June 21, 2013

காணாமல் போனவன் - 2

"என்னம்மா சொல்ற!" சதாசிவம் மாமா கேட்டது ஏறக்குறைய அலறல் போலவே இருந்தது.


மஞ்சரி அழுதாள். "எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல மாமா!"

"இப்ப எங்கே இருக்கீங்க?"

டிரைவரிடம் கேட்டு இடம் சொன்னாள்.

"ரமேஷ்ட்ட செல் இருக்கா?... அதை ட்ரை பண்ணியா?"

"பண்ணேன் மாமா! ஆனா ஸ்விட்சுடு ஆஃப்னு வருது."

"சரி பயப்படாத... கவலைப்படாத... கிளம்பி வா!"

"அவருக்கு என்ன ஆச்சுன்னு..."

"இங்கே பாரும்மா!... எதுக்கும் கவலைப்படாத... அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நீ புள்ளைங்களோட எப்படி தனியா அங்கே இருப்ப? வாம்மா!"

மஞ்சரியின் அழுகைதான் கேட்டது.

"டிரைவர்ட்ட போனைக் கொடும்மா!"

சதாசிவ மாமா ரொம்பப் பொறுமையாய்ப் பேசினார்.

"அவங்களைப் பத்திரமா கூட்டிகிட்டு வாங்க!"

அதைவிட முக்கியமாய், மாமா தனது காரில் டிபன் எடுத்துக் கொண்டு எதிரே வந்து விட்டார். இவர்கள் கார் இன்னும் 50 கி.மீ போனால்தான் அவர் ஊர். மாமாவைப் பார்த்ததும் மஞ்சரிக்கு ஒருபுறம் தைரியம், இன்னொருபுறம் அழுகை.

"சாப்பிடும்மா... புள்ளைங்க உன்னால இன்னும் அரண்டு போகும்."

வற்புறுத்திச் சாப்பிட வைத்தார். மூன்று பேருமே திணறிப் போயிருந்தது தெரிந்தது.

"நீ எங்கப்பா போன... அந்த இடத்துல காரை நிறுத்திட்டு?" டிரைவரை விசாரித்தார்.

"வாமிட் வர மாதிரி இருந்திச்சு..."

"அதுக்கேன் அவ்வளவு நேரம்? ஸார் போனது உனக்குத் தெரியுமா?"

"தெரியாதுங்க! அவர் கீழே இறங்கி நின்னாரு... அப்புறம் எப்படி திடீர்னு..."

என்ன செய்யலாம்... சதாசிவத்திற்குக் குழப்பமாய் இருந்தது.

"சரிம்மா... சாமி கும்பிடன்னு வந்துட்ட. முதல்ல அதைப் பார்ப்போம். அதுக்குள்ள ரமேஷே ஏதாச்சும் பேசறானான்னு பார்க்கலாம்."

"இப்ப இருக்கற மன நிலையில என்னால சாமி கும்பிட வர முடியாது மாமா!"

"என்னம்மா இது சின்னப் புள்ளையாட்டம்? இப்பதான் சாமிகிட்ட போகணும். திக்குத் தெரியாம நிக்கிறப்ப அவன்தான் வழிகாட்டணும்."

மாமா பேசிப் பேசிக் கரைத்தார். குளித்து முடித்து கோவிலுக்குப் போனார்கள். மஞ்சரி முகத்தில் சுரத்தே இல்லை. கோவிலுக்குப் போய் விட்டு வந்ததும் சாப்பாடு. அதற்கும் மஞ்சரியுடன் போராட்டம்.

"பசிக்கல மாமா!"

வீட்டில் எல்லோரும் மஞ்சரியைச் சுற்றி அமர்ந்து சாப்பிட வைத்தார்கள். பாபு, ராகவிக்கு அந்த வீட்டுக் குழந்தைகளுடன் அரட்டை, விளையாட்டில் கவனம் திரும்பியது. அப்பாவுக்கு எதுவும் ஆகாது... மாமா பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை.

"அம்மா... மஞ்சரி... இப்படி வா!" சதாசிவம் அருகில் அமர வைத்தார்.

"அவனுக்கு ஏதாச்சும் பிரச்னையா?"

"எதுக்கு கேட்கறீங்க?"

"இல்ல... இப்படி திடீர்னு காணாப் போறான்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்னு..."

"ஆபீஸ்ல ஏதோ சொன்னார். ஆனா அதுக்காக இப்படிப் பண்ண மாட்டார் மாமா!"

"சரி, அவனோட ஆபிஸ் விவரம்... எதுவும் தெரியுமா..."

"விவரம்னா?..."

"அவனோட ப்ரெண்ட்ஸ்... அவன் சம்பளம்... அவனோட சேவிங்ஸ்... இப்படி"

"யார்கிட்ட பேசறார்னு தெரியாது."

"உன்கிட்ட சொல்ல மாட்டானா?"

"சொல்லுவார்... ஆனா எனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன்னு..."

"ம்ம்... யார்கிட்ட விசாரிச்சா அவனைப் பத்தி தெரியும்?"

"தெரியல மாமா!"

"அடிக்கடி யார் பேரையாவது சொல்வானா?"

"குமார்னு ஒருத்தர் பேர் சொல்வார்."

"அவர் நம்பர் இருக்கா?"

"இல்ல மாமா... ஸ்ஸ்... ம்ம் முந்தா நாள் அவர் என் நம்பருக்கு கால் பண்ணி ரமேஷ் இல்லியான்னு கேட்டார்... இருக்காரேன்னேன். பின்னே ஏன் போனை எடுக்கல ரிங் போவுதேன்னார்..."

"உன் நம்பர் எப்படி அவருக்குக் கிடைச்சுதாம்?"

"அது தெரியல மாமா!"

"சரி, உன் செல்லைக் கொடு!"

மாமா இன்கமிங் அழைப்புகளைப் பார்த்து வெறும் நம்பர் இருந்ததை எடுத்தார்.

"இதுவா?"

"தெரியல மாமா... இதுவாத்தான் இருக்கும்."

அந்த எண்ணை அழைத்தார்.

"குமார் இருக்காரா?"

"........"

"ரமேஷோட மாமா பேசறேன்..."

"......"

"ஓ அப்படியா! சரி... அப்புறம் பேசறேன்."

மஞ்சரியிடம் போனைக் கொடுத்தார்.

"அவர் ஆபிஸ் வேலையா டெல்லில இருக்காராம்... ரமேஷ் எப்படி இருக்கார்னு கேட்டார்... நான் ஒண்ணும் சொல்லல."

மஞ்சரி முகத்தில் குழப்பம். 'அப்போ அவர் எங்கேதான் போனார்?...'



(தொடரும்...)



8 comments:

middleclassmadhavi said...

Enge than polar? Interesting...

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் மேலும் ஆவலைத் தூண்டுகிறது...? எங்கே தான் போனார்...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான சஸ்பென்ஸ்ஸுடன் கதையை நகர்த்தும் விதம் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

குழப்பம் ஆரம்பம் ..!

sury siva said...



ஸ்வாமி !!
நான் ஏற்கனவே அறியாத தெரியாத ஒரு காட்டில் இல்ல நாட்டில் உட்கார்ந்துண்டு எப்படா திரும்பி வரப்போறோம்
அப்படின்னு திகில் புடிச்சுண்டு உட்கார்ந்து இருக்கேன். வேளா வேளைக்கு சாப்பாடு, அந்த மால், இந்த மால், அப்படின்னு
லைஃப் ஓடிண்டு இருக்கு.

இப்ப கொஞ்சம் மனசுக்கு அமைதியா இருக்குமே அப்படின்னு ஸ்ரீரங்கம் பெருமாளைச் சேவிச்சுட்டு வரலாமே அப்படின்னு உங்க ப்ளாக்குக்கு வந்தா இங்கேயும் அந்த திகிலா.... இத்தனை சஸ்பென்ஸ் தாங்காதய்யா..

பெருமாளே.... சீக்கிரம் தொலைந்து போன ஆசாமி எங்கிருக்காரு அப்படிங்கற விவரத்த சொல்லிப்போடு.

என்ன தான் இருந்தாலும், பாதுகா சஹஸ்ரம் அப்படின்னு இருக்கு. அதுலே ஒரு பாசுரம் நவக்ருஹ உபாசனை.
அதை படிச்சா நல்ல செய்தி கிடைக்கும்.

சுப்பு தாத்தா.
நியூ ஜெர்சி.

கே. பி. ஜனா... said...

சஸ்பென்ஸ் நீடிக்கிறது மனதில்...

அப்பாதுரை said...

நானும்.. interesting.

ராமலக்ஷ்மி said...

பதற்றம் எங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது.