December 28, 2011

சூர்யா

மார்பில் வலித்தது அனுவுக்கு.

'
ம்மா'... என்று மனசுக்குள் அரற்றினாள். புரண்டதில் கட்டில் கிறீச்சிட்டது.

"
என்னடி..." அம்மாதான் எதிரில் வந்து நின்றாள்.

மூன்று நாட்களாய்ப் பொங்குகின்ற துக்கம் மறுபடி பிரவகித்தது. அம்மாவின் கண்ணீர் அவள் தலையில் பட்டு... ஒரு துளி தெறித்தது.

எத்தனை பிரசவம்... என் கையால பார்த்திருப்பேன்... எத்தனை குழந்தைகள் வளர்ந்து ஆளாக்கி... எல்லாம் இப்ப ஜாம்... ஜாம்னு இருக்கு... என் பேத்தி மட்டும் எனக்குத் தங்காமே..."

மூன்று நாட்களாக அம்மா இதையேதான் சொல்லிச் சொல்லி அழுகிறாள்.

என்ன செய்து... என்ன. பிறந்து பூமியைத் தொட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் 'திரும்பப் போகிறேன்' என்று அதுவும் சொல்லவில்லை. இவர்களுக்கும் முன்பே தெரிந்திருக்கவில்லை. தெரிந்துதான் என்ன செய்திருக்கப் போகிறார்கள்!

"
அம்மா என்ன இது?" பாலு இவர்களின் அழுகைக் குரல் கேட்டு வந்து விட்டான்.

"
அவளைச் சமாதானம் பண்ணுவியா... அதை விட்டுட்டு இப்படியா... ச்சே ... ஏய் ... அனு... என்னம்மா இது... டாக்டர் சொன்னது மறந்து போச்சா... ? மாப்பிள்ளை எங்கே போனார்...?"

ராஜன் தோளில் டவலுடன் வந்தான். அழுதழுது அவன் கண்களும் இடுங்கியிருந்தன.

"
ப்ளீஸ்... இவளைத் தனியா விடாதீங்க, இவ பக்கத்துலேயே கொஞ்சம் இருங்களேன்..."

அம்மா விலகி சமையலறைக்குள் போனாள். ராஜன் அனுவின் கட்டிலில் அமர்ந்து கொண்டான். அண்ணனின் கண்டிப்புக் குரலுக்குக் கட்டுப்பட்டோ... ராஜனின் அருகாமையோ... ஏதோ ஒன்றில் மனசு சமாதானமாகி... அனு மெல்ல அழுகையை நிறுத்தினாள்.

பாலு சமையலறைக்குள் நுழைந்தான். "என்னம்மா இது... உனக்கு என்ன ஆச்சு..."
"...
போடா... உன்னால முடியும்... என் கண் முன்னால எத்தனை குழந்தைகளைப் பார்த்து..." முடிக்க முடியாமல் அரற்றினாள்.

"...
கஷ்டம்தாம்மா... அதுக்காக... அனுவையும் சோகம் பாதிச்சு... அவளுக்கும் ஏதாவது ஆகணும்னு ஆசைப்படறியா..."

"...
இப்படி... ஆயிருச்சே... எத்தனை... பூஜை... அபிஷேகம்..." மறுபடி மறுபடி நினைத்து அழுதாள்.

"...
அம்மா... ப்ளீஸ்ம்மா... உன்னைக் கன்ட்ரோல் பண்ணிக்க... அட்லீஸ்ட்... அவளுக்கு எதிர்லயாவது துக்கத்தைக் காட்டாதே. ம்ம்... அப்புறம் யாராவது விசாரிக்க வந்தா... அனுவைத் தொந்தரவு பண்ணாதே. நீயே பேசி அனுப்பிரு... வர்றவங்க சும்மா இல்லாமே... எதையாவது சொல்லி துக்கத்தைக் கிளறிட்டுப் போயிடறாங்க..."

பாலு மெளனமாய் விலகி வெளியில் வந்தான். கிணற்றடி மேடையில் அமர்ந்து வாழை மரத்தையும்... அதன் அடியில் அதை ஒட்டியே வளரும் கன்றினையும் பார்வை தன்னிச்சையாய் நோக்க... உள்ளூர அழுதான். அனு... உனக்கா... இந்த சோகம்...!

தோளை யாரோ தொட்டார்கள்.

ராஜன்.

"...
வாங்க...

அனு என்ன பண்றா..."

"
தூங்கிட்டா..."
எதிரில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

"...
ஆபிசுக்கு லீவு சொல்லியாச்சா..."

"...
ம்..."

"
டிக்கட் ரிசர்வ் பண்ணனும்... எட்டாம் தேதி நைட் டிரெயின்தானே..."

"...
ம்..."

"...
மழை இப்ப எப்படி... ஒரு தடவை மழை சீஸன்ல நான் அங்கே வந்துட்டு... ஹப்பா... திணறிப் போயிட்டேன்... தண்டவாளமே தெரியலே... டிரெயின்லாம் கேன்சல்..."

ராஜனின் பார்வை இலக்கின்றி அலைபாய்ந்தது.

"...
உங்க ஆபீசுல... ஞாபகமறதியா... ஒருத்தர் இருப்பாரே... இன்னும் சர்வீஸ்லதான் இருக்காரா..."

பாலுவின் எந்த விசாரணைக்கும் பதில் சொல்லாத ராஜன் மெல்ல முனகினான்.

"...
ஹரீஷ்னு பேர் வச்சோம். பொண்ணா இருந்தா... சூர்யான்னு..."

பாலு எதைப் பற்றிய நினைவு வரக் கூடாது என்று தவிர்க்க நினைத்தானோ... மிக இயல்பாக அதுவே மேலெழுந்து திணறடித்தது.

"...
ஃபர்ஸ்ட் ஒரு டெலிகிராம் வந்தது. நானே அதுக்குள்ளே டிக்கட் ரிசர்வ்... பண்ணிட்டேன். அவசரம் அவசரமா போய் பாலபிஷேகம் பண்ணிட்டு வந்தேன். இங்கே வீட்டுக்குள்ளே நுழையும் போது... என் பெண்... எனக்கு இல்லே..."

"...
வந்து... ராஜ்..."

"...
நான் என்ன தப்பு பண்ணேன்... எனக்கு ஏன் இந்த தண்டனை... என்னை விடு. அனு... பாவம்... ஏங்கினா... அவளுக்காகவாவது..."

"...
குழந்தை பிழைக்க சான்ஸே இல்லை... ஒரு மாசமோ... ரெண்டு மாசமோ... மேக்சிமம்... கொஞ்ச நாள்தான் இருக்க முடியும்னு... டாக்டர்தான் சொல்லிட்டாரே... இருந்து அவஸ்தைப் படறதுக்கு..."

"...
முடியலே பாலு. மனசை சமாதானப்படுத்த முடியலே. எனக்கு ஏன் குறையோட குழந்தை பிறக்கணும். நல்லபடியா ஒண்ணு பிறந்து... அது உயிரோடு இருக்கக் கூடாதா..."

"
ஊஹும்... இனிமே இருக்க வேண்டாம். கிளம்புங்க... வெளியில் எங்கேயாவது போயிட்டு வரலாம்..." என்றான் பாலு.

"...
அவளைப் பாதிக்கப் போவுதுன்னு... நான் என்னோட ஃ பீலிங்சை மறைச்சுக்கிட்டு..."

பாலு விடாப்பிடியாய் ராஜனை எழுப்பினான்.

"...
மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வரேம்மா..."

ராஜன் சுயநினைவிழந்தவன் போல பாலுவைத் தொடர்ந்தான்.

இளைஞர் நற்பணி மன்றம் என்றது வாசலில் இருந்த தட்டி. கீற்றுக் கொட்டகையினுள் தினசரிகளைப் படித்தபடி சில பெரியவர்கள். மேஜை, நாற்காலி என்று மூலையாக அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

"
வாடா பாலு... வாங்க ஸார்..."

"
என்ன கணேஷ்... போஸ்டர் ரெடியா..."

"
என்ன எழுதணும்னு... நீ சொல்றேன்னு சொன்னே... அதுக்குள்ளே... உங்க வீட்டுல இப்படி..."

"...
ப்ச்... அதை விடு... நீயே ஏதாவது டிரை பண்ண வேண்டியதுதானே! பிரச்னை என்னன்னு தெரியும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிங்க மனசுல பதிய வைக்கணும். பொது மக்கள் கவனத்தையும் கவரணும். யாரையும் தூண்டி விடாமே... மனசு புண்படாதபடி... எழுத வேண்டியதுதானே..."

"
இதோ பாரு... ஒண்ணு எழுதி வைச்சிருக்கேன்..." என்று ஒரு காகிதத்தை நீட்டினான்.

படித்துவிட்டு பாலு திருப்பிக் கொடுத்தான்.

"
இது வேணாம். இந்த வரியை மட்டும் மாத்தி எழுதச் சொல்லிரு. ஈவினிங் மறுபடி வரேன்... மணி, சுந்தர் எல்லாம் போயிட்டாங்களா..."

"...
ம்... நேத்து பாதிதான் கிளீன் பண்ண முடிஞ்சுது... அந்தத் தெரு ஆட்களும்
சேர்ந்துக்கிட்டாங்க... குப்பைத் தொட்டி ஐடியாவை அவங்களும் ஏத்துக்கிட்டாங்க..."

"
யெஸ்... எல்லோருக்கும் அந்த அவர்னஸ் வந்திருச்சுன்னா போதும்..."

சிறுவன் ஒருவன் வேகமாய் ஓடிவந்தான்.

"...
அண்ணே... ஒரு குழந்தையை யாரோ குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்க..."

"...
எங்கேடா..."

"...
நேதாஜி தெருவுல..."

பாலு சைக்கிளை வேகமாய் அழுத்தினான். பின் சீட்டில் ராஜன். இந்த ஒரு மணி நேரத்தில் சுய துக்கம் மறந்து ஒருவித பரபரப்பு ஆட்கொண்டிருந்தது. இடையிடையேதான் மெல்லிய முனகல் மனசுக்குள் கேட்டது.

தொட்டியைச் சுற்றி இருபது, முப்பது நபர்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய். எல்லோர் முகத்திலும் ஆர்வம்...

பாலு அவசரமாய்க் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனான்.

பிறந்த சிசு. கண் மூடிப் படுத்திருந்தது. வாழை இலை ஒன்றின் மேல் விடப்பட்டிருந்தது. சுள்ளெறும்புகள் மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தன. அவசரமாய் வாரித் தூக்கினான். மேலே ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டான்.

"...
குழந்தை யாருதுங்க..."

கூட்டம் மொத்தமும் தெரியாதென்று தலையாட்டியது.

"...
ஏம்மா... நீயும் புள்ளையப் பெத்தவதானே... அட... புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது... எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல..." என்றான் பாலு ஆற்றாமையுடன்.

"...
நல்லா இருக்கே... நீ சொல்ற நியாயம்! எவ பேட்ட புள்ளையோ... கண்ட சிறுக்கிக்கு பிறந்ததை எல்லாம் எங்க ஊட்டுல சேர்க்க முடியாதுப்பா..."

"
உங்களை என்ன... எடுத்தா வளர்க்கக் சொன்னேன்... கொஞ்சம் பத்திரமா வச்சிருக்கக் கூடாதுன்னுதானே கேட்டேன்..."

"...
யோவ்... எங்கேய்யா போனான் எம் புருசன்... இந்தாளு என்ன கேட்கிறான் பார்த்தியா... கேட்டுக்கிட்டு கம்முனு இருக்கியே..."

அந்தப் பெண்மணி ஆவேசமானாள். பாலு மனசுக்குள் கொஞ்சம் நொறுங்கிப் போனான். குழந்தை மெல்லக் கண் திறந்து சிணுங்கியது.

கணேசன் பாலுவின் தோளைத் தொட்டான். "போலிசுக்குச் சொல்லிரலாமா..."

"...
ம்... அதுக்கு முன்னால... இதன் பசிக்கு எதாவது..."

"
இங்கே என்ன கொடுக்கறது..."

ராஜன் இதுவரை மெளனமாக நின்றவன் கை நீட்டினான். "என்கிட்டே கொடு பாலு
புரிந்தது பாலுவுக்கு. "...எ...என்ன ராஜன்..."

"...
அனு கொடுப்பா... வா சீக்கிரம் போகலாம்... அப்புறம் மத்த விவரமெல்லாம் பார்த்துக்கலாம்..."

பாலுவும் ராஜனும் குழந்தையுடன் கிளம்பிப் போனார்கள்.

"...
எம்மா... குழந்தையை விட்டுட்டுப் போயிட்டா... குப்பை தொட்டில... யாரு செஞ்சாங்க..." சிறுமி .

"
எவளோ செஞ்சா... நீ பேசாமே போடி..." என்றாள் அதன் தாய் எரிச்சலுடன்.

"...
இவங்க எடுத்துக்கிட்டு போறாங்களே... என்ன செய்வாங்க..." என்றது
மறுபடியும்.

"...
சனியனே... வாயை மூடிக்கிட்டு... இருக்க மாட்டே...சைக்கிளில் ஏறப் போனவன் கீழே இறங்கினான் கணேசன்.

"...
பாப்பா... இங்கே... வா..." தயங்கி அருகில் வந்தது.

"
உனக்கு அம்மா... அப்பா இருக்காங்க... அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க... இல்லையா... பாவம்... அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லே... அதனால தான்... நாங்க எடுத்துக்கிட்டுப் போய்... வளர்க்கப் போறோம்..."
புரிந்தவள் போல தலையாட்டியது.

"...
ஏய்... இங்க வாடி... அங்கெ என்ன பேச்சு. இவனுகளுக்கு வேற வேலை இல்லை... எடுத்து வளர்க்கிறானுவளாம்... அப்புறம்... அவ... அவ பெத்துப் போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பா..."

கணேசன் சிரித்துக் கொண்டான். மெல்ல... மெல்லத்தான் மனமாற்றங்கள் நிகழும். அது வரை இம்மாதிரி இயக்கங்கள் தேவைப்படத்தான் செய்யும். அதை இப்போது இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.

"
என்ன குழந்தை அது..." என்றது கூட்டத்தில் ஒரு குரல்.

"
என்ன..."

"
இல்லே... ஆம்பளைப் புள்ளையா... பொட்டைப் புள்ளையான்னு கேட்டேன்..."

"
சூர்யா" என்றான் ராஜன்.

குழந்தையை அனு அருகே படுக்க வைத்திருந்தாள்!




26 comments:

கோமதி அரசு said...

"...ஃபர்ஸ்ட் ஒரு டெலிகிராம் வந்தது. நானே அதுக்குள்ளே டிக்கட் ரிசர்வ்... பண்ணிட்டேன். அவசரம் அவசரமா போய் பாலபிஷேகம் பண்ணிட்டு வந்தேன். இங்கே வீட்டுக்குள்ளே நுழையும் போது... என் பெண்... எனக்கு இல்லே..."//

பாலபிஷேகம் செய்தது வீண் போகவில்லை, இறைவன் சூர்யாவை கொடுத்து விட்டார்.

கதை நன்றாக இருக்கிறது.
நெகிழ வைத்த முடிவு.

Admin said...

கதை படித்தேன் அருமை..குப்பைத்தொட்டியில் குழந்தையைப் போடும் கலாச்சாரம் இன்னும் இருக்கிறது..வருத்தம் தான்..

அக் குழந்தைக்கு அனு பால் கொடுப்பா என்று சொன்ன இடம் அருமை..

அவர்களுக்கு தெய்வமா பார்த்து கொடுத்த குழந்தை இந்த குழந்தைதான்..

சூர்யா இறுதியில் சுகம்..இல்லாமை இல்லாமல் போனது..


அன்போடு அழைக்கிறேன்..

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

க ரா said...

Good one...

வெங்கட் நாகராஜ் said...

சூர்யா.... ...

நல்ல கதை... மனதைத் தொட்டுவிட்டது.... இன்னும் எத்தனை நாளுக்குத் தான் குப்பைத்தொட்டிகள் குழந்தைகளையும் சுமக்கும்....

Thenammai Lakshmanan said...

மன மாற்றங்கள் தேவை.. நல்ல சிறுகதை ரிஷபன். அருமை

மகேந்திரன் said...

////"...ஏம்மா... நீயும் புள்ளையப் பெத்தவதானே... அட... புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது... எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல..." ////

உயிரோட்டமான வார்த்தைகள் நண்பரே.


தெளிந்த நீரோடை போல உங்கள் கதைநடை
அழகாக இருக்கிறது.

CS. Mohan Kumar said...

அருமை. நெகிழ்வு

Sharmmi Jeganmogan said...

நல்ல கருத்து... மனதை வருடியது...

மனோ சாமிநாதன் said...

மனசைத் தொட்ட அருமையான சிறுகதை!!

ஹேமா said...

சூர்யா...கதை வாசித்து முடிக்கும்வரை ஏதோ ஒரு படபடப்பு !

கீதமஞ்சரி said...

நல்ல மனிதர்கள் மொத்தமாய் இன்னும் அழிந்துவிடவில்லை. இனி சூர்யாவின் எதிர்காலம் பிரகாசமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. மனம் தொட்ட கதை. பாராட்டுகள் ரிஷபன் சார்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

பிடித்திருந்தது.....குழந்தைகள் யாருதாய் இருந்தால் தான் என்ன...
நம்மிடம் வள்ர்தால் அது நமக்குப் பிறந்தது தான்.

G.M Balasubramaniam said...

சென்னையில் உதவும் கரங்கள் சென்றிருக்கிறீர்களா. ? இம்மாதிரி குப்பைத் தொட்டி குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார்கள். கதையில் ராஜன் அனு தம்பதிகள் பறி கொடுத்த குழந்தைக்குப் பதில் வளர்க்க ஒரு சந்தர்ப்பமாகக் கிடைத்தது ஒரு குப்பைத் தொட்டிக் குழந்தை. எந்த ஆதரவும் இல்லாத அநாதைக் குழந்தைகளை வளர்க்கும் உதவும் கரங்கள் வித்தியாகர்தான் இக்கதையைப் படித்ததும் என் எண்ணத்தில் வந்தார். அருமையான கதை. நீரோட்டம் போல் நடை. நெஞ்சை பிசைய வைக்கும் கதைக் கரு. சபாஷ் ரிஷபன் சார்.

பால கணேஷ் said...

மனிதாபிமானம் மனதைத் தொட்டது. அதற்கு மிஞ்சியது உலகில் எதுவும் இருக்கிறதா என்ன... பிரமாதம் ரிஷபன் ஸார்...

சி.பி.செந்தில்குமார் said...

கதை வடிவமைப்பது உங்களுக்கு நல்லா கைவருது

arasan said...

நெகிழ்ச்சியான முடிவில் இனிமை கலந்து முடித்த விதம் சிறப்பு ...வாழ்த்துக்கள் சார்

anbalagangomathi said...

மனநிறைவான கதை ரிஷபன்.

அனுஷ்யா said...

கொன்னுட்டீங்க அண்ணே..ஒரே மூச்சுல ரெண்டு தடவ படிச்சுட்டேன்..

அனுஷ்யா said...

இது சில வாரங்களுக்கு முன் நான் எழுதிய சிறுகதை..நேரம் இருக்கும் பட்சத்தில் படித்து பாருங்கள்...மரண அறிவிப்பு ...ஏனெனில் நான் எழுதியவைகளில் எனக்கு பிடித்த சிறுகதை இதுவே..

அனுஷ்யா said...

மகிழ்ச்சியுடன் தலத்தில் இணைகிறேன்..நன்றி..

கே. பி. ஜனா... said...

மனதைத் தொட்ட கதை!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

manichudar blogspot.com said...

கனமான கதை. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

my goodness! என்னமா எழுதியிருக்கீங்க! பெற்றால் தான் பிள்ளையா?

கதம்ப உணர்வுகள் said...

உங்க கதையை பொறுமையா படித்து கருத்திடுவேன்பா...

மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

கோமதி அரசு said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் சூர்யா.

ADHI VENKAT said...

மனதை நெகிழ வைத்த கதை. அவர்களுக்கு ஒரு சூர்யா கிடைத்ததில் மகிழ்ச்சி.