May 26, 2013

வாழ்த்து

சற்று ஒடிசலான கையெழுத்தில், மாதவி கிருஷ்ணன் என்று எழுதிய வாழ்த்து தபாலில் வந்திருந்தது.

எங்கள் திருமண நாளைப் பத்து வருடமாய் ஞாபகம் வைத்திருக்கிற ஜீவன். அலுவலகத்திலிருந்து திரும்பியவனிடம் புவனா காபியையும் வாழ்த்தையும் கொடுத்தாள்.

"காலைல தபால்ல வந்திச்சு."

"வேற போஸ்ட்...?" என்றேன்.

"இல்ல."

அலுப்பில், காபிக்கு முதல் உரிமை கொடுத்தேன். குடித்த சுறுசுறுப்பில் வாழ்த்தைப் பிரித்தேன்.

'அன்புடன்... மாதவி கிருஷ்ணன்!'

"மறக்காம அனுப்புறா!" என்றேன் வியப்புடன்.

"அவங்களுக்கு எப்ப மேரேஜ் டே?" இது புவனாவின் கேள்வி.

"ஞாபகம் இல்ல. ஜூன்லயா... ப்ச்... தெரியல!"

பத்தாவது வாழ்த்து இது. வருடம் முழுவதும் வேறு கடிதப் போக்குவரத்து இன்றி, இந்த ஒரு நாளை மட்டும் அர்த்தப்படுத்தத் தவமிருக்கும் பிற 364 நாட்கள்.

"நான் ஒரு தேங்க்ஸ் கூட எழுதினது இல்ல" என்றேன் குற்ற உணர்வுடன்.

"இதுல அட்ரஸ் இல்ல."

"டைரில எழுதி வச்சிருக்கேன்!"

என்னவோ தோன்றியது. இந்தத் தடவை 'தேங்க்ஸ்' என்று எழுத வேண்டும்போல். டைரியில் ஏதேதோ விலாசங்கள். சில தாள்கள் இடையே கிழிபட்டு பாபுவின் கிறுக்கல்கள் வேறு.

"ஏய் புவனா... இதுல பேப்பர் கிழிக்காதன்னு எத்தனை தடவை சொல்றது!"

மண நாளில் ஏன் எரிச்சல் காட்டுகிறேன் என்று உடனே சுதாரித்தேன்.

"இல்ல பாரேன்! அட்ரசைத் தேட முடியல."

"இங்கே கொண்டாங்க!"

புவனாவிடம் நான் அடிக்கடி ரசிக்கிற விஷயம் அவள் நிதானம். வாங்கிப் பிரித்துக் கொண்டே வந்தவள் ஒரு பக்கத்தைக் காட்டினாள்.

"இதுவா பாருங்க!"

திரு.கே.எம்.கிருஷ்ணன், நெ.10, பாரதி நகர்.

"ஆமா இதுதான். நான் அவள் பேர்ல தேடினேனா..."

புவனாவிடம் இன்னொரு ரசனையான விஷயம்... திரும்பி மடக்க மாட்டாள். போய்விடுவாள் பேசாமல்.

ஒரு இன்லண்டைத் தேடி எடுத்து அமர்ந்தேன். என்னவென்று எழுதுவது?

"புவி... நீ ஏதாச்சும் எழுதறியா?"

"நானா?..."

ஒற்றை வார்த்தையில் குறுகத் தெறித்த அர்த்தங்கள் நிமிட நேரம் எதிரே நின்று ஜாலம் செய்தன.

"இல்ல... என்னன்னு எழுதறது?"

"என்ன மனசுல வருதோ அதை எழுதுங்க. எனக்கு உள்ளே வேலை இருக்கு."

போய்விட்டாள்.

கூப்பிட்டுக் கேட்கவேண்டும் போல் தோன்றியது. புவனா... உனக்குப் பொறாமையே வராதா? யாரோ ஒருத்தி உன் கணவனுக்கு மண நாள் வாழ்த்து அனுப்புகிறாளே...

அன்புள்ள மாதவி... எழுதி உடனே கிருஷ்ணனையும் சேர்த்தேன். அன்புள்ள மாதவி கிருஷ்ணன்... ச்சே!... ஏதோ அன்னியப்பட்டு நின்றது போல ஒரு பிரமை. இனி கிருஷ்ணனை அடித்தால் அசிங்கமாகி விடும். விட்டாலோ மனசு உறுத்தல். தனித்தாளில் எழுதி பிறகு காப்பி செய்து விடலாமா? அவசரத்திற்கு அதே டைரிதான் கிடைத்தது. என் பங்கிற்கு ஒரு தாளைக் கிழித்தேன்.

நம் சின்ன வயசு நட்பு இன்னும் உன்னால் ஜீவிக்கிறது. வாழ்க்கைப் பாதை நமக்காய் வெவ்வேறு வழித்தடங்களைக் காட்டியிருந்தாலும் அன்பால் நாம் பிணைக்கப்பட்டு நிற்கிறோம்.

சின்னக் குருவிக் கூட்டை விளையாட்டாய் நான் கலைத்த அந்தப் பழைய தினம்... உனக்கு நினைவில் நிற்கிறதா?...

நீ அழுதாய். ஏனென்று எனக்கு அப்போது புரியவில்லை. போடி.. என் இஷ்டம் என்று வாதித்தேன். கூடிழந்த குருவி சற்று நேரம் கீச் கீசென்று சிறகடித்தபோது வேடிக்கை பார்த்தேன். திரும்பக் கட்ட இயலாதபோது எனக்கு அழிக்கவும் உரிமையில்லை என்று உன் அழுகை பின்னொரு நாளில் உணர்த்தியது.

என் மண வாழ்வின் ஆரம்ப நாட்களில் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தாய். புவனாவும் நீயும் சந்தித்த முதல் நிமிடம்.

நாம் நிறைய நேரங்கள் ஒன்றாய்ச் சுற்றி இருக்கிறோம். ஆனால் உன்னை நான் முழுமையாய்ப் புரிந்து கொண்டதாய் உணர்ந்ததே இல்லை. புரிந்து கொள்ளவும் முயற்சித்தது இல்லை.

ஆனாலும் நீயும் புவனாவும் பார்த்துக் கொண்டபோது ஏன் மிரண்டு போனேன்?!

உன்னில் எனக்குப் பிடித்துப் போன பல விஷயங்களைப் புவனாவுடன் ஒப்பு நோக்கி ஏன் என் மனம் அதிர்கிறது?

நீங்கள் இயல்பாய்ப் பேசிக் கொண்டீர்கள். அப்போது சமையல் ஆகவில்லை. நீ காய்கறி நறுக்க உதவினாய். இருந்தவற்றில் எனக்குப் பிடித்ததை மட்டும் அரிந்து கொடுத்தாய். பேசாமல் பேசிய அந்த நிமிடம்...

புவனா ஏனோ படபடப்பாய் இருந்தாள். நீதான் முழுச் சமையலும் செய்தாய். என்னையும் உன் கணவரையும் அமர வைத்துப் பரிமாறினாய். பின்பு, நீயும் புவனாவும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டீர்கள்.

அவ்வளவுதான். அதன் பிறகு நாம் நேரில் சந்திக்கவே இல்லை. எனக்கு மாற்றலானது. 6 வருடங்கள். பின்பு திரும்பி வந்தேன். இத்தனை வருடமாய் உன் வாழ்த்து மட்டும் தவறவே இல்லை.

மாதவி... (ஸாரி... கிருஷ்ணனற்றுப் பிரயோகித்ததற்கு) உனக்கு நான் ஏதோ ஒரு வகையில் கடன்பட்டு நிற்கிறேன். உன் பாசம்... இல்லை... கருணை... சரி ஏதோ ஒன்று என்னைத் திக்குமுக்காட வைக்கிறது. மாதவி... எனக்கு அழுகை வருகிறது. என் தாம்பத்யம் சில நேரம் வானவில் ஜாலமாய். சில நேரம் இடி, மழையுங்கூட. ஆனால், இந்த வாழ்த்து என்னை, என் வாழ்நாளை அர்த்தப்படுத்தி நிற்கிறது.

நான் நன்றி சொல்லப் போவதில்லை. ஏன் சொல்ல வேண்டும்? எந்த எதிர்பார்ப்புமற்று நீ காட்டும் அன்பிற்கு நான் கடன்படுகிறேன். இதுவே எனக்குப் பிடிக்கிறது. உன் கணவரைக் கேட்டதாகச் சொல். குழந்தைகளுக்கு...

"ஏய் புவனா..."

இரைச்சலிட்டேன்.

"என்ன?"

வெளியே வந்தாள்.

"அவ குழந்தைங்க பேரு... என்ன?"

"பெரியவன் ரமேஷ்... சின்னவன் சுரேஷ். லெட்டர் எழுதிட்டீங்களா?"

கொடுத்தேன். படிக்கட்டும். படித்து விட்டு நிமிரும்வரை நிச்சலனமாய் நின்றிருந்தேன்.

"இப்படியேவா அனுப்பப் போறீங்க?"

திகைப்புடன் அவளைப் பார்த்தேன். "ஏன்? எதுக்குக் கேட்கிறே?"

"வேணாம். இன்னொரு தடவை நீங்களே நிதானமாய் படிங்க!"

லெட்டரை என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட்டாள். மனசு திமிறியது. காலையில் படிக்கலாம் என்று வைத்து விட்டேன்.

"அன்புள்ள மாதவி கிருஷ்ணன்…
உன் வாழ்த்து பார்த்துச் சந்தோஷம். உன் கணவரை விசாரித்ததாகச் சொல். குழந்தைகள் ரமேஷ், சுரேஷுக்கு என் அன்பு. அன்புடன் சங்கர்."

இதுதான் மறுநாள் நான் போஸ்ட் செய்தது.


(கல்கியில் முன்பு பிரசுரம்)

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக் நறுக்... அவ்வளவு தான், முடிந்து விட்டது...

பத்மா said...

நினைப்பதெல்லம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா?
so readable.u excel in the art rishaban sir ..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நீ அழுதாய். ஏனென்று எனக்கு அப்போது புரியவில்லை. போடி.. என் இஷ்டம் என்று வாதித்தேன். கூடிழந்த குருவி சற்று நேரம் கீச் கீசென்று சிறகடித்தபோது வேடிக்கை பார்த்தேன்.//

என் மனதைக் கலங்கச்செய்த இடம்.

//திரும்பக் கட்ட இயலாதபோது எனக்கு அழிக்கவும் உரிமையில்லை என்று உன் அழுகை பின்னொரு நாளில் உணர்த்தியது.//

மனதை நெகிழச்செய்யும் வரிகள்.

பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

//(கல்கியில் முன்பு பிரசுரம்)//

வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


ஒரு அருமையான சிறுகதையைப் படித்த திருப்தி என்னுள்!

G.M Balasubramaniam said...

ஜோடிப்புகள் இல்லாத அழகிய சிறுகதை.

sury siva said...


// புவனாவிடம் இன்னொரு ரசனையான விஷயம்... திரும்பி மடக்க மாட்டாள். போய்விடுவாள் பேசாமல்.//

ஏ கிழவி.. இங்கன வா. இதப்படி... வூட்டுக்காரனிட்டெ வூட்டு அம்மா எப்படி நடந்துக்கணும்னு விலா வாரியா
எழுதியிருக்கு பாரு.... அப்படின்னு இறைந்தேன்.

வூட்டுக்கிழவி வந்தாள். படித்தாள்.

அது ரைட்டு தானே என்றாள்.

என்ன ரைட்டு என்று முழித்தேன்.

எப்ப மடக்கணும் அப்படின்னு அவங்களுக்கு நல்லாவே அத்துபடி ஆயிருக்கும்ல... என்றாள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

மோகன்ஜி said...

அன்பு ரிஷபன் ! இயல்பான கதையோட்டம்.. சற்றொப்ப இதே ஓட்டத்தில் இன்று தான் ஒரு கதையை பாதி எழுதியிருக்கிறேன்.. இப்போது தான் இந்தப் பதிவைப் படித்தேன். மாத்திட வேண்டியது தான். ஏங்க என்னை மாதிரியே யோசிக்கிறீங்க?! ரொம்ப கச்சிதமான எழுத்து.

கீதமஞ்சரி said...

சங்கரின் வாழ்க்கையில் புவனா கிடைத்தது ஒரு வரம். பெண்மனம் படிப்பதிலும், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கண்டுகொள்வதிலும் என்ன ஒரு நுட்பமான அவதானிப்புத் திறன்! மனநிலைகளைக் கச்சிதமாய்க் கோடிட்டுக் காட்டிய கதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.

ராஜி said...

கவிதைதான் நல்லா எழுத வரும்ன்னு நினைச்சால் கதையும் நல்லா எழுத வருதே.

ஷைலஜா said...

ரிஷபனின் சிறுகதைகள் எப்போதுமே பிடிக்கும் இந்தக்கதை கூடுதலாய் பிடித்தது ஏன் என்றெல்லாம் சொல்ல இயலாது.

நிலாமகள் said...

ஒரு நூறு தடவை வாசித்தாலும் திறக்கும் வாசல்கள் வழிச் சென்று கொண்டே இருக்க வைக்கும் அற்புதம்!!

@ ராஜி...

அடி முடி காண முடியாதவரின் நிழல் புரியவும் நேரமெடுக்கும் நமக்கு.

சிவகுமாரன் said...

மனம் கவர்ந்த கதை. ஒன்றிப் போகச் செய்த நடை.
அருமை.

vimalanperali said...

கடிதங்கள் கிளர்த்திய,விதைத்துச்சென்ற நினைவுகள் நம்மில் நிறையவே/

manichudar blogspot.com said...

கடிதங்களில் திறக்கிற மனது ஆத்மார்த்தமானது . நேரிலோ, தொலைபேசியிலோ தெரிவிக்க இயலாது.நல்ல படைப்பு