January 27, 2016

அம்மு 15



“உள்ளே வாங்கோ.. அதென்ன விளக்கு வைக்கிற நேரத்துல வாசல்ல நின்னுண்டு போற வரவாகிட்ட வழியறது”
அம்முவின் குரல் கேட்டால் மணி 6 என்று அர்த்தம். உள்ளே விளக்கேற்றியாச்சு. சந்தன ஊதுபத்தி வாசனை காற்றில்.
மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே.. 
அம்முவுக்கு நல்ல குரல். அந்த நாளில் பாடேன் அம்மு என்றால் பிகு பண்ணிக் கொள்ளாமல் எனக்கு மட்டும் கேட்கிற குரலில் பாடுவாள்.
இந்த பாட்டு அந்த பாட்டு என்றில்லை. சினிமாப் பாட்டும். மகாராஜன் உலகை ஆளலாம். இந்த மஹாராணி அவனை ஆளுவாள்..
கண்ணதாசன் வரிகளில் பூடகமாய்ச் சொன்னதை அழுத்தம் கொடுத்து எதிர் பாட்டு பாடினால் சத்தமெழாமல் சிரிப்பாள். கள்ளி.
துரத்தித் துரத்தி காதலித்தோம். பெரியவர்கள் காதுக்குப் போனது. அவள் வீட்டில் அவளை. என் வீட்டில் என்னை.
‘என்னடி / என்னடா நிஜமா’
இந்த விஷயத்தில் ரெண்டு பேருக்கும் குண்டு தைரியம். நேருக்கு நேராய்ப் பார்த்து சொன்னோம்.
‘ஆமா’
‘என்னடி பண்றது இதை’
‘பேசாம பண்ணி வச்சிருவோம்’
அக்ரஹாரக் குழந்தைகள் கூட்டம் எங்களைச் சுற்றி. ஒவ்வொன்றின் முகத்திலும் கொள்ளைச் சிரிப்பு. சும்மாவா.. அம்முவும் நானும்தானே அவர்களது விளையாட்டுத் தோழர்கள். கல்யாணம்.. நலங்கு.. என்று கூட இருந்தவர்களை ராத்திரி பேக்கப் பண்ணுவது கஷ்டமாய் இருந்தது.
“போடா கண்ணா நானும் இருப்பேன்” என்று இரண்டரை வயசு உரிமையாய்த் திட்டியபோது அம்மு சிரித்து விட்டாள். பாவி..
பெரியவர்கள் வந்து அதட்டினார்கள். ம்ஹூம். நான் கெஞ்சினேன் வெட்கத்தை விட்டு. ஊஹூம். அம்மு கவலையே இல்லாமல் ஜாங்கிரியைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
நாச்சியார் பாட்டிதான் தீர்ப்பு சொன்னாள்.
“இருந்துட்டு போறதுடா.. குழந்தைகள் தானே.. காலைலேர்ந்து லூட்டி அடிச்சிருக்கு,, கொஞ்ச நாழில தூங்கிடும்”
பெரியவர்கள் நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து போனார்கள்.
அம்முவைப் பாடச் சொன்னேன் அப்போதுதான். குழந்தைகளில் ஒன்று என் மடியில். இன்னொன்று அம்முவின் மடியில். இதுவரை உலகம் கண்டிராத சாந்தி முஹூர்த்தம்.
மறுநாள் காலை எங்களைப் பார்த்த பெரியவர்கள் திகைத்தார்கள். என்ன ஒரு ஆனந்தம் எங்கள் முகத்தில். ஆம். அந்த அறையில் ஆளுக்கொரு பக்கமாய் குழந்தைகளுடன் தூங்கிப் போனோம் பாட்டு அலுத்த நள்ளிரவில்.
அம்மு கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்று தான் என் மனதில் பிம்பம். அதே நினைப்பில் அவளை ஏகத்துக்குத் தாங்கினேன். அவள் கிழித்த கோட்டைத் தாண்டவில்லை. சொன்ன நேரத்தில் வீட்டில் இருந்தேன். கேட்ட பொருளை வாங்கித் தந்தேன். பிடித்த இடங்களுக்கு அழைத்துப் போனேன். முதன் முதல் தள்ளிப் போனபோது நடக்க விடவில்லை. எங்களை விடவும் தெருக் குழந்தைகளுக்கு.
மரணம் என்பது எத்தனை குரூரம் என்று அது முகத்தில் அறையும் போது புரிகிறது. அதுவும் தனக்கு நேரும் போது. அம்முவுக்குப் பெண்குழந்தை என்றதும் அவள் முகம் சுளித்தாளாம். பிரசவம் பார்த்த அம்மாளு சொன்னாள்.
‘அதென்ன அந்தப் புள்ளை பையன் தான் வேணும்னு.. பொண்ணுன்னதும் முகஞ்சுளிச்சுகிட்டு’
அம்முவைத் தனியே பார்த்தபோது சொன்னேன்.
‘இனி இந்த வீட்டில் ரெண்டு அம்மு’
‘ஒண்ணே அதிகம்’
‘உளராதே.. எனக்குப் பெண் வேனும்னு ஆசைப்பட்டேன்.. கொடுத்துட்டார்’
அம்மு உம்மென்று இருந்தாள்.
இன்னும் புண்ணியாகவசனம் ஆகவில்லை. ஏழாம் நாளா.. எட்டா நாளா.. ஞாபகம் இல்லை. நடு ராத்திரி. திடீரென பரபரப்பு. எல்லோரும் அம்முவின் அறைக்கு ஓடினார்கள். எனக்கு தூக்கக் கலக்கத்தில் புரியவில்லை. என்ன ஆச்சு.  ஏன் ஓடுகிறார்கள்..
அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். அழுதாள்.
‘என்னம்மா’
‘ராஜா.. என் செல்லமே உனக்கு ஏன் இப்படி’
அப்படியே ஒரு அமைதியின் இருட்டு வீட்டைக் கவிழ்த்து மூடியது. யாரும் பேசவில்லை. உதட்டைக் கடித்துக் கொண்டு.. அம்மு.. உனக்கு ஒண்ணும் ஆகலியே.. அம்மு..
மலர்ந்த ரோஜா. உதட்டில் லேசாய் ஒரு புன்னகை. பாக்கி இருந்த கர்மாவை என் வீட்டில் கழித்து விட்டேன் என்று பெருமிதமாய்.. உள்ளங்கை.. உள்ளங்கால்.. பூக்கள்.. தலை முடி அடர்த்தி.. விரல்கள் எவ்வளவு நீளம்.. வீணை வாசிப்பாள் பின்னாடி..  நம்மை விட உயரமா இருப்பா வளர்ந்தப்புறம்.. உன் ஜாடைதான்.. இல்ல. உங்க ஜாடை.. போடி ஜாடை மாறிண்டே இருக்கும்.. என்ன பேர் முடிவு பண்ணிட்டியா.. உங்க பாட்டி பேரா.. ச்சே.. நல்ல பேரா யோசிப்போம்..
அதற்கெல்லாம் அவசியமே இல்லை. டாட்டா காட்டி விட்டது.  தூளியில் எடுத்துக் கொண்டு போனார்கள். தெருக் குழந்தைகளைத் துரத்துவது பெரும்பாடாகி விட்டது. எதுவும் சாப்பிடவில்லையாம். அழுகையாம். எங்களைப் பார்க்கணும் என்று படுத்தலாம்.
அம்முவைத் தான் எப்படி நேர் செய்வது என்று புரியவே இல்லை. பால் கட்டிக் கொண்டு.. அழுது.. வேணாம்டி.. உனக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது..
சரி .. போதும்.. நிறுத்திக் கொள்கிறேன். என் சிலுவையை எதற்கு உங்கள் தோள்களில் சுமத்திக் கொண்டு. நாங்கள் நாங்களாக இன்னும் காலம் கனியவில்லை இத்தனை வருடங்களுக்குப் பிறகும்.
என்னை விடவும் அம்முவை ரொம்பதான் பாதித்து விட்டது. கிட்ட வர விட்டேன் என்றாள். ஏன் மறுபடி தூளிக்குக் கொடுக்கணுமா என்றாள். அப்படி நேராது என்று எல்லோரும் சொல்லிப் பார்த்தாகி விட்டது. ம்ஹூம். கேட்கவில்லை. அதை விடவும் மோசமாய்..என் மீதான சாடல்கள்.
‘அங்கே என்ன பேச்சு’
‘ஒண்ணுமில்லம்மா.. ரேஷன்ல சர்க்கரை என்னிக்குன்னு’
‘ஏன்..அந்தக் குழந்தை ஞாபகமா பால் பாயசம் வைக்கணுமா’
வந்தவர் ஓடி விட்டார்.
‘போனா போன இடம்.. உடனே திரும்பி வரத் தெரியாதா’
‘பூத்ல க்யூ பெருசா’
‘மத்த வீட்டுல பொம்மனாட்டிதானே வந்திருப்பா.. ‘
‘இல்லம்மா.. ரெண்டு பேரும் ‘
‘உங்களுக்கு பேச்சுக்கு அவாதானே’
‘இனிமே நான் போகல’
‘அப்புறம் வேளா வேளைக்கு வக்கணையா காபி குடிக்கணுமே’
அம்முவின் அருகில் போய் தலையின் மேல் கை..
‘எடுங்கோ.. அந்த நினைப்பே இனி வேண்டாம்’
‘அந்த ரேடியோவை அணைங்கோ.. என்ன கருமாந்திர பாட்டு’
டி எம் எஸ் பி சுசீலா பயத்துடன் வாயை மூடிக் கொண்டார்கள். எம் எஸ் வி ஆர்மோனியப் பெட்டியுடன் ஓடினார். கண்ணதாசன் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.
ஆச்சு.. காலத்திற்கு என்ன.. இன்னிக்கு உதயமாகிறவன் சாயங்காலம் வரை அம்முவைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு எவ்வித மாற்றமும் இல்லை என்று புரிந்து பெருமூச்சுடன் முகம் சிவந்து ஓடிப் போவான். பௌர்ணமி வீட்டு வாசலில் வரும் போது அஞ்சாறு மேகம் துணையுடன் வந்து வீட்டைக் கடந்ததும் ஸ்ஸ் ஹப்பாடா என்று பெருமூச்சு விடும்.
சில சமயம் மனசிருந்தால் ஒரு ஸ்லோகம் வரும். பாதி ஸ்லோகத்தில் விதி ஞாபகம் வந்து உதட்டிற்கு சீல் வைத்து விடும். அம்முவின் தீனமான அழுகை வாசலில் உட்கார்ந்திருக்கிற என்னைப் பிசையும். கால் பரபரக்கும். எழ விடாமல் கைகளால் அமுக்கிக் கொண்டு உதட்டைக் கடிப்பேன்.
பிடிவாதமாய் பாயில்.. தரையில் தான் அவள் படுக்கை. சாப்பாடு ரசித்து இல்லை. குழந்தைகள் பெரியவர்களாகி வெளியே போய்விட்டார்கள். ஊருக்கு வரும்போது எங்களைப் பார்க்க வருவார்கள். அம்முவின் கண்களில் ஜலம் கட்டிக் கொண்டு கண்ணாடித் திரை தொங்கும். யாரும் பேசிக் கொள்ள மாட்டோம். பத்திரிகை வைக்க யாரும் வருவதில்லை. விசேஷங்களுக்கு அழைப்பு இல்லை.
எனக்கு வருத்தம் இல்லையா என்று கேட்கிறீர்களா.. இருக்கிறது. போனதை விட இருக்கும் அம்முவை நினைத்து. யாராவது ஒருவர் அம்முவை இதிலிருந்து மீட்டு எடுத்தால் மிச்சமிருக்கிற ஆயுசுக்கும் நன்றி சொல்வேன்.

யார் வரப் போகிறீர்கள்..

நன்றி  திரு மணியம் செல்வன்  (கூகிள்)

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

மனதை உலுக்கிய அம்மு.......

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ்ந்து போனேன்...

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமான இந்த அம்முவை படிக்கையில் மனம் பதறிப் போனது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த அம்மு-15 வழக்கம்போல இல்லாமல் ரொம்பத்தான் சண்டித்தனம் செய்கிறாள்.

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத அம்முவாக அல்லவா இருந்து பொறுமையை சோதிக்கிறாள்.

இவளைவிட கைக்கு எட்டாத பழைய அம்முக்களில் சிலரே பரவாயில்லை போலிருக்குது.

Thiyaga... said...

Rombavum manasai badittadu .epdiyo ammu became alright nu mudichirunda nannna irunduirukkum.
Vera vela pakkamudiyama Manasu romba heavy a aiduthu