October 31, 2010

மணமகள் அவசரத் தேவை - 2

ஒரு தடவை அரசுப் பேருந்தில் திருச்சி டூ சென்னை வருகையில் இட நெரிசலை முன்னிட்டு எனக்கருகே காலியான இருக்கையில் அந்தப் பெயர் தெரியாத பெண் அமர்ந்து வந்தாள்.

அன்னிய ஸ்த்ரீயுடன் விவரம் புரிந்த முதல் ஸ்பரிசம்.

காலை நகர்த்தவே இடமற்ற வசதிக்குறைவான பேருந்து விரும்பியோ, விரும்பாமலோ இடித்துக் கொண்டே தீர வேண்டும்.

கண்டக்டருக்கும் முழு ஒப்புதல் இல்லை.வேறிடம் பார்க்க முயன்றவனை அந்தப் பெண் தடுத்து விட்டது.இது போதும்! அவன் என்னைப் பொறாமையாய்ப் பார்த்து விட்டுப் போக, பயணம் முழுக்க பேசாமலேயே வந்தாள்.

நான்தான் விழுப்புரத்தில் காப்பி வேண்டுமா என்று கேட்டு, பதில் பெறாமல் இறங்கி, குடித்தேன். அழுத்தமான தலையசைப்பு. வேண்டாம் பேச்சே இல்லை. குரோம்பேட்டையில் இறங்கியவளை மறுபடி சந்திக்கிற பாக்கியமே கிட்டவில்லை.

இதைத் தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு ஸ்பரிசங்கள் என் வாழ்க்கையில் இல்லை இதுவரை, நல்லா இருக்கியாடா என்று கன்னம் வழித்த அம்பது, அறுபது வயசு உறவு மூதாட்டிகளைக் கணக்கில் எடுக்காமல் விட்டால்.

என் அறையில் அந்த கல்யாணப் பெண் மறுபடியும் என் கையைப் பற்றி கெஞ்சுதலாக அழுத்தியது. ப்ளீஸ். காட்டிக் கொடுக்காதே.

அறைக்குள் சுவரை ஒட்டி மறைந்தாற் போல அமர்ந்து கொண்டது.

வெளியே வந்தேன். சங்கரன்தான். கையில் டிபன் கேரியர்.

"என்ன ஆச்சு, லைட் எரிஞ்சுது. அப்புறம் அணைஞ்சு... ஆளையும் காணோம். ஏறிக் குதிக்கலாமான்னு பார்த்தேன் "என்றான்.

நல்லவேளை. செய்யவில்லை.

" சரி. சாப்பிடு... கேரியரை நீயே வச்சிரு. அப்புறம் வாங்கிக்கறேன். "

எடுத்துக் கொண்டேன். கனத்தது.

"நிறைய வச்சிருப்பே போல இருக்கே. "

"பரவாயில்லே. முடிஞ்சவரைக்கும் சாப்பிடு. "

உள்ளே மணமகள். என்ன செய்யப் போகிறேன்!

"சிவா, நீ எப்ப தூங்குவே."

" ஏன்... எதுக்கு கேட்கறே. "

"இங்கே கஷ்டமா இருந்தா... உன்னோட ரூமுக்குப் படுக்க வரலாமான்னுதான். "

"அ... அப்படியா"

"ஆனா உனக்குத்தான் சிரமம். தூக்கம் கெடும். பன்னண்டு மணிக்கு எழுந்துப்பேன். பரவாயில்லையா. "

எப்படி வர வேண்டாம் என்று சொல்வது. சோறு போட்ட புண்ணியவான்.

"வாயேன்."

" நெஜம்மாவா. உனக்கு கஷ்டம் இல்லியே?" என்றான். அப்பாவியாய்.

"நிச்சயமா வா. நான் முழிச்சுக்கிட்டு இருக்கேன். நாம பேசி எவ்வளவு நாளாச்சு. நாளைக்கு ஸண்டேதான். எனக்கு லீவு. "

கோர்வையாய்ப் பேசினேன். ஒரு வேளை சங்கரன் பார்வையில் பட்டிருந்தால் அல்லது எங்கள் பேச்சு கேட்டிருந்தால்... எழுந்த துளி சந்தேகமும் அற்றுப் போகட்டும்.

சங்கரன் முகத்தில் உற்சாகம் தெரிந்தது.

"நிச்சயமா வரேன். அரட்டை அடிக்கலாம். "

கேரியருடன் உள்ளே வந்து கதவை மூடி உட்புறம் தாளிட்டேன். ஜன்னல் கதவையும் மூடினேன். விளக்கைப் போட்டேன்.

இப்போதுதான் அவளை நன்றாகப் பார்க்கிறேன். மணப் பெண்ணின் அழகு அலங்காரத்தால் சிதைக்கப் படுகிறது என்பதில் முழு உடன்பாடு எனக்கு.

இவளுக்கு அதையும் மீறி ரசனை கூட்டியது. அதற்காக உலக அழகிப் பட்டம் தரவில்லை. நிச்சயம் இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கத் தூண்டுகிற அழகுதான்.

முகம் தெரியாத அவளது காதலன் மீது பொறாமை பீறிட்டது.

"சாப்பிட்டாச்சா" என்றேன்.

"இல்லே"

" உன் பேரென்ன."

" வசந்தி."

" உங்க வீட்டுச் சாப்பாடுதான் " என்றேன் அசட்டுச் சிரிப்புடன்.

கேரியரைப் பிரித்து பகிர்ந்தேன். சாப்பிட்டதும் அடுத்து என்ன செய்வது என்ற கவலை முழுமையாய்ப் பற்றிக் கொண்டது.

"பேசினதைக் கேட்டீல்ல. "

"ம்... உங்க நண்பர் இங்கே வரப்போறார்... படுக்க. "

"அவன் உன்னை இங்கே பார்த்தா...வேற வினையே வேணாம்."

" இப்ப என்ன செய்யப் போறீங்க " அலட்டிக் கொள்ளாமல்.

அடிப்பாவி. இது என் பிரச்னை மாதிரி திசை திருப்பி விட்டாயே. சட்டென்று பளிச்சிட்டது ஐடியா.

என் அறையிலிருந்து அடுத்த அறைக்குச் செல்ல இடையே ஒரு கதவு உண்டு. ஆனால் எங்கள் வீட்டு சொந்தக்காரர் அதை மூடிவிட்டு, இரு போர்ஷன்களாய்ப் பிரித்து வாடகைக்கு விட்டிருக்கிறார்.

அடுத்த அறைக்காரரோ டூர் போய் விட்டார். எங்களுக்குள் கதவைத் திறந்து வைக்க எந்த அவசியமும் நேரிடாததால் தாளிட்டே வைத்திருந்தேன்.

ஒரு வேளை அவரும் அவருடைய பக்கத்தில் பூட்டி வைத்திருந்தால்.. சிரமம்தான்.

இதயம் படபடக்க தாழ்ப்பாளைத் திறந்தேன். லேசான கிரீச்சுடன் கதவு திறந்தது.

அடுத்த அறை தெரிந்ததும் மனசாட்சி உறுத்தியது.மணப்பெண்ணை மறைத்தல்.. அடுத்தவர் அறையில் அனுமதியின்றி பிரவேசித்தல்.. இன்னும் என்னென்ன தப்புகள் பண்ணப் போகிறேனோ.

திரும்பி வசந்தியைப் பார்த்தேன். அதற்குள் அவளும் யூகித்துவிட, சிரித்துக் கொண்டிருந்தாள்.

"நல்ல ஐடியா. நான் அந்தப் பக்கம் போயிடறேன். அந்தப் பக்கம் பூட்டிக்கிறேன். சரியா."

" எனக்கு நேரம் சரியில்லை " என்றேன் பொருமலாக.

"பிளீஸ்" என்றாள் மீண்டும்.

இந்த ஒரு வார்த்தையை அடிக்கடி உபயோகித்து என்னை அசைத்து விடுகிறாள்.

"சரி. பத்திரம். சொதப்பிடாதே. திடீர்னு கதவைத் திறந்துக்கிட்டு இங்கே வராதே. அங்கே லைட்டும் போட்டுராதே. "

எத்தனை உதவிகள் செய்கிறேன் என்கிற பெருமிதம் என்னுள் பூக்கத் தொடங்கியது.

வசந்தியைப் பார்த்தேன். மனசு மாறி என்னையே தேர்ந்தெடுத்து விடுவாளோ என்ற நப்பாசையுடன்.

"குட்நைட் "என்றாள் புன்னகையுடன்.

அடுத்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

நான் ஜன்னலைத் திறந்தேன். புழுக்கம் மறைந்து வெளிக்காற்று உள்ளே வந்தது. கதவையும் திறந்தேன்.

மண்டபத்தினுள் ஏகப்பட்ட இரைச்சல்.எப்படி இதுவரை எனக்குக் கேட்கவில்லை? என் பிரச்னையில் இருந்ததாலா.

என்ன நிகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், நானும் உடந்தை என்ற குறுகுறுப்பும் சேர்ந்து தாக்க இன்னது செய்வது என்று புரியாத மனநிலை.

சங்கரன் தெரிந்தான். சங்கர். காம்பவுண்டு சுவர் அருகே வந்தான். படபடப்பில் இருந்தான்.

"என்ன.. பிரச்னை " என்றேன் கூடிய வரை அப்பாவியாய்.

"பொண்ணைக் காணோமாம். "

"எ..ன்ன! "

"அவ விரும்பாத கல்யாணமாம். அதட்டி மிரட்டி அழைச்சுக்கிட்டு வந்துட்டாங்க. எப்படித் தப்பிச்சான்னு தெரியலே. ஆளைக் காணோம். இப்ப.. "

"என்ன செய்யப் போறாங்க."

" போலீசுக்குப் போன்னு ஒரு கூட்டம் விரட்டிக்கிட்டு இருக்கு."

கைவிலங்குடன் நடுத்தெருவில் என்னை இழுத்துப் போகிற பிரமையில் ஆழ்ந்தேன்.

"சனியன்.. குடும்பப் பெயரைக்கெடுக்க வந்தவளை.. உதறிட்டு வேற யோசனை பண்ணுங்கன்னு அவ அண்ணன் சொல்றான்."

" அ..ப்படியா? "

"நான் போறேன். யாரும் சாப்பிட வரமாதிரி தெரியலே. கார்த்தால டிபனுக்கு, சாப்பாட்டுக்கு காய் அரிஞ்சு வச்சாச்சு. வடைக்கு நனைச்சாச்சு. கல்யாணம் உண்டா.. இல்லியான்னு புரியலே. பணத்தை செட்டில் பண்ணுவாங்களோ.. அம்போன்னு விட்டுருவாங்களோ.."

சங்கரன் அவன் தவிப்பில் புலம்பி விட்டுப் போய் விட்டான்.

படுக்க வர மாட்டானோ.. என்று இவ்வளவு கவலையிலும் ஓர் அபத்த யோசனை.சிவராத்திரிதான்.

அறைக்குள் நுழைந்து அடுத்த அறைக் கதவைப் பார்த்தேன்.

உள்ளே எந்த சத்தமும் இல்லை. கொடுத்து வைத்தவள். நிம்மதியாய்த் தூங்குகிறாள், பிரளயத்தையே உண்டாக்கி விட்டு.

ஒரு மணிக்கு சங்கரன் கதவைத் தட்டுனான். திடுக்கிட்டு விழித்தேன்.

"யா.. யாரு."

" நான் தான் சங்கரன்."

கதவைத் திறந்தேன். "

"ஸாரிடா" என்றான்.

"ஸாரி. நானும் தூங்கிட்டேன்."

சட்டென்று புத்தி விழித்துக் கொண்டது.

"என்ன ஆச்சு. பொண்ணு கிடைச்சாச்சா. "

"அவ எங்கே போனாளோ... ஆனா பிரச்னை தீர்ந்தாச்சு. அவ தங்கை சம்மதிச்சுட்டா. அதே முகூர்த்தம். அதே மணமகன். பெண் மட்டும் வேற. என்னோட காண்டராக்டும் பிழைச்சுது "என்றான் நிம்மதி தெரிகிற குரலில்.

"என்ன இருந்தாலும் அவ பண்ணது சரியில்லே "என்றேன்.

" நமக்கென்ன அவளைப் பத்தி வா தூங்கலாம். வேலைக்கு ஓடணும் "என்றான் கொட்டாவியுடன்.

படுத்துக்கொண்டோம்.

திடுக்கிட்டு விழித்தபோது மணி ஐந்து.

வாசற்கதவு திறந்து கிடந்தது.

எனக்குள் பகீரென்றது.

(தொடரும்)

-கல்கி நாலு வாரத் தொடர்

13 comments:

Anonymous said...

இந்த வாரமும் சஸ்பென்ஸா ஐய்யோ ...

தினேஷ்குமார் said...

கதை நல்லாருக்கு நண்பரே உண்மை கதையா...........

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல ஒரு விறுவிறுப்பு. டி.வி. மெகா தொடரில் சரியான கட்டத்தில் விளம்பரம் போடுவது போல ’தொடரும்’ போட்டு அசத்தி விடுகிறீர்கள். தங்கள் தனித்தன்மை ஆங்காங்கே பிரதிபலிப்பதை உணர முடிந்தது.

அன்பரசன் said...

நல்லா போயிட்டு இருக்குங்க.

குட்டிப்பையா|Kutipaiya said...

நல்லா மூவ் பண்றீங்க ரிஷபன்..தொடருங்கள்..

நிலாமகள் said...

ஐய்யோ ...
இந்த வாரமும் சஸ்பென்ஸா ...

பொன்கார்த்திக் said...

:)

vasu balaji said...

இப்படி எல்லாம் ப்ரெக் போட்டா அடுத்த நாளே அடுத்த பாகம் வரணும். சரியா:))

க ரா said...

கலக்கல்...

கே. பி. ஜனா... said...

அட, செம ஸ்பீட்! அப்புறம் எப்படிப் போகுது கதை, ஆர்வம்!

மோகன்ஜி said...

நல்ல விறுவிறுப்பா போய்க்கிட்டிருக்கு.. நறுவீசான நடை ரிஷபன்!

Anonymous said...

செம ஸ்பீட் ரிஷபன்..

வெங்கட் நாகராஜ் said...

விறுவிறுன்னு போய்ட்டு இருந்தது, திடீர்னு பார்த்தா தொடரும்.. போட்டுங்களே, சீக்கிரமா அடுத்த பகுதி பதிவிடுங்க சரியா..