November 13, 2015

அம்மு. 7

அம்மு    7

அம்மு கொஞ்சம் இங்கே வாயேன்\
என் எதிர்ல உட்கார்.  ஒரு பத்து நிமிஷம். போதும். அதுக்கப்புறம் நான் உன்னைத் தொல்லை பண்ணல.. சரியா
எதுக்குன்னு கேட்கிறியா..  நாம கண்ணைப் பார்த்து  பேசியே ரொம்ப நாளாச்சு செல்லம்..  ஒருத்தருக்கொருத்தர்..  என்னமோ ஒரே வீட்டுலதான்  இருக்கோம்னு பேர்.  மெஷின் மாதிரி வாழ்க்கை.  ஒரு நாள் லீவு விட்டாக்கூட .. சாப்ட்டு.  தூங்கி..ப்ச  ஓடிப் போயிருது.
என்னது புதுசா இருக்கு இன்னிக்கு உங்க பேச்சு.. நடவடிக்கை எல்லாம்னு நீ யோசிக்கிறது தெரியறது.  நானும் மனுஷன் தான் .  எனக்குள்ளேயும் ஆசாபாசம் இருக்கு.  லவ் இருக்கு.  அதுவும் எல்லை இல்லாம உன் மேல என் அம்முக் குட்டி.
நான் உன்னைக் கொஞ்சி எவ்ளோ நாள் இருக்கும்..  கணக்கு  ஞாபகம் இல்லன்னு நீ சொல்லவே வேணாம்.  என் மேலதான் தப்பு.  
நீ எழுந்துக்கிறப்ப மணி அஞ்சு இருக்குமா டெய்லி.  அப்போ முழிச்சுண்டு ராத்திரி பதினொரு மணிக்கு என் பக்கத்துல படுக்க வருவ.  அப்போ நான் கொறட்டை விட்டுண்டு இருப்பேன்.  இந்த கூத்துதானே  தெனமும்னு பார்க்கிறே.
நினைப்பு அதன் போக்குல அலைபாயுது..  ஒரு கோர்வையா வரல.  சொல்லிண்டே போறேன்.  என்னைச் சகிச்சுக்கிற மாதிரி அதையும் பொறுத்துக்கோ..
தட்டுல பரிமாறுவ,  என் முகத்தை நீ பார்க்கிறது எனக்குத்  தெரியாதுன்னு நீயும் .. உனக்குத் தெரியாதுன்னு நானும் ஆடற விளையாட்டு எப்போதுமே சூப்பர்.
தட்டை வேகமா வழிச்சு காலி பண்ற ஸ்பீட்ல உன் கைப்பக்குவம் உனக்கே புரிஞ்சிருக்கும். இருந்தாலும் என்னைக் கேட்பே.
‘நன்னா இருந்ததா’
‘ம்’
‘அந்த கூட்டு’
‘ம்’
‘ரசவாங்கி ‘
‘இன்னொரு கரண்டி போடேன்’
வாய் திறந்து சொல்லாத என் ஜாலக்கு உனக்குப் பழகிப் போனது.    உனக்கு போதுமா என்று கேட்கத் தோன்றாது.  அப்புறம் எப்போதாவது கேட்பேன். பதில் சொல்லாமல் சிரித்து கொள்வாய்.
தெருவில் நடக்கும்போது எனக்கு வேகமாய் நடந்து பழக்கம். உனக்கோ வழியில் ரசிக்கணும்.  பூக்கார அம்மா வாடிக்கைப் பூவுடன் பைசா கேட்காமல் தாராளமாய்த் தருகிற ஜாதிப்பூ .. ‘இது உனக்கு.. தலைக்கு வச்சுக்கோ இப்பவே’ என்று  கொஞ்சி விட்டு போவாள். இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கொண்டு போய் நீ பூ வைத்துக் கொள்ளும் அழகை மாருதி சார்தான் வரையணும்.
பிஞ்சும்மா என்று காய்க்காரி சொல்லும்போது என்னை நகர்த்தி விட்டு நீ எடுத்துப் போடுவாய் தராசுத் தட்டில் .  ஏன் நல்லாத் தானே இருந்தது என்றால் கேலியாக சிரிப்பாய். என்னை ஏமாற்ற உன்னால் மட்டுமே முடியணும் என்கிற நினைப்பா.
துர்க்கையின் முன் கண் மூடி நீ நிற்கும்போது எனக்கு உன்னைத் தான் கும்பிட தோன்றும்.  ச்சீய் தப்பு என்று சொல்லாதே. என்னவோ அப்படி ஒரு யோசனை.  அந்த நிமிஷம் நீயும் அவளும் வேறல்ல  என்கிற மாதிரி.
குளித்து முடித்து உன் ஈரப் புடவையை பாத் ரூமில் வைத்து விட்டு வந்து விடுவாய்.  உனக்காய் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது போய் உலர்த்துவாய்.  உனக்குப் பின்னால்  நான்  குளிக்கப் போவேன். அதை எடுத்து கோணாமாணா என்று உலர்த்தி விட்டு வருவேன்.  என்னை அதற்கே ஒரு காதல் பார்வை பார்ப்பாய்..  லவ் யூ அம்மு.
விளக்கணைக்க மறப்பது உன் சுபாவம்.  சொன்னால் ‘ஏன் நீங்க அணைக்க மாட்டீங்களா ‘ என்று கேட்பாய் .  எனக்கும்  தோணும்.  அணைச்சுட்டு வந்தா என்ன கொறையப்போகுது.
படுத்ததும் விளக்கணைத்து இருட்டில் என் கண்களைப் பார்ப்பாய்.  எனக்குத் தூக்கம் வரும். விடேன்.. என்றால் ஒரு நிமிஷம் என்பாய்.  சொக்கும்.  கஷ்டப்பட்டு விழித்துப் பார்ப்பேன்.  ‘கல்யாணம் ஆனப்ப இருந்த அந்த பார்வை இல்ல இப்போ ‘ என்பாய்.
என்கிட்டே உனக்குப் பிடிச்சது என்று லிஸ்ட் போட்டால் அதில் அந்தப் பார்வையும் அடங்கும் .  எனக்கு உன் கழுத்தில் அந்த வாசனை.  ச்சே  அது வேர்வை.  என்று செல்லமாய் சிணுங்குவாய். அதென்னவோ. பவுடர் வாசனையோ உன் வாசனையோ  கிறங்கடிக்கும் எப்பவும்.
ஒரு குழந்தை இருந்திருந்தால் .. ஸாரி அம்மு.  இதைச் சொல்லியிருக்கவேண்டாமோ
அம்மு.. அம்மு.   ப்ளீஸ்  நில்லேன்..  போகாதே.. ச்சே நான் ஒரு மடையன் சந்தோஷமாய் பேச அழைச்சுட்டு..

பின்னாலேயே ஓடுகிறேன்.

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

இப்படித்தான் பலர் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்! அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துர்க்கையின் முன் கண் மூடி நீ நிற்கும்போது எனக்கு உன்னைத் தான் கும்பிட தோன்றும். ச்சீய் தப்பு என்று சொல்லாதே. என்னவோ அப்படி ஒரு யோசனை. அந்த நிமிஷம் நீயும் அவளும் வேறல்ல என்கிற மாதிரி.//

அருமையான மிகவும் யதார்த்தமான அன்றாட வாழ்க்கையின் எழுத்துக்கள் .... அப்படியே ஆங்காங்கே தந்தி அடித்ததுபோல ..... மிகச்சுருக்கமாகவும் ..... மிக வேகமாகவும் ..... மிக முக்கியமான வரிகளாகவும் :)

//உனக்கு போதுமா என்று கேட்கத் தோன்றாது. அப்புறம் எப்போதாவது கேட்பேன். பதில் சொல்லாமல் சிரித்து கொள்வாய்.//

:))))) கடைசியாக மிஞ்சி இருப்பதை வழித்துச்சாப்பிடும் பெண்களே அதிகம் என்பதைச் சொல்லாமல் சொல்லி அசத்தியுள்ளீர்களே ..... இந்த வரிகளில். :)))))

தொடரட்டும் அம்முவுடனான ராஸ லீலைகள்.

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரை மகிழ்ச்சியுடன் படித்துக் கொண்டே வந்தால், அம்மு-7, கடைசியில் இருந்தது வருத்தமான விஷயம்.....

தொடரட்டும் அம்மு கதைகள்.