March 10, 2011

பெயர்

ஒரு முறை கூட
நீ என் பெயரை
உச்சரித்ததில்லை..
'ஏய் ' தான் எப்போதும்.
பள்ளி நாட்களில்
'மூக்கொழுகி' என்று
கொஞ்ச காலமும்
வேப்பெண்ணை என்று
சில நாட்களும்..
'டி இவளே '
என்று சிநேகிதிகளும்..
ஏதோ ஒரு தேவதையின்
ஆசிர்வதிக்கப் பட்ட
நேரத்தில்
'ஹை ஸ்வீட்டி '
என்று ஒரு அற்ப நாள் காதலனும்..
இப்போது சொல்..
'புவனேஸ்வரி '
அல்லது 'புவனா '
என்கிற என் பெயரை
மறக்கடித்த
உங்களை எல்லாம்
எந்த சுண்ணாம்பு காளவாயில்
போடலாம்?

24 comments:

middleclassmadhavi said...

நான் தான் முதலிலா?

கஷ்டம் தான்! ஆஃபீஸ் போனாலாவது பெயரைச் சொல்லிக் கூப்பிட வாய்ப்பு இருக்கிறது! இல்லாவிடில் உறவுப் பெயரோ, இல்லை அவள் குழந்தைப் பெயருடன் அம்மா சேர்த்தோ தான் கூப்பிடப் போகிறார்கள்!

கே. பி. ஜனா... said...

புவனேஸ்வரியின் கவிதை அழகு!

Anonymous said...

சொல்லாத பெயரால் சூழ்ந்த வெறுப்பை கவிதையாக்கிவிட்டீங்க ரிஷபன்! :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

புவனா ஒரு கேள்விக்குறியல்ல
அவள் ஒரு ஆச்சர்யக்குறியே !
என்பது இந்தக்கவிதை கேள்விக்
குறியில் முடிந்ததிலுருந்தே தெரிகிறது.

Madumitha said...

பெயரைத் தொலைத்தவர்களின்
வலியைச் சொன்ன உங்களுக்கு
ஒரு சபாஷ்.

RVS said...

பட்டப் பெயரே சிலருக்கு நிலைத்துவிடுகிறது.. இட்டபெயர் மறந்துதான் விடுகிறது... அற்புதாமான கவிதை சார்! ;-))

R. Gopi said...

ஏதோ பெயர்க்காரணப் பதிவுன்னு நெனச்சேன்:-)

வெங்கட் நாகராஜ் said...

பெயர் தொலைத்த ஒரு புவனாவின் வலி உங்கள் கவிதையில் அழகாய் வெளிவந்துள்ளது. பட்டப்பெயரைக் கேட்டுக் கேட்டு சிலருக்கு அவர்களின் பெயரே மறந்து விடும்! நல்ல கவிதை.

நிலாமகள் said...

நல்லா இருக்கு சார் உங்க கவிதையும், கருத்தும்! அதனால் தான் உங்க அனேக கதைகளின் நாயகி 'புவனா' ஆகிறாரா... படித்ததும் வாய் விட்டு சிரித்தேன். ஆதியின் 'பெயர்க்காரணம்' பதிவில் தங்கள் பின்னூட்டம் கண்டு வியந்தேன்.

vasu balaji said...

நல்லாருக்கு.

Chitra said...

எந்த ஒரு விஷயத்தையும், அருமையாக வெளிப்படுத்த உங்கள் எழுத்துக்களுக்கு முடியும்.

மோகன்ஜி said...

அழகான கவிதை ! வாய்த்தபெயர் வழங்காத வலியை ஆழமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

சிவகுமாரன் said...

பெயரைத் தொலைத்தவளின் வலியை உணர்த்தும் அருமையான கவிதை.

ADHI VENKAT said...

பெயர் தொலைத்த புவனாவின் வலியை இந்த புவனாவும் ஒத்துக் கொள்கிறாள்!
கவிதை அருமை.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா சூப்பர் ரிஷபன்.. எதிர்பார்க்கலை இப்படி ஒரு கவிதையை..:)))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்போதெல்லாம் எல்லாருக்குமே தம்தம் பெயர் மறந்து விடுகிறது!

ஹுஸைனம்மா said...

நானும் பெயர்க்காரணப் பதிவோ என்று நினைத்தேன். அந்தப் பதிவுகளால் தூண்டப்பட்ட கவிதயோ?

அப்ப நீங்க பெண்ணா?

ஸ்வர்ணரேக்கா said...

அருமை... அருமை.. எனக்கு கூட பல சமயங்களில் இப்படித்தான் கோபம் வந்துவிடுகின்றது.. வார்தைகளில் வடித்தது அருமை..

எல் கே said...

என்ன பண்ண ? சிலக் காரணங்களால் இப்படிதான். இப்ப என்னையே எல்கேன்னு எல்லோரும் கூப்பிட்டு என் முழுப்பெயர் மறந்து போகுது

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நான் என் மனைவியை .."ஹஅய்"என்று தான் கூப்பிடுவேன். ஒருமுறைகூட பெயர் சொல்லி அழைத்ததில்லை.இந்த "ஹஅய்" கூட என்னை போல் யாரும் உச்சரிக்க முடியாது என்று என் மனைவி கூறுவாள்..
இப்பதிவை படித்தவுடன் தான் தெரிகிறது என் மனைவி எவ்வளவு வேதனை பட்டிருப்பார்கள் என்று...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பெயரில் பெரிதாய் என்ன இருக்கிறது என்பார்....பெயரிலும் அது அனைவராலும் அழைக்கப்படுவதாலும்தான் தனி கவுரவம் என்று உணர்த்திய அருமை கவிதை!!

மாதேவி said...

பெயரைத் தொலைத்தவள் கவிதையால் உயிர் பெறுகிறாள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நன்றி ரிஷிபன் என் மனைவி பெயர் சொல்லி கூப்பிட ஆரம்பித்து னிட்டேன்...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அழகு.