June 12, 2011

சாக்லேட் காதல்








"நான் உன்னோட இனிமே பேசப் போறதில்லை.."
சொல்லி விட்டு அனு போக யத்தனித்தாள்.
"ஏன்" சரவணக்குமாரிடம் திகைப்பு.
"அதைச் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல"
"சொல்லணும். கட்டாயம்தான்."
"உங்கிட்ட பேச ஆரம்பிச்சப்ப காரணம் கேட்டியா"
"கேட்கல.. ஆனா நீயே சொன்ன.. இத்தனை பேர் மத்தில என்னைப் பார்த்தா மட்டும் உனக்குள்ர ஒரு புறாவின் சிறகடிப்பு தெரிஞ்சிதுன்னு சொன்னியே.. இப்ப அந்தப் புறாவை வறுத்து தின்னுட்டியா"
"ஏய்.. என்ன பேசற"
குரல் சற்று உயர்த்தியதில் ஒருத்தன் திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் கண் சிமிட்டியது. இன்று சனிக்கிழமை. அவசர வேலைக்கு வந்தவர்கள் மட்டுமே. இன்றும் நாளையும் அலுவலகம் வரத் தேவை இல்லை. 'வா இளநி குடிக்கலாம்' என்று வெளியில் அழைத்து வந்த போதுதான் ஒப்பந்த முறிவுப் பத்திர வாசிப்பு.
எந்த நிமிடமும் தொலை தூர அழைப்பு வரக் கூடும். தஸ் புஸ்ஸென்று அன்னிய மொழியில் திட்டக் கூடும். மனசு பிராஜக்டில் இல்லை.எதிரில் அடம் பிடிக்கிற பெண்ணிடம் முடங்கிக் கிடக்கிறது. அலுவலக எல்லைக்கு வெளியில் என்றால் 'அடங்க மாட்டியா' என்று மிரட்டலாம். அல்லது கால் மடக்கி பூங்கொத்து நீட்டலாம்.
பெண்கள் ரட்சகிகள் என்று கை கோர்க்கப் போனால் ராட்சசிகளாய் மாறி மிரட்டத் துவங்கி விடுகிறார்கள். ஆரம்ப நாட்களில் சிரிப்பும் கண் சிமிட்டலும் ஏதோ ஒரு வாசனையின் தாக்கமும் மட்டுமே தெரிகிறது. சகல ஆயுதங்களையும் பட்டியலிட்டு காட்டி விட்டால் 'நீ இவ்வளவுதானா' என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. ஒன்றிரண்டை ஒளித்து வைக்கும் சாமர்த்தியசாலிகள் மட்டுமே கடைசி வரை தாக்குப் பிடிக்கிறார்கள்.

இளநீர்க்காரி கூட அவளுக்குத்தான் சப்போர்ட். சர்சரென்று வீச்சரிவாளால் இளநீரின் தலையை சீவும் போது இளநீர்க்காரியை பிரமிப்புடன் பார்த்தான்.
"கையை சீவிராது?"
"சீவாது" என்று அனு தான் சொன்னாள்.
இளநீர்க்காரி இவளைப் பார்த்தாலே சிரிக்கிறாள். இத்தனைக்கும் அனு அவளிடம் பேரம் பேசித்தான் வாங்குகிறாள். இவன் எப்போதும் அவள் சொன்ன தொகையைக் கொடுத்து விடுவான்.
"என்ன.. லலிதா.. இந்த ஆம்பளைங்கள இளநி சீவற மாதிரி சீவணும்."
ஓ.. இளநீர்க்காரியின் பேர் கூடத் தெரியுமா..
"அப்படி என்ன பண்ணிட்டோம்.."
"என்ன பண்ணல"
"நான் என்ன பண்ணேன்"
"லலிதாக்கு ரெண்டு பசங்க.. ரெண்டும் பொண்ணு.. அவ புருஷன் குடிச்சிட்டு அலையறான்.. இவ ஆம்பள மாதிரி வேலை பார்க்கறா"
"ஐ பிட்டி ஹர்.. "
"உன் அனுதாபம் தேவை இல்லை"
" இங்க பாரு .. உலகத்துல கஷ்டப்படாதவங்க யாருமே இல்ல.. எல்லாருக்கும் கஷ்டம்தான்.. ஊழல் பண்ற அரசியல்வாதி கூட மாட்டிகிட்டு அவஸ்தைப்படறான்"
"அவனும் உழைச்சுப் புழைக்கறவங்களும் ஒண்ணா"
"அப்படி நான் சொல்லல.. கஷ்டம் பொது.."
ஸ்ட் ரா வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தவளை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான்.
"என்ன பார்க்கற"
"ஆக்சுவலா இளநிய அப்படியே தூக்கிக் குடிக்கணும்.. அதான் டேஸ்ட்.. ஸ்ட் ரா உதவாது"
"உன் டேஸ்ட் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது"
அவள் குரலில் தெரிந்த அதிருப்தி இப்போதுதான் புரிய ஆரம்பித்தது அவனுக்கு.
"ஏய்.. என்ன பிரச்னை உனக்கு"
"என்னைப் பத்தி என்ன சொல்லிகிட்டு இருந்த அஷோக் கிட்ட"
அவள் குரலில் தெரிந்த கடுமை விஷயம் சீரியஸ் என்று உணர்த்தியது.
"என்னப்பா சொல்ற"
"இந்த பில்டப் லாம் வேணாம்.. கம் அவுட் வித் த ட்ரூத்"
"நான் எதுவும் சொல்லல"
"பொய் சொல்லாத"
"நீயே சொல்லு... நான் என்ன சொன்னேனாம்?"
அவனை முறைத்து விட்டு முன்னால் நகர்ந்தாள். சற்று வேகமாய் நகர்ந்து வழி மறித்தான்.
"நான் பிராமிஸா எதுவும் சொல்லல.. நீ சொல்றத வச்சுதான் அடுத்த ஸ்டெப் என்ன பண்ணணும்னு யோசிக்கணும்"
"உங்கிட்ட பேசினா என்னை பத்தி என்ன வேணா கமெண்ட் அடிப்பியா"
"அனு.. ஒண்ணு முழுசா சொல்லு.. இல்ல.. நான் சொல்றத நம்பு"
"மிஸ்டர் சரவணக்குமார்.. நீங்க இனிமே எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசற, யார் கூப்பிட்டாலும் வரத் தயாரா இருக்கற அனுவோட பேச வேணாம்.. ஓக்கேவா"
அடப்பாவி.. அஷோக்.. இது உன் வேலையா.. அதான் சவால் விட்டானா.. உன்னையும் அவளையும் பிரிச்சுக் காட்டறேன்னு..
"இதை நீ நம்பிட்டியா"
அனு பதில் சொல்லாமல் நகர்ந்து போனாள்.

இவ்வளவுதானா.. நான் உன் மேல் வைத்திருந்த அபரிமிதமான பிரியம் உனக்குப் புரியவில்லையா..
மற்றவர்களுடன் பேசும்போது அனு வந்துவிட்டால் உடனே அப்படியே அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு அவள் பின்னே போனது.
.'அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா'
'எனக்கு நீ முக்கியம் பா.. ரெண்டாவது இப்ப அவங்க கூட நான் அரட்டை தான் அடிச்சுகிட்டிருந்தேன்.. அது முக்கியமான மேட்டரா இருந்தா உங்கிட்ட அப்புறம் பேசலாம்னு சொல்லியிருப்பேன்'
அவன் வீட்டு சமாச்சாரங்களைக் கூட அவளிடம் தான் சொல்வான்..
'தங்கை கேட்டுகிட்டே இருக்கா.. உன்னை எப்ப அவ கண்ணுல காட்டப் போறேன்னு'


நேரம் போனதே தெரியவில்லை. எல்லோரும் போயிருக்க வேண்டும். எல்லாம் மறந்து வேலையில் மூழ்கி.. மணி ஒன்பதரை. முடித்து விட்டான்.
செக்யூரிட்டிக்கு இரவு வணக்கம் சொல்லி பைக்கை உதைத்தபோது பசித்தது. சைட் பாக்சில் அனுவுக்காகக் கொண்டு வந்திருந்த அவளுக்குப் பிடித்த சாக்லேட் பட்டை நிச்சயம் உருகியிருக்கும்.
செக்யூரிட்டி பின்னால் ஓடிவந்தார்.
"ஒரு நிமிஷம்"
"என்ன"
"அனு மேடம் மட்டும் இருக்காங்க.."
"ஓ"
"அவங்களும் கிளம்பிட்டாங்க"
பைக்கை நிறுத்தினான். அலுவலகம் விட்டு மெயின் ரோட்டிற்கு மூன்று கிமீ. ஆளரவமற்ற சாலை. அவளும் டூ வீலரில்தான் வருகிறாள்.
அனு இவனைப் பார்த்ததும் நின்று விட்டாள். 'நீயா'
"மேடம்.. நான் தான் அவரை நிக்க சொன்னேன்"
அனுவின் வண்டி கிளம்ப மறுத்தது.
"அவர் கூடவே போயிருங்க"
செக்யூரிட்டி யதார்த்தமாய்ச் சொன்னார்.
என்ன நினைத்தாளோ.. பின்னால் ஏறிக் கொண்டாள்.
3 கிமீ தூரமும் அவள் எதுவும் பேசவில்லை. மெயின் ரோடு வந்ததும் நிறுத்தினான்.
"வீட்டுல கொண்டு வந்து விட்டுரவாப்பா"
அவனையும் மீறி வழக்கமான குரலில்.. கேட்டுவிட்டான்.
அனு இறங்கி நின்றாள். ஆனால் நகரவில்லை.
சரவணக்குமார் சைட் பாக்ஸைத் திறந்து சாக்லேட் பட்டையை எடுத்தான். உள்ளே உருகி இருந்தது.
அவளிடம் நீட்டினான்.
சர்ரென்று நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் விரைந்தது. அவர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சி ஹார்ன் சத்தம் எழுப்பி அது போனதும் அவர்கள் மட்டும் மீண்டும் தனியே.
வாங்கிக் கொண்டாள். பிரித்து விளம்பரத்தில் வருவது போல சப்பி விட்டு அவனிடம் நீட்டினாள்.
"ஏய்.. என் மேல கோபம் இல்லியா"
"அசோக் மெசேஜ் பண்ணான்.. ஏதோ விளையாட்டுக்கு அப்படி பண்ணிட்டானாம்.. 100 டைம்ஸ் ஸாரி அப்படின்னு.. "
ஓ.. அதனால் தான் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடன் பைக்கில் வந்தாளா..
"வீட்டுக்கு போலாம்டா"

உருகிப் போன சாக்லேட் கூட இவ்வளவு தித்திக்குமா..

(கல்கி - 12.06.2011)

21 comments:

வெங்கட் நாகராஜ் said...

உருகிப்போன சாக்லேட் தித்திக்கும்… உங்கள் கதை போலவே… நல்ல கதை. கல்கியில் வெளிவந்ததா? வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

சூப்பர் கதை
கதையே ஆயினும் கவித்துவம் நிறைந்த வரிகள்
மனதை கொள்ளை கொள்கிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பிரித்து விளம்பரத்தில் வருவது போல சப்பி விட்டு அவனிடம் நீட்டினாள்.//

சமாதானப்புறா சிறகடித்து மீண்டும் பறக்க நினைக்கும் இடம் இது.
படிக்கும் போதே என் மனம் ஜில்லிட்டுப்போகுதே. கல்கியில் வெளியீடு என்றால் சும்மாவா?

வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
அன்புடன் vgk



[Voted 3 to 4 in Indli]

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்களும் தங்கள் எழுத்துத்திறமையும் ஜொலிக்குமிடங்களாக நான் தேர்ந்தெடுத்தவைகள் ஏராளம். அதில் ஒரு சில மட்டும் இங்கே:

//இத்தனை பேர் மத்தில என்னைப் பார்த்தா மட்டும் உனக்குள்ர ஒரு புறாவின் சிறகடிப்பு தெரிஞ்சிதுன்னு சொன்னியே.. இப்ப அந்தப் புறாவை வறுத்து தின்னுட்டியா"//

நல்ல கிண்டலான வார்த்தைகள்.

//ஆரம்ப நாட்களில் சிரிப்பும் கண் சிமிட்டலும் ஏதோ ஒரு வாசனையின் தாக்கமும் மட்டுமே தெரிகிறது. சகல ஆயுதங்களையும் பட்டியலிட்டு காட்டி விட்டால் 'நீ இவ்வளவுதானா' என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. //

உண்மை; இல்லை பேருண்மை!

//"என்ன.. லலிதா.. இந்த ஆம்பளைங்கள இளநி சீவற மாதிரி சீவணும்."//

கோபத்தின் உச்சக்கட்டத்தில் கொப்பளிக்கும் வார்த்தைகள், இங்கு அழகாக கையாளப்பட்டுள்ளது.

//"ஆக்சுவலா இளநிய அப்படியே தூக்கிக் குடிக்கணும்.. அதான் டேஸ்ட்.. ஸ்ட் ரா உதவாது"

"உன் டேஸ்ட் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது"
அவள் குரலில் தெரிந்த அதிருப்தி இப்போதுதான் புரிய ஆரம்பித்தது அவனுக்கு.//

இந்த மனம் திறந்த சம்பாஷனை அழகோ அழகு! அசந்து போனேன்.

//"வீட்டுக்கு போலாம்டா"//

கொஞ்சும் சலங்கை போல.

//உருகிப் போன சாக்லேட் கூட இவ்வளவு தித்திக்குமா..//

காதல் என்ற வெப்பத்தில் உருகியதன்றோ!; அதன் சுவை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அன்புடன் vgk

RVS said...

தலைப்ப போலவே டேஸ்டா இருந்தது... ;-))

ADHI VENKAT said...

சூப்பர்! உருகிப் போன சாக்லேட்டும் சுவை தானே! பிரியமானவர்கள் தந்தால்!
கல்கியில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் சார்.

Madumitha said...

வாழ்த்துக்கள் ரிஷபன்.
கல்கி பாக்க வில்லை.
கதை இனிக்கிறது.

நிலாமகள் said...

எதைச் சொன்னாலும் எப்ப‌டிச் சொன்னாலும் வாசிப்போரை பாத்திர‌ங்க‌ளின் ம‌ன‌நிலைக்குள் பொருத்திவிடும் வ‌ல்ல‌மை த‌ங்க‌ள் எழுத்துக்கு எப்போதும் உண்டு. அனு கோப‌ப்ப‌டும் போது ல‌லிதாவிட‌ம் அரிவாள் வாங்கி எதிர்ப்ப‌டும் ஆணை த‌லைசீவ‌ நாங்க‌ளும் ரெடியாகிரோம். உண்மை புரிந்து அவ‌ள் 'போலாம்டா' என‌ எச்சில் சாக்லேட் நீட்டும் போது ம‌ன‌பார‌ம் குறைந்து ச‌ர‌வ‌ண‌குமாரின் கால்க‌ளுள் புகுந்து பைக்கை உதைக்கிறோம் உற்சாக‌மாய்!!

சிநேகிதன் அக்பர் said...

//புறாவின் சிறகடிப்பு தெரிஞ்சிதுன்னு சொன்னியே.. இப்ப அந்தப் புறாவை வறுத்து தின்னுட்டியா"
//

செம.

//சகல ஆயுதங்களையும் பட்டியலிட்டு காட்டி விட்டால் 'நீ இவ்வளவுதானா' என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. ஒன்றிரண்டை ஒளித்து வைக்கும் சாமர்த்தியசாலிகள் மட்டுமே கடைசி வரை தாக்குப் பிடிக்கிறார்கள்.
//

யோசிக்க வேண்டிய வரிகள்.

ஒரு சாதாரண கதையை வார்த்தைகளின் மூலம் சிறப்பாக ஆக்கியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

பத்மநாபன் said...

சாக்லேட்டை உருக வைத்தும் சாப்பிடலாம் ... எவ்வளவு தூரம் வரைக்கும் என்பதை கதை அழகாக காட்டியது ....

அன்புடன் நான் said...

காதல் இனித்தது.....

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஹ்ம்ம்ம்.....

vasu balaji said...

தித்திக்குதே:))

ஷர்புதீன் said...

மூணாவது வோட்டே எனது கமென்ட்

ராமலக்ஷ்மி said...

இனிப்பு:)! அருமை.

கல்கியில் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

உருகியது சாக்லேட் மட்டும்தானா?!!

ஹேமா said...

உருகின சாக்லேட் சுவை அதிகம்தான்.வார்த்தைகள் கோர்ப்பதிலும் திறமை !

அப்பாதுரை said...

படித்து ரசித்தேன். கதையும் நடையும் சுவை.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Thenammai Lakshmanan said...

சூப்பர்ப் கல்கிக்கு வாழ்த்துக்கள்..:)

Deepa said...

Nice! :-)