October 31, 2010

மணமகள் அவசரத் தேவை 3

ஒரு விஷயம் இங்கே உங்களுக்கு நான் சொல்லியே ஆக வேண்டும்.

சில நேரங்களில் நிஜம் வினோதம்தான்.மணப் பெண்ணைக் காணோம் என்றதும் இத்தனை சுலபமாக அடுத்தவளைத் தேர்வு செய்து மணவிழா தொடர்வதும், ஓடிப் போனவளைத் தேடாமல் விடுவதும்... அதுவும் மண்டபத்துக்குப் பக்கத்திலேயே அடுத்த வீட்டில் அவள் ஒளிந்திருப்பதும் கற்பனைக்கும் எட்டாதவை.

நிகழ்ந்தது எனக்கே பற்றிக் கொண்டு வந்தது.

'யோவ், பொண்ணு இங்கேதான் இருக்கா' என்று கத்தத் தோன்றியது.

காப்பி வந்தது. டிபன் வரும் என்று உறுதி செய்து விட்டுப் போனான்.

கதவைத் தட்டினேன். கூடுதல் எச்சரிக்கையுடன் சிறிது நேரம் பொறுத்துத் திறந்தாள்.

"காப்பி..."

"கொஞ்சம் தண்ணி வேணும்."

வேடிக்கையான நிகழ்வுகள். காலி பக்கட்டும், வேறொன்றில் நீரும் தந்தேன்.

"இதுலயே கொப்பளிச்சுரு."

"ச்சே வேணாம்."

"பரவாயில்லே" என்றேன் பெருந்தன்மையாய்.

பிறகுதான் கவனித்தோம். அடுத்த அறையில் ஜலத் துவாரம் இருந்தது. அதில் இன்னொரு சங்கடமும் இருந்து ஆளில்லாத அறைக்குள் இருந்து நீர் எப்படி வெளிப்படும் என்று யாராவது ஆராய்ந்தால்...

சிக்கலான நேரங்களில் மூளை தனது குயுக்தித் திறனைக் காட்டுகிறது.

வசந்தி அறைக்குள் கொப்பளிக்க, நான் எங்கள் இரு அறை வாசல்களுக்குமாய் சேர்த்து நீரைக் கழுவி விட்ட மாதிரி வீசினேன்.

காப்பிக்கு நன்றி சொன்னாள்.

"உங்க வீட்டு காப்பிதான்" என்றேன் மறுபடி.

"ப்ச். என் தங்கை கல்யாணம். என்னால கலந்துக்க முடியலே..." என்றாள் வருத்தமாய்.

"ஒரு ஆட்சேபணையும் இல்லே. இப்பவே போகலாம்" என்றேன் என் பங்கிற்கு.

"கெட்டிமேளம் கேட்டது, மானசீகமா இங்கேர்ந்து வாழ்த்துச் சொல்லிடறேன்" என்றாள் சளைக்காமல்.

"நாளைக்கு நான் ஆபீஸ் போகணும்."

"நோ ப்ராப்ளம்."

"நீ என்ன பண்ணப் போறே?"

"இதோ... இங்கேயே... ஹாப்பியா"

"இந்த ரூம்காரர் எப்ப வேணா வரலாம்."

"உடனே உங்க ரூம் பக்கம் வந்துருவேன்."

"விளையாடாதே. எனக்கு பி.பி. ஏறிக்கிட்டே போகுது."

"இதுவரைக்கும் உதவின அதிர்ஷ்டம் வேற வழி காட்டாமலா போகும்" என்றாள் முழு நம்பிக்கையாய்.

அதே சமயம் என் அறைக் கதவு தட்டப்பட்டது.

"சிவராமன்..."

போச்சு... என்னோட ஓனர்.

வசந்தி கதவை மூடிக்கொள்ள, நான் கதவைத் திறந்தேன்.

"என்ன... ஜன்னலை எல்லாம் அடைச்சுட்டு" என்றார் திகைப்புடன்.

"கொசு ஜாஸ்தி..."

"ஓ... பக்கத்து ரூம்ல அவர் இன்னும் வரலீல்ல..."

அடுத்த வெடிகுண்டை வீசினார்.பக்கத்து ரூமா...

"இ... இல்லே."

"ஃபேனை ஆஃப் பண்ணாம போயிட்டார்னு நினைக்கிறேன். நைட் சத்தம் கேட்டுது."

"அப்படியா... இருக்காதே..."

"என் வைஃப் சொன்னா. சரி செக்கப் பண்ணிரலாம்னு வந்தேன்."

"இல்லையே. ஃபேன் ஓடற மாதிரி தெரியலியே" என்றேன் சப்தமாய்.

என்னை வினோதமாய்ப் பார்த்தார்.இருவருமாய் அடுத்த அறை வாசலுக்குப் போனோம்.

காதை கதவில் வைத்துக் கேட்டார். எனக்குள் இதயத் துடிப்பு பலத்துக் கேட்டது.

"இல்லே" என்றார் நிம்மதியாய்.

"நாதான் அப்பவே சொன்னேனே. அவர் பக்காவா எல்லாம் பண்ணிட்டுப் போவார்" என்றேன் படபடப்பு அடங்காமல்.

"இன்னிக்கு லீவா..."

"ம்..."

"சாப்பாடு எங்கே... லோக்கலா... டவுனா?"

"இங்கேயேதான்."

"இந்த கவர்ன்மெண்ட் என்ன ஆகும்னு நினைக்கிறீங்க?"

நான் என்ன ஆவேன் என்றே தெரியாத நிலை. அரசைப் பற்றி எனக்கென்ன?

"எப்படியும் சர்வைவ் பண்ணுவாங்க."

"அப்படியா சொல்றீங்க?"

இதே ரீதியில் அரைமணி அறுத்து விட்டுப் போனார்.

"என்ன ஃபேன் சத்தம் கேட்டுதா?" என்றாள் வசந்தி.

"புத்திசாலிதான். நான் கத்தினதைப் புரிஞ்சுக்கிட்டு நிறுத்திட்டியே?"

"ம்ஹீம். என்னோட மேரேஜுக்கு என் புத்திசாலித்தனம் உதவலியே. எவ்வளவோ சொல்லியும் எங்கப்பா சம்மதிக்கலே."

"உன்னோட மேரேஜ் கேன்சலாகும்னு உன் லவ்வருக்கு தெரியுமா?" என்றேன்.

"நான் எப்படியும் அவருக்குத்தான்னு தெரியும்."

"அவரும் இங்கே வந்திருக்காரா?"

வசந்தி பதில் சொல்வதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

மறுபடியும் வசந்தி மறைந்து கொள்ள, நான் கதவு திறக்க

இம்முறை சங்கரன்.

"சிவா. எனக்கு அர்ஜெண்டா ஒரு வேலை. வெளியே போகணும். நீ கவலைப்படாதே டிபன் வரும். சாப்பாடு வரும். எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்."

"சரி."

திரும்பியவன் நின்று என்னைப் பார்த்தான்.

"சிவா"

"என்ன சங்கர்?"

"உன் ரூம்ல வேற யார் குரலோ கேட்ட மாதிரி..."

"அ... அப்படியா. இல்லியே. நான் மட்டும்தானே இருக்கேன்."

எனக்கு வியர்த்து விட்டது.

"சரி. நான் வரேன்."

பாம்புச் செவி. அடைக்கப்பட்ட ஜன்னல் கதவு மீறி சப்தம் கேட்கிறவன்.

என் அறைக் கதவை உட்புறம் தாளிட்டதும் சத்தம் உணர்ந்து வசந்தி உடனே கதவைத் திறந்தாள்.

"ஒண்ணும் பிரச்னை இல்லியே?"

"அவனுக்கு சந்தேகம் வந்தாச்சு."

"சமாளிச்சீங்களா?"

தலையாட்டினேன்.நேற்று இருந்த படபடப்பு இன்று அவளிடம் இல்லை. சகஜமாய்ப் பேச ஆரம்பித்து விட்டாள்.

"இங்கே பார். இன்னும் டேஞ்ஜர் சிக்னல் இருக்கு. நீ கொஞ்சங்கூட பயமே இல்லாம அடிக்கடி கதவைத் திறந்து பேச ஆரம்பிக்கிறே" என்றேன் சற்று கோபமாகவே.

வசந்தி சிணுங்கினாள்.

"அங்கே தனியா இருக்க எனக்கு போரடிக்குது."

"சர்தான். எனக்கு விலங்கு மாட்ட ஆசையா?"

"சரி. இனிமேல் நீங்க கதவைத் தட்டினாத்தான் திறப்பேன். அது என்னா... வார கல்கியா?"

ஜாலி டிரிப் வந்தவள் போல வார இதழுடன் அறைக்குள் மறைந்தாள்.

டிபன், காப்பி வந்தது.பக்கத்துக் கல்யாண மண்டபம் தனக்கு நிகழ்ந்த நேற்றைய சங்கடம் மறந்து குதூகலம் அப்பிக் கொண்ட பிரமை.

இத்தனை சுலபமாகவா விட்டு விட்டார்கள்.எனக்குத்தான் தலைவெடித்து விடும் போலிருந்தது.

வாசலுக்குப் போய் நின்று சூழலை ஆராயலாம் என்றால் உள்ளே ஒளிந்து இருப்பவளை நினைத்துக் கலவரம்.

திடீரென கதவைத் திறந்து என்னைத் தேடினால்...

மதிய சாப்பாடும் வந்தது.

"வேற ஏதாவது வேணுமா?"

"இதுவே போதும். ரொம்ப தேங்க்ஸ்."

"உங்களை நன்னா கவனிச்சுக்க சொல்லிட்டுப் போனார்."

"எப்ப வருவார்?"

"வரணும். வந்திருவார்."

சங்கரன் வந்தபோது மணி ஒன்று.உடனே என்னைப் பார்க்க வரவில்லை.அவன் என்னைத் தேடி வந்தபோது மணி மூன்று.

இம்முறை ஒரு வித்தியாசம்.காம்பவுண்ட் சுவர் தடுப்பில் நின்று பேசவில்லை. என் வீட்டு வாசல் வழியே உள்ளே வந்து விட்டான்.

கதவைத் தட்டியதும் திறந்தேன்.

"சாப்பாடு எல்லாம் கிடைச்சுதா?"

"ம்."

"உள்ளே வரட்டுமா?"

"வா. வா."

நகர்ந்து வழி விட்டேன்.அறைக்குள் வந்து சுற்றிப் பார்த்தான்.என்ன தேடுகிறான்?

"புறாக்கூண்டு மாதிரி இருக்கு"

"இதுக்கே வாடகை ஐநூறு ரூபா" என்றேன்.

"அப்பவே வந்துட்டேன். நல்லா டிரெய்னிங் கொடுத்திருக்கேன். இருந்தாலும் காண்ட்ராக்ட் எடுத்தவங்கிற முறையில் சின்னத் தப்பு கூட வந்திரக் கூடாது பாரு. எல்லாம் சரியா நடக்குதான்னு விசாரிச்சுட்டு... ஒரு வாய் மோர் சாதம் சாப்பிட்டுட்டு வரேன்."

நான் இயல்பாக இல்லை என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும்.பேச்சை நிறுத்தி என்னை உற்றுப் பார்த்தான்.

"என்னவோ மாதிரி நெளியறே?" என்றான் சந்தேகமாய்.

"ஒண்ணும் இல்லியே?"

"பொய் சொல்லாதே. காலையிலேயே கவனிச்சேன். ஏதோ தப்பு பண்ண மாதிரி உன் முகம் இருக்கு."

"நான் எந்தத் தப்பும் பண்ணலே."

அந்த வினாடி அடுத்த அறைக் கதவு திறந்து வசந்தி தெரிந்தாள்.


(தொடரும்)


கல்கி - நாலு வாரத் தொடர்


9 comments:

vasu balaji said...

காக்க வைக்காம விட்டதுக்கு தாங்க்ஸ்.ஆனா கதவு திறந்திருந்த சஸ்பென்ஸ் அப்படியே இருக்கே. அவ்வ்வ்

மதுரை சரவணன் said...

நல்லா இருக்கு ... அடுத்து ஆவலை த் தூண்டுகிறது.. வாழ்த்துக்கள்

Chitra said...

எங்களுக்கு நல்ல தீபாவளி ட்ரீட் இது, ரிஷபன் சார்! நன்றி.

நிலாமகள் said...

என்னங்க...இது ! இப்படியேப் போனா என்ன அர்த்தம்? தீபாவளி கொண்டாட வீட்டில் இருக்கறதா... பி .பி. எகிறி மருத்துவமனைக்குப் போறதா...?

Anisha Yunus said...
This comment has been removed by the author.
Anisha Yunus said...

நான் ஏற்கனவே சங்கரனுக்கும் வசந்திக்கும் முடிச்சு போட்டுட்டேன்... ஹெ ஹெ... ஆனாலும், டவுட்டு தனபாலு கணக்கா எங்கயாவது க்ளூ கிடைக்குதான்னு பார்த்துகிட்டு இருக்கேன் ஹி ஹி

Anonymous said...

ம்.. ம்.. வெய்டிங் வெய்டிங்..

Anonymous said...

இன்னும் சஸ்பென்ஸா முடிவுக்காக வெயிடிங்கு..........

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த சஸ்பென்ஸ்... நாலாவது பார்ட் இன்னிக்கே போட்டுடுங்களேன் ப்ளீஸ்...