October 31, 2012

நீங்களும் நானும்

கை குலுக்கிக் கொள்ளலாம்..

இருக்கை பற்றிய அவஸ்தை இல்லை..

கிடைத்த இடம் போதும்

தரையோ..  ஒரு திண்ணையோ..

எடுத்தவுடன் பேசவேண்டும் என்கிற

கட்டாயம் இல்லை.

நீங்கள் என்னையோ.. நான் உங்களையோ

பார்க்க வேண்டிய அவசியம் இல்லை முதலில்..

சுற்றுப் புறம் வேடிக்கை பார்க்கலாம்.

குருவி,, காக்கா.. தெருவில் நடப்பவர்..

குழந்தை தூக்கிப் போகும் பெண்மணி..

பழ வியாபாரி..  சைக்கிள் பழகும் சிறுமி..

எவரானாலும் எதுவானாலும் ரசிப்போம்..

அப்புறம் நாம் நிதானமாய் பேச ஆரம்பிக்கலாம்..

பிடித்ததைத்தான் பேச வேண்டும் என்றில்லை..

நம் நட்பில் .. எவ்வித நிர்ப்பந்தங்களுமற்ற

கை குலுக்கல்கள் தினமும் இருக்கட்டும்..

கை குலுக்கல் என்றால் மனதின் இழைதல்..

முரண்பாடற்று..

நாளை இன்னொரு இடம்.. இன்னொரு கவனிப்பு..

வாழ்க்கையை அதன் போக்கில் 

ரசிப்பதை..

யார் தடுத்தார்கள் இப்போது ?



17 comments:

raji said...

ஆங்கிலத்தில் personal space என்ற வார்த்தை உண்டு.

//நம் நட்பில் .. எவ்வித நிர்ப்பந்தங்களுமற்ற//

அப்படி இருக்கும் நட்புதான் சிக்கல்களற்று தொடர்ந்து வரும்.

//கை குலுக்கல் என்றால் மனதின் இழைதல்..

முரண்பாடற்று..//

நட்பின் இலக்கணத்தை எத்தனை சுலபமாக அடையாளம் காட்டி விட்டீர்கள்.பகிர்விற்கு நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் கையைக் கொடுங்கள்! கை குலுக்கிக் கொள்வோம். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

settaikkaran said...

ஆழமான விஷயத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

ADHI VENKAT said...

அழகான வரிகள். நட்பை பற்றி எத்தனை அழகாக சொல்லி விட்டீர்கள்.

கே. பி. ஜனா... said...

நட்பைப் பற்றி நட்போடு நல்லா சொல்லியிருக்கீங்க!

ஸ்ரீராம். said...

எதிர்பார்ப்புகளற்ற, நிபந்தனைகளற்ற நட்பு!

RAMA RAVI (RAMVI) said...

//நம் நட்பில் .. எவ்வித நிர்ப்பந்தங்களுமற்ற

கை குலுக்கல்கள் தினமும் இருக்கட்டும்..//

அருமை. அருமை.
படிக்கும் பொழுது மனதிற்கு இதமாக இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எவரானாலும் எதுவானாலும் ரசிப்போம்..

அப்புறம் நாம் நிதானமாய் பேச ஆரம்பிக்கலாம்..

பிடித்ததைத்தான் பேச வேண்டும் என்றில்லை..

நம் நட்பில் .. எவ்வித நிர்ப்பந்தங்களுமற்ற

கை குலுக்கல்கள் தினமும் இருக்கட்டும்..

கை குலுக்கல் என்றால் மனதின் இழைதல்..

முரண்பாடற்று..//

அழகோ அழகான வரிகள். ;)))))

/உங்கள் கையைக் கொடுங்கள்! கை குலுக்கிக் கொள்வோம். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!/

அதே! அதே!!

பாசமுள்ள கையுடன்
VGK

arasan said...

இனிமை கூறும் அழகிய படைப்பு

அப்பாதுரை said...

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் என்ன செய்திருப்பார்கள்? கை பிணைக்கும் பழக்கம் தமிழரிடம் இருந்ததோ?

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

Ranjani Narayanan said...

வணக்கம் ரிஷபன் ஸாரி.

உங்கள் கதைகள் நிறையப் படித்திறுக்கிறேன்.

உங்களது பதிவுகளும் தொடர்ந்து படிக்கிறேன். ஆனாலும் கருத்துரை போட சின்னதாக ஒரு பயம்.பெரிய எழுத்தாளர் ஆயிற்றே என்று!

எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாத நட்பு பற்றிய உங்கள் கவிதை
மனதை தொட்டு விட்டது.

எல்லோரும் இப்படி இருந்தால் வாழ்க்கை சோலைவனம் ஆகிவிடுமே!

அன்புடன்,
ரஞ்ஜனி நாராயணன்

ranjaninarayanan.wordpress.com

vasan said...

"ஸ்ப‌ரிச‌ம்" எல்லா ந‌க‌ரும் ஜீவ‌ராசிக‌ளின் பொதுக் குண‌மாய்,
இய‌ற்கையான‌ ஒரு அம்ச‌மாய் தான் இருக்கிற‌து. அது 'கை' 'ப‌ற்று'த‌லில்/"பிடித்த‌'லில்
தான் தொட‌ங்கி இருக்க‌ வேண்டும். இந்த‌ வார்த்தைக‌ள் கூட‌ ந‌ம் உற‌வு ப‌ற்றிய‌ சொற்க‌ளாக‌வே இருக்கிற‌து. இல்லையா அப்பாஜி? தொடுத‌ல் அந்நிய‌த்தை, அந்நியோனிய‌மாக்கும் சாவி போல‌!

வல்லிசிம்ஹன் said...

இதோ என் கை. குலுக்கிக் கொள்ளலாம் ரிஷபன் சார். எத்தனை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் இறுக்கமற்ற,சுயநலமில்லாத உறவே நிலைக்கும் . பசுந்தரையில் இளங்காலை வேளையில்,தென்றலை உணரும் அனுபவம் உங்கள் பதிவு. மிக மிக நன்றி.

கதம்ப உணர்வுகள் said...

மிக அருமையான தலைப்பு. ரிஷபா.... இந்த அவசர உலகில் நின்று நிதானித்து ஒருவரை ஒருவர் பார்த்து ஆத்மார்த்தமாக புன்னகைத்து நலம் விசாரித்து.... கைக்குலுக்கி..

என்னப்பா சௌக்கியமா இருக்கீங்களா? அப்டின்னு யாராச்சும் இப்ப கேட்கிறாங்களா என்பதே யோசிக்கவேண்டிய நேரத்தில் மிக அற்புதமாக இப்படி ஒரு கவிதை படைத்தது மனதுக்கு ஆறுதலை தருகிறதுப்பா....


சின்னக்குழந்தையில் இருந்து வயதானவர் வரை எப்போதும் விரும்புவது அன்பான நலம் விசாரிப்பும், அன்புப்பகிர்வும், அனுசரணையான ஆத்மார்த்தமான வார்த்தைகளும் தான்...

குட்டிக்குழந்தையை முதுகில் தட்டி “ செல்லம் அருமையா பாடுறியே.... ஆஹா என்ன அழகா படிச்சுட்டே “ இப்படி சொல்லும்போது அப்படியே குழந்தை இந்த வார்த்தையில் மகிழ்ந்து இன்னும் படிக்க ஆரம்பித்துவிடும்....

அதேபோல் வயதானவர்களிடம் சென்று அமர்ந்து அவர்களை பேசவிட்டு ரசித்து கேட்டுக்கொண்டிருக்கும்போது பேசுவோரின் மனம் கரைந்துவிடும்.... நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமாப்பா அப்டின்னு கேட்டாக்க... இதோ என் கவிதை தான் இதற்கு பதில்னு அழகா கொடுத்திருக்கீங்கப்பா...
ரெண்டு பேரும் அன்பை பரிமாறிக்கொள்ள நட்பு, உறவு அவசியமில்லாமல் போகலாம் ஆனால் அறிமுகம், ஒரு சின்ன கைக்குலுக்கல் அவசியம் என்பதை மிக அருமையாக சொல்கிறது கவிதையின் தொடக்க வரிகள்....

கைக்குலுக்கிக்கொள்ள இடம் இல்லை என்ற அவஸ்தை இல்லை. மனம் இருந்தால் போறும் அது திண்ணையோ தரையோ மனசு முக்கியம்....
ஒருவரை ஒருவர் பார்த்து சிநேகபாவத்துடன் ஒரு சிறிய புன்னகைக்கீற்று....
அதனுடன் ஒரு சின்னக்கைக்குலுக்கல்....
கைக்குலுக்கல் முடிந்ததும் அறிமுகம் தொடர்கிறது....


எடுத்ததுமே முகம் பார்த்து பேசுவது சிரமமாக கொஞ்சம் சங்கடமாக உணரும்போது சங்கடத்தை தீர்க்க உதவுகிறது அக்கம் பக்கம் சுற்றுப்புறம்... குருவி காக்கா... கடைத்தெரு....


எதார்த்த கண்ணுக்கு எதிரே நடக்கும் எளிய நிகழ்வுகளை கண் படம் பிடிக்க... மனம் கவிதை வரிகளை சேமிக்க.... கைகள் நீள்கிறது கைக்குலுக்க... அருமை அருமை...


சின்னப்புன்னகையில் தொடங்கி கைக்குலுக்கலில் தொடர்ந்து... அறிமுகம் ஆனப்பின் நட்புடன் தொடர்கிறது முரண்பாடற்ற மென்மையான நல்லவைகளை பகிர்ந்துக்கொள்ளும் பரந்த மனம்.....
நிர்பந்தம் இல்லாத எதிர்ப்பார்ப்பு இல்லாத பொறாமை உணர்வுகள் இல்லாத அமைதியான அன்புடன் செல்கிறது கவிதை வரிகள்....
கைக்குலுக்கல் என்றால் மனதின் இழைதல்... ரசித்தேன்...

நுணுக்கமான இந்த சின்ன ஒற்றை வார்த்தை கவிதைக்கு அழகு சேர்க்கிறது....
ரசனையுடன் தொடரட்டும் கைக்குலுக்கல்கள்... அதானே... யார் தடுப்பது?

நட்புக்கு எது அவசியம், எப்படி தொடங்கலாம், எப்படி தொடரலாம்னு சொல்லவைத்த அழகு கவிதை...

அன்பு முறிந்துப்போவது எப்போது? நிபந்தனைகளும், நிர்பந்தங்களும், பொசசிவ்நெஸ்ஸும், எதிர்ப்பார்ப்பும் அதனால் கிடைக்கும் ஏமாற்றமும் கண்ணீரும்... ஆனால் இங்கு கவிதையில் சொல்வதோ.... மனதின் அற்புதமானம் ஸ்பரிசத்தை உணரச்சொல்லும் மெல்லிய தென்றல் தீண்டல் வரிகள்....

படிக்கும்போதே வாசகர்கள் உள்ளார்ந்த அன்புடன் உடனே கைநீட்டிவிடவைக்கும் அன்பு இழைந்தோடும் வரிகள்.... ரசனையுள்ள மனிதன் வடிக்கும் கவிதை நட்புவட்டத்தை பெருகச்செய்யுமாமே....

அன்புடன் நீட்டும் கைகளை பிடித்துக்கொண்டு நட்புடன் கைக்குலுக்கச்செய்யுமாமே...
வரிக்கு வரி உணரமுடிந்ததுப்பா...
படிக்கும் வாசகர்களை வசப்படுத்தும் அருமையான வார்த்தைகள் கோர்த்த முத்தான கவிதை பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா....

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்பா...

Yaathoramani.blogspot.com said...

மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.