February 14, 2015

வைரஸ் படலம் - முக நூலில் !



                             வைரஸ் படலம் - முக நூலில் !


இப்போது நினைத்தால் சிரிப்பு பீரிட்டுக்கொண்டு வருகிறது..காரணம் இதை வைத்து என் நண்பர்கள் என்னை ஓட்டியது.. ஆனால் அந்த பயங்கர நிமிடம்.. இப்போது நினைத்தாலும் தூக்கி வாரிப் போடுகிறது.
ஓட்டு போட்டு ஜனநாயகக் கடமையை முடித்த திருப்தியுடன்.. அதையும் பதிவு செய்யும் ஆவலில் மையிட்ட விரலை அழகாய்ப் படமெடுத்துப் போட்டு விட்டு பிறர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன் .  நமுட்டு சிரிப்புடன் வைரஸ் வில்லன் காத்திருந்தது தெரியாமல்.
நண்பர் ஒருவர் பதிவில் அவசியம் பார்த்தே தீரவேண்டிய வீடியோ என்ற குறிப்புடன் சாதுவான லிங்க் போடப்பட்டிருந்தது. வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு என்கிற அசால்ட்டான ஆசையில் கிளிக்கினேன்..அவ்வளவுதான்..
 பயங்கர பின்புலத்துடன் ஒரு அன்னிய அம்மையார்.. என்பக்கத்தில் வந்து ' கண்ணுக்குள் பொத்தி வைத்த என் செல்லக் கண்ணனே..' என்று பீட்டில்ஸ் பீட்டில் பாட ஆரம்பித்தார்.
 மௌஸ் அந்த நிமிஷம் கைக்கு அகப்படாமல் துள்ளிக் குதித்து கீழே விழுந்தது.
'
இன்னொரு டோஸ் காப்பி வேணுமா.. சாப்பாடு லேட் ஆகும்' சமையற்கட்டிலிருந்து குரல் கேட்டது.
அய்யோ .. வந்துரப் போறா..இந்த கண்ராவியை பார்த்துட்டு 'ஓ.. இதான் எப்ப பார் பேஸ்புக்ல இருக்கற ரகசியமான்னு'  சண்டை ஆரம்பிக்கப் போகிறதுன்னு பயத்துடன் அந்த 'அம்மணி'யை விரட்டப் பார்த்தேன்..போவேனா என்று அப்படியே நின்றாள். டிலீட் ஆப்ஷனே காணோம். மௌஸ் தானும் திக்பிரமித்து அசைய மறுத்துவிட்டது.
கடவுளே.. கடவுளே.. என்ன செய்வேன்..
இதற்குள் என் பெயர் போட்டு 20 பேருக்கு (உடனே அனுப்பாவிட்டால் கெடுதல் நிகழும்னு யாரோ சொன்ன மாதிரி) வைரஸ் விடியோ போய்விட்டது. அவர்கள் எல்லாம் (பாவம்..அப்பிராணிகள்.. ஒருத்தரைத் தவிர) என்ன ஸார் அனுப்பி இருக்கீங்க.. ஓப்பனே ஆகமாட்டிங்குது என்று விகல்பமே இல்லாமல் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
'உங்களுக்கு ஓப்பன் ஆகல.. எனக்கு மூட மாட்டிங்குது' என்கிற அவஸ்தையில் என்னென்னவோ வகையில் போராடிக் கொண்டிருந்தேன். 'ஹே கோவிந்தா.. என்னை ரட்சி' என்று அபயக் குரல் எழுப்பி (அஞ்சாறு பேருக்கு தொலை பேசி) இதிலிருந்து என்னை எப்படி மீட்டெடுப்பது என்று விசாரித்தேன்
அவர்கள் சொன்ன எந்த ஐடியாவும் வொர்க் அவுட் ஆகவில்லை முதலில். என் கம்ப்யூட்டர் சட்டென அன்னிய செலாவணிக்குப் போய்விட்டது.. களவாணித்தனம் செய்து !
3 முறை ஷட் டவுன் செய்தேன்.. ஒவ்வொரு முறையும் அவிங்க மட்டும் மாறாமல்..
இதற்குள் என் கெஞ்சலை ஏற்று பெரும்பாலான நண்பர்கள்  'சரி ஸார் விடுங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'  என்று விலகிப் போக.. ஒருத்தர் மட்டும் இன்பாக்ஸில் சொன்னார்.
'
ஸார்.. இதெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது. ப்ளீஸ் இந்த மாதிரி எனக்கு அனுப்பாதீங்க இனிமேல்.. உங்களை அன்ப்ரெண்ட் பண்ணப் போறேன்' என்றார் சீரியசாய்.
அய்யா.. சாமி.. நான் வேணும்னா அனுப்பறேன்..என் பேரை போட்டு எவனொ சித்து விளையாட்டு விளையாடறான்னு சொல்லப் பார்த்தேன்..அவர் கோவிச்சுட்டு போயிட்டார்.
'உங்களை நம்பி வந்தவளைக் கை விடாதீங்கன்னு' நண்பர் ஒருவர் கிண்டல்..
அவளை இப்படியே கூட்டிண்டு தாயார்.. பெருமாள்சன்னிதிக்குப் போக முடியுமா என்ன !
'வாலண்டைன்ஸ் டே கிப்ட் உங்களுக்கு'  இது இன்னொருத்தர் !
இடுக்கண் வருங்கால் நகுக.. சரி.. அதுக்காக இப்படியா கலாய்க்கறது..
சுத்தமாய் வியர்த்துவிட்டேன்.. டியாக்டிவேட் பண்ணுங்க என்கிற அட்வைஸ் என்னால் போராடித்தான் செயல்படுத்த முடிந்தது.
பாஸ்வேர்ட் மாற்றினேன்.  பிறகு டியாக்டிவேட்..
இந்த பதற்றம் அடங்க லாரல் ஹார்டி மூவிஸ் அஞ்சாறு வரிசையாய்ப் பார்த்து மனம் விட்டு சிரித்தேன்.
மாலையில் உள்ளூர பயத்துடன் பேஸ்புக் ஓப்பன் செய்தேன். ஓப்பன் ஆகிவிட்டது. அந்த பதற்றத்தில் எனக்குக் குழப்பம் வேறு. எப்படி ஆகும்.. நான் தான் டியாக்டிவேட் செய்திருக்கிறேனே.. அப்புறம் நண்பர் சொன்னார்.. 'நீங்க பாஸ்வேர்ட் போட்டா ஓப்பன் ஆகிரும்'
ஒரு விதத்தில் நிம்மதி..செல்வி சங்கர் மேடம் என் சார்பில் என் கஷ்டத்தைப் போட்டிருந்தாலும் நானும் சொல்லிவிடலாம் என்று பதிவிட்டேன். உடன் சிலர் கமெண்ட்ஸ் பார்த்து ஆஸ்வாசம்.

யப்பா..பேர் தெரியாத புண்ணியவானே.. உன் அறிவு சாமர்த்தியத்தை வேற வழியில் காட்டக் கூடாதா..இப்படி எல்லாமா விளையாடறது..
ஏதோ வசனமா எழுதுவேன்.. என்னையும் புலவன்னு ஒத்துகிட்டிருக்காங்க.. இப்போ யாரோ துரத்தற மாதிரியே இருக்கு.. இனிமே நான் அனுப்பாட்டியும்.. இது நீங்க அனுப்பினதான்னு கேட்கமாட்டாங்களா..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா.. போதும் டா சாமி !

அந்த நேரத்தில் வந்து எட்டிப் பார்க்காத என் அப்பாவுக்கும், துணைவிக்கும் கோடானுகோடி நன்றிகள் !

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவையான அனுபவம்.

சுவைபடவே எழுதியுள்ளீர்கள்.

போதாத வேளைக்கு ____ [என்னவோ என்னவோ] _____ ஆச்சாம்ன்னு ஒரு கதை உண்டு. ஏனோ அந்த ஞாபகம் எனக்கு வந்தது. :)

”தளிர் சுரேஷ்” said...

முகநூலில் இந்த சங்கடம் ஏற்படுவது சகஜமாகிவிட்டது! யாராவது எதற்காவது இப்படி வைரஸ் அனுப்பி பாடாய் படுத்துக்கிறார்கள்! நன்றி!

கீதமஞ்சரி said...

எவ்வளவுதான் எச்சரிக்கையாயிருந்தாலும் இதுபோல் சில நேரங்களில் எதிரிகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிப் போய்விடுகிறது மானம்... எப்படியோ எல்லாம் சுமுகமாக முடிந்ததே.. மகிழ்ச்சி ரிஷபன் சார்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ரிஷபன் அண்ணா

கதை நன்றாக உள்ளது... சொல்லிச் சென்ற விதம் மிக மிக சிறப்பு.. முடித்த விதமும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இது 'அட்டாக்' புதுசா இருக்கு...!

ADHI VENKAT said...

யார் தான் இந்த வேலையில் ஈடுபடுகிறார்களோ????

எப்படியோ டென்ஷன் அகன்றது..

Radha Balu said...

நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு! பர(ட)பர(ட)ப்பான ஒரு நிகழ்ச்சியை படிப்பவர்கள் சிரிக்க, சிரிக்க (நீங்கள்தான் அந்த ஆங்கில மாதுவைப் பார்த்து, வீட்டு மாது எப்போ வந்துவிடுவாரோ என்று பயந்திருந்தீர்களே!) எழுதியது மிக நன்றாக இருக்கிறது! படித்தேன்....ரசித்தேன்....சிரித்தேன்!!!)

ஷைலஜா said...

அடட்டா இப்படியெல்லாமுமா!