September 14, 2012

நான் ஜடமில்லை

இன்றோடு பத்து நாட்களாகி விட்டன. மூன்று தடவை நேரிலும், இரண்டு முறை தொலைபேசியிலும் பேசியாகி விட்டது. தெருவிளக்கு மட்டும் எரிந்தபாடில்லை.

"ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒன்பது மணிக்கு, எதிர் வீட்டு உஷா வரும்போது, எவனோ பின்னாலேயே வந்திருக்கான். இவ பதறிப் போய் வேகமா வந்ததுல, எதுலயோ இடிச்சுக்கிட்டு, கருரத்தம் கட்டிப் போச்சு!"

புனிதா தினம் ஒரு தகவல் வைத்திருந்தாள். நேற்று, பக்கத்து வீட்டு ஐம்பது வயது சிவகாமியை, நாய் பிடுங்கியிருக்கும். இருட்டில் தெரியாமல் மிதித்து விட்டிருப்பார். யாரோ, இருட்டாய் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, விலாசம் கேட்கிற மாதிரி, கழுத்துச் சங்கிலியைப் பறிக்க முயன்றானாம். நல்லவேளை! இரைச்சலிட்டதில், பக்கத்து வீடுகளில் விளக்கெரிய, ஓடி விட்டானாம்.

"எனக்கே பயமா இருக்குங்க. சமயத்துல நீங்களே லேட்டா வரீங்க. கதவைத் தட்டினா, அது நீங்களா வேற யாராவதான்னு புரியறதுக்குள்ள படபடப்பாயிருது" கேட்டுக் கொண்டேன்.

"என்னை என்ன பண்ணச் சொல்ற? இந்த சந்துல இருக்கற இருபது வீட்டுலயும், கையெழுத்து வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தாச்சு. ஆனா லைட்டு மட்டும் எரிஞ்ச பாடில்ல."

"டென்ஷனாயிருதுங்க!"

வெளியே வந்தேன். வேறு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கலாமே. சிவராமன் வீட்டில் இருந்தார்.

"இங்கே பாருங்க! என்னால அலைய முடியாது. பணம் ஏதாவது தரணும்னா என் பங்கை சொல்லிருங்க! அவ்வளவுதான் என்னால முடிஞ்சது" என்றார் அழுத்தமாய்.

புவனேஸ்வரன் முனகினார்.

"போன தடவை, லீவு போட்டுட்டு உங்களோட வந்தேன். ஒவ்வொரு தடவையும் அலைய முடியாதுங்க! வேற எவனுமே கவலைப்படல. நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

இப்படி, ஒவ்வொரு விதமாய் பதில்கள். பாதி, சுவாரசியம் இன்றி.. பாதி அலட்சியமாய். எல்லோருக்குமே, பாதிப்புகள் பற்றிக் கவலை இருந்தாலும், 'நம்மால என்ன செய்ய முடியும்?' என்கிற தோரணை.

"என்ன? சொல்லுங்க!"

சோர்வான என் முகத்தைப் பார்த்தே புனிதா, பதிலைப் புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கும் கோபம் வந்து விட்டது.

"சர்த்தான் விடுங்க! நமக்கு மட்டும் என்ன கவலை? எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்மை யோசிச்சாக் கூட மரியாதை இல்ல."

"இல்ல புனிதா! அவங்களுக்கு மட்டும் அக்கறை இல்லியா? எதுவும் செய்ய முடியலேன்னு, விரக்தில தளர்ந்துட்டாங்க."

"அது என்னங்க பேச்சு? முடியாததை, எப்படிச் செய்யலாம்னு யோசிக்கிறவன்தான் மனுஷன். என்னால ஆவாதுன்னு விலகிப் போறவன் ஜடம்! அவனால, அவனுக்கும் பயன் இல்ல. மத்தவங்களுக்கும் பாரம்!"

புனிதாவுக்குக் கோபம் வந்து விட்டால் வார்த்தைகள் சீறும்.

"என்ன சொன்ன?!" என்றேன் வியப்புடன்.

என் சீண்டல் புரிய, லேசாய் முகம் சிவந்தவள், முனகினாள்.

"போங்க! நாம் ஏன் அவதிப்படணும்? என்ன ஆவுதோ ஆவட்டும்."

விலகி உள்ளே போனாள். என்னுள் யோசனைப் பொறிகள் பற்றிக் கொண்டன. 'என்னால ஆவாதுன்னு விலகினா ஜடம்!'
இல்லை; நான் ஜடமில்லை! மனிதன்! என்ன செய்யப் போகிறேன்?

புனிதா என் பரபரப்பைப் பார்த்துத் திகைத்தாள்!

"என்ன ஆச்சு?"

"இங்கே வா! உன் கையால ஸ்விட்சைப் போடு!" என்றேன்.

வாசல்புறமே வெளிச்சமானது! மாடியில், புதிதாய்ப் பொருத்திய நூறு வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது. ஓரளவுக்குத், தெரு நிறைந்த வெளிச்சம்.

"என்னங்க இது!"

"போகட்டும்! நமக்கு இனி கரண்ட் பில் கூடும். ஆனா, இந்த சந்துல இனி, இருட்டுனால கஷ்டம் வராதில்ல. அது போதும்" என்றேன் நிறைவாக.

26 comments:

Yaathoramani.blogspot.com said...

சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
நம் கையிலேயே இருக்கின்றன
நாம்தான் தெரியாது
தெருத்தெருவாக அழைகிறோம் என்பதை
தெளிவாகச் சொல்லிப்போகும் பதிவு
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

ஆக, ஆக்க பூர்வமான ஒரு கதை!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

”இருளைச் சபிக்காதே. முடிந்தால் ஒரு விளக்கேற்று.”

இந்த மஹாவாக்கியத்தை நினைவூட்டியது கதை.

அருமை ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

//"போகட்டும்! நமக்கு இனி கரண்ட் பில் கூடும். ஆனா, இந்த சந்துல இனி, இருட்டுனால கஷ்டம் வராதில்ல. அது போதும்" என்றேன் நிறைவாக.//

அதானே.... நல்ல முடிவு....

இராஜராஜேஸ்வரி said...

என்னால ஆவாதுன்னு விலகிப் போறவன் ஜடம்! அவனால, அவனுக்கும் பயன் இல்ல. மத்தவங்களுக்கும் பாரம்!"


வெளிச்சம் வந்தது !

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல மனசுங்க...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..இது சூப்பராயிருக்கே...உங்களுக்கு தோணின ஐடியா ஒர்த்தருக்குமா, அங்க தோணலை?

Rasan said...

அருமையான சிறுகதை.தொடருங்கள்.

சிவகுமாரன் said...

கதை இப்படி தொடர்கிறது
மறுநாள் எதிர்வீட்டு சிவராமன் வ்வீட்டி வாசலில் லைட் எரிந்தது. அதைப் பார்த்த பக்கத்து வீட்டு புவநேஸ்வரனின் மொட்டை மாடியில் தெருவை நோக்கி பெரிய CFL எரிந்தது.

bandhu said...

மத்யமர்!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான முடிவு. ஒவ்வொருத்தரும் அரசாங்கத்தை மட்டுமே எதிர்பாராம தன்னால முடிஞ்சதைச் செஞ்சாலே சமுதாய இருளைப்போக்கும் வெளக்கை ஏத்தி வெச்சுரலாம்.

Rekha raghavan said...

ஏ ஒன் கதை சார்!

ரேகா ராகவன்.

ADHI VENKAT said...

நல்ல முடிவு. நம்மால ஆனதை செய்து விட்டோம் என்ற த்ருப்தி....ஜடமில்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அருமையானதோர் சிறுகதை.

எப்படியோ ”வெளிச்சம்” வந்ததே ! ;)

இருட்டிலிருந்த அனைவருக்கும் ஓர் விடியல் அல்லவா!

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

பிரியமுள்ள
vgk

G.M Balasubramaniam said...


சிவகுமாரன் சொல்வதுபோல் நடக்கும் என்னும் நம்பிக்கை நல்லது.

vasan said...

இது க‌தைய‌ல்ல‌..நிஜ‌ம்.
எங்க‌ள் சாலிமார் கார்ட‌னின் தெருவில் இதைத்தான் செய்ய‌ முடிந்த‌து ரிஷப‌ன்ஜி.
(ஜ‌ட‌ம‌ல்ல‌ என்ப‌து முக்கிய‌மில்லை, நாம‌, 'ஏமாளி" இல்லை என்ப‌து தான் ஆசுவ‌த‌ம்)

தி.தமிழ் இளங்கோ said...

நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று ஒவ்வொருவரும் எண்ணி செயல்பட்டால் பொதுப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

எல் கே said...

nalla mudivu

மோகன்ஜி said...

நல்ல பதிவு. நியாயமான முடிவு... வெளிச்சம் வெளியில் மட்டும் தானா?

ஹுஸைனம்மா said...

இந்தத் தீர்வைத்தான் நாணும் யோசிச்சேன். நல்ல முடிவு. தொடர்கதையாகும் எல்லார் வீட்டிலும் (இங்கே ஒரு பின்னூட்டதில் சொல்லியிருந்தபடி)

vimalanperali said...

சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம் கையிலேயே இருக்கிற போது ஏன் அக்வலைகொள்ல வேண்டும் அனாவசியமாக/

நிலாமகள் said...

ஏதோ ந‌ம்மால் ஆன‌து! என்ற‌ பெருந்த‌ன்மை பாராட்ட‌த் த‌க்க‌து. சிவா சொல்வ‌து போல் ந‌ட‌ந்தால் இது க‌லிகால‌மேய‌ல்ல‌. ம‌றுநாள் அக்க‌ம்ப‌க்க‌ம் ந‌ம் 'அச‌ட்டுத்த‌ன‌'த்தை கிசுகிசுத்து ந‌ம‌ட்டு சிரிப்பு சிரிக்க‌ வேண்டுமானால் ந‌ட‌க்கும். எனினும் 'ந‌ல்ல‌தையே நினைப்போம்' என‌ நேர்ம‌றை சிந்த‌னைக‌ளை ப‌ர‌ப்புவ‌து தான் ப‌டைப்பாளியின் தார்மீக‌க் க‌ட‌மை!

கிருஷ்ணப்ரியா said...

அக்கம் பக்கம் ஆள் நடமாட்டமில்லாத எங்கள் வீட்டில் ஒரு திருட்டு நடந்த போது, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தவா முடியும் என்று நாங்கள் இப்படித் தான் வீட்டின் முன்னும் பின்னும் பெரிய இரண்டு டியூப் லைட்களைப் போட்டோம். எங்க ஏரியாவே உங்க லைட்டாலே வெளிச்சமாயிடுச்சுன்னு சுத்தியிருந்தவங்க சொன்னப்போ பெருமையாக் கூட இருந்துச்சு...
உங்க கதை அந்த சம்பவத்த நினைவுப் படுத்துது ரிஷபன். வாழ்க்கையிலிருந்து கதை பண்ணும் உங்கள் பாணி அருமை....

கதம்ப உணர்வுகள் said...

எத்தனை பேருக்கு இப்படி ஒரு சமூக உணர்வும் பொது நலத்தொண்டும் தோணும்??

பிரச்சனை பொது எனும்போது எல்லோரும் ஒற்றுமையுடன் உட்கார்ந்து பேசி ஆலோசித்து அவரவர் யோசனையை சொல்லி இது சரி வருமா அது சரி வருமா என்று பார்த்திருக்கலாம்...

ஆனால் இயந்திர வாழ்வில் அதுக்கு சாத்தியமில்லை.. அட இங்க கூட்டம் போட்டு பொது பிரச்சனை பேசிக்கிட்டு இருக்கும் நேரத்துல அங்க டிவி சீரியலில் காமாட்சி பாட்டி அடுத்த வீட்டு ரகசியம் சொல்லவந்தது நமக்கு தெரியாம போயிடுத்துன்னா? மிஸ்ஸாகிடுமே தொடர்.... இன்னும் சிலர் எனக்கு என்னாச்சுன்னு போயிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் சிலர் என் பங்கு எவ்ளோன்னு சொல்லுங்க பணம் கொடுத்துடறேன்... பணம் கொடுத்துட்டா வேலை முடிஞ்சதுன்னு நினைக்கும் சிலர்....

பரவாயில்லை ரிஷபன் உங்க கதையில் எப்போதும் நான் பார்க்கும் ஒரு உற்சாகமான வாக்கியம் என்ன தெரியுமா??? கதை பிரச்சனைகளோடு ஆரம்பிக்கும்... ஆனால் முடியும்போது அசத்தலா பாசிட்டிவாக முடியும்... அதுவே படிக்கிறவங்க மனசுல பதிவது போல் ஒரு நல்ல கருத்தாக இருக்கும்... அந்த கருத்து படித்துவிட்டு சரி அடுத்து என்ன அடைக்கு தொட்டுக்க வெல்லமா இல்லை அவியலான்னு கேட்டுட்டு ரிஷபனின் கதையை மறந்து போற மாதிரி இருக்காது... அட ரிஷபன் எழுதின கதையை போலன்னா நடக்கிறது நாட்டில் நடப்பு... நாம ரிஷபன் கதைல வந்த மாதிரி செய்து பார்ப்போமே.. நடந்து தான் பார்ப்போமே... இப்படி முடிவு எடுத்து தான் பார்ப்போமே அப்டின்ற ஒரு படிப்பினை தரும் பகிர்வா தான் அமைகிறது....

குட்டி டைனமைட் பா நீங்க.... இத்துணூண்டு கதைல ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒரு கருத்து உள் புகுத்தி அதை சுற்றி கதை அமைத்து படிக்கிறவங்க பொழுது போக்க மட்டுமே கதையம்சமா இருக்காம படிப்பினையா அமைவது இன்னும் கூடுதல் சிறப்பு.

ஒரு நிகழ்வு கண்முன்னால் நிகழ்ந்துவிட்டால் நெகட்டிவாக கூட தான் இருக்கட்டுமே.. அதை அழகாய் ஒரு கதையாக்கி பாசிட்டிவாக்கிவிடும் அசாத்திய திறமை...

அன்பு வாழ்த்துகள் ரிஷபன் அருமையான கதை பகிர்வுக்கு....

RVS said...

சுந்தர்ஜியின் கருத்துக்கு கைதூக்கி கமெண்ட் இடுகிறேன். நல்ல கதை சார்! :-)

Unknown said...

வணக்கம் சகோ தெரு விளக்கு பிரச்னை பரவாயில்லை அதற்கு மின்சார பிரச்சினை அதிகமாக உள்ளது நமேக்கேன் வம்பு