October 28, 2015

அம்மு 2

சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் எந்த நிமிஷத்திலும் அம்முவை எதிர்பார்க்கலாம்.  ஏதாவது ஒரு திசையில் இருந்து வந்து நிற்பாள்.
‘அம்மா பூ வாங்கிண்டு வரச் சொன்னா’
‘என்னிக்கு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்னு அம்மா கேட்டுண்டு வரச் சொன்னா’
‘இன்னிக்கு மாமுனிகள் திருநட்சத்திரம்.. அம்மா இந்த பிரசாதம் கொண்டு போய் கொடுன்னா’
ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு ரெட்டை ஜடை இரு திசைகளில் அலைய அவள் வரும் போது என் கணக்கு நோட்டில் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
‘இந்தக் கணக்கு புரியலைடா’
‘போடி என்னை டிஸ்டர்ப் பண்ணாத’
‘மாமி.. கொஞ்சம் சொல்லுங்களேன்.. பிகு பண்ணிக்கிறான்’
‘சொல்லிக் குடேண்டா’
ஏம்மா நீ லூசா..
‘என்ன புரியல..’
‘இதுதான்’
எனக்குப் புரிந்தது. அம்முவின் கவனம் கணக்கில் இல்லை. விருவிருவென்று ஸ்டெப்ஸ் எழுதி விடை வரவழைத்து நோட்டை மூடி வீசினேன்.
‘போய் பொறுமையா பாரு.. புரியும்’
கன்னத்தில் கிள்ளி விட்டு போவாள்.
ஒரே பெண். செல்லம். அப்பா கிராமக் கணக்குப் பிள்ளை. வெற்றிலை போட்டால் அவர் பேசுவது புரியாது. போடாவிட்டாலும். வாசலின் ஒரு பக்கம் நிரந்தர ஆரத்திக் கறை.
தெருவில் யாரும் போய் விட முடியாது.
‘இங்கே வா’ என்பார் அதட்டலாய். காதில் விழாதபடி போய் விட்டால் அந்த நிமிடம் தப்பிக்கலாம். தவறி கிட்டே போனால்..
‘டவுனுக்குப் போறியா’
‘ஆமா’
‘ஏய்.. அந்த ரோக்காவை எடுத்துண்டு வா’
உள்ளிருந்து ஒரு பட்டியல் வரும்
‘இதை வாங்கிண்டு வந்துரு’
’பணம்’
‘அடுத்த வாரம் வரச்ச தரேன்னு சொல்லுடா’
கடையில் திட்டு விழும்.
‘வேற வேலை இல்ல.. ஏற்கெனவே பாக்கி நிக்கிது’
‘சரி.. போய் சொல்லிடறேன்’
‘யோவ் இருய்யா.. இதுல பாதி சாமானைக் கட்டு.. மீதி சரக்கு இல்லேன்னு சொல்லிரு’
கடைக்காரருக்கும் என்ன பயமோ.
இதே சவடால் பெண்ணிடமும். என்னிடம் பயப்படு என்று சொல்லாமல் சொல்கிற அலட்டல். நானா இதற்கெல்லாம் மசிகிறவன்.. போடி சர்த்தான்.

பட்டணத்தில் மேற்படிப்பு என்று கிராமத்தை விட்டு தப்பித்தாகி விட்டது. மூன்று வருடங்கள். நடு நடுவே மண்டகப்படி.. பிரம்மோற்சவம்.. தேர் என்று ஊருக்குப் போன நாட்களில் அம்முவின் கண்ணில் படாமல்.. பட்டாலும் கைக்கு அகப்படாமல் தப்பித்தாகி விட்டது.
கிறுக்கி எழுதியிருந்த ஒரு இன்லண்ட் (யாரிடம் அட்ரஸ் வாங்கினாளோ) மஹா கசங்கலில் என் ஹாஸ்டல் ரூமுக்கு வந்து சேர்ந்தது.
ஒரே வரி.. பெயர் கூட இல்லை.
‘என்னைப் பிடிக்கலியா’
ஆங்கில ஆசிரியர் அ தமிழாசிரியர் காதல் பற்றி ஆச்சாரமாய் வகுப்பு எடுத்த நாட்கள் அவை. ரொம்ப் டீப்பாக போக மாட்டார்கள். இலக்கிய அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். அந்த நாள் திரைப்படம் போல. பூங்காவில் ரெண்டு பூக்கள் உரசிக் கொள்ளும் முத்தக் காட்சிகளில். அது போல.. அண்ணலும் நோக்கினாள்.. அவளும் நோக்கினாள் என்றால்.. அவ்வளவுதான். வேறு வியாக்கியானங்கள் கிடையாது. அநியாயத்துக்கு நாசுக்கு பார்க்கிற அந்த ஆசிரியர்களுக்கு நாலைந்து குழந்தைகள் !

என்னைப் பிடிக்கலியா..
ஒரு வரி.. இரு வார்த்தைகள்.. அம்மு எதிரில் நின்று ரெட்டை ஜடை காற்றில் ஆட ஒரு விரலால் சுட்டி கேட்கிற பிரமை.
என்ன பதில் சொல்ல.. எனக்கென்று வேறு சில இலக்குகள்.. இந்த நிமிடம் லவ் பண்ண பொறுமை இல்லை. கிழித்துப் போட நினைத்து.. அப்புறம் மனசு மாறி மடித்து என் தகரப் பெட்டியின் அடியில் சொருகினேன்.

முதல் வகுப்பில் தேர்ச்சி. உதவித் தொகை கிடைத்ததால் அப்பாவுக்கு சிரமம் இல்லை. அம்மா மட்டும் துரும்பா இளைச்சிட்ட என்று 9 கஜம் புடவையை கண்ணீரால் நனைத்தாள்.
கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்து நகரின் பிரதான கம்பெனியில் எனக்கு வேலை தரத் தயாராய் இருப்பதைச் சொன்னார். அதை அம்மாவிடம் சொன்னபோது ‘போடா.. போய் நமஸ்காரம் பண்ணு’ என்றாள் பெருமாள் உள்ளைத் திறந்து காட்டி. பட்டண வாசத்தில் கட் அடித்து சினிமா பார்த்த எபக்டில் படக்கென்று அம்மா காலில் விழுந்தேன்.

அம்மா இல்லாத நேரம் எப்படித்தான் தெரிந்து வந்தாளோ.. அம்மு.
‘வேலைக்கு போகப் போறியாமே’
‘ஆமா’
‘கிடைச்சிதா’
‘என்ன லட்டர்.. இ..ல்ல.. என்ன கேட்கிற’
ஒரு தாவணிப் பெண்ணின் கண்களில் எத்தனை சக்தி. அந்தராத்மாவை ஊடுருவிக் கிழித்து பொய்களை வீச வைத்து மண்டியிட வைத்து விடுகிறது.
‘அவ்வளவுதானே’ அம்மு இதைக் கேட்கவில்லை. பார்த்தாள். எதுவுமே பேசாமல்.. போய்விட்டாள்.
’என்னடா உம்முனு கிளம்பற.. வேலைக்குப் போகணும்னு நீதானே துடியாத் துடிச்சிண்டிருந்த’
எல்லோருக்குமே ஆச்சர்யம்.
‘உன்னை விட்டுட்டு போறானோல்லியோ.. அதான்’
அம்மாவை எல்லோரும் கொஞ்சினார்கள்.
ரெயிலில் புகை கண்ணில் விழுந்தது பயணம் முழுக்க. ஜன்னல் பக்கம் உட்காராமலே.
முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு அனுப்பினேன்.
‘நம்மூர் பெருமாளுக்கு எடுத்து தனியா வச்சியோ’
கார்டில் அம்மா கேட்டிருந்தாள். அம்பது ரூபாய் அம்முவுக்கு எடுத்து வைத்திருந்தேன்.
அம்முவின் கல்யாணப் பத்திரிகை வந்தது அப்போதுதான்.
போகவில்லை. லீவு கிடைக்கவில்லை என்று பொய்.
ஒரு வருடம் ஊருக்கே போகவில்லை. அம்மாவுக்கே உடம்பு சரியில்லை.. பின்னால் சரியானது எல்லாத் தகவலும் கடிதங்களில்.
அப்புறம் போனபோது..
”ஸாரிம்மா.. நீ உடம்பு சரியில்லாதப்போ நான் வரல’
‘பரவாயில்லடா’
‘மத்தபடி எல்லாரும் சௌக்கியம்தானே’
‘ம்ம்.. நீ சாப்பிடு.. வா’
கலத்துப் பருப்பில் நெய்.. சாதம் கலந்து பொரித்த வடாம்.. அம்மாவின் கை வாசனை.
இத்தனை இடை வெளிக்குப்பின் வயிறும் மனமும் நிறைந்த அந்த தருணத்தில் அம்மா சொன்னாள்.
‘அம்முவைத் தள்ளி வச்சுட்டா அவ புக்காத்துல’
சாதம் சிதறியது வாயிலிருந்து.
‘ஏம்மா’
‘ப்ச்.. என்னவோ சொல்றா.. எது நிஜம் எது பொய் தெரியல..’
‘என்னம்மா இது அநியாயம்’
‘கொழந்தை பொறக்காதாம்.. ஏதோ டெஸ்ட் அது இதுன்னு பண்ணி.. ‘

தகரப் பெட்டியின் அடியில் ஒளித்து வைத்திருந்த இன்லண்ட் அதன் அளவைப் பெரிதாக்கிக் கொண்டு.. அந்த ஒற்றை வரியை.. இரு வார்த்தைகளைப் பிரம்மாண்டமாய்க் காட்டிக் கொண்டு கூடம் முழுக்க வியாபித்து நின்ற பிரமை அப்போது.

8 comments:

Nagendra Bharathi said...

வர்ணனை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மு (2) வின் இன்றைய நிலைமையை நினைத்தால் எனக்கு அழுகையாக வருகிறது. பாவம் அவள். மிகவும் நல்ல யதார்த்தமான பொண்ணு.

இவனுக்கும் கொடுத்து வைக்கவில்லை. அவளைக் கட்டிக்கொண்டவனுக்கும் கொடுத்து வைக்கவில்லை. ஆங்காங்கே உலகில் இதுபோல எவ்வளவு அம்முக்களோ !

நாம் விரும்பியவளைவிட, நம்மை விரும்பியவளை ஏற்றுக்கொண்டால், வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும் என்ற உண்மையை எவனோ என்னிடம் மிகவும் லேட்டாகச் சொன்னான். ஏனோ அது இப்போதும் எனக்கு நினைவுக்கு வந்துக்கொண்டே உள்ளது.:)

G.M Balasubramaniam said...


இந்த அம்முவைப் படித்ததும் நெஞ்சில் ஏதோ பிசைவது போல் இருந்தது. சில யதார்த்த நிகழ்வுகள்.

”தளிர் சுரேஷ்” said...

அம்மு மனதில் நிறைகின்றாள்! அருமையான கதை!

வெங்கட் நாகராஜ் said...

அம்மு..... மனதைத் தொட்ட கதை.....

மீரா செல்வக்குமார் said...

உருக்கமாயிருந்தது......

ezhil said...

வை.கோ. ஐயா சொல்வது நிதர்சனம்... வருத்தப்படுவது அம்முவுக்காகவா, அவனுக்காகவா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ezhil said...
வை.கோ. ஐயா சொல்வது நிதர்சனம்... வருத்தப்படுவது அம்முவுக்காகவா, அவனுக்காகவா...//

மிக்க நன்றி, மேடம். :)