December 04, 2009

முறை வாசல்

முறைவாசல்..
அப்படின்னா ரொம்ப நாள் வாசல்ல நின்னு முறைக்கறதுன்னு தப்பு தப்பா நினைச்சுகிட்டு இருந்தேன்.
ஒண்டு குடித்தன வீட்டுல இருந்தா, ஒவ்வொரு குடித்தனக்காரரும் டர்ன் போட்டு வாசல் தெளிச்சு கோலம் போடணும்.
பிரச்னை என்னன்னா.. முதல் நாளே சாணியைக் கொண்டு வந்து வச்சிரணும். காலங்கார்த்தால இருட்டுல சாணி தேடறது பெரிய கொடுமை. எங்க தெருவுல வாசல் தெளிக்க வேலைக்கு வச்சிருந்த அம்மா இருட்டுல 'எதையோ' கொண்டு வந்து அவங்க வாசல் தெளிக்கற பத்து வீட்டையும் 'மணக்க' வச்சுட்டு போன கதையை இப்ப நினச்சாலும் நான் ஸ்டாப் சிரிப்பு! நாங்க இதுக்கு முன்னால குடியிருந்த சித்திரை வீதில எதிர் வீட்டு ஆம்பளை, அவரே வாசல் தெளிச்சு அழகா கோலம் போடுவார்.
தெருவுல அவர் இத்தனைக்கும் பெரும்புள்ளி. கோலம் போடறதுல அப்படி ஒரு லயிப்பு. 'எட்டு புள்ளி.. பதினாறு புள்ளி.. முப்பத்திரண்டு புள்ளி' னு என்னென்னவோ கணக்கு வேற. தெருவுல ரெங்கநாதர் வலம் வரும்போது பெரிய கோலமா அவர் போடற அழகைப் பார்க்கவே லேடிஸ் நிப்பாங்க. அவருக்குக் கொஞ்சம் கூட லஜ்ஜையே கிடையாது. கோவில்ல விழா நாட்கள்ல கூட அங்கேயும் போய் கோலம் போடுவார். பளிச்சுனு ஈவ்னிங் வரை அழியாம அப்படியே இருக்கும்.
எங்க தெருவுல காலைல.. மாலைல ரெண்டு வேளையும் ரெண்டு பக்கத்து வீடுகளிலும் தண்ணி தெளிச்சு கோலம் போடுவாங்க.. அதான் எல்லா ஊர்லயும் செய்யறாங்களேங்கிறீங்களா..இப்ப குடியிருக்கற தெருவுல நான் ஆபீஸ் கிளம்பறப்ப எந்த வீட்டு வாசல்லேர்ந்து தண்ணி கொட்டுவாங்கன்னு தெரியாது.
வீட்டுக்குள்ள இருந்துகிட்டு பக்கிட் தண்ணிய வாசல்ல வீசுவாங்க. உஷாரா இந்த பக்கம் ஒதுங்கலாம்னா உடனே இவங்களுக்கு ரோஷம் வந்து 'நான் மட்டும் சளைச்சவளான்னு' அவங்க பங்குக்கு ஒரு பக்கெட் தண்ணி.. ரெண்டு பக்கமும் சதிராடி ஒரு வழியா ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் திரும்பி வரப்ப மறுபடி அதே 'வீசல்”. கையில டவல், சோப்பு எடுத்துகிட்டு கிளம்பினா குளிச்சுட்டே போயிரலாம்.
இத்தனை சுத்தமா வச்சிருக்காங்கன்னு உடனே முடிவு பண்ணிராதீங்க. தண்ணி தெளிக்கறதுக்கு முன்னால குப்பையை கூட்டி குமிப்பாங்க பாருங்க.. முட்டு முட்டா.. ரெண்டு பக்கத்து வீட்டு சமாச்சாமும் நடுத்தெருவுல.. நம்மால தைரியமா டூ வீலர் ஓட்ட முடியாது.. அதுவும் சூப்பரா ரோடு போட்ட தெருவுல பற்பல முட்டுகளைக் கடந்து போகற த்ரில் இருக்கே.. லைட் இல்லாத நேரம் இருட்டுல முட்டா தெரியறது இவங்க சேர்த்து வச்சதா.. இல்ல சோம்பலா படுத்துருக்கிற நாயான்னு தெரியாது.. நடுங்கிகிட்டே கிராஸ் பண்ணனும். 100 அடி தூரத்துக்குள்ள நாலு நாயி.. ஏழு குப்பை முட்டு.. போதும்டா சாமின்னு ஆயிரும்.
எதிர் வீட்டுல ஒரு தரம் முறை வாசல் விஷயமா சண்டை வந்து அது முடியவே எட்டு மணி ஆச்சு. அப்புறம் வாசல் தெளிச்சு கோலம் போட்டாங்க. அதுல ஒருத்தர் மறுமாசமே வீட்டைக் காலி பண்ணிட்டு போயிட்டார்.
நாங்க இருக்கற அபார்ட்மெண்ட்ல (நவீன ஒண்டு குடித்தனம்) இந்த பிரச்னையே இல்ல. எதிர் வீட்டுலகோலம் ஸ்டிக்கர் ஒட்டிட்டாங்க. தெருவுக்குக் குடி வந்த புதுசுல கொஞ்சம் ஆர்வத்தோட எதிர் வீடு, பக்கத்து வீடுகள்ல 'சுகாதாரம்.. சுத்தம்னு' டயலாக் விட்டு பார்த்ததுல மூஞ்சிக்கு நேராவே சிரிச்சு வழியனுப்பினாங்க.. 'அண்ணே.. எங்கன்னே வேலை பாக்கறீங்க.. உதவி பண்ணனும்னா கைமாத்து தரலாமே' ன்னாங்க.
வீட்டு புள்ளைய (ஏழு வயசு) வாசல்ல ஒக்கார வச்சு 'சுச்சு.. கக்கா' போக வச்சப்பதான் கொதிச்சுப் போச்சு.. 'நல்லா இல்லீங்களே' ன்னு சொல்லப் போனா.. 'ஹி..ஹி.. அது எப்படி நல்லா இருக்கும்..' னு கிண்டல்!
வச்ச பூச்செடியை ஆடு மாடு மேஞ்சுட்டு போச்சு. வருஷத்துல மூணு நாள் மட்டும் முனீஸ்வரன் கோவில் திருவிழா நேரம் தெருவே பளிச்சுனு ஆயிரும். நாங்களும் அந்த மூணு, நாலு நாள் 'அழகுக்காக' வருஷம் பூராக் காத்திருப்போம். அப்புறம் மறு நாள்லேர்ந்து 'முட்டு'.. !
நல்லாத்தான் இருக்கு.. எங்க தெருவும்..தெனம் ஒரு கதைக்கு அடித்தளமா!

3 comments:

கே. பி. ஜனா... said...

அழகாய் வாசல் தெளிச்சு கோலம் போட்டு விட்டீர்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நைனா...காமெடி ஒன்னத்தான் விட்டு
வைச்சேன்னு நெனைச்சேன்..அதுலயும்..
பூந்து விளயாடிட்டியே..பலே கில்லாடிப்பா நீ!

ஸாரி ஸார்..கொஞ்சம் உணர்ச்சிவசப்
பட்டு விட்டேன்!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை அழகிய கோலம் போலவே உள்ள்து.