May 31, 2010

எஸ் எம் எஸ் பகுதி 3

நண்பருக்கு - டெலிபோன்ஸ் - என்னை மிகவும் பிடிக்கும். காரணம் என் இரு குரல் திறமை!

சில நேரங்களில் அலுவலகத்திற்கே ஃபோன் செய்து விடுவார்

"ஏதாச்சும் பாடுங்களேன்"

"என்ன பாட்டு?"

"சலங்கை ஒலில வந்தே பார்வதி பரமேச்வரம்.."

ராக வினோதங்கள் நடன சந்தோஷங்கள்.. பாட்டு அவருக்குப் பிடித்த பாட்டு. இரு குரல்களிலும் பாடியதும் அவருக்கு ஒரே குஷி.

"உங்களுக்கு ஏதாச்சும் செய்யணுமே" என்றார்.

விடுவேனா. என் பிரச்னையை சொன்னேன்.

"ம்ம்" யோசித்தார்.

"என்ன ஃப்ரெண்ட்.. ஏன் அவனோட பேசினீங்க"

எனக்குள் தடுமாற்றம். புனிதாவுக்கு இதில் எந்த அளவுக்கு சம்பந்தம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாதே.

"உங்க மிஸசை நீங்க டெளட் பண்றீங்களா" என்றார் பாலிஷாக.

"என் நிலைமையையும் நீங்க யோசிக்கணும். அவன் ரொம்ப நாளா மெசேஜ் அனுப்பறானாம். ஆனா இவ எங்கிட்டே ஒரு தரம் கூட சொன்னதில்லே." நண்பர் சிரித்தார்.

"உங்க மிஸஸை உங்களுக்குத் தெரியாதா.. சரி ஓக்கெ.. இப்ப என்ன வேணும். அவனோட அட்ரஸ்.. டிரை பண்றேன். நம்பர் சொல்லுங்க" சொன்னேன்.

"அட்ரஸ் கிடைச்சதும் என்ன செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா"

பிராமிசாய் எனக்கும் அப்போது ஐடியா எதுவும் இல்லை. முதலில் அவன் யார்.. எப்படி இருப்பான் என்கிற க்யூரியாசிட்டிதான்.

"சும்மா அவனைப் பார்க்கணும். ஏன் இப்படி செய்யறான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லது.."

"என்னால உங்க பதிலை ஏத்துக்க முடியலே. எதுவும் வம்புல மாட்டிக்காதீங்க. எனக்கு போலீஸ்லயும் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ட்ரேஸ் பண்ணச் சொல்லலாமா"

"வே..ணாம்"

நண்பர் விட்டு விட்டார்.

"ஓக்கே. டேக் கேர்"

அன்று முழுவதும் எனக்கு எந்த அழைப்பும் அல்லது குறுஞ்செய்தியும் வரவில்லை. என்ன ஆச்சு அவனுக்கு. ஒரு வேளை சந்தேகப்படுகிறானோ. வீட்டிற்குத் திரும்பியதும் அன்று இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

புனிதாவிடம் பயங்கர இறுக்கம் தெரிந்தது.

"ஏன் என்னோட செல்லையும் எடுத்துகிட்டு போயிடறீங்க."

"அது வந்து.."

"ஏங்க எவனோ ஒரு முட்டாள் பைத்தியக்காரத்தனமா மெசேஜ் அனுப்பறான்னா.. அதுக்காக இப்படி உங்க நிம்மதியைத் தொலைச்சிட்டு அலையணுமா"

"அவன் முட்டாளா.. இல்லே நான் முட்டாளான்னு தெரியலையே" என்றேன் மெதுவாக ஆனால் கேட்கும் ஒலியில்.

புனிதா எதிரில் வந்தாள்.

"என்ன சொன்னீங்க"

"புனிதா.. ஒரு விஷயம் எனக்கு கிளியர் ஆகலே. அவன் சொல்றான்.. இதுவரைக்கும் நிறைய மெசேஜ் அனுப்பினதா. ஆனா நீ ஒரு தரம் கூட என்கிட்டே அதைப் பத்தி சொல்லவே இல்லை."

என் குரலில் பரிபூர்ண கசப்பு வழிந்தது.

"ஓ"

அவ்வளவுதான். அதன் பிறகு புனிதா எதுவும் பேசவில்லை. இரவுச் சாப்பாடு கூட மெளனமாய்.

கட்டிலுக்கு வந்ததும் "ஒரு நிமிஷம்" என்றாள்.

'என்ன' என்பது போலப் பார்த்தேன்.

"நீங்க என்னை சந்தேகப்படறதா நான் நினைக்கலே. ஆனா குழம்பிப் போயிருக்கீங்க. இப்ப நான் என்ன சொன்னாலும் நீங்க வேற மாதிரி ஏதாச்சும் யோசிப்பீங்க. இதை ஏன் சொல்றேன்னா.. முதலிலேயே நீங்க என்கிட்டே மனசு விட்டு பேசியிருந்தா.. இந்த அளவு குழப்பத்தை வளர விட்டிருக்க மாட்டீங்க. இப்ப நீங்களா விடை கண்டு பிடிச்சு என்மேல தப்பு எதுவும் இல்லேன்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. அதுவரைக்கும் காத்திருக்கேன்"

படுத்துத் தூங்கி விட்டாள். எனக்கு என்னை சபித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஏன் இப்படி அடிமடையனாய் நடந்து கொண்டேன்.

உள்ளூர ஒவ்வொரு மனதிலும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு அற்ப எண்ணம் குடி கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் அது வெளியே வந்து உலாத்தி விட்டு போகிறது. மெசேஜ் அனுப்புகிறவனுக்கு அது மெசேஜ் மூலமாய் வடிகாலாகிறது. சைகாலஜிஸ்ட்டைக் கேட்டால் ஏதாவது ஒரு விளக்கம் தரக் கூடும்.

புனிதாவின் செல் மினுமினுத்தது. மெமரி ஃபுல் என்றது. வேண்டாத மெசேஜை அழித்தால்தான் புது மெசேஜைப் படிக்கலாம்.

முதல் மெசேஜ் வசந்தியிடமிருந்து. அடுத்தது நான் அனுப்பியது. 'மெசேஜ் அனுப்ப கத்துக்கோ' மூன்றாவது.. என் தலைக்குள் பல்ப் ஒளிர்ந்தது அப்போது.

அட.. புனிதா ஆரம்பத்தில் மெசேஜ் அனுப்பத் தெரியாதவளாய் இருந்தாள். நான் தான் க்ரியேட் மெசேஜ்.. டைப் பண்னு.. அனுப்பு.. அப்போது எந்த செல்லுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நம்பரை டைப் பண்ணு.. ஸ்டெப் பை ஸ்டெப் ஆக சொல்லிக் கொடுத்தேன்.

மறுபடியும் தலைக்குள் பளிச்!

அனுப்பியதில் போய் பார்த்தேன்.

'ஐ லவ் யூடா செல்லம்' புனிதா அனுப்பிய முதல் மெசேஜ். எந்த நம்பருக்கு.. அட கஷ்ட காலமே.. என் எதிரிக்கு!

கற்றுக்குட்டித்தனமாய் அவள் அனுப்பிய முதல் மெசேஜ் எண்களைத் தப்பாய் அடித்ததில் இவனுக்குப் போய் விட்டது. அதனால் அவனுக்கு குஷியாகி தொடர் தாக்குதல். இவளுக்கோ தான் செய்த தவறு புரியாமல் போனதில் தொடர்ந்து வருகிற மெசேஜை தப்பாய் வருகிறது என்று அலட்சியப்படுத்தி விட்டிருக்கிறாள்.

'ஸாரிடா.. செல்லம்..'

திரும்பி நிச்சலனமாய்த் தூங்குகிறவளைப் பார்த்தேன். ஊஹூம். இப்போது அவளிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை ஒரு வழி செய்து விட்டு பிறகு இவளிடம் மன்னிப்பு கேட்கலாம்.

நானும் திரும்பிப் படுத்து தூங்கிப் போனேன். நள்ளிரவில் அவன் அனுப்பிய மெசேஜ் வந்தபோது செல் சிணுங்கியது கூடத் தெரியாமல்.

காப்பி சுடச் சுட கிடைத்தது. புனிதா என்னைப் பார்க்கிறாளா என்று ரகசியமாய்ப் பார்த்தபோது அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. பரவாயில்லை. அவள் கோபம் நியாயமானதுதான். மறக்காமல் இரண்டு மொபைல்களையும் எடுத்துக் கொண்டேன்.

டெலிபோன்ஸ் நண்பர் ஃபோன் செய்தார்.

"சொல்லியிருக்கேன். கண்டு பிடிச்சுரலாம்"

எனக்குள் ஒரு படபடப்பு. பேசிப் பார்த்தால் என்ன. முதல் தடவை ரிங் போனதும் சட்டென்று கட் செய்து விட்டேன். இரண்டாவது முறை இணைப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது முறை 'பிளீஸ் ஹோல்ட் ஆன். தி லைன் ஈஸ் பிஸி'.சற்று தாமதித்ததில் அவனே பேசினான்.

இப்போது அவன் குரலில் ஒரு துள்ளாட்டம்.

"சொல்லுடா. ரொம்ப கஷ்டமா இருக்கா.. பார்க்காம"

"ஆமாண்டா"

"அட. நீயும் டா போடறியா"

வாய் தவறி கோபத்தில் சொன்னதை அவன் உற்சாகமாய் எடுத்துக் கொண்டு விட்டான்.

"ஸாரி.."

"சேச்சே.. நீ அப்படி கூப்பிடும்போது சும்மா அதிருதுல்ல"

"எப்ப பார்க்கலாம்" என்றேன் மிக இயல்பான பெண் குரலில்.

"ஷ்யூர்.. இனிமேல டிலே பண்ண மாட்டேன்.. நாளைக்கு?" என்றான்.

"நாளைக்கா"

"ஜஸ்ட் ஒன் டே வெயிட்டிங்"

"நாளைக்கு ஏமாத்தக் கூடாது" என்றேன் குரலில் குழைவுடன்.

"கூல்" என்றான்.

மனசில் பெர்ரிய ஹீரோ என்று நினைப்பு.

"காலைல முதல் மெசேஜ்ல நாம எங்க சந்திக்கறோம்னு தகவல் இருக்கும். ஓகே "

"தேங்க்ஸ்"

"சீச்சீ.. நமக்குள்ளே என்ன ஃபார்மாலிட்டி.. பைடா"

நாளைக்கு இருக்குடா மகனே உனக்கு தீபாவளி.. என்றேன் மனசுக்குள் அப்போது .

(தொடரும்)

3 comments:

vasu balaji said...

ஓஹோ! வெயிட்டிங்:)

க ரா said...

சீக்கிரம் தொடருங்க ரிஷபன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மர்ம நாவலில் முதல்ல கடைசி பக்கம் தான் படிப்பேன்.எனக்கு சஸ்பென்ஸ் கூடாது, டாக்டர் சொல்லியிருக்கிறார்.
நீங்க என்னடான்னா...சாரி சார் எப்ப முடிப்பீங்க!!