நப்பின்னையும் மாறனும் உடையவரின் தரிசனம் திரும்பப் பெறப் போகும் மகிழ்வில் உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார்கள். அரையர் உடையவரைப் பார்த்தபடியே நடந்து வர.. பின்னாலேயே ஜோதிப் பிழம்பாய் இராமனுஜர்.
அரங்கன் சன்னிதானம் முன்பு வரும்போது மிகச் சரியாக
'இன்னுயிர்ச் சேவல்..' பாசுரம்.
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில்பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக்கூவுகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?

தலைவனைப் பிரிந்த தலைவி அவனை நினைவூட்டும் பொருட்களிடம் பிரிந்த துயரைச் சொல்லி பிரிவாற்றாமையால் புலம்பும் பாசுரம்!
திருமணத் தூணைப் பற்றிக் கொண்டு உபய விபூதியையும் அரங்கன் அருளால் பெற்ற உடையவர் கண்ணீர் மல்க நின்றபோது அத்தனை பேரும் அரங்கனையும் இராமானுஜரையும் தனியே விட்டு வெளியே வந்து விட்டார்கள்.
'பெருமானே.. நின் சந்நிதி கைங்கர்யம் சரிவர நடைபெறத்தானே அடியேன் அத்தனை ஒழுங்குகளையும் செய்ய முனைந்தேன்.. தேவரீர் இப்படி பரிசாரகர் பக்கம் பட்சமாய் என்னடியார் அது செய்யார், செய்தாகிலும் நன்றே செய்தார் என்றிருப்பது தகுமோ.. அதனாலன்றோ அடியேன் தங்கள் கடாட்சம் விட்டு அப்புறம் போக வேண்டியதாயிற்று..'
உடையவர் மனசுக்குள் அரங்கன் பேசினான்.
'கலங்காதே இராமனுஜா.. நான் ராஜா.. என் குடிமக்கள் என் பாதுகாப்பில் இருப்பவர்கள்.. என்னால் அவர்கள் மனம் நோக எதுவும் செய்ய இயலாது என்பதால்தான் உம்மை நியமித்தேன்.. இராமனாய் அவதாரம் எடுத்தபோது சபரி கையால் உணவருந்தவும், குகன்,சுக்ரீவன், விபீஷணாதிகளுடன் தோழமை கொள்ளவும் எம்மால் முடிந்தது.. அர்ச்சையில் இருக்கும்போது யாம் பட்டர், பரிசாரகர், ஸ்ரீபாதந்தாங்கிகள் இன்ன பிறருக்குக் கட்டுப் பட்டே இருப்பேன்.. என் செளலப்யத்தால்.. உச்சநீதிமன்றமாய் அதற்குத்தான் உம்மை நியமித்தேன்.. நீர் வரையறுக்கிற கோவிலொழுகு இனி எம்மையுமே கட்டுப் படுத்தும்.. எந்த பாகுபாடும் இல்லாமல் நீர் காட்டி வருகிற மனிதநேயம் இனி வருங்காலத்திற்கு ஒரு சாசனமாய் விளங்கும்.. உம்மை இனி எந்தக் காலத்திலும் பிரியேன்.. நீர் பரமபதித்தாலும்!'
அரங்கன் சந்நிதி கிளிகள் 'ரெங்கா.. ரெங்கா' என்று மிழற்ற.. கோவில் மணி தானாகவே ஒலி எழுப்பத் தொடங்கியது ஒரு புதிய சகாப்தத்தின் வரவைச் சொல்ல.