June 20, 2015

முடிக்கப்படாத கடிதம்

அன்புள்ள..
இப்படி ஆரம்பிக்க இப்போதும் எனக்கு அனுமதி இருக்கிறதா.. தெரியவில்லை. மொட்டையாய் ஒரு கடிதம் ஆரம்பித்து பழக்கமில்லை. நண்பர் ரவி சொல்வார்.. அது எதற்கு அன்புள்ள.. நேரடியாய் உங்கள் பெயரைச் சொன்னாலே போதுமே.. அன்பில்லாமலா நாம் பழகுகிறோம்..
உன் பெயரைச் சொல்லவே தயக்கம்.. இனியொருமுறை என்னைப் பெயர் சொல்லி அழைத்தால்.. என்ன செய்வேன் என்று தெரியாது என்று மிரட்டி இருக்கிறாய்.
உனக்கு ஞாபகம் இருக்கா,, இல்லாமலா போகும். இந்த ஞாபக சக்தி சோதனையில் எப்போதும் நான் ஃபெயிலாவதும் நீ எக்களிப்பதும் சகஜமாயிற்றே.
“எங்கே சொல்லு.. ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நீ என்கிட்ட சொன்ன வார்த்தை எது..”
ஊஹூம்.. என்ன முயற்சித்தாலும் நினைவில் வரவில்லை.
முதல் மைனஸ் மார்க் இதில்.
அப்போ நீ என்கிட்ட டைம்பாஸுக்குத்தான் பழகி இருக்க.. இல்லியா..
அப்படி இல்லம்மா.. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதைகள் கூட இப்போ முழுசா ஞாபகம் இல்ல.. ஏதோ ஒரு வரி நாட் தான் சொல்ல முடியுது..
அப்போ எதுலயுமே நீ சின்சியர் இல்ல
இரண்டாவது மைனஸ் மார்க்..
பேசாமலிருந்தாலும் குற்றமாகி விடும்.
என்கிட்ட உனக்குப் பேச பிடிக்கல.. எப்போ நான் கிளம்பிப் போவேன்னு காத்துகிட்டிருக்க.. உன் ஆரம்பத் தேடல் இப்போ அலுத்துப் போச்சு.. நான் பழசாயிட்டேன்..
மூன்றாவது மைனஸ் மார்க்.
அம்மு.. ப்ளீஸ்..
வேணாம்.. இப்படி என்னை ஏமாத்தினது எல்லாம் உனக்கே தப்பாத் தெரியலியா..
இன்னிக்கு உனக்கு என்ன ஆச்சு..
ஓ.. என்கிட்டதான் மாற்றங்கள்.. நீ அப்படியேதான் இருக்கே.. வாவ்.. என்ன சுலபமாய் பழியை என்மீது போட்டுத் தப்பிக்கிறாய்.. உன் இனத்துக்கே உரிய சுபாவம்..
நாலாவது மைனஸ்..
மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. அவள் உச்சி முடி காற்றில் அலைபாய்ந்ததை ரசித்ததைச் சொல்ல முடியவில்லை.
ஒரு நிமிடத்திற்குக் குறைவான மௌனம் ஒரு பிரளயம்..இன்னொரு யுகத்தைக் காட்டிப் போனது.
அவளை அழைக்க வாயெடுத்தபோது சட்டென்று எழுந்தாள். செருப்பை உதறி அணிந்தபோது மணல் உதட்டில் கரித்தது.
போய் விட்டாள்.
யாரையோ சொல்வதைப் போல உன்னைப் பற்றித்தான் எழுதி இருக்கிறேன்.
நீயாக அழைப்பாய் என்று காத்திருந்தேன். மாட்டாய். உன் கோபம் உன் காதலைப் போலவே வலுவானது. என் பிழை என்னவென்று அறியாமலே இருக்கிற தவிப்பை விட.. இனி உன்னைப் பார்க்க முடியாது என்கிற கலவரம் மனசுக்குள்.
வாயேன்.. இப்படி முனகலோடு பிரிவதை விட கை குலுக்கி இனி பேசப் போவதில்லை என்றாலும் ஒரு கடைசிச் சிரிப்புடன் விலகலாமே..
கடிதத்தை எப்படி முடிப்பதென்று தெரியாமல்.. ஸ்தம்பித்தபோது அலைபேசியில் ரிங்டோன்..
பூக்கள் பூக்கும் தருணம்..
“நிம்மதியா இருந்திருப்பியே”
நீ.. நீயா..
என்னன்னு ஃபோன் செய்யத் தோணாதா
இல்ல.. வந்து..
பழக ஆரம்பிச்ச போதே சொல்லி இருக்கேன்.. எனக்குக் கொஞ்சம் அவசர புத்தி.. பதட்டக்காரி.. நீதான் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுப் போகணும்னு சொல்லி இருக்கேன்ல..
ம்ம்..
என் மேல இன்னும் பிரியம் இருக்கா இல்லியா
இருக்கும்மா
அப்போ ஏன் என்னைப் பார்க்க வரல..
......
சாயங்காலம் நம்ம வழக்கமான இடத்துல மீட் பண்றோம். சரியா..
ம்ம்
அம்முன்னு சொல்லு..
அ..ம்மு..
நல்லா சொல்லு..
அம்மு..அம்மு.. அம்மு..
லவ் யூ டா..
கையில் இருந்த முடிக்கப்படாத கடிதம் என்னைப் பார்த்துச் சிரித்தது !

13 comments:

Thenammai Lakshmanan said...

அட அட்டகாசமான சிறுகதை. சூப்பர். :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கையில் இருந்த முடிக்கப்படாத கடிதம் என்னைப் பார்த்துச் சிரித்தது !//

நானும் அதனுடன் சேர்ந்து சிரித்தேன். :)

இதுபோன்று அவ்வப்போது சற்றே சிணுங்கல்களுடன் கூடிய காதல்தான் எப்போதுமே இனிமையானதாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.

//லவ் யூ டா..// வழக்கப்படி வெகு ஜோர் ! :)

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா...! பேசினால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு...!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

S.P.SENTHIL KUMAR said...

கடிதம் முடிக்கப்படா விட்டாலும் அழகுதான்!
த ம 3

sury siva said...

முடிவிலாப் பயணமிது.

இங்கே ஒரு
முடியின் நினைவும்
முழு இன்பம்.

சுப்பு தாத்தா.

sury siva said...

முடிவிலாப் பயணத்தில்

ஒரு
முடியின் நினைவும்
முழு இன்பம்.

சுப்பு தாத்தா.

கே. பி. ஜனா... said...

என்ன காதல் இது ஒரே ரிஷபத்தனமா இருக்கே... அதாவது அட்டகாசமா இருக்கே?

கே. பி. ஜனா... said...

என்ன காதல் இது ஒரே ரிஷபத்தனமா இருக்கே... அதாவது அட்டகாசமா இருக்கே?

கோமதி அரசு said...

அழகான காதல் கதை, அருமை.

வல்லிசிம்ஹன் said...

இத்தனை உருகுகிற காதலனை ப் பெற்ற அம்முவுக்கு வாழ்த்துகள். அழகான காதல். கடிதமில்லாக் காதல்.

சாயந்திரமாவது காற்றில் அலையும் முடியைப் பற்றிப் புகழ்ந்து
சொல்லச் சொல்லுங்கள் அந்தப் பையனிடம்.

Shiyamala said...

பெண்களின் உணர்வுகளை உருக்குலையாமல், உணர்ச்சிப்பூர்வமா சொல்லிருக்கீங்க... அற்புதம்.

Shiyamala said...

உணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தின விதம் அற்புதம்...