August 19, 2012

சதுரகிரி - சில அனுபவங்கள்


கோரக்கர் குகை இது. அவர் தவம் செய்த இடம். அங்கே இப்போது ஒரு பெண்மணி இருக்கிறார். அருள் வாக்கும் சொல்கிறார். 18 சித்தர்களையும் தரிசித்ததாகவும் சொல்கிறார்.

மேலே படத்தில் ஷானும்.. மஹேஸ்வரனும்.

அவர் தீபாரத்தி காட்டும்போது கண்ணாடி அணிந்து தரிசித்ததும் சிரித்தார் கேலியாக.

“இது என்ன வழக்கம்.. கண் நல்லாத் தெரியணுமா வேண்டாமா..  போட்டுகிட்டே தரிசனம் பண்ணா அப்புறம் எப்படி பார்வை சரியாகும்”

அவர் சொன்ன அர்த்தம் இது. அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே எழுதவில்லை. 

அப்புறம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத்தான் தரிசித்தோம். அதன்பின் இப்போது எந்த கோவில் போனாலும் கண்ணாடியைக் கழற்றிவிட்டு கிடைக்கிற காட்சியைத்தான் தரிசிக்கிறேன் !

எங்களுடன் மலை ஏறி .. இறங்கிய இன்னொரு நட்பு ஜோடி.

“நீ 96 ஜூன்ல ரிடையர் ஆன..  நான் டிசம்பர்ல..”

அவ்வப்போது மூச்சிரைக்கையில் பாறை மீது உட்கார்ந்து பேசிக் கொண்டே போன நண்பர்கள்.  74 வயதுக்காரர்கள்.

ஒருவருகொருவர் துணையாய் முழுப் பயணமும் அவர்கள் இணைந்து வந்த விதம் மனதைத் தொட்டது.

இன்னொரு குடும்பம்..  பாலிதீன் பையில் பர்சும் வேறு ஏதோ தின்பணடமும் வைத்திருந்த பெண்மணி.. குரங்கு பாய்ந்து பறித்துக் கொண்டு மரமேறி விட்டது. மரமோ மலைச் சரிவில்.

‘பர்ஸு போச்சு” என்று அவர் அலறினார்.

எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் என்ன சாமர்த்தியமாய் அதை மீட்டார் 
சரிவில் இருந்த மரத்தில் குரங்கு.. பையை ஆராய்ந்து தனக்கு பர்ஸ் உதவாது என்கிற முடிவுக்கு வருவதற்குள் .. இந்த நண்பர் நடக்க உதவியாய் கொண்டு வந்த கொம்பை குரங்கின் முகத்திற்கு எதிரே ஆட்டினார். கடுப்பான குரங்கு பர்ஸை வெளியில் எடுத்து கீழே போட்டது.

சரியான சறுக்குப் பாறை. எங்கும் பிடிமானம் இல்லை. நண்பர் சளைக்கவில்லை. கொம்பை வைத்தே மெல்ல பர்ஸை நகர்த்தி ஒரு லெவல் வரை மேலே கொண்டு வந்தார்.  அதன்பின் ஒருவர் கையைப் பிடித்து இன்னொருவர் என்று அந்த சறுக்கில் தவழ்ந்து பர்ஸைக் கைப்பற்றி மேலே கொண்டு வந்தார்கள்.

உள்ளே எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. 
பர்ஸ் திரும்பிக் கிடைத்ததும் பெண்மணி முகத்தில் நிம்மதி..

அந்த இரவில்.. பௌர்ணமி வெளிச்சத்தில் எவ்வித பயமும் இல்லாமல் எல்லாப் பெண்களும் (வயது வித்தியாசமின்றி) மலையில் போய் வந்ததைப் பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது. 

குட்டி குட்டியாய் சுவையான சம்பவங்கள்..  சதுரகிரி பயணம் மனதை விட்டு அகல வெகு நாட்களாகும் போல..


9 comments:

ஸ்ரீராம். said...

எப்படி சாமர்த்தியமாய் அந்தப் பர்சை அவர் மீட்டார் என்று சொல்லியிருக்கலாமோ....!

ரிஷபன் said...

ஸ்ரீராம்.. சொல்லிட்டேன். :)

ஸ்ரீராம். said...

நன்றி... படித்து விட்டேன்!

நிலாமகள் said...

எதிர்பார்த்து செல்லும் ப‌ய‌ண‌ங்க‌ளில் எதிர்பாரா சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் ப‌சுமை வெகு நாட்க‌ள் ம‌ன‌சில் ஈர‌மாய்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சரிவில் இருந்த மரத்தில் குரங்கு.. பையை ஆராய்ந்து தனக்கு பர்ஸ் உதவாது என்கிற முடிவுக்கு வருவதற்குள் ..//

//கடுப்பான குரங்கு பர்ஸை வெளியில் எடுத்து கீழே போட்டது.//

அருமையான அனுபவங்கள் அருமையாக எழுதப்பட்டுள்ளன.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

“இது என்ன வழக்கம்.. கண் நல்லாத் தெரியணுமா வேண்டாமா.. போட்டுகிட்டே தரிசனம் பண்ணா அப்புறம் எப்படி பார்வை சரியாகும்”//

நானும் இனி கண்ணாடி இல்லாமல் இறைவனை தரிசனம் செய்கிறேன்.

வயது வித்தியசமின்றி பெண்கள் போவதை அறிந்து எனக்கும் போக ஆசை.சுந்தர ம்காலிங்கம் அழைக்க வேண்டும்.
அருமையான அனுபவங்கள்.
பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

vasan said...

//குட்டி குட்டியாய் சுவையான சம்பவங்கள்.. சதுரகிரி பயணம் மனதை விட்டு அகல வெகு நாட்களாகும் போல..//

அருமையான அநுப‌வ‌ம்.ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். ஏன் இவை ம‌ன‌தை விட்டு அக‌ல‌னும்? ஆழ்ம‌ன‌தில் த‌ங்கியே இருக்க‌ட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பயணங்களில் கிடைக்கும் சின்னச் சின்ன அனுபவங்கள் என்றுமே இனியவை தான்....