August 04, 2010

கல்யாண விருந்து

"இதுதான் உன்னோட ரூம்" என்று பாலா அடையாளம் காட்டினான்.

கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி இல்லை.

"ஸ்டோர் ரூம் இன்-சார்ஜ்"

தலையில் கிரீடம் வைக்கப்பட்டது.

"டேய் பாலா..."

அவனது மாமா பின்னாலேயே வந்துவிட்டார்.

"என்னடா இது... முதல்லே அவருக்கு டிபன், காபி தருவியா, வந்த உடனே பொறுப்பைத் தலையில் கட்டிக்கிட்டு...''

குறுக்கிட்டேன் .

"நான்தான் விசாரித்தேன். ஸ்டோர் ரூம் எதுன்னு..."

"வாங்கோ. மூணு நாளும் இங்கேதானே நிக்கப் போறேள். மத்தியானம் தான் சாமான் வேன்ல வருது. ராஜப்பா வந்திருவார்... என்ன மெனுன்னு ஒரு தடவை பார்த்திரலாம்"

கல்யாணம் ஒரு பெரிய வீட்டிலும், வந்து இறங்கிய நாங்கள் இன்னொரு வீட்டிலுமாக ஏற்பாடு. எதிர்வீடு மாமாவினுடையதாம். டிபன் சாப்பிடும்போது சொன்னேன்.

"இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், வில்லேஜ்ல மேரேஜ் அட்டெண்ட் பண்றது."

"எனக்கும். தலை சுத்தறது. எது வேணும்னாலும் மூணு கி.மீ. போகணும் டவுனுக்கு. எங்கப்பாவோட பெரிய பிரச்னை. நல்ல வேளை தங்கை கல்யாணம் கிராமத்துலன்னு முடிவாச்சு. எவரெஸ்ட்ல வையின்று சொல்லாம போனார்.."

"கவலைப்படாதே..."என்றேன்.

"எனக்கென்ன... நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும்."

"ஒண்ணும் வேணாம். ஜ கேன் மானேஜ். ரெண்டு நாள் கூத்து."

பாலா தணிந்த குரலில் சொன்னான்.

"இங்கே பாரு... சட்டுனு கேட்ட உடனே எடுத்துக் கொடுத்துராதே. ஒரு கிலோ கேட்டா முக்கா கிலோ கொடு. முழுசா மாமாவையும் நம்பிர முடியாது."

இதுவரை தெளிவாய் இருந்தவன் இப்போதுதான் குழம்பினேன்.

"என்ன... சொல்றே?"

"பயந்துராதே. எப்படியும் போட்ட லிஸ்ட்படி தான் சாமான் வாங்கியிருக்கு. இருந்தாலும் கொஞ்சம் 'கெத்' தா இருந்தாத்தான் ஏமாத்தாம இருப்பாங்க. அதுக்குச் சொன்னேன்."

கை கழுவியபோது குளிர்ந்த நீர் பட்டு உடம்பு ஜிலீரென்றது. வேன் நான்கு மணிக்குத்தான் வந்தது.

"எப்ப பட்சணம் பண்றது?" என்று யாரோ பொருமிக் கொண்டிருந்தார்கள்.

இதற்காக சுமாரான வேட்டி, சட்டை கொண்டு வந்திருந்தேன். இறங்கிய பொருட்களை எடுத்து அடுக்கவே அரைமணியானது.

"காய்கறி வருமே.. அதை எங்கே வைக்கறது?"

"ஏகப்பட்ட எடம் இருக்கு. பின்கட்டுல போடுங்கோ. நறுக்கி வைக்கிறவாளுக்கும் வசதி."

பின்கட்டு, எடுத்துக் கட்டி, முற்றம், கேமரா ரூம், சம்படம் என்று தனி அகராதி தேவைப்படுகிற அளவு புதுப்புது வார்த்தைகள்.

"இதுதான் முந்திரி, திராட்சை.. சர்க்கரை மூட்டை அதோ மூலைல..."

எனக்குச் சூழல் புரிபடுவதற்குள் கல்யாணம் முடிந்துவிடுமென்று தோன்றியது.

ராஜப்பாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். தளர்ந்து போன உடம்பு. இடது கால் சற்று வீக்கம். பொடி மட்டை சொல்லி வைத்த மாதிரி கீழே விழுந்து கொண்டேயிருந்தது. மறுபடி எடுத்து ஒரு வசவுடன் இடுப்பில் சொருகிக் கொண்டார். மழமழவென்ற மரத்தூணில் சாய்ந்துக் கொண்டார்.எட்டடி நீளக் குழிதான் அடுப்பு. கிட்ட நெருங்கும் போதே அனலடித்தது . நிரந்தரமாய் இரண்டு பெரிய அடுக்குகளில் கலங்கலாய் வெந்நீர். ஒன்றில் காப்பி பாத்திரம் கூட மிதந்தது.

"எத்தனை பேர் சாப்பிட வருவா... கரெக்டா சொல்லிட்டா... எனக்கும் வசதி..."

"நம்ம உறவுக்காரா... அப்புறம் இவங்க ஆபீஸ்காரான்னு எப்படியும் இருநூறு பேர் தேறலாம். கிராமத்து டிக்கெட் இருக்கே. ஒரு பய அடுப்பு மூட்ட மாட்டான்" என்றார் மாமா.

"ப்ச்.. என்ன மாமா இது " என்றான் பாலா.

"போடா... இங்கே எவனுக்கும் சொரணையே இல்லே... திட்டினாக் கூட ஈன்னு இளிச்சுன்டு நிப்பான்..."

பாலா, மாமாவைப் பற்றி அதிருப்தி தெரிவித்ததன் காரணம் புரிந்தது. மனிதருக்கு எதிலுமே சீரியஸ்னெஸ் இல்லை.

"சொல்லுங்கோ... என்ன போடலாம்?"

ராஜப்பா மெனுவைப் பற்றி விசாரிக்க பாலா சொல்லிக் கொண்டிருந்தான். நகர்ந்தேன். கொல்லைப்புறம் விளக்கு வெளிச்சம் இல்லை. நூறடி நடந்தால்தான் டாய்லட் வசதி.

"இருட்டுல எப்படி போறது...?" என்றேன் கவலையாக.

"குச்சி நட்டு டியூப்லைட் வச்சிருவான். எல்லாம் ஏற்பாடு ஆயிடுத்து..." என்றார் மாமா.

திரும்பி வந்ததும் பாலா மீண்டும் என்னை ராஜப்பாவிடம் அறிமுகப்படுத்தினான்.

"என்ன சாமான் வேணும்னாலும்... இதோ... இவர்தான்"

"பேஷா..." என்றார் சர்ரென்று பொடியை உறிஞ்சி.

மாப்பிள்ளை அழைப்பன்று இரவு முகூர்த்தப் பை போடும் நேரம் பாலா என்னுடன் இருந்தான்.சக்தி, கண்ணனின் வாழ்த்துக் தந்திகள் வந்தன. ஏதாவது சமாதானம் சொல்லிவிடுவார்கள், திரும்பிப் போனதும்.மற்ற நேரங்களில் என் சாம்ராஜ்யம் அனலடிக்கிற சமையலறையும், கால்களைக் கீழே வைக்கக் கூசுகிற அளவு 'சொத சொத' வென்ற தரையும், கலவையான நெடிகளும், 'விட்டு எப்போது ஓடலாம்' என்கிற மனோநிலையும்தான்.
ராஜப்பா கடைசிவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவேயில்லை.

"அண்ணா... சாம்பாருக்கு..."

"ஊறுகாய்க்கு இது' போதுமா..."

"கோசுமல்லிக்கு."

அளவுகளைச் சரிபார்க்கச் சொன்னார்கள். முறத்தோடு உப்பை அள்ளிப்போய் பாத்திரத்தில் கவிழ்ந்தார்கள். மிளகாய்ப் பொடி நெடி கமறியது.

"அய்யோ... அண்ணா.. இப்பதான் நான் உப்புப் போட்டேன்... சாம்பாருக்கு..."

இரண்டாம் தடவை போட்டுவிட்டான் தவறுதலாய். ராஜப்பா நிதானமாய்ப் பொடி உறிஞ்சிவிட்டுச் சொன்னார்.

"உருளைக் கிழங்கு இருக்காடா?"

"ஆயிடுத்து..."

"போடா மடச்சாம்பிராணி... எடுரா... இந்த சைசுக்கு... சாதத்தைக் கெட்டியாப் பிடி... போடு அதை சாம்பார்ல..."

பின்பு சாப்பிட்டவர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை என்றதும் எனக்கு ஆச்சர்யம் .

"ஸாரை நன்னாக் கவனிடா. நம்ம கூட வெந்துண்டு இருக்கார்..." என்றார் நடுவில் என்னையும் கவனித்து.

''ஒண்ணும் வேண்டாம், பசியே இல்லே.. எதுவுமே பிடிக்கலே" என்றேன்.

"என்னது... நீங்கதான் சர்டிபிகேட் தரணும்... போடுரா இலையை..." என்று சகாவை அதட்டினார்.

கைநீட்டி மறுத்தேன். இலையில் வைத்த சாதம் திணறியது.

"என்ன இப்படி முழிக்கிறீங்க. கோஸ்கறி போடு.."

"வேணாம்... ஒரு அப்பளம் வைங்கோ..." என்றேன்.

என்னருகில் நகர்ந்து வந்தார். பக்கத்தில்தான் இலை போடப்பட்டு இருந்தது.

"போடுரா அப்பளத்தை... " என்றவர் அவன் நகர்ந்து போனதும் சொன்னார்.

"உங்களுக்குத் தெரியாதது இல்லே. டவுன்ல இருக்கிறவா படிச்சவா... கொறிக்கிறது இப்ப நாகரிகம். நாங்க அந்தக் காலம். வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ. இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே... எங்களுக்கு எப்படி சார் திருப்தி வரும்?"

சுரீலென்றது. சைகை செய்ததும் ஒவ்வொன்றாய் ஒரு கரண்டி பரிமாறப்பட்டது.

"கஷ்டப்படுத்தலே... டேஸ்ட் பாருங்கோ. போதும்..."

அசிஸ்டெண்ட் எதிரில் வந்தான்.

"அண்ணா... கரைச்சாப்ல கொண்டு வரவா..."

"ம்..." என்றார்.

மோர் சாதம் கரைத்துத் தரப்பட்டது.

"போதும்டா... எதேஷ்டம்...''

கடகடவென்று குடித்தார்.

"நீங்க போங்கோ... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா... நிம்மதி. சாயங்கால காரியம் இருக்கே... டேய்... அங்க பாரு... அடுப்புல தீயறது.." என்றார் சட்டென்று திரும்பி.

கையலம்ப எழுந்து போனபோது, இந்தக் கல்யாணத்தை மறக்க மாட்டேன் என்று தோன்றியது.


(கல்கியில் பிரசுரம்)


16 comments:

Rekha raghavan said...

கல்யாண வீட்டையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தினாப் போல இருந்தது உங்களின் வர்ணனைகள்.அருமையான ஒரு சிறுகதையை வாசித்த திருப்தி,

ரேகா ராகவன்.

Anonymous said...

கதை நல்லா இருக்கு ..கல்யாணம் ,சமையல் இதெல்லாம் கண் முன்னாடி கொண்டுவந்தீங்க ..நன்றி ரிஷபன் சார்..

க ரா said...

ரிஷ்பன் .. அற்புதம் ரிஷ்பன்...

vasan said...

நாங்க‌ளும் ப‌சியாறியாச்சு, ரிஷ‌ப‌ன்.
ப‌ழசுனாலும், ருசி அப்ப‌டியே.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர்..ரிஷபன்!

ஹேமா said...

//"உங்களுக்குத் தெரியாதது இல்லே. டவுன்ல இருக்கிறவா படிச்சவா... கொறிக்கிறது இப்ப நாகரிகம். நாங்க அந்தக் காலம். வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும்.//

இன்னும் மத்தியானம் சாப்பிடல.பசிக்குது ரிஷபன்.

vasu balaji said...

கிராமத்துக் கல்யாணம் கண்முன்னாடி:). வரைஞ்சு காண்பிச்சாப்போல இருக்கு.

பா.ராஜாராம் said...

தத்ரூபமான வர்ணனைகள் ரிஷபன். ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள்!

ஜில்தண்ணி said...

அப்டியே ஒரு கல்யாண விருந்து சாப்ட்ட மாதிரி இருக்குங்க :)

அருமையான நடை,வாழ்த்துக்கள் :)

Chitra said...

mostly conversation தான்..... அதிலேயே கதையின் கரு, கதாபாத்திரங்களின் உணர்வுகள்.... என்று பின்னிட்டீங்க.... வேறு விளக்கங்கள் தேவை இல்லை.

கல்கி.... வாவ்! சூப்பர்!

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

வெங்கட் நாகராஜ் said...

”கல்யாண சமையல் சாதம்!”
உங்கள் கதையும் ரொம்ப பிரமாதம்!!

தக்குடு said...

முற்றிலும் உண்மை! சமையல் ப்ரதான மாஸ்டர் கரைச்சுதான் குடிப்பார். அவ்ளோவா சாப்டமாட்டா. நல்ல எழுத்து நடை உங்களுக்கு. மாதங்கியின் பதிவில் உங்களை கண்டுகொண்டேன்...;))

பவள சங்கரி said...

மிக அழகான நடை. வாழ்த்துக்கள்.

வசந்தமுல்லை said...

கல்யாண வீட்டு சமையல் ஸ்டோர் ஒரு புது மாதிரியான அனுபவம் !
எனக்கும் அந்த அனுபவம் உண்டு !! பழைய நினைவுகளை கிளறிய ரிஷபன் நீவிர் வாழ்க!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீண்டும் படித்தது சுகானுபவமாக இருந்தது. என் கல்யாணம் கூட பிக்க்ஷாண்டார் கோவில் கிராமத்தில் 3.7.1972 அன்று இதே போல் நடைபெற்றது. 3 அல்லது 4 உபரிக் கூத்துக்களுடன்.
1) உத்தமர் கோவில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் பிக்‌க்ஷாண்டார் கோவில் அக்ரஹாரம். அங்கு தான் கல்யாணம். ஒரு 3 மைல்கள் தள்ளி பிக்க்ஷாண்டார் கோவில் என்றே ஒரு ரயில்வே நிலையம். தவறுதலாக அங்கு போய் இறங்கி பலரும் கஷ்டப்பட்டு திரும்ப வந்துள்ளனர். செல்போன், பஸ் வசதிகள் இல்லாத காலம்.
2) கல்யாணத்திற்கு முதல் நாளே வந்தவர்கள் ஆங்காங்கே உள்ள எல்லோர் வீட்டுத் திண்ணைகளிலும் தான் படுக்கணும், கொசுக்கடி & நாய் குரைப்புடன். பாம்பு கூட வந்து படுத்தியதாக ஒரு க்ரூப் பேசிக்கொண்டார்கள்.
3) காலையில் இயற்கை உபாதைகளுக்கும், ஆனந்தக் குளியலுக்கும் சுமார் அரை மைல் தள்ளியுள்ள ஐயன் வாய்க்காலிலும், அதன் கரையோர ஒதுங்குமிடங்களிலும் ஏற்பாடு செய்திருந்தனரோ / அவரவர்களாக செய்து கொண்டார்களோ!
4) கல்யாணத்தன்று மதிய சாப்பாடு ஒரு வீட்டு மொட்டை மாடியில் பந்தல் போடப்பட்டு. தரை சாப்பாடு தான். ஆடிக்காற்று ஆவணி வரை அடித்ததில் பரிமாறிய அப்பளங்கள் அனைத்தும் பறக்கும் தட்டுகளாக பறந்து ஒருவர் இலையில் போட்டது மற்றொருவர் இலைக்குப்போய் ‘சியர்ஸ்’ சொன்னதாகப் பேசிக்கொண்டார்கள்.
தங்கள் பதிவும் இந்த உண்மைச் சம்பவங்கள் போல அருமையாக இருந்தன.