October 02, 2014

எழுத்துக்கு வணக்கம் !





அந்த நாட்கள் இனித் திரும்பி வருமோ..

வராதுதான்..

ஒவ்வொரு ஜனவரி முதல் நாளிலும்.. சரஸ்வதி பூஜை முடித்து எழுதத் தொடங்கும் போதும்..  ஒரு சிறுகதை எழுதியே தீர வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி.

இது தவிர ஒவ்வொரு திங்கட்கிழமையும் அலுவலகம் வரும் போது ஒரு கதையுடன் வர வேண்டும் என்றும்.

செய்தோம்.. சந்தோஷமாய். மதியம் உணவு இடைவேளையில் அவரவர் கொண்டு வந்த கதையைப் படிப்போம். திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் சொல்வோம். எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்கிற ஆலோசனையும்.

தொடர் பிரசுரங்கள் இதனால் சாத்தியமானது !

என் சிறுகதை.. குறுநாவல்.. தொடர்ந்து மங்கையர்மலர்-ஆண்டு மலரில் பிரசுரம் பெற்றது.  பிற இதழ்களிலும் கூட.

கதை எழுதுவது என்று மட்டுமில்லை.. எந்த செயலானாலும் அது குறித்த பேச்சும்.. ஒரு செயல் திட்ட அட்டவணையும்.. கூடவே கவனிக்க.. ஊக்குவிக்க ஒரு குழுவும் இருந்தால் பெரும்பாலான நமது அபிலாஷைகள் வெற்றி பெறும் என்பதை இதில் நாங்கள் உணர்ந்தோம்.

எங்களை எங்கள் அலுவலகத்தில் கொஞ்சம் பெருமையாகவே உற்றுப் பார்ப்பார்கள்.. ‘இந்த வாரம் யார் கதை வந்திருக்கு’ என்றோ அல்லது ‘கல்கியில் உங்க கதை படிச்சேன்’ என்றோ விசாரிப்பார்கள்/சொல்வார்கள்.
நண்பர் ஹரணி மீண்டும் அந்த பொற்காலத்தை மீட்டெடுத்திருக்கிறார் இந்த வருடம்.. கல்கி.. வாரமலர் என்று.

1000 கதைகளுக்கு மேல் அச்சில் பார்த்த சாதனை என் நட்பு வட்டத்தால்.. என் எழுத்தை நேசித்த/சிலாகித்த அன்பு உள்ளங்களால் சாத்தியமானது.

இதனாலேயே 22 நட்பு-எழுத்தாள வட்டத்தின் சிறுகதைகளைத் தொகுத்து பிரியத்தின் சிறகுகள் என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடிந்தது.

சரஸ்வதியைத் தெய்வமாகப் பார்க்கிறதை விட.. எழுத்தாய்த் தான் பார்க்க முடிகிறது என்னால்.  சஹ்ருதயர்களின் படைப்புகளைப் படிக்கும் போது மனம் உணர்கிற மகிழ்ச்சியை நேரிலோ தொலைபேசியிலோ மானசீகக் கை நீட்டி வாழ்த்த முடிந்தது.. முடிகிறது..

உங்களை.. என்னை.. எழுதத் தூண்டுகிற..  எழுத வைக்கிற..  நம் சிநேகிதிக்கு
வெறும் வாழ்த்துகள் திருப்தி தராது..  முழுமையாய் ஒப்படைத்து இன்னும் இன்னும் நவ நவ படைப்புகளை நம் மூலம் வெளிப்படுத்த அர்ப்பணிக்கிற மனதைத் தர வேண்டுவோம்..

எனக்கு அறிமுகமான / நான் வாசித்த / வாசித்துக் கொண்டிருக்கிற அத்தனை படைப்பாளிகளுக்கும் அன்பு நல்வாழ்த்துகளுடன்..

ரிஷபன்.




20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//1000 கதைகளுக்கு மேல் அச்சில் பார்த்த சாதனை என் நட்பு வட்டத்தால்.. என் எழுத்தை நேசித்த/சிலாகித்த அன்பு உள்ளங்களால் சாத்தியமானது.//

தங்களின் மஹத்தான இந்த சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எந்த செயலானாலும் அது குறித்த பேச்சும்.. ஒரு செயல் திட்ட அட்டவணையும்.. கூடவே கவனிக்க.. ஊக்குவிக்க ஒரு குழுவும் இருந்தால் பெரும்பாலான நமது அபிலாஷைகள் வெற்றி பெறும்//

உண்மையான விஸ்வாசமான நலம் விரும்பிகளாக இருந்த நட்பு வட்டம் கிடைத்த தாங்களும், தங்களையே தங்கள் நட்பு வட்டத்தின் மையப்புள்ளியாக அமைத்துக்கொண்ட அவர்களும் மிகவும் பாக்யசாலிகளே !

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதனாலேயே 22 நட்பு-எழுத்தாள வட்டத்தின் சிறுகதைகளைத் தொகுத்து பிரியத்தின் சிறகுகள் என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பு கொண்டு வர முடிந்தது.//

அந்தப் பிரியத்தின் சிறகுகள் 22 இல் என்னுடைய ‘உடம்பெல்லாம் உப்புச்சீடை’ நெடுங்கதையும் ஓர் இறகாக தாங்கள் அமைத்துக்கொடுத்து, பூவோடு சேர்ந்த நாராகப் பெருமைப்படுத்திய தங்களின் பெருந்தன்மையை, இன்று நினைத்தாலும் எனக்கு மனதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு என்னை அப்படியே சிலிர்க்க வைக்கிறதே !

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரு. ரிஷபன் என் ஆருயிர் நண்பர்.

திரு. ரிஷபன் என் நலம் விரும்பி.

திரு. ரிஷபன் ஓர் எழுத்தாளரும் படைப்பாளியும் மட்டுமல்ல ... பல எழுத்தாளர்களைப் படைத்தவர் திரு. ரிஷபன் அவர்கள் என்பதுதான் நான அனைவரிடமும் சொல்லிவருவது.

திரு. ரிஷபன் அவர்கள் தான் ’என் எழுத்துலக மானஸீக குருநாதர்’ என்று சொல்லிக்கொள்வதில் தான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

2005 முதல் தங்களின் அன்பும் நட்பும் எனக்குக் கிடைத்து நான் செய்ததோர் பாக்யம் என்று நினைக்கிறேன்.

எழுத்துக்கு வணக்கம் !

என்ற தலைப்பினைப்போலவே எழுத்தாளன் என்று இன்று என்னை நான் சொல்லிக்கொள்ள ஓர் மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருந்த தங்களுக்கு என் வணக்கம்.

அன்புடன்
வீ......ஜீ

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

எப்போதும்சரஸ்வதியின் கிருபை தங்களை ஆசீர் வதிக்கட்டும்.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும். ஏய உணர்விக்கும் என்னம்மை சரஸ்வதியின் பூஜை தினமான இன்று, எழுத்தாளராகிய தங்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

///சரஸ்வதியைத் தெய்வமாகப் பார்க்கிறதை விட.. எழுத்தாய்த் தான் பார்க்க முடிகிறது என்னால். ///
எண்ணும் தெய்வம், எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வயம்
நன்றி ஐயா

ஜீவி said...

//முழுமையாய் ஒப்படைத்து இன்னும் இன்னும் நவ நவ படைப்புகளை நம் மூலம் வெளிப்படுத்த அர்ப்பணிக்கிற மனதைத் தர வேண்டுவோம்.. //

மனதைத் தர வேண்டுவோம். சேர்ந்து வேண்டுதலில் சந்தோஷம் கூடுவது உணர்தலாகிறது.

இராஜராஜேஸ்வரி said...

பெருமைமிகு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

vimalanperali said...

நம் செயலே தெய்வம்.

சிவகுமாரன் said...

""1000 கதைகளுக்கு மேல் அச்சில் பார்த்த சாதனை""
அடேங்கப்பா ..
வியக்கிறேன். தலை வணங்குகிறேன்.

கே. பி. ஜனா... said...

உங்கள்சாதனையா அடக்கமா எது க்ரேட்?பட்டி மன்றம்தான் வைக்க வேண்டும்...

G.M Balasubramaniam said...


நினைத்தும் பார்க்க முடியாத சாதனை. வாழ்த்துக்கள்.

msuzhi said...

வாழ்த்துக்கள். வட்டத்தில் நுழைந்ததே பெருமை தான்.

ராமலக்ஷ்மி said...

பெரிய சாதனை. நல்வாழ்த்துகள்!

மோகன்ஜி said...

ரிஷபன் சார்!

//எந்த செயலானாலும் அது குறித்த பேச்சும்.. ஒரு செயல் திட்ட அட்டவணையும்.. கூடவே கவனிக்க.. ஊக்குவிக்க ஒரு குழுவும் இருந்தால் பெரும்பாலான நமது அபிலாஷைகள் வெற்றி பெறும்//

சத்தியமான வார்த்தைகள்.. வானவில்லுக்கும் வாருங்கள்

Ranjani Narayanan said...

உங்கள் சாதனை அசத்துகிறது, ரிஷபன்!
மேலும் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Kavinaya said...

//1000 கதைகளுக்கு மேல் அச்சில் பார்த்த சாதனை//

வாவ். மனமார்ந்த வாழ்த்துகள். சரஸ்வதி கடாட்சம் என்றென்றும் அருளட்டும்.

மோகன்ஜி said...

கங்காஸ்நானம் ஆச்சா?