March 31, 2012

உதவி

இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்.

"ஸார்... உங்களைத்தான்."

"சொல்லு.." என்றேன், கொஞ்சங்கூட இளகாத குரலுடன்.

"அம்மாவுக்கு ரொம்ப முடியலே ஸார். அந்த ஊசியைப் போட்டே ஆவணுமாம். என் கையில சுத்தமா பைசா இல்லே" என்று அழுதான்.

ஒரு நாள் இரவு சினிமா பார்த்துவிட்டுத் திரும்பியபோது பழக்கமான ஆட்டோ டிரைவர்தான் அவன். அடுத்த தெருவில் எங்கோ குடியிருப்பதாகச் சொன்னான்.

இத்தனை வீடுகளில் என்னை எப்படித் தேடிப் பிடித்தான். இவன் மட்டுமல்ல, எத்தனை நபர்கள்!

"சாப்பிட்டு நாலு நாளாச்சுங்க"

"பர்ஸை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போவணும்"

"நாலு குழந்தைங்க வேலை போயிருச்சு. ஒரு வாரமா அல்லாடறோம்."

"மாரியம்மன் கோவில்ல கஞ்சி ஊத்தறோம்."

விதவிதமாய் வேண்டுகோள்கள்! ஐந்து, பத்து, இருபது, ஐம்பது என்று எப்படியாவது பேசி மனதை உருக வைத்து பணத்தைக் கறந்து கொண்டு போய் விடுகிறார்கள்.

பிரேமா ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டாள். " நான் எதுனா கேட்டா, இந்த மாச பட்ஜெட்ல எடமில்லேன்னு சொல்லிடுவீங்க. இந்த மாதிரி ஏமாத்து தர்மம் நிறைய பண்ணுவீங்க."

நேற்றைய சண்டையின் ஹைலைட்டே அதுதான். என்னை ஏமாற்றிப் போனவனை சினிமா தியேட்டர் முதல் வகுப்பு டிக்கெட்டு முன் வரிசையில் பார்த்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தாள்.

தீர்மானித்துவிட்டேன். இனிமேல் சுத்தமாய் 'இல்லை'.

ஆட்டோ டிரைவர் சட்டென்று என் கால்களில் விழுந்தான்.

"ஸார்... எப்படியாச்சும்... இரு நூறு ரூபா கொடுங்க. ப்ளீஸ்.."

உறுதியை மீறி மனசு ஆட்டம் கண்டது. "இரு.. நானும் உன்னோட வரேன்".

ஷர்ட்டை மாற்றிக் கொண்டேன். பர்ஸில் ஐந்நூறு ரூபாய் இருந்தது.

" நீங்க எதுக்கு ஸார். வீணா அலைச்சல்.." என்றான்.

"பரவாயில்லை. நானும் வரேன்." என்றேன் விடாமல்.

பஸ்ஸில்தான் போனோம். ஹாஸ்பிடல் வாசலில் இறங்கி நடந்தோம்.

"எந்த பெட்.."

லேடீஸ் வார்ட்ல.. ஸார்... பணத்தைக் கொடுத்தீங்கன்னா ஊசி வாங்கிட்டுப் போயிரலாம்..."

"மெடிகல் ஷாப்புக்கு நானும் வரேன்.."

அரை மனதாய் சம்மதித்த மாதிரி தோன்றியது. ஒரு வேளை நிஜமாகவே அவன் அம்மா சீரியசாய் கிடக்கிறாளா... அல்லது மெடிகல் ஷாப்பில் என்னெதிரில் மருந்து வாங்கிக் கொண்டு பிறகு அது வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து பணத்தை ஏமாற்றி விடுவானோ...

சந்தேகப் பேய் மனதைப் பிடித்து ஆட்டி அதன் உச்சத்துக்குப் போக ஆரம்பித்தது.

சங்கடமான மன நிலையில் நடந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன்.

"ஏய்.. பாபு.. நீ எங்கேடா இங்கே.." எங்கள் வீட்டு வேலைக்காரி அஞ்சலையின் மகன்.

"அம்மாவுக்கு இருமல் .. மருந்து வாங்க வந்தோம்..." என்றான்.

எண்ணை காணா தலை, உடம்பில் புழுதி, போட்டிருந்த சட்டை, டிராயர்.. ஓ.. நான் கொடுத்தது. போன வாரம் பழைய துணிகளை ஒழித்தபோது .. 'என் புள்ளைக்கு எதுனாச்சும் தாங்கம்மா..' என்று அஞ்சலை கேட்டு வாங்கிப் போனது. பிரேமா கூட சொன்னாளே 'அதையும் வித்துடுவா.. அவ எங்கே பையனுக்குப் போடப் போறா.. அதுக்கு பேசாம நானாவது ரெண்டு பாத்திரம் வாங்குவேன்' என்று.

நான்தான் வற்புறுத்தி இரண்டு செட் டிராயர், ஷர்ட்டை கொடுத்து அனுப்பினேன். இதோ எதிரில் நல்ல துணி அணிந்த பெருமிதத்தில் பாபு. உள்ளூர ஏதோ உறுத்தியது.

இது வரை நான் செய்த உதவிகள் எல்லாம் என்னால் செய்ய முடிந்தவைதான். என் சக்தியை மீறி எதுவும் செய்யவில்லை. கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது.

அதைவிட்டு சந்தேகத்துடன் துரத்திப் போனால் மனசு அலைபாய்ந்து உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?

அவன் தோளைத் தட்டி நிறுத்தினேன். "இந்தா.. மருந்து வாங்கிட்டு வா.."

ஹாஸ்பிடலுக்கு எதிர் திசையில் என் கால்கள் நடந்தன.


(எப்பவோ எழுதியது)

19 comments:

Rekha raghavan said...

எப்ப எழுதினா என்ன? அருமையான கதைக்கு எப்பவும் வரவேற்ப்பு நிச்சயம் தான். இந்த கதையும் அந்த வகையில் வருகிறது.

ராமலக்ஷ்மி said...

/சந்தேகத்துடன் துரத்திப் போனால்/

சரியாகச் சொன்னீர்கள். நல்ல கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான மனிதாபிமானக் கதை சார். மிக அழகாகவே எழுதியுள்ளீர்கள்.

எனக்கும் எப்பவோ படித்த ஞாபகம் வந்தது.

மீண்டும் படித்ததில் ஏதோவொரு சந்தோஷம் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து.... ;)))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

நம் மனதுக்கு சரியெனப் பட்டதை உடனே செய்ய வேண்டியது தான். ஆராய்ந்தால் செய்ய முடியாது என்றே தோணுகிறது.

CS. Mohan Kumar said...

அருமை

மனைவியை கொஞ்சம் வில்லி ஆக்கிட்டீங்க. ரொம்ப தைரியம் சார் உங்களுக்கு )

raji said...

//கொடுத்தபோது இருந்த சந்தோஷம்.. இம்மாதிரி நேரில் பார்க்கும் போது இன்னும் இரட்டிப்பாகிறது//

//அதைவிட்டு சந்தேகத்துடன் துரத்திப் போனால் மனசு அலைபாய்ந்து உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?//

சரியான முடிவு.அதை நல்ல நடையோட எழுதி இருக்கீங்க.பகிர்விற்கு நன்றி

Rathnavel Natarajan said...

நிஜம் தான். நிறைய நேரங்களில் ஏமாளிப்பட்டம் வாங்கி விடுகிறோம். இருந்தாலும் உதவி செய்யாமல் இருக்க முடிவதில்லை.
நன்றி.

எல் கே said...

எதிர்பாரா முடிவு :)

iniyavan said...

நல்ல கதை. இன்னும் நிறைய எழுதுங்கள் சார்.

மனோ சாமிநாதன் said...

நல்ல சிறுகதை.

உதவி செய்ய நினைத்தால் உடனே செய்து விட வேன்டும். ஒரு நிமிடம் அதைத் தள்ளிப்போட்டால்கூட மனம் மாறி விடக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
ஹீரோவின் மனைத நேயமும் உறுதியான நம்பிக்கையும் அருமை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அற்புதமான கரு! அருமையான கதை!!
யாராவது உதவி கேட்டால் நாம் ஏதோ பெரிய ராஜா மாதிரி மனசுல நினைப்பு..அப்புறம் அந்த பாழாய் போன சந்தேகம் வேறு..
எந்த உதவியையும் வினயத்தோடு செய்ய வேண்டும் என்கிற ஆசையில் மண் தான் எனக்கு! எப்போதுமே!!

சிவகுமாரன் said...

அருமை ரிஷபன் சார்.
சமீபத்தில் ஒரு கவிதையில் ,
"திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். "
என்று ஒரு வரி எழுதினேன். என் ஆன்மீக நண்பர்களால் பெரிதும் சிலாகிக்கப் பட்டது.
இந்தக் கதை படிக்கும் போது ஏனோ நினைவுக்கு வந்தது.
www.arutkavi.blogspot.com

vetha (kovaikkavi) said...

நல்ல சிறு கதை. எனக்குப் பிடித்திருக்கிறது.வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

manichudar blogspot.com said...

ஏமாறுகிறோம், ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்தும் நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியாதல்லவா? அய்யா கேட்பார்" நீ செய்கிற உதவியால் உன் மனம் திருப்தி அடைகையில் எவ்விதம் அது அடுத்தவர்கானதாகும்" என்று .

G.M Balasubramaniam said...

உதவி செய்யும்போது அது சரியானபடி உபயோகமாகிறதா என்று கண்காணிக்கும் மனம் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.” ”பாத்திரமறிந்து பிச்சையிடு “என்று கற்பிக்கப்பட்டதன் விளைவோ.?

ஹ ர ணி said...

manathai thottuvitteerkal. naan ninaitha mudivuthaan rishaban. aanaalum kasikirathu.

சென்னை பித்தன் said...

மனிதம் வென்றது.நன்று.

பால கணேஷ் said...

உதவும் உள்ளம் சற்று தாமதித்தாலும் மாறிவிடக் கூடும் என்றுதான் அக்கணமே தந்தான் கர்ணன் என்று படித்திருக்கிறேன். அழகான நடையில் அருமையான கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக ரசித்தேன்.

ஸ்ரீராம். said...

உதவும் ஓட்டத்தையும், மன ஆட்டத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

15/4 தேதியிட்ட கல்கி கதை - ஜில்லு, நீங்கள் எழுதியதுதானே....திடீரென முடிந்து விட்டது போலத் தோன்றினாலும் ரசித்துப் படித்தேன்.