July 04, 2012

வாரிசு

"ஊரே திமிலோகப்படும். அத்தனை பேரும் ஒத்தாசைக்கு வருவா. கறிகாய் நறுக்க மட்டும் பத்துப் பன்னிரண்டு மாமி. மூட்டைல வந்து இறங்கும் அத்தனை சாமானும். லிஸ்ட்தான் கொடுப்பார். 'டேய் என்னால ஒவ்வொன்னையும் செக் பண்ண முடியாது. உன்னை நம்புறேன். போனது, வந்தது... சொத்தை, சொள்ளை தலையில் கட்டிடாதே' ன்னு சிரிச்சுண்டு சொல்வார். சாமான் அனுப்பறவங்க பதறிப்போய்... 'அப்படி எல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லுவா...'"

தலைமுடி எண்ணெய் வைத்து, சிக்கு பிரித்து, நடுவகிடு எடுத்து இருபுறமும் இணைந்து கொண்டிருக்க பாட்டியின் பேச்சு கூடவே.

"பிறகு?"

தலை பின்னுக்கு இழுக்கப்பட்டு இறுக்கமாய் முடி பின்னப்பட, வித்யா 'ஸ்ஸ்' என்றாள், அவளையும் மீறி.

"ஏண்டி... வலிக்கிறதா?"

"நை... நை..."

தமிழ் சரளமாய்ப் பேச வரவில்லை. பாட்டியுடன் பேசும்போது ஹிந்தி சட்டென்று வந்துவிடும். பாட்டி விழிப்பதைப் பார்த்து மொழிபெயர்ப்பு.

"பருப்பு... அரிசி... அடேயப்பா... அந்த ஒரு நாள் வருஷத்தில் என்னிக்கு வரும்னு... நாங்க காத்திருப்போம். பெரிசா... பந்தல் போட்டு... ஆயிரம் இலை.... அதுதான் கடைசிப் பந்தி வரைக்கும் அளவு குறையாம... அப்பாவுக்கு அதிலே ரொம்பக் கண்டிப்பு. இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாது."

"உங்களுக்குப் பிதாஜின்னா..."

"உனக்குக் கொள்ளுத் தாத்தா..."

"கொள்ளு..."

"ம்..."

"கொள்ளுன்னா... கியா ஹை மம்மி...?"

"ஆங்... குதிரைக்கு வைக்கிறது."

மாலதி சிரிக்காமல் சொன்னாள். "ஏய்.. குழந்தையைக் குழப்பாதடி. கிராண்ட் ஃ பாதர் மாதிரி... அதுக்கு அடுத்தது..."

"ஒ... கிரேட் கிராண்ட் ஃ பாதரா?"

"அம்மா! உன் பழைய கதையை ஏன் அவகிட்டே சொல்லிண்டு. அவளுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளே..."

பேத்தியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

"நானும் அவளும் என்னவோ பேசிக்கிறோம். நீ எங்கேயோ கோயிலுக்குப் போகணும்னியே. கிளம்பலையா?" 

"நான் அப்பவே ரெடி. பேத்திக்கு எப்ப அலங்காரம் முடிக்கப் போறியோன்னு காத்துண்டிருக்கேன்."

"போம்மா. முகத்தை அலம்பிண்டு வா..."

வித்யா எழுந்து போனாள். சீப்பில் சிக்கியிருந்த முடிகளைப் பந்து போல் சுருட்டிக் கொண்டு வாசல் பக்கம் போனாள் அன்னபூரணி.

"அம்மா... கிளம்பலையா?"

வாசலிலிருந்து குரல் கேட்டது. வித்யாவுக்கு மல்லிகைப்பூவை வைத்து விட்டவள் "இதோ... வரேன்" என்று குரல் கொடுத்தாள்.

"நைட்... சாப்பிடறதுக்கா?”

கிளறி வைத்திருந்த சேவையைப் பார்த்துக் கேட்டாள் வித்யா.

"உனக்கு வேணுமா?"

"தோடா..."

டெஸ்ட் பார்த்துவிட்டு 'ஹை...' என்றாள்.

"கோயிலுக்குப் போயிட்டு வந்து சாப்பிடலாம். நியூஸ் பேப்பர்... அதோ இருக்கு பாரு... எடுத்துண்டு வா..."

"அம்மா..." மாலதியின் குரல் மறுபடி கேட்டது.

"உங்க அம்மாவுக்குப் பொறுமையே இல்லை. சின்ன வயசிலேர்ந்து எப்பவும் பரபரப்பு... ஆனா... நீ என்னை மாதிரி... நிதானம்..."

"க்யா?"

"ஸ்லோ... ஸ்டெடி..."

பாட்டியின் ஆங்கில அறிவு பேத்திக்கு உபயோகப்பட்டது.

எண்ணெய்த் தூக்கு, விளக்குத் திரி, சூடம் என்று கூடை முழுதும் சாமான்கள்.

மூன்று தலைமுறைப் பெண்கள் தெருவில் இறங்கி கோயிலை நோக்கி நடந்தபோது பாட்டியை நெருங்கி வந்தாள் வித்யா.

"சொல்லு... பாட்டி"

"ஓ!... கதையா? உன்னோட கிரேட் கிரேண்ட் ஃ பாதர்... சலிக்காம அத்தனை பேருக்கும் சாப்பாடு போடுவார். நாங்கள்ளாம் கூடப் பரிமாறுவோம். சின்ன சின்னதா... கூட்டு... காய்... அப்பளம்னு... நான் எல்லாருக்கும் குடிக்கத் தண்ணி தருவேன். பாவாடை, சட்டை போட்டுண்டு... தடுக்கி விழாம இருக்க தூக்கிப் பிடிச்சுண்டு... வாட்டர் ஜக்கோட போவேனாம்... சொல்லுவா..."

பாட்டியின் கண்களில் பழைய நினைவுகள் பளபளத்தன. மாலை வெயில் மதிய வெயில் போல அடித்தது. சிலர் வீட்டு வாசல்களில் பெருக்கி, நீர் தெளிக்க முற்பட, புழுதி காற்றில் கலந்தது.

"தாத்தா வருவாரா... உங்களோட?"

"தாத்தாவா? அப்போ எனக்கு மேரேஜ் ஆகலை... ஆனா... தாத்தாவும் எங்க ஊர்தான். ஹெல்ப்லாம் பண்ண மாட்டார்" என்றாள் சிரிப்புடன்.

மாலதியை யாரோ பிடித்துக்கொண்டு விட்டார்கள். 'எப்ப ஊர்லேர்ந்து வந்தே? உம் பொண்ணா? அப்படியே... உங்கம்மா ஜாடை' காற்றில் மிதந்து வந்தன பேச்சுக் குரல்கள்.

"மம்மிக்கி நிறைய பிரெண்ட்ஸ்."

"அவ எப்பவும் இப்படி தெருவுலதான்... வீட்டுக்குள்ளே வரமாட்டா. சாப்பாடு நேரத்துல மட்டும்தான். உங்க தாத்தாவும் அவளை ஒண்ணும் சொல்லமாட்டார்."

"பாட்டி... பிறகு?"

“கிரேட் கிராண்ட் ஃ பாதர் வருஷம் தவறாம இதைப் பண்ணுவார். ஏன் பண்றீங்கன்னு யாரோ கேட்டா... சிரிச்சுண்டு பேசாம போயிட்டார். நான் விடலை... ஒரு நாள் நானும் கேட்டேன். 'ச்சீ... ச்சீ... போடி'ன்னார். அப்பல்லாம் ரொம்ப மரியாதை. நீ உன் டாடி மேல விழற மாதிரி - நாங்க இல்லை. தள்ளி நிப்போம். பேசவே பயம். நான் மட்டும் கொஞ்சம் செல்லம். அந்த தைரியம்... விடாம மறுபடி கேட்டேன்..."

வித்யா பாட்டியுடன் ஒட்டிக்கொண்டு நடந்தாள். கதை கேட்கிற சுவாரசியம்.

"சாப்பிட்டுட்டு போறப்ப... அவா... முகத்தைப் பார்த்திருக்கியொன்னார்... ம்ம்... யோசிச்சேன்... லேசா ஞாபகம்... என்னப்பான்னு கேட்டேன்... எத்தனை நிறைவு... திருப்தி... அதான்... அதுக்காகத்தான்... மத்தவா சொல்ற மாதிரி... புண்ணியம்... அது... இதுன்னு கணக்குப் பார்க்கற புத்தி இல்லை. அவா வயித்தை நிரப்பினா... அவா மனசை அந்த நிமிஷம் தொட முடியறதே... அந்த சந்தோஷம்தான்..."

பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தது.

சந்நிதியில் விளக்கு ஏற்றி நமஸ்காரம் செய்தார்கள். வலம் வந்தார்கள். இருளில் தீப ஒளி மட்டும் பிரகாசிக்க ஸ்வாமியும், அம்பாளும் தரிசனம். 'கரெண்ட் இல்லை... கார்த்தால போச்சு. எப்ப வருதோ.'

பிரகாரத்தில் பூச்செடிகள். நந்தியாவட்டை, சரக்கொன்றை, செம்பருத்தி, அரளி, மந்தாரை என்று விதவிதமாய், ரகம் ரகமாய் வாசனை.

"ல்வ்லி..." என்றாள் வித்யா. கண்கள் மலர.

"இன்னும் உங்கம்மாவைக் காணோம்...பாரு."

"இங்கேயே உட்காரலாமா... பாட்டி?"

"இரு... இதோ... ஒரு நிமிஷம்..."

பூசைக் கூடையை எடுத்துக் கொண்டு பாட்டி கோயில் வாசல் பக்கம் போனதைப் பார்த்து வித்யாவும் பின்னால் ஓடினாள்.

சற்று ஒதுங்கி அமர்ந்திருந்த அந்தத் தம்பதி, வயசானவர்கள். வயது முதிர்ந்த ஒருத்தியின் அருகில் பார்வை மங்கிய முதியவர்.

பாட்டி கிளம்புமுன் கட்டிக்கொண்டு வந்திருந்த பொட்டலங்களை அவர்களிடம் தருவதைப் பார்த்தாள் வித்யா.

"என்ன பாட்டி?"

"ஸ்ஸ்... வா. உள்ளே போகலாம்."

வித்யா திரும்பிப் பார்த்தபோது அந்த வயதானவள் பொட்டலத்தைப் பிரித்து, சேவையை ஒரு பிடி எடுத்து முதியவரின் வாயில் ஊட்டி விடுவதைப் பார்த்தாள்.

பிரகார மண்டபத்தை நோக்கி பாட்டி நடந்து கொண்டிருந்தாள்.

அன்னபூரணி. வருஷத்துக்கு ஒரு தவம். ஆயிரம் பேருக்குச் சாப்பாடு.

"என்னால முடியலைடி. உங்க தாத்தாவுக்கு இதிலே இஷ்டம் இல்லை. அப்பவே கேலி பண்ணுவார். எப்பவாவது இரண்டு பொட்டலம். யாரோ இரண்டு பேருக்கு... என்னால முடிஞ்சது. எங்கப்பா ஞாபகமா. வேறொண்ணும் வேண்டுதல் இல்லை. 'அவர் பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா?'ன்னு எல்லாரும் கேக்கர்ச்சே உடம்பு ஆடிப் போகிறது. நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."

பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.

மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.

(நன்றி : அமுதசுரபி)

25 comments:

செய்தாலி said...

m(: nice sir

தி.தமிழ் இளங்கோ said...

கோயிலுக்குச் செல்லும் மூன்று தலைமுறைப் பெண்கள். ஆனால் அவர்களுக்குள் தலைமுறை இடைவெளி இல்லை. பாட்டியின் அன்னதானம். ஓட்டமும் நடையுமாய் ஒரு சிறுகதை. நன்றி அமுதசுரபிக்கு மட்டுமல்ல. உங்களுக்கும்தான்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வித்யா திரும்பிப் பார்த்தபோது அந்த வயதானவள் பொட்டலத்தைப் பிரித்து, சேவையை ஒரு பிடி எடுத்து முதியவரின் வாயில் ஊட்டி விடுவதைப் பார்த்தாள்.//

VERY TOUCHING LINES ! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எப்பவாவது இரண்டு பொட்டலம். யாரோ இரண்டு பேருக்கு... என்னால முடிஞ்சது. எங்கப்பா ஞாபகமா. வேறொண்ணும் வேண்டுதல் இல்லை.

'அவர் பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா?'ன்னு எல்லாரும் கேக்கர்ச்சே உடம்பு ஆடிப் போகிறது.

நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.//

SUPERB, SIR. ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'"தலைமுடி எண்ணெய் வைத்து, சிக்கு பிரித்து, நடுவகிடு எடுத்து இருபுறமும் இணைந்து கொண்டிருக்க பாட்டியின் பேச்சு கூடவே."பிறகு?"தலை பின்னுக்கு இழுக்கப்பட்டு இறுக்கமாய் முடி பின்னப்பட, வித்யா 'ஸ்ஸ்' என்றாள், அவளையும் மீறி."ஏண்டி... வலிக்கிறதா?""//

//நான் எல்லாருக்கும் குடிக்கத் தண்ணி தருவேன். பாவாடை, சட்டை போட்டுண்டு... தடுக்கி விழாம இருக்க தூக்கிப் பிடிச்சுண்டு...//

// சீப்பில் சிக்கியிருந்த முடிகளைப் பந்து போல் சுருட்டிக் கொண்டு வாசல் பக்கம் போனாள் அன்னபூரணி//

தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள், சார்.

அது தான் என்க்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

எழுதிய தங்கள் கைவிரல்களுக்கு அடியேனின் அன்பு முத்தங்கள்.

வீ.......ஜீ

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைக்கும் எங்கள், ஆங்கரையில் அதே போன்ற அன்னதானம் செய்த, குடும்பத்தின் வாரிசுகள் உள்ளனர்.

மிகவும் க்ஷேம்மாகவே உள்ளனர்.

அக்ரஹாரத்திலேயே மிகப்பெரிய வீடு. பெரிய ஆம் [ஆஹம்] என்றே இன்றும் சொல்லுகிறார்கள்.

இப்போதுள்ள வாரிசும், அவரின் வாரிசும் அதே நற்குணங்களுடன் மிக நல்ல கார்யங்கள், ஸத் விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

தனியாகவே ஓர் பதிவிட நினைத்துள்ளேன்.

இன்றும் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு மிகப்பெரிய கல் உண்டு

[ஆட்டுக்க்ல்லை மிக உயரமாக தலை கீழாகக் கவிழ்த்துப் போட்டது போல இருக்கும்]

அதில் பசியுடன் யார் வந்து அமர்ந்தாலும், உள்ளே அழைத்துப்போய் வயிறு முட்ட சாப்பாடு போடுவார்கள்.

அந்தக்கல்லைப்பற்றியே நிறைய கதைகள் உள்ளன.

எங்களுக்கு அவர்கள் தாயாதி.

எங்களின் சங்கிருதி கோத்ரம் தான் அவர்களும்.

பூவோடு சேர்ந்த நாராக நானும் அவர்களுக்கு, அவர்கள் செய்யும் ஸத் கார்யங்களுக்கு, பணம் கொடுத்து, ராமருக்கு அணில் போல அவ்ர்கள் சேவையில் இன்றும் பங்கெடுத்துக்கொண்டு வருகிறேன் என்பதில் ஒரு சிறிய திருப்தி எனக்கு உள்ளது.

இந்தக்கதையைப் படித்ததும் எனக்கு அந்த ஞாபகமே வந்தது.

சந்தோஷம் நன்றி.

vgk

வெங்கட் நாகராஜ் said...

Touching....

இந்த மாதிரி மனிதர்கள் இன்னும் தேவை. பசித்தவர்களுக்கு உணவிடுவதில் இருக்கும் சந்தோஷம் அலாதியானது தான்....

ராமலக்ஷ்மி said...

பலன் எதிர்பாராமல் மனநிறைவுக்காக செய்யப்படும் தர்மங்கள். தழைக்கிறது தலைமுறைகள். அழகு.

ஹ ர ணி said...

ரிஷபன்..

நம்முடைய மரபு இருக்கிறதே அது எத்தனை புதுமைகள் இந்த உலகை சூழ்ந்தாலும் மாறாதது. அது நமது கொடுப்பினை. இந்த மரபில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது கொடுப்பினை. அனுபவிக்க ஆனந்தமாக கதை ரிஷபன். அருமை. அருமை. அருமை.

R. Jagannathan said...

அமுத்சுரபியில் அன்னதானம் வெங்கட்ராமய்யர் கதை வெகு பொருத்தம்! அப்படியே பாட்டி வழியே பேத்திக்கும் அந்த குணம் வழியட்டும்! கதையை படிப்பவர்களுக்கும்! - ஜெ.

கல்கியில் ‘ஊர்மிளா’ ரொம்ப சிந்திக்க வைத்து மனசை கனக்க வைத்து ‘டிஸ்டர்ப்’ செய்தது. கொஞ்ஜம் ‘காண்ட்ரவர்ஸி’யான கதை? -ஜெ.

raji said...

தைக்கும்,நெகிழ்த்தும்,பரவசப் பட வைக்கும், சிலிர்க்க வைக்கும்,பாரமாக்கும்,வெகு நேரம் மனதில் ஒட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும்,

இப்படி மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தரும் சக்தி இந்த ப்லாக்கிற்கு உண்டு

அன்னதானம் வெங்கட்ராமன் போல் இயலாவிடினும் அணில் போல் என்னால முடிஞ்சது என்று சொல்லும் அன்னபூரணி போல் நானும், "இந்த எழுத்தாளர் போல் இயலாவிடினும் ஏதோ என்னால முடிஞ்சது" என்றேனும் இருக்க விழைகிறேன்

பின்னிவிடும் பொழுது வரும் வலிக்கிறதா என்ற சரளமான பாணியில் முத்திரைகள் தெரிகின்றது

எழுத்தில் எனக்கு எந்த அளவு முன்னேற்றம் வேண்டும் என்பதற்கு நான் வைத்துக்கொண்டிருக்கும் அளவுகோல் எழுத்துக்களில் இந்த வலைப்பூவும் ஒன்று

கோமதி அரசு said...

நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."

பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.

மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.//

எனக்குள்ளும் என்னவோ நிகழ்ந்து விழி ஒரங்களில் நீர் நிறைந்து விட்டது.

அருமையான கதை.

என்மகள், நான், பேத்தி மூவரும் கோவிலுக்கு போகும் போது என்னிடம் நலம் விசாரிப்பவர்களை பார்த்து அம்மாவுடன் வந்தால் தேர் நகருவது போல் தான் நகர வேண்டும் அவ்வளவு நட்புகள் என்பாள் மகள் பேத்தியிடம்.

Pattu said...

அருமை!
கண்ணீர் தளும்ப படித்தேன்.மனச தொட்டு விட்டது.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான மனதைத் தொட்ட கதை.

பால கணேஷ் said...

ஒரு சிறுகதை படிப்பவரின் மனதில் ஏதாவது ஒரு உணர்ச்சியைத் தூண்டிவிட வேண்டும். அதுதான் நல்ல சிறுகதை என்று சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார். உங்களின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் அந்த வகையில் நல்ல சிறுகதைகளே.

பாட்டி - பேத்தி உறவும். பாட்டியின் வார்த்தைகளில் விரியும் அன்னதானம் வெங்கட்ராமனும் மனதில் ஒட்டிக் கொண்டார்கள். முத்திரைக் கதை.

manichudar blogspot.com said...

பாட்டியின் முக ஜொலிப்பில் வித்யாவுக்கு மட்டுமல்ல எனக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட ..என்ன ஒரு அதி அற்புதமான நடை .... அன்ன தானம் செய்பவர்கள் எந்த தலைமுறைக்கும் சோடை போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை !

எங்கள் கிராமத்திலும் ஒருவர் இருந்தார்.. அன்னதாதா கிருஷ்ண மூர்த்தி என்று பெயர்...அவரைப் பற்றி நிறைய பேர்

இன்னமும் பெருமையா சொல்லிக் கொண்டு இருபபார்கள் ...

ஆனா தாண்டாபுரம் என்கிற கிராமம் அன்ன தானத்திற்கு பெயர் பெற்றது

என்று சொல்லக் கேள்வி !

ஹும்.... பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டது உங்கள்

கதையின் தாக்கம் !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதம் ரிஷபன்.

மூன்று தலைமுறைப் பெண்கள் ஒன்றாகக் கோயிலுக்குச் செல்லும் காட்சியும், பாட்டியிடம் பின்னிப் பூ வைத்துக் கொள்ளும் பேத்தியும் இனிமேல் கதைகளில் மட்டுமேதானோ என நினைக்கிறது மனம்.

உரையாடல்களும் அதைச் சுற்றிப் படரும் சம்பவங்களும் நுட்பமான ரசனையோடு.இப்படி எழுதுபவர்கள் குறைந்துதான் போய்விட்டார்கள்.

சீனு said...

//மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.//

அந்த பாட்டி என்னிடமே கதை கூறுவது போல் இருந்த்தது... சிறுகதை என்றாலும் பல தலைமுறையின் காவியம் போல் உள்ளது.

தங்கள் தளத்திற்கு இது தான் என் முதல் வருகை, தங்களின் 237வது நண்பனாக உங்களைத் தொடர்கிறேன். நேரம் இருந்தால் இந்த சிறுவனின் வலைபூவிற்கும் வந்து படியுங்கள். நன்றி


படித்துப் பாருங்கள்

சென்னையின் சாலை வலிகள்

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

G.M Balasubramaniam said...

கதையும் சொல்லிப்போன விதமும் வெகு நேர்த்தி. ஆனால் கூடவே ஒரு ஆதங்கம். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டால் கதை கேட்கிறார்களா என்ன.?

vasan said...

ஆஹா, ரிஷ்ப‌னின் அமுத‌ சுர‌பியிலுருந்து,
ப‌சித்த‌ வாய்க்கு பாயாச‌ம்..ம்..ம் அமுத‌ம்.
அதே வ‌யிறு நிறைந்த‌ சுகானுப‌வ‌ம்.
செவிக்குண‌வுக்கு நிக‌ர்தான் இந்த‌ விழிக்குண‌வும்

இராஜராஜேஸ்வரி said...

பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தது.

அமுதசுரபியாய் மனம் நிறைந்தது.. அருமையான கதைக்கு பாராட்டுக்கள்..
அன்னபூரணிக்கு வாழ்த்துகள் !

Matangi Mawley said...

Beautiful story...

My father read this story and suggested that I read it. He absolutely loved it...

Such stories are so rare these days! The three generations stand in front of my eyes as you narrate it! The conversation too was so real...

Brilliant!

நிலாமகள் said...

அவா மனசை அந்த நிமிஷம் தொட முடியறதே... அந்த சந்தோஷம்தான்..."//

நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."//

நெகிழ்த்தின‌!!

நிலாமகள் said...

தைக்கும்,நெகிழ்த்தும்,பரவசப் பட வைக்கும், சிலிர்க்க வைக்கும்,பாரமாக்கும்,வெகு நேரம் மனதில் ஒட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கும்,//

அழ‌காக‌ சொல்லிவிட்டீர்க‌ள் ராஜி... ந‌ன்றி!