June 10, 2012

இப்படியும் ஒரு அசடு இருக்குமா?

பானு ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டாள். 

வாசல் வராண்டாவில் செருப்புகளை உதறிவிட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். 
சௌஜன்யா பாத்ரூமில் துணிகளை அலசிக் கொண்டிருந்தாள்.

"ஹாய்... டார்லிங்...." என்றான். 

அவள் நிமிரவில்லை. வேகமாகப் புடவையை உதறினாள். தோளில் போட்டுக் கொண்டிருந்த பானுவின் கவுனை எடுத்து அலசினாள். 

"லெட்டர் வந்திருக்கா... ஏதாவது..." என்றான்.

பதிலை எதிர்பாராமல் ஹாலில் வழக்கமாகக் கடிதங்கள் வைக்கும் ஷெல்பைப் பார்த்தான். பிரித்த இன்லண்டு. 

யார் எழுதியிருக்கிறார்கள்.

'அன்புள்ள மாது...' 

அவன் தங்கை மீனாட்சிதான் எழுதியிருந்தாள். ஏதோ மைனர் ஆப்ரேஷனாம். பத்து நாட்கள் பெட் ரெஸ்ட்டாக இருக்க வேண்டுமாம். அண்ணி உதவிக்கு வந்தால் நன்றாக இருக்குமாம். 'இக்கடிதம் கண்டதும் உடனே அனுப்பி வைப்பாய் என்று நம்புகிறேன்...' என்று முடித்திருந்தாள்.

மீனாட்சியும் வேலைக்குப் போகிறாள். ஒரு பையன். அண்ணி வருவதைப் பொறுத்துதான் ஆபரேஷனுக்குத் தேதி சொல்ல வேண்டுமாம்.

இன்லண்டை மறுபடி எடுத்த இடத்திலேயே வைத்தான். உடை மாற்றிக்கொண்டு பாத்ரூம் போனான். சௌஜன்யா வெளியே துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். 

"என்ன இன்னிக்கு ஏன் லேட்டு? இப்ப தான் துணி தோய்க்கிறே?"

"எனக்கு யாரு இருக்காங்க உதவிக்கு?" என்றாள். மௌனமானான். 

"சரி, வா...பிள்ளையார் கோவில் வரைக்கும் போயிட்டு வரலாம்..." என்றான்.

சௌஜன்யா தீவிர பிள்ளையார் பக்தை. பானுவுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, இவன் ஒருநாள் ஆபிசிலிருந்து வர லேட் ஆனாலோ உடனே பிள்ளையார்தான். 'கற்பூரம் ஏத்தறேன்... செதிர் காய் போடறேன்' என்று நிலைமைக்குத் தக்கபடி வேண்டுதல்.

வேறு உடை மாற்றிக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள். 

"என்னம்மா கோபம்... ஏன் உம்முனு என்னவோ போல் இருக்கே...!" என்றான் குழைவான குரலில். 

"ப்ச்..." 

"பார்த்தியா... சொன்னாத்தானே புரியும்... நீயா மனசுக்குள்ள பொருமிக்கிட்டு இருந்தா நான் என்ன செய்ய முடியும்... சொல்லு..."

"எல்லாம் சொல்லிச் சொல்லி... அலுத்ததுதான்..." என்றாள் பளிச்சென்று. 

அவள் கோபம் புதிதல்ல. மாதுவுக்குக் கூடப் பிறந்த நால்வரும் பெண்கள். நாலு பேருமே வேலைக்குப் போகிறவர்கள். ஒவ்வொரு ஊர்களில் இருக்கிறார்கள். சௌஜன்யா வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லித்தான் திருமணமே செய்து கொண்டான். அதே போல அவள் பார்த்த வேலையையும் ராஜினாமா செய்து விட்டாள்.

பிரச்சனை அங்குதான் ஆரம்பித்தது. எந்த நாத்தனார் வீட்டில் பிரச்சனை, உதவி தேவை என்றாலும் கூசாமல் கடிதம் எழுதி விடுவார்கள். கேட்டால், 'இவள் தான் ஃபிரியாக இருக்கிறாளே...வந்து உதவக் கூடாதா...?' என்பார்கள்.

மாற்றி மாற்றி ஒவ்வொரு வீட்டுக்காய் உதவிக்கு அலைந்ததில் சௌஜன்யாவுக்கு வெறுப்பே வந்துவிட்டது. காரணம், உதவியது இல்லை, பதிலுக்கு அவர்கள் உதவ மறுத்தது.

ஒருமுறை பானுவுக்கு ரொம்பவும் உடம்பு முடியாமல் போய் ஹாஸ்பிடலில் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். எந்தச் சகோதரியுமே உதவிக்கு வரவில்லை. 'லீவு போட முடியாது. கணவர் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவார். பையனுக்குப் பரிட்சை...' என்று ஆளுக்கொரு பதில் எழுதி விட்டார்கள். 

மாதுதான் சமாதானம் சொன்னான். "பாவம்... நிஜம்மாவே அவங்களால வர முடியாம இருந்திருக்கலாம். அதனால என்ன... நான் லீவு போட்டுட்டுக்கூட இருக்கேன்..."என்றான்.

சௌஜன்யாவுக்கு அவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. மாதுவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு போதாது என்று சொல்லி விட்டாள். 

"உங்க தலையில எல்லாரும் மொளகா அரைக்கறாங்க. பிழைக்கத் தெரியாதவர் நீங்க... உங்களால நானும் சிரமப்பட வேண்டியிருக்கு. நமக்கு உதவாத மனுஷாளுக்கு நாம எதுக்கு கஷ்டப்படோணும்கிறேன்?" என்பாள்.

மாது மறுத்து விட்டான். "நம்ம கடமை இது... கூடப் பிறந்தவன்கிற முறையில என்னோட கடமை... நீயும் அதே போல உணரனும்னு நினைக்கிறேன்..." என்பான். 

இன்று மறுபடி ஒரு கடிதம் வந்து சௌஜன்யாவின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது. நிச்சயம் போக மறுப்பாள்.

கை கூப்பிக் கண் மூடித் தொழுததில் மனசு கொஞ்சம் அமைதியாயிற்று. பானு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டது அழகாக இருந்தது.
 
மூவரும் பிரகாரம் வலம் வந்து வெளி நடையில் அமர்ந்தார்கள்.

"...அப்பா... நாம மட்டும் அடிக்கடி இங்கே வரோம்... ஆனா... வித்யா வீட்டுல வரதே இல்லையே..." என்றாள் குழந்தை பானு திடீரென. 

"அப்படியா...!" என்றேன்.

சௌஜன்யா பேசாமல் கோவிலுக்கு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

"ஆமாப்பா... யாருக்காவது உடம்பு சரியில்லைன்னாத்தான் கோவிலுக்கு வருவாங்களாம்..."

"நாமும் அதே மாதிரிப் பண்ணலாமா?" என்றான் குழந்தையை ஆராய்கிற தொனியில். 

"உஹும். நாம எப்பவும் வரணும்." 

"ஹும்...இது உனக்குப் புரியுது... உங்கம்மாவுக்குப் புரியலியே? மத்தவங்க எப்படி இருந்தா என்ன... நம்ம கடமை... நம்மை உதவி கேட்டு வர்ர சொந்தக்காரங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு தோணலையே!" என்றான் பொதுவான குரலில். 

சௌஜன்யா நேராக அவனைப் பார்த்தாள்.

"நான் ஏமாளி, அசடுன்னு, அவங்க நினைச்சா, நினைச்சுட்டுப் போகட்டுமே! நமக்கு அதனால என்ன கஷ்டம்? ஆனா, நான் மனப்பூர்வமா - அவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படறேன்... கூடப் பொறந்துட்டேனே, அதுக்காக! உன்னை வற்புறுத்தல.. உனக்கு நிஜம்மாவே முடியலேன்னா, நீ போக வேண்டாம்... ஆனா அதைக் கஷ்டமா நினைச்சுப் போகாமா இருக்காதே, இது என்னோட ரெக்வஸ்ட். நாம நல்லது செஞ்சா நம்ம குழந்தை நல்லா இருப்பாள்னு ஒரு நம்பிக்கை. அப்படி வேணா நினைச்சுக்கயேன்... எப்படியோ... செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... அதுதான் வேணும்..."

கஷ்டமாகத்தான் இருந்தது. விருப்பம் முழுமையாக வரவில்லைதான். ஆனால், இவன் மனசு... இந்தக் குணம்தான் ஆரம்பத்திலிருந்து பிடித்தது. இதில் மயங்கித்தானே அவனை அவளால் இன்னும் நேசிக்க முடிகிறது? இதை அவர்களுக்காகச் செய்யவில்லை. 

இவனுக்காகத்தான் செய்கிறேன் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். உறுத்தல் தீர்ந்த மாதிரி இருந்தது. புன்முறுவலித்தாள். 

"ஊருக்குப் போறேன்..." என்றாள்.

20 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

’இவனுக்காகத் தானே செய்கிறேன்’- அருமை ரிஷபன்!

அப்பாதுரை said...

கடமைக்கும் தியாகத்துக்கும் இருக்கு இடைவெளியில் சிலரால் சுலபமாக ஒதுங்க முடிகிறது.

manichudar blogspot.com said...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அசடாக்கிவிட்டு கேள்வி வேறோ?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை....

ஹுஸைனம்மா said...

//கஷ்டமாகத்தான் இருந்தது. விருப்பம் முழுமையாக வரவில்லைதான்//

எனக்கும் - க்தை முடிவு குறித்து!! :-)))

எல் கே said...

இப்ப இந்த மாதிரி யாரு இருக்கா ??

ஸ்ரீராம். said...

இந்த 'என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா' லேருந்துதான் தப்பிக்கவே முடிவதில்லை! நல்ல தன்மைக்கும் இளிச்சவாய்ப் பட்டத்துக்கும் நூலிழைதான் தூர வித்தியாசம்! காலம்! வேலைக்குப் போகாமல் வீட்டில் இருப்பவர்கள் ஃப்ரீயாக இருப்பதாகச் சொல்லும் வார்த்தைகளே அவர்களை வெறியேற்றும்! அனுபவம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இவன் மனசு... இந்தக் குணம்தான் ஆரம்பத்திலிருந்து பிடித்தது. இதில் மயங்கித்தானே அவனை அவளால் இன்னும் நேசிக்க முடிகிறது? இதை அவர்களுக்காகச் செய்யவில்லை.

இவனுக்காகத்தான் செய்கிறேன் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். உறுத்தல் தீர்ந்த மாதிரி இருந்தது. புன்முறுவலித்தாள். //

அழகான எண்ணங்கள். ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சௌஜன்யாவுக்கு அவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. மாதுவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு போதாது என்று சொல்லி விட்டாள். "உங்க தலையில எல்லாரும் மொளகா அரைக்கறாங்க. பிழைக்கத் தெரியாதவர் நீங்க... உங்களால நானும் சிரமப்பட வேண்டியிருக்கு. நமக்கு உதவாத மனுஷாளுக்கு நாம எதுக்கு கஷ்டப்படோணும்கிறேன்?" என்பாள்.//

யதார்த்தமான எண்ணங்களே!

//"நம்ம கடமை இது... கூடப் பிறந்தவன்கிற முறையில என்னோட கடமை... நீயும் அதே போல உணரனும்னு நினைக்கிறேன்..."//

கடமையாவது கத்திரிக்காயாவது என்று உள்ளது இன்றைய உலகம்.

நல்லதை மட்டுமே மனித மனங்களில் விதைக்கும் தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

KParthasarathi said...

அவள் செய்தது சரியாகப்படவில்லை.
எதற்கும் ஒரு அளவு உண்டு.
கண்மூடித்தனமாக கணவன் கூறுவதற்கு எல்லாம் ஆமாம்சாமி போடுவது அசட்டுத்தனம் தான்

ஹ ர ணி said...

ஒரு குடும்பத்தின் அசைவு நின்றுவிடாமல் இருக்க ஓர் ஆணின் பங்களிப்பு என்பது முக்கியமானது. எத்தனை பண்பட்ட மனதுடன் அணுக வேண்டியிருக்கிறது. இது சின்ன பிரச்சினைதான் ஆனாலும் இதைக் கையாள்வதில்தான் இருக்கிறது. கொஞ்சம் சிதறினாலும் இதுவே பெரிய சங்கடத்தை உண்டாக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. உங்களின் கதைகள் என்னைச் சார்ந்தவையாகவே நான் எண்ணுகிறேன். ஏனென்று சொன்னால் என்னுடைய படைப்புலகம் குடும்பத்தைத் தாண்டியதில்லை. எனக்குப் பிடித்த கதை இது. வெகு அழகாகத் தீர்க்கிறீர்கள் பிரச்சினைகளை.

சாந்தி மாரியப்பன் said...

சிறுகதை நல்லாருக்கு..

கீதமஞ்சரி said...

சில தியாக மனப்பான்மையும் பரோபகார குணமும் இன்னும் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாமல், இளிச்சவாய்த்தனமாகவே விமர்சிக்கப்படுவது வேதனைதான். யார் எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கணவன் மனைவிக்குள் சரியான புரிதல் இருந்துவிட்டால் போதுமே.. எப்பேர்ப்பட்ட துயர மலையையும் சுலபமாய்க் கடந்திட இயலுமே.. அழகான புரிதல். பாராட்டுகள் ரிஷபன் சார்.

R. Jagannathan said...

ஸ்ரீராம் ரொம்ப சரியாக எழுதியிருக்கிறார்! ஆனாலும் இது கொஞ்ஜம் கஷ்டமான நிலைமை தான்! கணவன் தன் சகோதரிகளுக்கு உதவுவது கடமை என்று நினைப்பதும், மனைவி தனக்கு உதவாத நாத்தனார்களுக்கு தான் மட்டும் ஏன் உதவ வேண்டும் என்று நினைப்பதும் - இதில் யாரை குறை சொல்வது! தர்ம சங்கடம் தான். சௌஜன்யாவிற்கு வாழ்த்துக்கள்! - ஜெ.

vasan said...

க‌ண‌வ‌ன் ம‌ணைவியின் புரித‌ல் முழுமையாய் இருந்து விட்டால்
இது போன்ற‌ உப‌ரி விஷ‌யங்க‌ள், விருட்ச‌மாகிவிடாது. முளைக்கும் போதே இணைந்து, பேசி தீரவு காண்ப‌தே அத‌ற்கான‌ ச‌ரியான வ‌ழி. தாங்க‌ள் தேர்ந்தெடுத்த‌ த‌ள‌ம் (நாத்தனார் + கோவில்) சூப்ப‌ர்.

G.M Balasubramaniam said...

IDEAL AND PRACTICAL. சரி தவறு என்று சொல்ல இயலாதது. விட்டுக் கொடுத்துப் போவது யார்.?நடைமுறையில் நிகழ்வது கதைகளில் மட்டும்தானா.? அன்புக்கு அன்புதான் விலையாகும்.யாருடைய அன்புக்கு யாருடைய அன்பு என்பதுதான் சிக்கல்.

bandhu said...

ஸ்ரீ ராமின் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்.. என்ன இரத்தின சுருக்கமாக எழுதியிருக்கிறார்! Super!

நிலாமகள் said...

செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... //

இதை அவர்களுக்காகச் செய்யவில்லை.

இவனுக்காகத்தான் செய்கிறேன்//

ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள்!

ஜி.எம்.பி. சார் சொன்ன‌தும் அருமை.

மாதேவி said...

மற்றவர்கள் உதவாவிட்டாலும் நாம் உதவுவோம் என்ற நல்ல எண்ணம் உள்ளவர்கள்.ஏனையோர் பார்வையில் ஏமாளிகள்தான்.

சிவகுமாரன் said...

தங்கமணியை இந்தக் கதையை படிக்கச் சொல்ல வேண்டும். தேங்க்ஸ் ரிஷபன் சார்