August 15, 2010

அம்மா என்றொரு மனுஷி

அம்மாவின் ஆசை எதையும் நான் இதுவரை நிறைவேற்றியதில்லை. பள்ளி நாட்களில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில் எனக்கு இலக்கு விதித்திருந்தாள்.

தமிழாசிரியர் குமரேசன் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் ஒவ்வொரு வருடமும் நான் அடுத்த வகுப்பு வருவதில் பிரச்சினை எழவில்லை. ரிசல்ட் ஒட்டுகிற தினத்துக்கு முதல் நாள் வீட்டிற்கு வருவார்.

"இந்த தடவையும்…." என்பார்.

அம்மாவின் கண்கள் நீரில் அசைவது தனி அழகு! மூலையாய் ஒடுங்கி நிற்கிற என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்.

"உம்மேல இப்பவும் நம்பிக்கை வச்சிருக்கேன்" என்றார் தமிழாசிரியர், போகுமுன்.

"அந்த வரி எனக்கானது இல்லை"

என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டாலும். அம்மாவிடம் "நன்றி" முனகலே இராது. கடமைப்பட்டவர் என்கிற ரீதியில் குமரேசன் ஸாரை அழுகை அலம்பிய கண்களால் பார்ப்பாள்.

குமரேசன் ஸார் கிளம்பிப் போய்விடுவார். போகுமுன் அந்தப் பார்வை நிறைய சொல்லிவிட்டுப் போகும்.

அப்பாவும் அவரும் நண்பர்கள். மூன்றே நாட்கள்தான் வயது வித்தியாசம். திருமண வயதில், தேடி வருகிற வரன்களில், முதல் வரன் அவருக்கு, இரண்டாவது அப்பாவுக்கு என்று (அசட்டுத்தனமாய்) நிர்ணயம் செய்து கொண்டார்களாம்.

முதலாவதாக "அம்மா" வந்திருக்கிறாள். குமரேசன் ஸாரின் தாத்தா தனது எண்பது வயதுகளில் இறையடி சேர்ந்து வீட்டில் "கல்யாணச் சாவு" உண்டாக்கி விட்டார்.

அப்பாவும் ரொம்ப மறுத்தாராம்.

"நாம பேசியது என்ன? மொத வரன் உனக்கு.. பொண்ணு வீட்டுல காத்திருக்கச் சொல்லுவோம்..."

"வேணாம். எடுத்த உடனே தடங்கல் மாதிரி எதுக்கு? உனக்குப் பார்த்ததா சொல்லிப் பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுரு. அடுத்த வரன் எனக்கு!"

இப்படித்தான் அம்மா அப்பாவுக்கு அமைந்தாள்.

பாவம் குமரேசன் ஸார்!

ஒரு வருஷம் தட்டிப் போய், சிவகாமி அவருக்கு வலுக்கட்டாயமாய் மனைவியானதும், எதிரெதிர் பொருத்தங்களுடன் ஸார் இன்று வரை தம் பெயர் சொல்ல மகவின்றி குடித்தனம் நடத்தி வருவது கிளைக் கதை.

பள்ளியிலேயே முடிந்தவரை தங்கி விடுகிறார். டியூஷன் எடுப்பது அங்கேதான். பணம் வற்புறுத்த மாட்டார்.அம்மாவிடம் அவர் ஏதோ கடன்பட்ட மாதிரி உணர்ந்திருக்க வேண்டும். அவளே மனைவியாக வாய்த்திருந்தால்... அவள் பேச்சைக் கேட்டுத்தானே ஆக வேண்டும். இந்த மன விதி அவரை ஆட்டிப் படைத்து எனக்கு "பாஸ்" போட்டுக் கொண்டிருந்தது.

இன்னொன்றாகவும் இருக்கலாம். ஏதாவது ஒரு பெண்ணின் ஆளுமையில் ஆண், வாழ்நாளைக் கழித்தாக வேண்டும். சிவகாமி பேச்சோ ரசிக்கவில்லை. அம்மாவின் கண்ணீர் சொல்கிற வேண்டுதலை நிறைவேற்றிப் பெறுகிற ஆனந்தம் விலை மதிப்பின்றி உணர முடிந்தது ஸாரால்.

பொதுத்தேர்வில் குமரேசன் ஸார் போல் நல்லவர்கள் நினைப்பதைச் செயல்படுத்த முடிவதில்லை. ஏதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போடுவது? பூஜ்யத்திற்குக் குறைவாகத் தர, கல்வி நிர்வாகமும் அனுமதிப்பதில்லை.

அம்மாவை விடவும் குமரேசன் ஸார்தான் மிகவும் சங்கடப் பட்டார். எனக்கான முயற்சிகளில் இறங்கி விட்டார். அதுதான்.. பட்டறை வேலை!

"நமக்குத் தெரிஞ்சவரு. இவனைப் பத்தி நல்லாச் சொல்லியிருக்கேன். படிப்பு வரலேன்னா என்ன, பத்துப் பேருக்கு வேலையே போட்டுத் தர மாதிரி... பின்னால் பெரிய ஆளா வருவான்.."

பட்டறை மேலாளர் இரண்டே நிமிடத்தில் சொல்லிவிட்டார்.

"இவன் எதுக்கும் லாயக்கில்லே"

முதலாளி என்னை விலகி நிற்கச் சொன்னார். மேலாளரிடம் தனிமையில் கிசுகிசுப்பாய் அவர் சொன்னதில் குமரேசன் ஸார் பெயரும் இருந்தது.என்னை அனுசரிப்பதும் அவரது கடமைகளில் ஒன்று என்று புரிந்ததும் மேலாளர் குழப்பத்திலிருந்து விடுபட்டார்.

"போ! ரெண்டு ஸ்பெஷல் டீ வாங்கியா."

"இந்த பாக்கெட்டில தண்ணி கொண்டா."

"கேரேஜைக் கூட்டு."

எனக்கும் விசேஷ பயிற்சி தேவைப்படாத அலுவல்கள். ஆறே மாதத்தில் நல்ல தேர்ச்சி. இனி எந்த கேரேஜிலும் இதே பணிகளை என்னால் செவ்வனே செய்ய இயலும்.

குமரேசன் ஸார் நடுவே எட்டிப் பார்த்து விசாரித்தார்.

"எப்படி இருக்கான்?"

"புத்திசாலிப்பய! சொன்ன வேலையைச் சரியா செய்யறான்."

"பார்த்தியா, நீ நிச்சயம் முன்னுக்கு வருவே" என்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டுப் போவார்.

அம்மாவிடமும் சொல்லியிருப்பார் போலும். என் உணவு வகைகளில் அம்மாவின் கவனம் கூடியது.

"பாவம் ஒழைச்சுட்டு வர பையன்!"

முதல் மூன்று மாதம் சம்பளம் எதிர்பார்க்கக் கூடாது என்ற ஓனர் , குமரேசன் ஸாரிடமும் சொல்லியிருந்திருக்கிறார்.ஆனால், அவர் அம்மாவிடம், என் சம்பளப் பணத்தைத் தன்னிடமே தரச் சொல்லியிருப்பதாகக் கூறிப் பணம் கொடுத்து வந்திருக்கிறார்.

குட்டு உடைந்தது என்னால்தான்.

நான்காம் மாதம் நுறு ரூபாயைக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுக்க, "இது என்னடா?" என்றாள்.

"சம்பளம்"

"அப்ப ஸார் கொடுத்தது?"

குமரேசன் தெளிவாக்கி விட்டார்.

"பையன் துடியா இருக்கான்னு எக்ஸ்ட்ராவா பணம் கொடுத்திருக்காரு. அதான் இது."

"அப்ப, நீங்க கொடுத்தது?"

"அது மாசா மாசம் தர்ற சம்பளம்"

அவருடைய டியூஷன் பணம் குறைவதால் எந்த ஆபத்தும் இல்லாததால், குமரேசன் ஸாரின் பொய்கள் நிஜமாகிக் கொண்டிருந்தன.

பட்டறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்து தானே முழுப் பெறுப்பும் எடுத்துக் கொள்கிற இன்னொரு பையனிடம் பேச்சுவாக்கில் பகிர்ந்த போதுதான் என் சம்பள ரகசியம் விடுபட்டது.

"உனக்கு அண்ணன் எவ்வளவு தராரு?"

சொன்னான். என்னையும் கேட்டான்.

"சம்பளத்தைத் தவிர நுறு ரூபா தனியாவும் தருவாரு."

"ஒனக்கா?"

அவன் கண்களில் அவநம்பிக்கை மின்னியது.

என் பெருமை புரியாதவன்.மேலாளரிடம் போய் விசாரித்திருக்கிறான்.

"அடப் போடா! அவஞ் சம்பளமே நூறு ரூபாதான்."

"நெசம்மாவா?"

"பின்னே? குப்பை அள்ற பயலுக்கு எத்தினி தருவாங்க?"

எனக்குக் கண்ணீர் எப்போதும் வந்ததில்லை. எதற்கு அழ வேண்டும். என் பிறவி ரகசியம் நான் அறியாதது. நான் “இந்த ரோல்” என்று நிர்ணயித்து மேடை ஏற்றியிருக்கிறார்கள். “மாட்டேன்” என்று ஓவர் ஆக்டிங் கொடுத்தால் சீனை விட்டுக் கீழிறக்கி விடுவார்கள்.

ஆனால் அம்மாவிடம் பகிர்ந்தேன்.

"என் சம்பளமே நூறு ரூபாதானாம்."

அம்மாவிற்குப் புரிந்து விட்டது. குமரேசன் ஸார் அந்த மாதச் சம்பளத்துடன் வந்த நின்ற போது மென்மையாய் மறுத்தாள்.

"வே..ணாம். அவர் பென்ஷன் பணம் எங்க ரெண்டு பேருக்கும் போதும்."

"ஏன்.. எ.. ன்ன சொல்றீங்க?" என்றார் தடுமாறி.

அம்மா அசையவில்லை. பாவம் குமரேசன் ஸார். தன் குட்டு வெளிப்பட்டு விட்டதில் நிதானம் தொலைந்து நின்றார். குரல் ஒத்துழைக்காமல் மழுப்ப முயன்றார்.

"இல்லே, அவன் ஏதோ தப்பாப் புரிஞ்சுக் கிட்டு..."

நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்டிருந்தது. அதை எந்த விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்த மனநிலை.

"அவனே தனியா பட்டறை வைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணலாம்னு... அதுக்கு முன்னால ஒரு அனுபவத்துக்காக..." என்றார் மீண்டும்.

"இது போதும்" என்றாள் அம்மா.

முதன் முறையாக குமரேசன் ஸார் தொய்ந்து போனார்.அம்மாவைப் பார்த்தேன். அப்பாவை இழந்த தினத்தன்று இழப்பு மீறி கண்களில் ஒரு வைராக்கியம் புலப்படுத்தி நின்றிருந்த அம்மா... என்னைக் கைவிடாத அம்மா.

ஓனர் முன் போய் நின்றேன்.

"என்னடா?"

"என்னை அடிச்சாவது தொழில் கத்துக் கொடுங்க."

சட்டென்று குனிந்து அவர் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதேன், பிடிவாதமாய்.

(குமுதம் பிரசுரம்)

22 comments:

ஹுஸைனம்மா said...

நல்லவேளை பையன் புரிஞ்சுகிட்டு திருந்திட்டாரே, அது வரை நல்லது.

Mahi_Granny said...

பாராட்டுக்கள் சகோ .

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கதை சூப்பர்..ரிஷபனுக்கு என்ன? எழுத சொல்லியாத் தரவேண்டும்?

Anonymous said...

arumai

நிலாமகள் said...

அம்மா என்றொரு 'மனுஷி' யால் மட்டியாக இருந்த மகனை மனுஷனாக்க முடிந்ததே ... அப்பாடா.... கதை முடியும் போது மனசில் ஒரு சிலிர்ப்பு... கண்ணோரம் சற்று துளிர்ப்பு. அம்மாவுக்கும் ஆசிரியருக்குமான உணர்வுப் போராட்டத்தை நுணுக்கமாகச் சொல்லி நுட்பமாக கையாண்ட தங்கள் திறன் வியப்புக்குரியது.

கமலேஷ் said...

சொன்ன விதமும் தொட்ட இடமும் ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..
வாழ்த்துக்கள் தொடருங்கள்..

vasu balaji said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

Unknown said...

பாசம் எப்பவும் கண்டிப்பா ஜெயிக்கும்.. ரொம்ப அருமையான கதை..

வசந்தமுல்லை said...

நான் சென்னை சென்றபோது இந்த மாதிரியான கதை என் உறவு வகையில் இருந்தது இப்போதுதான் இந்த சிறுகதையை படித்தபோது சிலிர்த்துவிட்டேன். எப்படி இது எங்கேயாவது மாயக் கண்ணாடி வைத்துள்ளீரா? கிரேட் ரிஷபன்!!!!!

க ரா said...

வழக்கம் போல அருமை :)

குட்டிப்பையா|Kutipaiya said...

அருமை ரிஷபன்!!!!

அம்பிகா said...

அருமையான எழுத்துநடை. நல்லாயிருக்கு.

பத்மநாபன் said...

சுஜாதாவின்``மாஞ்சு``விற்கு பிறகு மனதை உருக்கிய கதை..

அற்புதம் ரிஷபன்.

பத்மநாபன் said...

சுஜாதாவின்``மாஞ்சு``விற்கு பிறகு மனதை உருக்கிய கதை..

அற்புதம் ரிஷபன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையில் ‘ப்ளேவர்’ ஒருவித தூக்கலான வாசனை கும்மென்று வீசுது

வெங்கட் நாகராஜ் said...

எப்பவும் போலவே, ஒரு அற்புதமான படைப்பு. வாழ்த்துக்கள்.

வெங்கட்.

CS. Mohan Kumar said...

அருமை. நெகிழ வைக்கிறீர்கள்.

hamaragana said...

அன்புடன் நண்பரே கண்முன் கதை ஐ நகர்த்தி கொண்டு - அட எப்படியாவது இந்த பையன் தனது தாயின் எண்ணத்தை பூர்த்தி செய வேண்டும்நல்லவனாக வர வேண்டும்
என எண்ண வைத்து விட்டீர்கள்!!! இதுதான் ஒரு கதாசிரியனின் சாமர்த்தியம் !!!வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

//எனக்குக் கண்ணீர் எப்போதும் வந்ததில்லை. எதற்கு அழ வேண்டும். என் பிறவி ரகசியம் நான் அறியாதது. நான் “இந்த ரோல்” என்று நிர்ணயித்து மேடை ஏற்றியிருக்கிறார்கள். “மாட்டேன்” என்று ஓவர் ஆக்டிங் கொடுத்தால் சீனை விட்டுக் கீழிறக்கி விடுவார்கள்.//

இது என்னை மிகவும் பாதித்துவிட்டது...

Thenammai Lakshmanan said...

ரிஷபனின் கதை என்றால் சொல்லவா வேண்டும்.. வழக்கம் போல் அருமை..

vasan said...

இன்னும்,நுண்ணிய‌ ம‌னித‌ம்,
எல்லோருக்குள்ளும் நிர‌ம்பித்தான் இருக்கிற‌து.
குமரேசன் ஸார் போல் நல்லவர்கள் மத்தியில் அவ்ரின் ம‌ண‌விம‌ட்டும் ஏன்?
//சிவகாமி பேச்சோ ரசிக்கவில்லை// ஸாரின் இந்த‌வீட்டு சாய்வுக்காக‌ ஒரு
ச‌ப்பை க‌ட்டா, ரிஷ‌ப‌ன் ஸார்?

பத்மா said...

விதியின் விளையாட்டு எங்கெல்லாம் தொடர்கிறது?
எல்லாரும் நல்லவர்களே ..அருமையான கதை ரிஷபன் சார் ..பச்சக்கென்று ஒட்டி விட்டது