August 01, 2012

ஊர்மிளா


அயோத்தி மாநகரே கொண்டாட்டமாய் இருந்தது. வனவாசம் முடிந்து,ராவண வதம் முடிந்து, இன்றுதான் ராமனும் சீதையும் அயோத்தி திரும்பி இருக்கிறார்கள். அரண்மனையிலும் அதே உல்லாசம்.

பரதனின் மனைவி  மாண்டவி, சத்ருக்கனின் மனைவி   ஸ்ருதகீர்த்தி இருவரும்கொஞ்சம் அவசரமாகவே அருகில் ஓடிப் போய் «ì¸¡¨Åì கட்டிக் கொண்டார்கள். ஸீதாமெலிந்திருந்தாள். கண்களில் முன்பிருந்த பிரகாசம் மங்கி இருந்தது. எத்தனைவருடங்களுக்குப் பின் இன்று பார்த்துக் கொள்கிறார்கள்.. "அக்கா.." இருவருக்குமேஅழுகை பீரிட்டது.

"ஏய்.. அசடு.. அதான் திரும்ப வந்துட்டேனே"
"உனக்கு மட்டும்ஏன் இப்படி சோதனைக்கா"
ஸீதா சிரித்தாள்.
"எல்லோரும்தான் கஷ்டப் படறாங்க..உங்களுக்கு என் கஷ்டம் மட்டும் தெரியுது.."
"தலைமுடி எல்லாம் கொட்டிப்போச்சு.."
மாண்டவி அக்காவின் தலையைக் கோதி வருத்தப்பட்டாள்.
"உன் கண்ணுபளீர்னு மின்னும்.. இப்ப அதுல ஒரு நிழல் படிஞ்சிருக்கு"
ஸீதைக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
"என் செல்லங்களா. எனக்கு ஒண்ணும் இல்லை.."
அதுவரை ஒதுங்கி நின்றஊர்மிளாவை பார்வையால் அருகில் அழைத்தாள்.
"எப்படி இருக்கே"
தபஸ்வினி போல்தோற்றம். தீர்க்கமாய் பார்வை. மற்ற இரு சகோதரிகளுடன் ஒப்பிடும் போது கூடுதலாகவே  திடம் ஊர்மிளாவுக்கு.
"உன் கண்கள் அப்படியேதான் இருக்கு ஊர்மிளா.."
ஸீதையின் குரலில் லேசாய்ஒரு தடுமாற்றமும் இருந்தது.
"அவர்கள் சொன்னதற்கு பதிலாய் என்னிடமா" ஊர்மிளாசிரித்தாள்.
"உங்களோடு பேசி வெகு காலமாச்சு"
"உனக்கு ஓய்வு தேவைப்படுமே "
"நான் நல்லாத்தான் இருக்கேன்"
"சொல்லுக்கா.. எதையும் விடாத.. பூர்ணமாசொல்லு"
"என்ன சொல்லணும்"
"இங்கேர்ந்து நீ கிளம்பிப் போனதுல இருந்து இந்தநிமிஷம் வரைக்கும்"
ஸீதா அவளையும் அறியாமல் ஊர்மிளாவைப் பார்த்தாள்.
"என்ன..கிளம்பினோம்.. எங்கெங்கோ சுத்தினோம்.. என்னென்னவோ ஆச்சு..'
"ஏய்.. இப்படிஒரு வரி விவரணம் வேண்டாம்.. முழுசா சொல்லுக்கா"
"ராட்சசர்களை எல்லாம் வதம்பண்ணி.. எவ்வளவு நடந்திருக்கு.."
"சொல்லுக்கா.. ரொம்ப ஆசையா இருக்கு.. கதைகேட்க"
ஊர்மிளா முகம் மாறாமல் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மற்ற இருவரும் கதை கேட்கிற சுவாரசியத்தில் ஸீதையின் முகத்தையேபார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸீதைக்கு வேறு வழி இல்லை. சொல்ல ஆரம்பித்தாள்.பாதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஸ்ருதகீர்த்தி அவள் மடியில் படுத்துக் கொண்டுவிட்டாள். அவள் தலையை வருடியபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"என்னக்கா.. உனக்குதெரியலியா.. அது ராட்சசர்கள் மாயா வித்தைன்னு"
பொன்மானைப் பார்த்த சம்பவத்தைசொன்னபோது மாண்டவி கேட்டாள்.
"என்னவோ ஒரு ஆசை.. அதைப் பார்த்ததும்..புத்திக்கு எட்டலை"
"ம்ம். அப்புறம் என்ன ஆச்சு"
ஊர்மிளாவின் முகத்தில்இப்போது லேசாய் ஒரு பதற்றம்.
"ராவணன் என்னைத் தூக்கிக் கொண்டு போக செய்தசதி.. அது அப்புறம் புரிந்தது.. என்னை அசோகவனத்தில் கொண்டு போய் வைத்தான்..பாவம்.. ஜடாயுப்பா.. என்னால் அவரும் உயிரிழந்தார்"
திரிஜடை துணைக்கு இருந்தது..விபீஷணன் உதவியது..சுக்ரீவன்.. ஆஞ்சநேயர்.. பாலம் கட்டி.. யுத்தம் நடந்தது..
"மண்டோதரியை நினைச்சா எனக்கு சிலிர்க்குது.. என்ன ஒருபதிபக்தி.."
"எப்படிக்கா அவ்வளவு நாள் அசோகவனத்துல தனியா.. அந்த ராட்சசிகள்மத்தியில இருந்தே.."
"பாவம்க்கா நீ"
"ஊர்மிளாவும்தான்.. பாவம்" என்றாள்ஸீதா.
"ஆமாக்கா"
இருவரும் ஊர்மிளாவைக் கட்டிக் கொண்டார்கள். ஸீதா பெருமூச்சுவிட்டாள்.
"ஆனால் ஊர்மிளா அக்காவுக்கு எப்போதும் தூக்கம்தான் .."
லட்சுமணன் சொல்லிப் போயிருந்தான்.
'ஊர்மிளா.. வனத்தில் எனக்கு தூக்கம் இராது.. என் தூக்கத்தையும் உனக்குத் தந்து விட்டுப் போகிறேன். தூக்கம் ஒரு நல்ல மருந்து ஊர்மிளா..நம் துக்கம் மறக்க..பிரிவை மறக்க.. அதை  தினம் எடுத்துக் கொள்..நான் திரும்பி வரும் வரைக்கும்..'
ஸீதா சொல்லிக் கொண்டிருந்தாள்.

"திரும்ப வந்து உங்களை எல்லாம் எப்போது பார்ப்பேன் என்றிருந்ததுஎனக்கு.."

"காட்டுல எப்படித்தான் இருந்தியோ.."

"மரவுரி.. கல்லும் முள்ளுமா பாதை.. அக்கா.. எனக்கு அழுகை வருதுக்கா"
ஸ்ருதகீர்த்தி அழுதே விட்டாள்.மாண்டவியின் கண்களிலும் நீர்.
"ச்சீ.. பைத்தியங்களா.. நான் தான் பத்திரமாய்  வந்துவிட்டேனே"
"இருந்தாலும் இத்தனை வருஷமாய் நீ பட்ட சிரமங்கள்.. உனக்கு  மட்டும் ஏனக்கா இப்படி"
"நடந்ததைத் திருப்பிப் பார்க்கக் கூடாதென்றுதான் நம் தலை  பின் பக்கம் திருப்ப முடிவதில்லை.. "
"தத்துவம் பேசாதக்கா.. அனுபவித்த வலிமாறுமா"
ஸீதையின் உடல் அவளையும் மீறி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.அசோகவனத்தில் தனிமையில் அந்த நாட்கள்.. இரவில் வினோதமான பறவைகளின் அலறல்கள்..பயங்கர தோற்றத்தில் ராட்சசிகள்.. வருபவர்கள் நிஜமா.. மாயாவிகளா என்கிற  குழப்பங்கள்.. மீண்டும் ஒரு முறை உடல் சிலிர்த்து அடங்கியது.
"அக்கா.. என்னஆச்சு"
"ஒண்ணுமில்ல"
"சரிக்கா.. நீ கொஞ்சம் ஓய்வெடு.. நாங்கள் அப்புறம்  வருகிறோம்.."
ஊர்மிளா தங்களுடன் வருகிறாளா என்று கூடப் பார்க்காமல்  போய்விட்டார்கள்.
கண்களை மூடியமர்ந்திருந்த ஸீதா கண்ணைத் திறந்து பார்த்தாள்.  எதிரில் ஊர்மிளா.
"என்ன ஊர்மிளா.. "
அவளிடம் பதிலேதுமில்லை. ஸீதாவைப்  புதிதாகப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னம்மா"
ஸீதாஎழுந்து வந்து அவளருகில் அமர்ந்தாள்.
"நமக்குக் கல்யாணம் ஆகிறவரை சேர்ந்திருந்த நாட்களை

நினைத்துப் பார்த்தேன்.. "

"ஆமாம். நம் அன்னை.. தந்தையின் பாசத்தில்..நமக்கான சொர்க்கத்தில் திளைத்திருந்தோம்.."

"நமக்குள் எந்த பேதமும் இல்லை.."
"எந்த ஒளிவு மறைவும் இல்லை.. வித்தியாசமும் இல்லை.. "
"நம் கல்யாணம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது.. இல்லையா ஸீதா"
ஸீதையிம் முகம் வாடியது.
"நம் புகுந்த இடத்தைக் குறை சொல்லவில்லை ஸீதா"
"என்ன செய்ய ஊர்மிளா.. ஏதோ போதாத காலம்..ஆனால் நீ நம் குல மானத்தைக் காப்பாற்றி விட்டாய்.. என் செல்லமே.. மூன்று அன்னையர்களையும் இத்தனை காலம் உன் அன்பால் காத்து வந்திருக்கிறாய். இங்கு வந்ததும் உன் புகழ்தான் ஊர்மிளா.. அவர் இல்லாத குறை கூட மறந்து போச்சாம். உன் கவனிப்பில்"
"நீ எப்போதும் இப்படி பேசியதில்லையே ஸீதா"
ஸீதா திணறித்தான்போனாள்.
"அக்கா.. நாம் மணமாகி இங்கு வந்தபின் உன்னைத்தான் எங்கள் அம்மாவாய் நினைத்தோம்"
"நானும் அப்படித்தான் ஊர்மிளா. உங்களை என் குழந்தைகளாய்த்தான் பார்க்கிறேன்.."
சொல்லிவிட்டதும் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஊர்மிளா எதுவும் பேசவில்லை.
"வனவாசம் பிடித்ததாக்கா"
"ஏன் கேட்கிறாய்.."
"மறுபடி வாய்ப்பு கிடைத்தால் போகலாமென்று பார்க்கிறேன்.."
ஸீதா அவள் வாயைப்  பொத்தினாள்.
"வேண்டாம் ஊர்மிளா.. விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதே.. நான் திரும்பி வந்து விட்டேன் தான்.. ஆனால் இன்னமும் அந்த மிரட்சி போகவில்லை..சட்டென்று மனம் பின்னோக்கி பாய்கிறது.. இந்த கணம் மறந்து அந்த வனம் நினைவில் வந்து மிரட்டுகிறது.. இன்னும் எத்தனை காலம் ஆகுமோ.. மறதி என்னும் மருந்தைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன் ஊர்மிளா.. என்னை மீட்டெடுக்க"
"ஆமாம் அக்கா.. அந்த மருந்துதான் இப்போது உனக்கு.. எனக்கு.. என் பர்த்தாவிற்கு வேண்டும்.."
தனுசிலிருந்து அம்பு விடுபட்டு விட்டது. அதன் இலக்கில் போய் குறி மாறாமல் தைத்தது. உயிர் போகும் வேதனை கனத்தது.
"ஊர்மிளா.."
"நீ என் அம்மா ஸீதா..எனக்கு மட்டுமில்லை.. எங்கள் எல்லோருக்கும்.. உன்னை வேறு மாதிரி இதுவரை நினைத்ததேஇல்லை.."
"நான் மறுக்கவில்லை ஊர்மிளா.. "
ஸீதையின் கால்கள் துவண்டன.எழுந்தவள் மீண்டும் அமர்ந்து விட்டாள்.
"வருகிறேன் அக்கா.. நீ கொஞ்சம்ஓய்வெடு.. மறதியின் முதல் துளியை ஸ்பரிசித்து.. காலம் தூக்கத்தினால்தான் ஓடுகிறது  வேகமாய்"
சற்றும் தொய்வில்லாத நடையுடன் ஊர்மிளா திரும்பிப் போனாள். மானசீகமாய் ஒரு தணடனையை நிறைவேற்றிய அமைதி அங்கு நிலவியது. லட்சுமணன் எதுவும் பேசியதில்லை இதுவரை. ஸீதையை நிமிர்ந்தும் பார்த்ததில்லை. அவனுக்கும் சேர்த்து வைத்து ஊர்மிளா பேசிவிட்டு போய்விட்டாள்.

ஸீதையின் மூடிய கண்களுக்குள்  இன்னொரு வனவாசம் தெரிய ஆரம்பித்தது.



(நன்றி : கல்கி )

9 comments:

தி.தமிழ் இளங்கோ said...

தங்களது இந்த பதிவினை, பழைய பதிவுகளைப் போன்று என்னால் படிக்க இயலவில்லை. எழுத்துரு ( FONTS ) பிரச்சினை என்று நினைக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிறுகதை...
நடுநடுவில் ஏனிந்த எழுத்துக்கள்... கவனிக்கவும்...

(§À¡Â¢Õó¾¡ý.
‘°÷Á¢Ç¡.. ÅÉò¾¢ø ±ÉìÌ àì¸õ þáÐ.. ±ý àì¸ò¨¾Ôõ ¯ÉìÌò ¾óРŢðÎô §À¡¸¢§Èý.. àì¸õ ´Õ ÁÕ)

நன்றி...




பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கதை.. ஊர்மிளையின் மனவோட்டத்தினைத் தெரிவிக்கும் சொற்கள் மிகவும் அழகு.

கல்கியில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

தனுசிலிருந்து அம்பு விடுபட்டு விட்டது. அதன் இலக்கில் போய் குறி மாறாமல் தைத்தது. உயிர் போகும் வேதனை கனத்தது.

ஊர்மிளாவின் கனத்த அம்பு !

நிலாமகள் said...

நடந்ததைத் திருப்பிப் பார்க்கக் கூடாதென்றுதான் நம் தலை பின் பக்கம் திருப்ப முடிவதில்லை//

வ‌ரிக‌ளின் இடையில் தெறிக்கும் அர்த்த‌ங்க‌ள் மிக‌ க‌ன‌ம் பொருந்திய‌ன‌வாய்...

இடைச்செருக‌லாய் சேர்த்த‌ வ‌ரிக‌ளின் எழுத்துரு த‌னித்து நிற்கிற‌து. ச‌ரிசெய்து கொள்ள‌வும்.

கீதமஞ்சரி said...

இராமயணத்தில் ஊர்மிளையின் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம். அவளுக்கான பரிதாபங்களை எப்போதும் ஏந்தியிருக்கும் என் மனம் இப்போதுதான் சமாதானமாகிறது. ஊர்மிளையின் மனோதிடம் சொல்லிமாளாது. மிகவும் அருமையான வடிவமைப்புக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.

கோமதி அரசு said...

"ஆமாம் அக்கா.. அந்த மருந்துதான் இப்போது உனக்கு.. எனக்கு.. என் பர்த்தாவிற்கு வேண்டும்.."//

ஊர்மிளாவின் உறுதியான வார்த்தை!
ஒன்று சொன்னாலும் நன்று சொன்னாள்.
காலம் தரும் மறதி மூவருக்கும் வேண்டும் கண்டிப்பாய். அப்போது தான் மனம் நிம்மதி பெறும்.

மிக அருமையாக எழுதிவிட்டீர்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை. ஊர்மிளையின் சோகம் எல்லோரும் மறந்துவிட்ட ஒன்று. எல்லோரும் சீதையைக் கொண்டாட, ஊர்மிளையின் தியாகம் மறந்துவிட்டனர்....

கதம்ப உணர்வுகள் said...

இராமன் வனவாசம் சென்று தன் சௌகர்யங்களை துறந்து இராமன் வனவாசம் செல்லும்போது பத்தினியாய் உடன் செல்லும் சீதை..அண்ணனை விட்டு பிரியாத இலக்குமணன் இராமனின் பின்னே… யாருமே அறியவில்லை…. இளம் வயதினனள் ஊர்மிளை. இலக்குமணனும் ஊர்மிளையின் மனம் அறிய முயலவில்லை…. இராமாயண காவியத்தில் இராமனின் ஏகப்பத்தினி விரதத்தைப்பற்றியும் மஹா சீதையின் பதிவிரதைத்தன்மையும், இலக்குமணனின் அண்ணன் அண்ணி மேலுள்ள பக்தியையும்…. ஹனுமனின் இராம பக்தியையும் இவ்வளவு ஏன் குகனின் குருபக்தியையும் சபரியின் ஆத்ம பக்தியையும் சொல்லிச்சென்றது. ஆனால் எங்குமே ஊர்மிளையின் ஏக்கங்களையும் அவள் மனதின் விருப்பங்களைப்பற்றியும் இலக்குமணனை பிரிந்த நாள் முதல் ஊர்மிளையும் எப்படி அவஸ்தைப்பட்டாள் என்பதையும் எங்கும் சொல்லவில்லை யாருமே… ஆனால் ரிஷபா…. நீங்க சொல்லிட்டீங்க.. ஊர்மிளையின் கேள்வியில் ஊர்மிளையின் பார்வையில் ஊர்மிளையின் திடமான நெஞ்சுறுதியில் சீதாதேவி கொஞ்சம் அல்ல மிக அதிகமாவே மிரண்டதை கவனித்தேன் கதை வரிகளில்…

எதிலும் வித்தியாசம், எழுத்துகளில், எழுத்து நடையில், எழுதும் விதத்தில். யோசிக்கும் கருவில், படைக்கும் கதாப்பாத்திரங்களில், சிந்தனையின் முதிர்ச்சி ஊர்மிளையின் மனதில் உள்ள எண்ண அலைகளை மிக மிக அழகாய் தத்ரூபமாய் ஆணித்தரமாய் உரக்கச்சொன்ன படைப்பு க்ளாசிக் ரிஷபா….

துக்கம், பிரிவு எல்லாவற்றிர்க்குமே மிக அற்புதமான மருந்தாய் தூக்கம் கொடுத்திருப்பதை எழுதி இருப்பதை படித்தபோது ஆச்சர்யப்பட்டேன். உண்மையேப்பா…

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா….